தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் – ரெலோ செயலாளர் நாயகம் கோ.கருணாகரம் எம்.பி

தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் தாய்க் கட்சி தாங்கள்தான் என்று சொல்லும் தமிழரசுக் கட்சியினர், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று (01.02.24) களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்யும் கட்சிகள், ஒன்றாக பயணிக்க வேண்டிய காலம் இதுவாகும். 2009 இற்கு முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமான ஒரு அரசியல் இருந்தது.

நாங்கள் ஆயுத ரீதியாகவும். அரசியல் ரீதியாகவும் பலமாக இருந்தோம். 2009 இற்குப் பின்பு ஆயுத ரீதியாக நாங்கள் செயற்பட முடியாத நிலை இருந்து கொண்டிருக்கும் இந்நிலையில் மிகவும் பலமாக இருக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக்காலகட்டத்தில் சிதைந்து பல்வேறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து 2004 ஆம் அண்டிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி முக்கியமான கட்சியாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தமிழரசுக் கட்சி தனியாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் பிரிந்து சென்றார்கள்.

அப்போது கூட்டமைப்பிலிருந்து தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும், ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, மற்றும் தமிழ் தேசியக் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.

2009 இங்குப் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிதைவடைவதற்குக் காரணமும் கூட அக்கூட்டமைப்பை பதிவு செய்யாததுதான். இந்நிலையில் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே ஒரு குழப்ப நிலை உருவாகியிருப்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்.

அக்கட்சியின் தலைவர்கூட வரலாற்றிலே வாக்களிப்பின் மூலம் தெரிவாகியிருக்கின்றார். செயலாளர் மற்றும் ஏனைய நிர்வாகங்களுக்கான தெரிவுகள் கூட நடைபெற்றிருக்கின்றது ஆனால் அது ஒழுங்காக நடைபெறவில்லை என ஒருசாரார் சொல்கின்றார்கள்.

இந்த நிலையில் ஒன்றை தமிழரசுக் கட்சி உணரவேண்டும். தாங்கள் தமிழ் மக்களுக்காக நீண்டகாலமாக பயணிக்கும் கட்சி தாங்கள்தான் தாய்க் கட்சி என்று சொல்பவர்கள், உங்களுக்குள் ஒற்றுமையைக் கொண்டு வந்து தமிழ் தேசியக் கூட்டடைமைப் பலப்படுத்த வேண்டும்.

அக்கட்சிக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள்கூட 2009 இற்கு முன்பு இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.

மக்களை அடக்கி ஒடுக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஊடகங்களை அடக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் – கோ. கருணாகரன் (ஜனா)

இலங்கை பாராளுமன்றத்தில் மக்களை அடக்கி ஒடுக்கும் சட்டங்கள் தான் கொண்டுவரப்படுகின்றன. 1979ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இன்று ஒட்டுமொத்த இலங்கை மக்களுமே இந்த சட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டு, இதன் வலியை உணர்ந்துகொண்டிருக்கின்றார்கள். எனவே, இந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஊடகங்களை அடக்கும் நிகழ்நிலை காப்புச்சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை (27) கறுப்பு ஜனவரியை முன்னிட்டு ஊடக அடக்குமுறையை எதிர்த்து, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

1979ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக 6 மாதத்துக்கு தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத சட்டம் இன்று வரை தொடர்ச்சியாக இருக்கின்றது. இந்த நிலையில் ஊடகங்களையும் மக்களின் கருத்து சுதந்திரத்தையும் அடக்குவதற்காக இந்த நிகழ்நிலை காப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இந்த சட்டத்துக்கு வடகிழக்கு சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட கை உயர்த்தி ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்காக தான் இச்சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றதோ என சந்தேகங்கள் எழுகின்றன. ஏனென்றால், கூடுதலான ஆர்ப்பாட்டங்கள் நில அபகரிப்புகள், காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான ஆர்ப்பாட்டங்கள் வட கிழக்கில் அதிகமாக இடம்பெறுகின்றன.

