நாட்டின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம் – கஞ்சன விஜேசேகர

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முன்னதாக இங்கு உள்ளவர்களின் மனநிலையை மாற்ற வேண்டும் என்று மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

வெளிநாட்டில் இருந்து ஒரு முதலீட்டாளர் நாட்டுக்கு வரும் போது, இங்குள்ள சில தரப்பினர் எமது நாட்டின் வளங்களை குறித்த முதலீட்டாளர் தமது நாட்டுக்கு எடுத்துச் செல்வதாக போலியான தோரணையை உருவாக்கி விடுகிறார்கள்.

அண்மையில் இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையில் மின்சார உற்பத்தித்துறையில் முதலீட்டை மேற்கொள்ள எத்தனித்த போது, நாட்டின் மின் வளத்தை இந்தியாவுக்கு சூறையாடிச் செல்லப் போகிறது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கினார்கள்.

எனினும் இந்த நிலைப்பாட்டை மாற்றி, எமது நாட்டை அபிவிருத்தியடைய செய்ய வேண்டும் என்றால் பிராந்திய நாடுகளுடன் போட்டியிட வேண்டும்.

அத்துடன், பெருந்தோட்டத்துறை அல்லது கைத்தொழில்துறை ஆகியவற்றில் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் முதலீடுகளை அதிகரிப்பதே சிறந்த வழியாகும் என்றும் கஞ்சன விஜேயசேகர குறிப்பிட்டுள்ளார்.