பேராயர் ஏதாவது அரசியல் நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றாரா? – ஜனா எம்.பி கேள்வி

பேராயார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மத ரீதியாக மக்களுக்கு சேவை செய்கின்றாரா ? அல்லது அரசியல் ரீதியாக ஒரு இனரீதியாக ஒரு இனவாதியாக செயற்படுகின்றாரா? அல்லது எந்த நிகழ்சி நிரலிலே இருக்கின்றார் என்பதை தெரியப்படுத்த வேண்மென பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

பேராயர் வடக்கு, கிழக்கு தமிழருக்கும் இந்தியாவுக்கும் எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றாரா ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மதரீதியாக சேவை செய்பவர் ஒரு சாராருக்காக வாயைத் திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோவிந்தன் கருணாகரன் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளார் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டிலே தற்போது மீண்டும் ஒரு இனக்கலவரம் தோன்றிவிடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உருவெடுத்திருந்தாலும் இந்திய உளவுப் பிரிவு தங்களது அறிக்கை மூலமாக இலங்கையில் ஒரு இனக்கலவரம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இது வழமையாக ஒவ்வொரு தேர்தல் வரும் போது இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்வது இந்த நாட்டிலே வழமையாகி விட்டது.

2019 ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாட்டில் தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களை சாதகமாக பயன்படுத்தி தேசிய பாதுகாப்புடன் சம்மந்தப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற ஒரு பிரளயத்தை கிளப்பி ஜனாதிபதி தேர்தலை வென்றார்கள்.

இதனை மையமாக வைத்து ஒரு சில சிங்கள இனவாதிகள் தமிழ் நா.உறுப்பினர்களின் வீடுகளை சுற்றி வழைக்க வேண்டும். வடக்கு கிழக்கில் பௌத்தத்திற்கு எதிராக தமிழர்கள் செயற்படுகின்றார்கள் என இன துவேசத்தை கிளப்பி விடுவது மாத்திரமல்லாது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்கு முன்பு இரு நாட்கள் உதயகம்பன்பிலவும் புத்தபிக்குகளும் ஆர்ப்பாட்டம் செய்தனர் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அரசியல் அமைப்பின்படி அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடந்தே ஆகவேண்டும் என்பதுடன் மாகாணசபை தேர்தல் நடக்கக் கூடும். எனவே அடுத்த வருடம் ஒரு தேர்தல் ஆண்டாக இருக்கப் போகின்றது.

இந்த நிலையில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பில் சிங்களவரின் தலைநகரில் தமிழருக்கு எனவேலை என உதயகம்மன்பில கேட்கின்றார்? அவர் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் வடக்கு கிழக்கிலே சிங்களவர்கள் அடாத்தாக வந்து குடியேறியவர்கள் நாங்கள் தமிழர்கள் கொழும்பிலும் ஏனைய தென்பகுதியில் அடாத்தாக வந்து குடியேறவில்லை.

கொழும்பு சிங்கள தலைநகரம் வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் என்று தெரிவிக்கும் நீங்கள், நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை கொண்டு வந்து வடக்கு, கிழக்கை பிரித்து எங்களை ஒரு தனிநாடாக பிரகடனப்படுத்தவும்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வரவுள்ளார். அதேவேளை சீன ஆய்வு கப்பல் வரவுள்ளது. இவ்வாறு மாறிமாறி பூகோள ரீதியாகவும் உள்ளூர் அரசியல் ரீதியாகவும் இலங்கை சிக்கித் தவிக்கின்றது. ஏன் என்றால் இலங்கைக்கு ஒரு உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கையும் இல்லாத அரசாங்கம் ஜனாதிபதியும் செயற்படுகின்றனரா? நடைபெற்றுவரும் இனரீதியான முறுகலை ஜனாதிபதி மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பது இந்த நாட்டிற்கு சுபீட்சமாக இருக்காது.

பேராயர் மல்கம் ரஞ்சித் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பாலம் அமைக்க இருப்பதாகவும் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தவேண்டும் என்கின்ற இந்த ஆண்டகை அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு கொடுக்கும் போதும் இலங்கை வரைபடத்தையே மாற்றி கோல் சிற்றி அமைக்க கடலை மண்போட்டு நிரப்பி சீனாவுக்கு தாரைவார்க்கும் போது வாய்திறக்க வில்லை

அதேபோன்று கடந்த காலங்களில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நவாலி தேவாலயம் உட்பட தேவாலயங்கள் மீது குண்டுத் தாக்குதல் மற்றும் 2009 முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்த்து 50 ஆயரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது மற்றும் வடக்கு கிழக்கில் பல கிறிஸ்தவ வணபிதாக்கள் படுகொலை செய்யப்பட்டபோது பேராயர் வாய்திறக்கவில்லை.

ஆனால் 2019 இல் தேவாலய குண்டுதாக்குலுக்கு நீதி கோருகின்றார். அதற்கு நாங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும். ஆனால் வடக்கு கிழக்கில் இருக்கின்ற ஆயர்களான மன்னார் ஆண்டகையாக இருந்த இராயப்பு ஜோசப் , முள்ளி வாய்க்காலில் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக சாட்சியளித்தார். அவ்வாறே மட்டு திருகோணமலை ஆண்டகையாக இருந்த கிங்ஸ்லி சுவாம்பிள்ளை 1990 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களுக்கு குரல் கொடுத்தவர். அதேபோன்று தற்போதுள்ள மட்டு ஆயர் பொன்னையா ஆண்டகை அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார்.

ஆனால் இவர்களுக்கு மேலாக இருக்கின்ற பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சரத்வீரசேகர, உதயகம்பன்பல, விமல் வீரவன்ச போன்று ஒரு குறிப்பிட்ட சாராருக்கு சார்பாகவா அல்லது எந்த நிகழ்சி நிரலிலே இருக்கின்றார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.