2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதற்கு பின் ஒரு மௌன யுத்தம் வடகிழக்கை பௌத்த மதமாக்குவது, காணி அபகரிப்புக்கு பெரும்பான்மையான மக்களை குடியேற்றி எமது இன பரம்பலை குறைப்பதுமான ஒரு நிகழ்ச்சி நிரலில் அரசும் அரச அதிகாரிகளும் புத்த பிக்குகள் கூட உள்வாங்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.

இப்படியான காலகட்டங்களில் வட கிழக்கிலே மக்கள் கிளர்ந்து எழக்கூடாது என்பதற்காகவும் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.

இந்நாட்டின் அரகலய போராட்டம் என்ற போராட்டங்கள் கூட இனி ஏற்படக் கூடாது எனவும் அரசுக்கு எதிராக மக்கள் கருத்து கூறக்கூடாது என்றும் அரசு நினைக்கிறது.

ஒன்றை மட்டும் இந்த அரசு உணர்ந்துகொள்ள வேண்டும். இன்றிருக்கும் அரசு நாளை மாறலாம். நாளை மாறும்போது தனக்கு சாதகமாக தற்போது இருக்கும் அரசு அங்கத்துவம் பெறுபவர்கள் கூட இந்தச் சட்டத்தினால் பாதிக்கப்படலாம்.

இச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் கை உயர்த்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது ஆதரவாளர்கள் கூட இன்னொரு ஆட்சி மாற்றம் ஏற்படும்போது இச்சட்டத்தினால் பாதிக்கப்படலாம் என்பதை உணராமல், அவர்கள் இந்த சட்டத்துக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றனர்.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்ட, கொல்லப்பட்ட, ஊடக கலையகங்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன. முப்பது நாற்பதுக்கு மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யாருக்குமே இன்று வரை நீதி கிடைக்கவில்லை. நீதி கிடைக்கும் என்று கூட எதிர்பார்க்க முடியாது.

2009 தனது குடும்ப உறுப்பினர்களை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவினர்கள் கூட இன்னும் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நீதியை கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நீதியைக் கூட கொடுக்காத அரசு இப்படியானவர்களுக்கு நீதி கொடுக்குமா என்பது சந்தேகம்தான்.

இருந்தாலும் இன்னும் ஒரு கருத்தும் இருக்கிறது. ஊடகங்களை ஒழுங்குபடுத்தக்கூடிய ஒரு தேவையும் இருக்கிறது. தற்போது ஊடகங்களுக்கு அப்பால் சமூக வலைத்தளங்கள் ஊடாக சில பாதிப்புகளும் மக்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக சிலர் தற்கொலை செய்யுமளவுக்கு போலி முகநூல் மூலமாக சில பிரச்சாரங்கள் செய்யப்படுவதனால் அதனை கட்டுப்படுத்த வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்துக்கு இருக்கிறது.

இருந்தபோதும் அதை விடுத்து ஊடகங்களை அடக்கி, தனக்கு எதிரான கருத்துக்களை யாருமே கூறக்கூடாது என்றொரு நிலையில் தான் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டம் வருகிறது என்பதை நாங்கள் எல்லோரும் நன்றாக உணர்ந்து கொண்டிருக்கின்றோம். இதனை அரசாங்கம் மீளப்பெற வேண்டும்.

இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு எதிராக 56 அமைப்புகள் குரல் கொடுத்திருக்கின்றார்கள். எனவே, சர்வதேசத்தின் கவனம் இலங்கை அரசு மீது திரும்பி இருக்கின்றது. ஏற்கனவே பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று சர்வதேசம் கூறுகின்றது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு அரசு சிந்திக்கிறது. எங்களை பொருத்தமட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டமும் வேண்டாம்; பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் வேண்டாம்; ஊடகங்களை அடக்கும் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டமும் வேண்டாம் என்பதே எங்களுடைய உறுதியான நிலைப்பாடு என்றார்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இணக்கம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டோரின் விடுதலை, மயிலத்தமடு மாதவணை பிரச்சனை, உள்ளூராட்சி மன்றங்களில் அமைய தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கல், 13வது திருத்தம் முழுமையாக அமுலாக்கல், வடகிழக்கில் அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஜனாதியுடனான இன்றைய சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டு, பேச்சளவில் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்று வடகிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மேற்கொண்ட சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இன்று பிற்பகல் 03 மணியளவில் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் வடகிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதில் உண்மைக்கும், ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவை அமைப்பதற்கான வரைபொன்று அனைவருக்கும் பரிமாறப்பட்டது. ஜனவரி மாதத்தில் இதனை பாராளுமன்றத்தில் சட்டமாக்குவதாகப் பேசப்பட்டது.

அத்துடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டது. பூநகரியில் சோளார் மற்றும் காற்றாளை திட்டங்கள், இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்வது, இந்தியாவில் இருந்து குழாய் மூலமாக மின்சாரம், எரிபொருட்கள் கொண்டுவருவதுடன், இலங்கை இந்தியாவிற்கிடையில் தரைவழிப் பாதை போன்றவற்றுக்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இதன்போது எங்களாலும் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்த வண்ணம் இருப்பது தொடர்பிலும், கடந்த நவம்பர் மாதமளவிலும் மட்டக்களப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டு அதில் 4 பேர்தான் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஏனையவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் பேசப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தையும் மாவீரர் தின நிகழ்வுக்காக நிதி கோரியதாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள விடயமும் சுட்டிக் காட்டப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பில் ஒரு வித்தியாசமான நிலைமை இருப்பதாகவும், மட்டக்களப்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் விரும்பத்தக்கதாக இல்லை என்ற கருத்துப்பட ஜனாதிபதி விடயங்களைத் தெரிவித்தார். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கு தான் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் காணிப் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது நாங்கள் மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரை விவகாரம் சம்பந்தமாகத் தெரிவித்தோம். அது தொடர்பிலும் மிக விரைவில் உரிய தீர்மானம் எடுப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் உள்ளூரட்சி மன்றங்களிலே நீண்ட காலமாக அமைய, தற்காலிக அடிப்படையில் வேலை செய்கின்ற ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் நாங்களும் எமது கோரிக்கையை முன்வைத்தோம். இது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்களால் கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த விடயத்திற்கும் விரைவில் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் 13 வது திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பில் தெரிவித்தார். இதன்போது பிரதேச செயலாளர்களை மாகாண சபையின் கீழ் கொண்டு வருவதற்கு தான் ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இதன் போது நான் தெரிவிக்கையில் 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டு பின்னர் 1988ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் அந்த அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டது. ஆரம்ப காலத்தில் மாவட்ட அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் என்று தான் இருந்தது. அதனை 1988ல் மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்கள் என்று சொல்லி அவர்களை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றைய நிலையில் கிராமசேவை உத்தியோகத்தர் பதவி கூட மாகாணசபைக்கு பதில் அளிக்க முடியாமல் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கின்றது.

அதுமாத்திரமல்லாமல் பாராளுமன்றத்தில் தாங்கள் ஜனாதிபதியாக வந்த போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினரகளிடமும் 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பில் தெரியப்படுத்தி இருந்தீர்கள் அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தார்கள். எனவே 13வது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக அமுல்ப்படுத்துவதற்குப் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வராது என்று நினைக்கின்றோம்.

