பாக்கு நீரிணை இந்திய – சீன பலப்பரீட்சை களமாக மாறின் முதலில் அழியப்போவது தமிழர்களே- எச்சரிக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சி

பாக்கு நீரிணையில் இந்திய – சீன பலப்பரீட்சை களமாக மாறுமாயின், முதலில் அழிவது ஈழத் தமிழர்கள்தான் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (04) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் இடம்பெறுவதாவது:

இந்து சமுத்திர அதிகார போட்டியில் மையப்புள்ளியாகும் பாக்கு நீரிணையும் தமிழர்களின் வாழ்வாதாரமும் 99 வருட ஒப்பந்த அடிப்படையில் அம்பாந்தோட்டையை கையகப்படுத்திய சீனா. தமிழர்கள் நலன் சார்ந்து செயற்படும் என நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது.

சீனா போன்ற ஒரு பெரிய தேசம் வடக்கில் மீன்பிடிக்க வரவில்லை. தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து தமிழர்களை இடம்பெயரச் செய்து, பாக்கு நீரிணையை தம்வசப்படுத்தி தமிழர் தேசத்தை தமது பிராந்தியமாக்கி, அதனூடாக முழு இலங்கையையும் பாக்கு நீரிணையின் மறுபக்கமான தமிழகத்தையும் கேரளாவையும் தமது கட்டுப்பாட்டு பிராந்தியமாக்குவதே அவர்களது பிரதான இலக்காகும்.

அதன் ஆரம்ப கட்டம்தான், வடகடல் எங்கினும் மக்கள் தமது ஜீவனோபாயமாக சிறுகடல் தொழில் மேற்கொண்ட பிரதேசங்களை அவர்களிடம் இருந்து பறித்து, அட்டை வளர்ப்பு பண்ணைகளாக மாற்றியிருக்கிறார்கள்.

இன்று அட்டை வளர்க்கும் கடல் பிரதேசங்கள் தமது இயற்கை சமநிலைத் தன்மையினை இழந்து வருகின்றன. அந்த பண்ணைகளில் பாவிக்கப்படும் உயர் தன்மையுடைய வெளிச்சங்களால் மீன்களின் கருக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவின் நில ஆக்கிரமிப்புக்கான நகர்வுகளை எமது மக்களின் இருப்பு, அவர்களின் பொருளாதாரம், எதிர்காலம் கருதி அவர்களது வருகையை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.

திருகோணமலையையும் பாக்கு நீரிணையையும் யார் கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களால்தான் ஆசியாவையும் இந்துமா சமுத்திரத்தையும் கையாள முடியும். இதன் நிமித்தமே போர்த்துக்கீசர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் வந்தார்கள், வென்றார்கள், ஆண்டார்கள், சென்றார்கள்.

ஆனால், சீனாவின் நகர்வு வெற்றி பெறுமானால், ஒருபோதும் பாக்கு நீரிணையை விட்டுச் செல்லமாட்டார்கள். இந்துமாகடல் சீனமயமாகும்.

இந்தியா ஒரு மெத்தனப் போக்கோடு இலங்கையை எப்போதும் கையாளலாம் என என எண்ணுகிறது. அதன் வெளிப்பாடுதான் அண்மைய இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இந்திய நிதி அமைச்சர்களின் வருகையின்போதும் தமிழ் தலைமைகள் புறக்கணிக்கப்பட்டமை ஆகும்.

பிரதமரை சந்திக்க கடிதம் அனுப்பப்பட்டும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளமை, இந்துமா சமுத்திரத்தின் பலமான பாக்கு நீரிணையின் இரு கரைகளிலும் ஈழத்தமிழர்களும் தமிழக தமிழர்களும் கேரளமும் தங்கியுள்ளமையே இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதமாகும்.

ஈழத் தமிழினத்தின் வாழ்வும் வளமும் மிக்க பாக்கு நீரிணையில் இந்திய சீன பலப்பரீட்சை களமாக மாறுமாயின், முதலில் அழிவது ஈழத்தமிழர்கள்தான். அதனை ஒருபோதும் கைகட்டி வேடிக்கை பார்க்கப் போவதில்லை என்பதை வலுவாக பதிவு செய்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது