நெசவுசாலையை ஆக்கிரமித்துள்ள மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம்

அரசாங்கத்திற்கு சொந்தமான அச்சுவேலி நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்த மதப் பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் அச்சுவேலி நெசவுசாலை முன்றலில் இன்று(செவ்வாய்கிழமை) காலை 8 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யுத்தத்தின் பின் இயங்காத குறித்த நெசவுசாலை கட்டடத்தில் ஒரு மதஸ்தலம் அமைக்கப்பட்டு பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

குறித்த மதஸ்தலத்தினால் அதிகளவு சத்தம் போட்டு பிரார்த்தனை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன்படி மல்லாகம் நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை போதகர் உட்பட மூவர் அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அச்செய்தியை வெளியிட்டமைக்காக உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள்ளும் அடாவடியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், போதகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது குறித்த மதஸ்தலம் அமைந்துள்ள நெசவுசாலையினை மீளவும் கைத்தொழில் அமைச்சு பொறுப்பெடுத்து நடத்தவேண்டும் என கோரி இன்று போராட்டம் இடம்பெற்றது.