13வது திருத்தம் புறையோடிபோயுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக இல்லாது விட்டாலும் ஒரு இடைக்காலத் தீர்வாகக் கிடைக்கப்பட்டது. அதையாவது முற்றுமுழுதாக நிறைவேற்றினால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடு மிக விரைவில் மீண்டெழும் என்ற விடயங்களும் எம்மால் சுட்டிக்காட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் இடம்பெற்றது இன அழிப்பு என இலங்கை அரசு ஒப்புதல் வாக்குமூலம் – சபையில் ஜனா எம்.பி

ஹாசாவில் இஸ்ரேல் நடத்தும் மனித உரிமை மீறும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் மேற்குலகம் எமது நாட்டின் மீது மட்டும் மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை கேள்விக்குட்படுத்தும் காரணம் என்ன? என ஜனாதிபதி அண்மையில் கோரியதன் மூலம் இன்று ஹாசாவில் இஸ்ரேல் செய்துவரும் இன அழிப்பையே அன்று நாங்களும் வடகிழக்கில் செய்தோம். இன்று இஸ்ரேலை ஆதரிக்கும் மேற்குலக்கு அன்று நாம் செய்தவற்றைக் கண்டிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை என மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள கடல் வளம் உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாதது. எமது கடற் பரப்பு கடல் வாழ் உயிரினங்கள் வளர்வதற்கேற்ற தட்ப வெப்ப சூழ்நிலை கொண்டது. எமது கடற்கரையைச் சுற்றி கடல்வாழ் உயிரினம் வாழ்வதற்கேற்ற கண்ட மேடையும் உள்ளது. கடல் சூழ்ந்த நாடுகள் அனைத்திலுமே இத்தகைய ஒரு பௌதீகச் சூழல் இருப்பதில்லை. உலகில் எந்த நாட்டுக்கும் கிடையாத நன்னீர் வளமும் எமது நாட்டுக்குக் கிடைத்திருப்பது எமக்குக் கிடைத்த பெரும் பொக்கிசமாகும். இவ் வளங்களை நாம் முறையாகப் பயன்படுத்துகின்றோமா? இவ் வளங்களின் பயன்பாடு மூலம் எமது நாடு வளம் பெறுகிறதா? என்று எம்மை நாமே வினாவினால் வருகின்ற விடை பூச்சியமே.

இந்த வளம் மாத்திரமல்ல இது போன்ற எல்லா வளமும் நிரம்பிய நாடு எமது நாடு விவசாயத்துறையை எடுத்துக் கொண்டால் நெல் உற்பத்தியில் தன்நிறைவு கண்ட நாடு. இதற்கு முதல் கால்கோளிட்டவன் குளம் தொட்டு வளம் பெருக்கிய பராக்கிரமபாகு மன்னன். ஆனால், இன்று அரிசியை இறக்குமதி செய்யவேண்டிய நிலை எமக்கு, பண்ணை விவசாயம் செய்து விலங்கு வேளாண்மையில் தன்நிறைவு காணவேண்டிய நாம் இன்று விலங்கு உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய அவலம். முட்டையைக் கூட அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய பரிதாபம் எமக்கு. இவை யாவற்றுக்கும் காரணம் என்ன? ஊழலும் மக்கள் நலன் கருதாத அரசுமே இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

Fisheries and Aquatic Resources Act Ni ik 1996 சட்டம் அதற்குக் காலத்துக்குக் காலம் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் துறைசார் அமைச்சு மூலம் வெளியிடப்பட்ட வர்த்தமானி வெளியீடுகள் துறைசார் அமைச்சின் மூலம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம் இதுவரை நாம் அடைந்த பயன் என்ன என்ற கேள்விக்குறியோடு இன்று இச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தமும் ஏதேனும் பயனை எமது நாட்டுக்கும் மக்களுக்கும் தந்துவிடுமா.? அவ்வாறு அத்தகைய சட்டங்கள் மூலம் எம் மக்கள் உரிய பயன் பெறுவதற்குரிய இயலுமையை இந்த அமைச்சும் இந்த அரசாங்கமும் கொண்டிருக்கிறதா என்ற ஐயம் எனக்கு இன்னும் உள்ளது. எனது சிந்தனை எதிர்மறையாக உள்ளது என யாரும் நினைக்க வேண்டாம். எமது நாட்டின் கடந்த கால அனுபவம் என்னை அவ்வாறு நினைக்கத் தூண்டுகிறது.

