கொழும்பில் தமிழர்களை இலக்கு வைத்து தகவல் திரட்டவில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

தமிழர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு தகவல் திரட்டவில்லை. கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களிடமிருந்து தகவல் பெறும் நடவடிக்கை 90 சதவீதமளவில் நிறைவடைந்துள்ளது.

இதில் ஒட்டுமொத்த மக்களும் உள்ளடங்குகிறார்கள். நாட்டில் யுத்தம் இல்லாவிட்டாலும் சமூக விரோத செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தகவல் தரவு கட்டமைப்பு பேணப்படும். ஆகவே தனிப்பட்ட தகவல் கோரலை நிறுத்த முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் வாழும் பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் தகவல் கோரல் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தமிழர்களை மாத்திரம் இலக்காக கொண்டு தகவல் திரட்டப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பொய்யுரைக்கிறார். கடந்த முறையும் இவர் இதே பிரச்சினையை முன்வைத்த போது நான் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து தரவுகளை காண்பித்தேன் பதிலளித்தேன்.

கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களின் விபரங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை 90 சதவீதமளவில் நிறைவு பெற்றுள்ளன. சிங்களம்,தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் இந்த தகவல் பதிவுக்குள் உள்ளடங்குகிறார்கள்.இது தற்போது புதிதாக ஆரம்பிக்கப்படவில்லை.யுத்த காலத்தில் இருந்து இவ்வாறு பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் கோரப்படுகின்றன.பொலிஸ் ஊடாக தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

ஒரு தனிநபர் எங்கு தங்கியுள்ளார் என்பது தொடர்பான தகவல் தரப்படுத்தலை பேணுவதற்காகவே இவ்வாறு தகவல் கோரப்படுகிறது. இதில் தவறொன்றும் இல்லை. பெயர் உள்ளிட்ட தகவல் மாத்திரமே கோரப்படுகிறது. மதம் பற்றி கேட்கவில்லை.இனம் தொடர்பான விபரம் மாத்திரமே கேட்கப்படுகிறது. கடந்த முறையும் இவர் இவ்வாறு பொய்யுரைத்தார்.

நாட்டில் யுத்தம் இல்லாவிட்டாலும் சமூக விரோத செயற்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளன.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆகவே தகவல் கோரலை எதற்காகவும் இடைநிறுத்த முடியாது. தகவல் கட்டமைப்பை பேண வேண்டும். சிங்கள மொழியில் மாத்திரம் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். அதை ஆராய்ந்து திருத்திக் கொள்கிறேன் என்றார்.