வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி: 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எழு பேரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி இடம்பெற்ற பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட எழு பேரே வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தியமை, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன், கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலருக்கு எதிரான வழக்கு விசாரணையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

குறித்த இரண்டு வழக்குகளும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (08) எடுத்துகொள்ளப்பட்டது.

வழக்கு தொடர்பாக பொலிஸார் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும் என தெரிவித்த போது பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி இரண்டு வழக்குகளையும் கிடப்பில் போட்டு அனைவரையும் விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து இரண்டு வழக்கையும் கிடப்பில் போட்ட நீதிமன்றம் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த வழக்குகளில் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஷ் ஆஜராகியிருந்தார்.