வடக்கு கிழக்கில் இடம்பெற்றது இன அழிப்பு என இலங்கை அரசு ஒப்புதல் வாக்குமூலம் – சபையில் ஜனா எம்.பி

ஹாசாவில் இஸ்ரேல் நடத்தும் மனித உரிமை மீறும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் மேற்குலகம் எமது நாட்டின் மீது மட்டும் மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை கேள்விக்குட்படுத்தும் காரணம் என்ன? என ஜனாதிபதி அண்மையில் கோரியதன் மூலம் இன்று ஹாசாவில் இஸ்ரேல் செய்துவரும் இன அழிப்பையே அன்று நாங்களும் வடகிழக்கில் செய்தோம். இன்று இஸ்ரேலை ஆதரிக்கும் மேற்குலக்கு அன்று நாம் செய்தவற்றைக் கண்டிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை என மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள கடல் வளம் உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாதது. எமது கடற் பரப்பு கடல் வாழ் உயிரினங்கள் வளர்வதற்கேற்ற தட்ப வெப்ப சூழ்நிலை கொண்டது. எமது கடற்கரையைச் சுற்றி கடல்வாழ் உயிரினம் வாழ்வதற்கேற்ற கண்ட மேடையும் உள்ளது. கடல் சூழ்ந்த நாடுகள் அனைத்திலுமே இத்தகைய ஒரு பௌதீகச் சூழல் இருப்பதில்லை. உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாத நன்னீர் வளமும் எமது நாட்டுக்குக் கிடைத்திருப்பது எமக்குக் கிடைத்த பெரும் பொக்கிசமாகும். இவ் வளங்களை நாம் முறையாகப் பயன்படுத்துகின்றோமா? இவ் வளங்களின் பயன்பாடு மூலம் எமது நாடு வளம் பெறுகிறதா? என்று எம்மை நாமே வினாவினால் வருகின்ற விடை பூச்சியமே.

இந்த வளம் மாத்திரமல்ல இது போன்ற எல்லா வளமும் நிரம்பிய நாடு எமது நாடு விவசாயத்துறையை எடுத்துக் கொண்டால் நெல் உற்பத்தியில் தன்நிறைவு கண்ட நாடு. இதற்கு முதல் கால்கோளிட்டவன் குளம் தொட்டு வளம் பெருக்கிய பராக்கிரமபாகு மன்னன். ஆனால், இன்று அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை எமக்கு, பண்ணை விவசாயம் செய்து விலங்கு வேளாண்மையில் தன்நிறைவு காணவேண்டிய நாம் இன்று விலங்கு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய அவலம். முட்டையைக் கூட அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய பரிதாபம் எமக்கு. இவை யாவற்றுக்கும் காரணம் என்ன? ஊழலும் மக்கள் நலன் கருதாத அரசுமே இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

Fisheries and Aquatic Resources Act Ni ik 1996 சட்டம் அதற்குக் காலத்துக்குக் காலம் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் துறைசார் அமைச்சு மூலம் வெளியிடப்பட்ட வர்த்தமானி வெளியீடுகள் துறைசார் அமைச்சின் மூலம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம் இதுவரை நாம் அடைந்த பயன் என்ன என்ற கேள்விக்குறியோடு இன்று இச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தமும் ஏதேனும் பயனை எமது நாட்டுக்கும் மக்களுக்கும் தந்துவிடுமா.? அவ்வாறு அத்தகைய சட்டங்கள் மூலம் எம் மக்கள் உரிய பயன் பெறுவதற்குரிய இயலுமையை இந்த அமைச்சும் இந்த அரசாங்கமும் கொண்டிருக்கிறதா என்ற ஐயம் எனக்கு இன்னும் உள்ளது. எனது சிந்தனை எதிர்மறையாக உள்ளது என யாரும் நினைக்க வேண்டாம். எமது நாட்டின் கடந்த கால அனுபவம் என்னை அவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது.

