சாவகச்சேரியில் தமிழர்களின் மரபுரமைச் சின்னம் விபத்தில் அழிவு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் ஏ9 பிரதான வீதியில் நுணாவில் 190 ஆம் கட்டைப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரவுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் பவுசர் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 3 மணி அளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தினால் தொல்பொருள் திணைக்களத்தினால் மரபுரிமை சின்னமாக அடையாளப்படுத்தப்படாடு பராமரிக்கப்பட்டு வந்த பாரம்பரிய சுமைதாங்கி முற்றாக அழிவடைந்துள்ளது.

இவ்விடத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி, இளைப்பாறும் மடம், குடிநீர்க்கிணறு என்பன காணப்படுகின்றன.

இவ் விபத்தினால் நொருங்கிய சுமைதாங்கியின் கற்களை நுணாவிலில் வசிக்கின்ற தனிநபர் ஒருவர் உழவு இயந்திரத்தின் மூலம் முற்றாக அள்ளிச் சென்றுள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் அப்பகுதியில் இருந்து பொலிஸாரால் கொண்டு செல்வதற்கு முன்னரேயே விபத்தினால் இடிந்த சுமைதாங்கி கற்களை சுமைதாங்கி ஒன்று அவ்விடத்தில் இருந்ததற்கான அடையாளமே தெரியாமால் பொலிஸார் முன்னிலையிலேயே அகற்றியமை அப்பகுதி மக்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுததியுள்ளது.

இன்று காலை 8 மணி அளவில் குறித்த இடிந்த கற்களை பொதுமக்கள் பொலிசார் முன்னிலையில் குறித்த நபர் அள்ளிச் சென்றுள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சாவகச்சேரி நகரசபைக்கு உடனடியாக அறிவித்தும் குறித்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட எவரும் வருகை தரவில்லை.

இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் தொல்பொருள் திணைக்களத்திறகு அறிவித்ததை அடுத்து குறித்த திணைக்களத்தினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.