அங்கு இங்கு எங்கும் போக வேண்டாம். ஆகக் குறைந்தது எமது அண்மையிலிருக்கும் மாலைதீவிலிருந்து இவ்விடயங்கள் தொடர்பாக நாம் ஏன் பாடங்களைக் கற்றுக் கொள்ளக்கூடாது. குறைந்த பட்சம் வட கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளையாவது, நன்னீர் வளங்களையாவது வட கிழக்கு மக்கள் முறையாகப் பயன்படுத்த அனுமதித்தால் கூட நாட்டின் முழுத் தேவையை இல்லாவிட்டாலும் இவ்வளங்கள் தொடர்பான முக்கால் வாசித் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய தைரியமும் மனத்திடமும் இயலுமையும் வட கிழக்கு மக்களிடமுண்டு. ஆனால் இவை தொடர்பான வட கிழக்கு வளங்கள் யாவும் தென்னிலங்கையாலும் அயல் நாடுகளாலும் கபளீகரம் செய்யப்படுகிறது. இதற்குரிய நிவாரணங்களை எம் மக்கள் எமது அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளுக்கமைவாக எடுத்துக்காட்டினால் அவர்கள் பயங்கரவாதிகள், அவர்கள் பிரிவினைவாதிகள் எனக் கருதுவதே எமது நாட்டின் வரலாறு. இதற்கான தண்டனைகளை அனுபவிப்பதே எமது வட கிழக்கு மக்களின் தலைவிதி.

கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. இதற்கான நல்லதொரு உதாரணம் கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாததும் மாறி மாறி வந்த ஆட்சியாளர்களினதும் மாறி மாறிப் பதவியிலிருந்த அரச உயர் அதிகாரிகளினதும் மறைமுக ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் அளவீடு செய்து வர்த்தமானி மூலம் மயிலத்தமடு – மாதவணையில் மேய்ச்சல் நிலமாக ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு இன்று நடைபெறும் சம்பவங்கள் தகுந்த உதாரணங்களாகும்.

எமது மாவட்ட மக்கள் இந் நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பதற்கு இந்த மேய்ச்சல் தரை நிலம் முக்கியமானதாகும். பண்ணை உற்பத்தியில் பாரிய பங்களிப்பினை நல்குவதற்கும் இந்த மேய்ச்சல் தரை நிலம் முக்கியமானதாகும். தசாப்தங்களுக்கு மேலாக இம் மேய்ச்சல் தரையால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு மட்டங்களில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கா நிலையில் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் அதன் தலைவர்கள் அனைவரும் இணைந்து எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களோடு உயர் மட்டப் பேச்சுகளை அண்மையில் நடத்தினர்.

எமது ஜனாதிபதியும் இது தொடர்பாக எமது மக்களுக்குச் சாதகமான பதிலைக் கூறியதாக ஓரளவுக்கு மகிழ்ந்தோம் என்பது உண்மைதான். ஆனால், இவ்வளவும் நடந்த பின்னரும் எங்கிருந்தோ கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக வந்த முன்னாள் ஆளுநரும் மட்;டக்களப்பு அடாவடிப் பிக்குவும் புத்தர் சிலை வைத்து எம் மக்களின் வாழ்வுரிமையைக் கேள்விக்குட்படுத்தியுள்ளார்கள். இந்த விபரம் தற்போது ஏறாவூர் நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அறிகின்றேன்.

கடந்த மாதம் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது மேய்ச்சல் தரைப்பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்ப்பதற்காக எமது அரசியலமைப்பின் 14ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் கீழ் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். இது ஒன்றும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியோ, அல்லது அறகலய போன்ற ஆட்சியாளர்களை விரட்டும் போராட்டமோ அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதி அவர்கள் பயணிக்கும் போது வீதியின் இரு மருங்கிலுமிருந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த இருந்தனர். இதற்காக ஜனாதிபதி தனது பயணப்பாதையை மாற்றவேண்டிய தேவை அங்கு எழவில்லை. ஆனால், அன்று நடந்தது என்ன? ஜனாதிபதி தனது பயணப் பாதையை மாற்றினார். அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளின் அடிப்படையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்திய சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் இன்று நீதிமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வழக்கினை எதிர் நோக்கியுள்ளனர். இதில் இன்னும் ஓர் விநோதம் என்னவென்றால் அன்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத பல தமிழ் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் எதிராக இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடுத்து தமது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பாரிய பொறுப்பை எமது பொலிஸ் படையினர் நிறைவேற்றியுள்ளனர்.