அங்கு இங்கு எங்கும் போக வேண்டாம். ஆகக் குறைந்தது எமது அண்மையிலிருக்கும் மாலைதீவிலிருந்து இவ்விடயங்கள் தொடர்பாக நாம் ஏன் பாடங்களைக் கற்றுக் கொள்ளக்கூடாது. குறைந்த பட்சம் வட கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளையாவது, நன்னீர் வளங்களையாவது வட கிழக்கு மக்கள் முறையாகப் பயன்படுத்த அனுமதித்தால் கூட நாட்டின் முழுத் தேவையை இல்லாவிட்டாலும் இவ்வளங்கள் தொடர்பான முக்கால் வாசித் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய தைரியமும் மனத்திடமும் இயலுமையும் வட கிழக்கு மக்களிடமுண்டு. ஆனால் இவை தொடர்பான வட கிழக்கு வளங்கள் யாவும் தென்னிலங்கையாலும் அயல் நாடுகளாலும் கபளீகரம் செய்யப்படுகிறது. இதற்குரிய நிவாரணங்களை எம் மக்கள் எமது அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளுக்கமைவாக எடுத்துக்காட்டினால் அவர்கள் பயங்கரவாதிகள், அவர்கள் பிரிவினைவாதிகள் எனக் கருதுவதே எமது நாட்டின் வரலாறு. இதற்கான தண்டனைகளை அனுபவிப்பதே எமது வட கிழக்கு மக்களின் தலைவிதி.

கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. இதற்கான நல்லதொரு உதாரணம் கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாததும் மாறி மாறி வந்த ஆட்சியாளர்களினதும் மாறி மாறிப் பதவியிலிருந்த அரச உயர் அதிகாரிகளினதும் மறைமுக ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் அளவீடு செய்து வர்த்தமானி மூலம் மயிலத்தமடு – மாதவணையில் மேய்ச்சல் நிலமாக ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு இன்று நடைபெறும் சம்பவங்கள் தகுந்த உதாரணங்களாகும்.

எமது மாவட்ட மக்கள் இந் நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பதற்கு இந்த மேய்ச்சல் தரை நிலம் முக்கியமானதாகும். பண்ணை உற்பத்தியில் பாரிய பங்களிப்பினை நல்குவதற்கும் இந்த மேய்ச்சல் தரை நிலம் முக்கியமானதாகும். தசாப்தங்களுக்கு மேலாக இம் மேய்ச்சல் தரையால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு மட்டங்களில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கா நிலையில் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் அதன் தலைவர்கள் அனைவரும் இணைந்து எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களோடு உயர் மட்டப் பேச்சுகளை அண்மையில் நடத்தினர்.

எமது ஜனாதிபதியும் இது தொடர்பாக எமது மக்களுக்குச் சாதகமான பதிலைக் கூறியதாக ஓரளவுக்கு மகிழ்ந்தோம் என்பது உண்மைதான். ஆனால், இவ்வளவும் நடந்த பின்னரும் எங்கிருந்தோ கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக வந்த முன்னாள் ஆளுநரும் மட்;டக்களப்பு அடாவடிப் பிக்குவும் புத்தர் சிலை வைத்து எம் மக்களின் வாழ்வுரிமையைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார்கள். இந்த விபரம் தற்போது ஏறாவூர் நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அறிகின்றேன்.

கடந்த மாதம் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது மேய்ச்சல் தரைப்பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக எமது அரசியலமைப்பின் 14ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் கீழ் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். இது ஒன்றும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியோ, அல்லது அறகலய போன்ற ஆட்சியாளர்களை விரட்டும் போராட்டமோ அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதி அவர்கள் பயணிக்கும் போது வீதியின் இரு மருங்கிலுமிருந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த இருந்தனர். இதற்காக ஜனாதிபதி தனது பயணப்பாதையை மாற்றவேண்டிய தேவை அங்கு எழவில்லை. ஆனால், அன்று நடந்தது என்ன? ஜனாதிபதி தனது பயணப் பாதையை மாற்றினார். அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளின் அடிப்படையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் இன்று நீதிமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வழக்கினை எதிர் நோக்கியுள்ளனர். இதில் இன்னும் ஓர் விநோதம் என்னவென்றால் அன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத பல தமிழ் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் எதிராக இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடுத்து தமது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பாரிய பொறுப்பை எமது பொலிஸ் படையினர் நிறைவேற்றியுள்ளனர்.

நான் மேலும் கூறுவதென்னவென்னால் வட கிழக்கில் பணியாற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வருடத்திலும் குறிப்பிட்ட சில மாதங்கள் தெரியும். அம் மாதங்களில் குறிப்பிட்ட சில திகதிகளும் தெரியும். வட கிழக்கில் குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பிட்ட சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள், குறிப்பிட்ட சில சமூக ஆர்வலர்களது பெயர்களையும் பட்டியலோடு வைத்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் அந்த மாதங்களை அந்தத் திகதிகளை மறந்தாலும் எமது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்க நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப் பாதுகாக்கும் பொலிசார் அந்த மாதங்களை, திகதிகளை ஞாபகப்படுத்திவிடுவார்கள். இதற்காக முன்கூட்டியே கலந்து கொள்ள நினைக்காதவர்களின் பெயரிலும் கூட தடையுத்தரவினைப் பெற்றுவிடுவார்கள். எனக்குக் கூட இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.

