நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்ய அரசாங்கம் சூழ்ச்சி – ஐக்கிய மக்கள் சக்தி

நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் திட்டமாகும். அதற்கு ஒருபோதும் ஐக்கிய மக்கள் இடமளிக்காது. சர்வசன வாக்கெடுப்பிற்கான அரசாங்கத்தின் சூழ்ச்சியை நாம் தோற்கடிப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளன. தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்பதை அரசாங்கத்துக்கு கூறிக் கொள்கின்றோம். ஜனாதிபதி முறைமையை நீக்குதல் என்று பாரிய பதாதையை காட்சிப்படுத்திக் கொண்டிருப்பதே தற்போது அரசாங்கம் பின்பற்றும் தந்திரமாகும்.

இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றி அதன் பின்னர் சர்வசன வாக்கெடுப்புக்கு செல்வதே அரசாங்கத்தின் திட்டமாகும். இந்த தந்திரத்தின் ஊடாக மேலும் ஒரு வருடத்துக்கு தேர்தலைக் காலம் தாழ்த்துவதே அரசாங்கத்தின் சூழ்ச்சியாகும்.

அதற்கமைய இவ்வருடம் செப்டெம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே இவர்களின் திட்டமாகும். இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை ஒரு நாள் கூட நீடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரினால் அதனை தோற்கடிப்பதற்கும், சர்வசன வாக்கெடுப்பினை நடத்த முற்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பின்கதவால் ஓடிய போதே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை சூனியமாகிவிட்டது.

எனவே இதனைக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினாலும் எதையும் சாதிக்க முடியாது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நிறைவேற்றதிகார பிரதமர் முறைமையாக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.