மகாவலி ஜே வலயத்துக்குரிய தகவல்களை அரச அலுவலர்கள் வழங்கக் கூடாது என முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் ஜே வலயத்துக்கு கோப்பட்டுள்ள தகவல்களை பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர் வழங்கக் கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டத்தின் ஊடாக ஜே வலயத்தை முன்னெடுப்பதற்குரிய தரவுகள் அதன் கீழ் உள்ளடங்கும் பிரதேச செயலாளர்களிடம் கோரப்பட்டிருந்தன. 37 கிராம அலுவலர் பிரிவுகள் இதனில் உள்ளடங்குகின்றன.

இந்த விடயம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. மகாவலி எல் வலயத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சுட்டிக் காட்டப்பட்டது. இந்த வலயத்தில் முல்லைத்தீவில் 34 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கியிருந்தன. இந்தப் பகுதி மக்களும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மகாவலி ஜே வலயத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு தகவல் வழங்குவதில்லையென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியாக கலந்துரையாடப்படும் என நேற்றைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட இநாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.