நீதிமன்றத் தடையுத்தரவை மீறி நினைவேந்தல் நிகழ்வொன்றில் பங்குபற்றியதாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எனக்கு எதிராக கொக்கட்டிச்சோலைப் பொலிசாரால் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் எனக்கு எவ்வித நீதிமன்றத் தடையுத்தரவும் கிடைக்கப்பெறவில்லை. இருந்தாலும் என்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராகவேயுள்ளேன்.

ஆயுதப் போராளியாக இருந்து ஜனநாயக வழிமுறைக்கு வந்த பின்னர் எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இடத்திலும் ஏன், பாராளுமன்றத்தில் கூட எனது கருத்துக்களை, எனது முரண்பாடுகளை, எனது எதிர்ப்புக்களை சட்டரீதியாகவே வெளிப்படுத்தி வந்துள்ளேன். ஆனால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் என் மீதும் எமது மக்கள் மீதும், சட்ட முரணாகவே நடந்து கொள்கின்றனர்.

56 இனக்கலவரம், 77 இனக்கலவரம், 83 இனக்கலவரங்களின் போதெல்லாம் வெளிப்படுத்தப்படாத இன, மத முரண்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக பகிரங்க வெளியில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழ் மக்களை வெட்டி, வெட்டிக் கொல்வேனென்று கருத்து வெளியிட்ட போது, அவர் பொலிசாருடன் மோதும் போது, அவர்களின் சீருடையை பிடித்து அசிங்கப்படுத்தும் போது, அவர்களுடைய தொப்பியைக் கழற்றி வீசும் போது, அதனை அமைதியாக ஏற்றுக் கொண்ட பொலிசார் எமது அரசியலமைப்பின் 12ஆவது பிரிவின் முதலாம் உப பிரிவு வழங்கிய சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கோட்பாட்டை அப்பட்டமாக மீறியுள்ளனர். இப்படியொரு செயற்பாட்டை ஒரு இந்து மதகுரு, கிறிஸ்தவ மதகுரு, ஒரு இஸ்லாமிய மதகுரு செய்திருந்தால் இதே மௌனத்தை எமது பொலிசார் கடைப்பிடிப்பார்களா?

இதேவேளை, மட்டக்களப்பு சித்தாண்டியில் மேய்ச்சற்தரைப் பிரச்சனைக்காக இடம்பெறும் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வந்து அகிம்சை ரீதியாக போராட்டமொன்றை நடத்தினார்கள். ஆனால், இந்தப் பிக்கு செய்யும் அடாவடிகளை பார்த்துக் கொண்டிருக்கும் பொலிசார் அமைதியான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மாணவர்களை சிறைப்பிடித்து நீதிமன்றத்தின் முன்நிறுத்தி சிறையில் அடைக்கின்ற கைங்கரியத்தினையே செய்துள்ளனர். இவ்வாறாயின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு இந்த நாட்டில் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

எமது நாட்டை இன்று ஆள்வது யார்? ஆளும் கட்சிக்கே தாம் தான் ஆளும்கட்சியென்று புரியாத அவல நிலை. இன்று நம் நாட்டின் ஜனாதிபதியை விரட்டுவோம், வரவு செலவுத்திட்டத்தைத் தோற்கடிப்போம் என்று எதிர்க்கட்சிகள் கோசமிட்ட காலம் போய் ஆளும் கட்சியினரே இவ்வாறு கோசமெழுப்புவது சாதாரணமாகியுள்ளது.

எமது ஜனாதிபதி அவர்கள் ஒரிரு நாட்களின் முன் மேற்குலக நாடுகளுக்கு அறைகூவல் ஒன்று விடுத்தார். ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை போன்றவற்றுக்கு மேற்குலக நாடுகள் வரும் போது பரிசுத்தமான கரங்களுடன் வரவேண்டுமென்றுரைத்தார். எமது ஜனாதிபதி அவர்களது புலமை, திறமை தொடர்பாக எனக்கு மதிப்புண்டு. ஆனால், இந்தக் கருத்தினை வெளியிடும் போது அவர் மறைமுகமாக எமது நாட்டில் நடைபெற்ற இனப் படுகொலையினையும், இனச் சுத்திகரிப்பினையும் ஏற்றுக் கொள்கின்றார் என்று கருதக் கூடியதாக இருக்கின்றது. ஹாசா யுத்தத்தில் இஸ்ரேல் நடத்தும் மனாதாபிமானமற்ற மனித உரிமை மீறும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவினை நல்கும் மேற்குலகம் எமது நாட்டின் மீது மட்டும் மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை கேள்விக்குட்படுத்தும் காரணம் என்ன? எனக் கோரியதன் மூலம் இன்று ஹாசாவில் இஸ்ரேல் செய்துவரும் இன அழிப்பையே அன்று நாங்களும் வடக்கு கிழக்கில் செய்தோம். இன்று இஸ்ரேலை ஆதரிக்கும் நீங்கள் அன்று நாம் செய்த செயலை கண்டிப்பதற்கு உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என குறிப்பிடுவதன் மூலம் இஸ்ரேலும் நாமும் ஒன்றையே செய்தோம் என மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்.

