மலையக மக்களை ஒதுக்கப்பட்ட சமூகமாக பேசுவது முட்டாள் தனமானது – ஜீவன்

மலையகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு உயர் தொழில்களில் ஈடுபட்டுவரும் நிலையில் மலையக மக்கள் மாத்திரம் ஒதுக்கப்பட்ட மக்களாகவும் வறுமைக்குட்பட்ட மக்களாகவும் பேசுவது முட்டாள் தனமான விடயமாகும் என ஜீவன் தொண்டமான தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தேசிய ஐக்கிய முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி இணைந்கொண்டுவந்த நாட்டின் தற்போதைய நெருக்கடி தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஒதுக்கப்பட்ட சமூகம் எனும்போது அனைவரும் மலையக மக்களை மாத்திரமே சுட்டிக்காட்டி பேசுகின்றனர்.

நாட்டில் வேறுயாரும் ஒதுக்கப்பட்டவர்கள் இல்லையா என கேட்கின்றேன். மலையக மக்கள் மாத்திரம் ஒதுக்கப்பட்ட மக்களாகவும் வறுமைக்குட்பட்ட மக்களாகவும் பேசுவது முட்டாள் தனமான விடயமாகும்.

மலையத்தில் ஒரு இலட்சத்து 30ஆயிரம் பேர் தொட்டத்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனையவர்கள் வெளிப்பிரதேசங்களில் பல்வேறு உயர் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தொடர்ந்தும் மலையக மக்கள் ஒதுக்கப்பட்ட சமூகமாக தெரிவிக்கப்படுவதுதான் மிகப்பெரிய கொடூரம்.

அத்துடன் இன்று எமது நாட்டில் இலவச கல்விக்கு காரணம் மலைய மக்களின் வியர்வை, இரத்தத்தை தவிர வேறு எதுவும் இல்லை. முடியுமானால் அதனை யாரேனும் இல்லை என தெரிவிக்கட்டும். இதனை புரிந்துகொள்ளாமல் தொடர்ந்தும் ஒதுக்கப்பட்ட சமூகம் என வெட்கம் இல்லாமல் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் மலையகத்தில் அண்மையில் இரண்டு உயிர்கள் அநியாயமாக பலியாக்கப்பட்டன. தோட்ட நிர்வாகத்தில் கவனயீனத்தினாலேயே இந்த விபத்துக்கள் இடம்பெற்றன. அந்த மரணித்தவர்கள் தொடர்பில் கதைப்பதற்கு இன்று யாரும் இல்லை. இதனை விபத்து என தெரிவிக்க முடியாது. தோட்ட நிர்வாகம் இந்த இரண்டு பேரையும் கொலை செய்திருக்கின்றது. அப்படியான கொடூரமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றாேம்.

மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக மலையக மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் வீதம் குறைவடைந்துள்ளது என கல்வி அமைச்சர் தெரிவிக்கின்றார். பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் மலையக மாணவர்கள் முறையாக பாடசாலைக்கு சென்று படித்தார்களா என கேட்கின்றோம். மத்திய மாகாணத்தில் மாத்திரம் 728 பாடசாலைகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் மாணவர்கள் எப்படி பாடசாலைக்கு சென்று படிக்க முடியும். அதேபோன்று ஏனைய மாவட்ட பாடசாலைகளில் இருக்கும் ஆங்கிலம், விஞ்ஞானம், தொழிநுட்ப கல்வி ஏனைய மலையகம் சார்ந்த மாவட்டங்களில் மாத்திரம் ஏன் இல்லை என கேட்கின்றோம். அதனால் மலைய மக்கள் ஒதுக்கப்பட்ட சமூகம் என தெரிவிக்க முடியாது. மாறாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள சமூகம் என்றே தெரிவிக்க வேண்டும். ஏனெனில் மலைய பாடசாலைகளில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தினால் அந்த மாணவர்கள் நல்ல முறையில் படித்தால் வேறு தொழில்களுக்கு சென்று விடுவார்கள். அதனால் தொட்டங்களில் வேலைசெய்ய யாரும் இருக்கமாட்டார்கள். அதனால்தான் மலையக பாடசாலைகளில் முறையான பாடங்கள் இடம்பெறுவதி்லலை.

அத்துடன் இரம்பொடை புளூம்பீல் தோட்டத்தில் நாங்கள் மேற்காெண்ட வேலை நிறுத்தப்போராட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்கின்றோம். அந்த தோட்ட தொழிலாளர்களுக்குரிய ஈ.பி.எப். ஈ.ரி.எப் அனைத்தும் முழுமையாக செலுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 80ஆயிரம் முதல் ஒருஇலட்சம் ரூபாவரை நிவாரண பணம் வழங்கப்படுகின்றது. காணியும் வழங்குகின்றனர். எனவே இந்த வெற்றியை மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு சமர்ப்பணமாக வழங்குகின்றேன் என்றார்.