நட்டத்தை ஏற்படுத்தும் அரச நிறுவனங்களை திறைசேரி பாதுகாக்காது

நட்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 52 அரச நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதாகவும், 13 நிறுவனங்கள் நட்டம் அடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நட்டத்தில் இயங்கும் 13 அரச நிறுவனங்களின் நட்டம் ஆயிரத்து 29 மில்லியன் ரூபாய் எனவும், இலாபம் ஈட்டும் 39 நிறுவனங்களின் இலாபம் 218 பில்லியன் ரூபாய் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் வருடாந்த இழப்பு 811 பில்லியன் ரூபாயிற்கும் அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலாபம் ஈட்டும் நிறுவனங்களால் திறைசேரிக்கு வரியாக 28 மில்லியன் ரூபாயே செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், திறைசேரியில் இருந்து பணம் ஒதுக்குவது என்பது இந்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பணத்தை இந்த நிறுவனங்களின் பராமரிப்புக்காக ஒதுக்குவது என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசாங்கம் மக்களுக்கு சுமையை ஏற்றி நிறுவனங்களை நடத்தாது, ஒழுங்குபடுத்தும் அதிகார சபையாகவே செயற்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.