எமது நாட்டில் சட்டங்கள் ஆக்கப்படுகிறது. காலத்துக்கு ஏற்ப சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்றுக் கொள்ளக்கூடிய பாராட்டப்பட வேண்டிய விடயங்களே இவை. ஆனால், இவை மட்டும் போதாது. இயற்றப்படும், திருத்தப்படும் சட்டங்கள் இன, மத, மொழி பேதமின்றி பிரதேச வேறுபாடுகளின்றி அரசாங்கப் பிரமுகர்கள், எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் என்ற வேறுபாடுகளின்றி பௌத்த, இந்து, கிறிஸ்த்தவ, இஸ்லாமிய மதகுருக்கள் என்று வேறுபாடின்றி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் நாட்டின் ஒற்றுமைக்கும், சமாதான, சகவாழ்வுக்கும் சவாலாக இருக்கும் அனைவர் மீதும் சட்டம் சமமாக பிரயோகிக்கப்படவேண்டும். அப்போது மட்டுமே எம் நாட்டில் சட்ட ஆட்சி நிலவும் இல்லையெனில் இன்றைய நிலைமை ஒரு தொடர்கதையாகவே முடியும். இது இன்று சமர்ப்பிக்கப்படும் கடற்றொழில் சட்டமூலத்துக்கும் பொருத்தமாகும்.

இன்றைய தேவை கருதி ஒரு முக்கிய விடயம் ஒன்றை இந்த உயரிய சபையின் கவனத்தின் பால் ஈர்க்க விளைகின்றேன். எமது நாட்டில் பொருட்களின் விலைவாசிகள் நினைக்க முடியாத அளவுக்கு உயர்வடைந்து வருகின்றது. மக்கள் வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்ணுவதே சிரமம் என்னும் நிலை இன்னும் ஓரிரு நாட்களில் ஏற்படினும் ஆச்சரியமில்லை. உயர் வருமானம் பெறும் அரச உத்தியோகத்தர்கள், நிபுணத்துவ உத்தியோகத்தர்கள், தொழில் சார் வல்லுனர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றார்கள். சாதாரண மக்கள் மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றை பாவிக்க முடியாத அளவுக்கு இவற்றின் விலையேற்றம் உள்ளது.

ஓன்றிணைந்த தொழிற் சங்கங்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாவாவது தேவை என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது. இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு போதுமானதென நியாயமாகச் சிந்திக்கும் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், இதையாவது அரச ஊழியர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற முறையான நிதி நிருவாக முகாமைத்துவத்தினை ஏற்படுத்த வேண்டும். அரச உயர் மட்டத்தில் நிலவும் ஊழல்கள் முற்றாக இல்லாமலாக்கப்படவேண்டும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எரிபொருட்கள், எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் இருந்த விலைகளை நாம் அறிவோம் அரச ஊழியர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த சம்பளத்தையே தற்போதும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது விலைவாசிகள் மூன்று மடங்கு உயர்ந்திருக்கின்றது. உண்மையிலேயே அவர்கள் தங்கள் சம்பளத்தில் மூன்று மடங்கு உயர்வினைக் கேட்க வேண்டிய நிலையில் வெறுமனே இருபதாயிரம் சம்பள உயர்;வையே கேட்கின்றார்கள். எனவே எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அண்மையில் தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக அந்த இறக்குமதியாளர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய கூற்று எமது நாட்டில் ஊழல் இன்னமும் எந்த அளவுக்கு வேரோடி உள்ளது என்பதற்கு தக்க உதாரணமாகும். இவற்றைக் கருத்தில் கொண்டு எமது மக்களின் எதிர்கால வாழ்வின் சுபீட்சத்துக்காக சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டம் வழி வகுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.