குருந்தூர்மலை விவகாரம்: அடையாள தூண்களை அகற்ற எவருக்கும் உரிமை இல்லை – சரத் வீரசேகர

குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகள் மற்றும் அடையாளமிட நடப்பட்ட துண்களை அகற்ற எவருக்கும் உரிமை இல்லை. பேச்சு மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண தயாராக உள்ளோம். பலவந்தமான முறையில் எவருக்கும் இடமளிக்க முடியாது – என்று கூறியிருக்கிறார் சரத் வீரசேகர எம். பி.

நேற்று மஹகர பகுதியில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் நாடு முழுவதும் பௌத்த சின்னங்கள் மற்றும் மரபுரிமைகள் காணப்படுகின்றன. வடக்கு – கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகளை அடிப்படையாக கொண்டு எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை அந்த மாகாணங்களின் அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளின் அனுசரனையுடன் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கப்படுகின்றன. குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மற்றும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட விடயம் பொய் என்பதை தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுர மானதுங்க தெளிவுபடுத்தவில்லை. குருந்தூர் மலையில் தமிழர்கள் விவசாயம் செய்தனர் என்று தமிழ்த் தரப்பு குறிப்பிட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது – என்றும் கூறினார்