நான் மேலும் கூறுவதென்னவென்னால் வட கிழக்கில் பணியாற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வருடத்திலும் குறிப்பிட்ட சில மாதங்கள் தெரியும். அம் மாதங்களில் குறிப்பிட்ட சில திகதிகளும் தெரியும். வட கிழக்கில் குறிப்பிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள், குறிப்பிட்ட சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள், குறிப்பிட்ட சில சமூக ஆர்வலர்களது பெயர்களையும் பட்டியலோடு வைத்திருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் அந்த மாதங்களை அந்தத் திகதிகளை மறந்தாலும் எமது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்க நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணிப் பாதுகாக்கும் பொலிசார் அந்த மாதங்களை, திகதிகளை ஞாபகப்படுத்திவிடுவார்கள். இதற்காக முன்கூட்டியே கலந்து கொள்ள நினைக்காதவர்களின் பெயரிலும் கூட தடையுத்தரவினைப் பெற்றுவிடுவார்கள். எனக்குக் கூட இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.

நீதிமன்றத் தடையுத்தரவை மீறி நினைவேந்தல் நிகழ்வொன்றில் பங்குபற்றியதாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எனக்கு எதிராக கொக்கட்டிச்சோலைப் பொலிசாரால் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் எனக்கு எவ்வித நீதிமன்றத் தடையுத்தரவும் கிடைக்கப்பெறவில்லை. இருந்தாலும் என்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதனை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத் தயாராகவேயுள்ளேன்.

ஆயுதப் போராளியாக இருந்து ஜனநாயக வழிமுறைக்கு வந்த பின்னர் எந்த ஒரு காலத்திலும், எந்த ஒரு இடத்திலும் ஏன், பாராளுமன்றத்தில் கூட எனது கருத்துக்களை, எனது முரண்பாடுகளை, எனது எதிர்ப்புக்களை சட்டரீதியாகவே வெளிப்படுத்தி வந்துள்ளேன். ஆனால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிசார் என் மீதும் எமது மக்கள் மீதும், சட்ட முரணாகவே நடந்து கொள்கின்றனர்.

56 இனக்கலவரம், 77 இனக்கலவரம், 83 இனக்கலவரங்களின் போதெல்லாம் வெளிப்படுத்தப்படாத இன, மத முரண்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக பகிரங்க வெளியில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழ் மக்களை வெட்டி, வெட்டிக் கொல்வேனென்று கருத்து வெளியிட்ட போது, அவர் பொலிசாருடன் மோதும் போது, அவர்களின் சீருடையை பிடித்து அசிங்கப்படுத்தும் போது, அவர்களுடைய தொப்பியைக் கழற்றி வீசும் போது, அதனை அமைதியாக ஏற்றுக் கொண்ட பொலிசார் எமது அரசியலமைப்பின் 12ஆவது பிரிவின் முதலாம் உப பிரிவு வழங்கிய சட்டத்தின் முன் சகலரும் சமம் என்ற கோட்பாட்டை அப்பட்டமாக மீறியுள்ளனர். இப்படியொரு செயற்பாட்டை ஒரு இந்து மதகுரு, கிறிஸ்தவ மதகுரு, ஒரு இஸ்லாமிய மதகுரு செய்திருந்தால் இதே மௌனத்தை எமது பொலிசார் கடைப்பிடிப்பார்களா?

இதேவேளை, மட்டக்களப்பு சித்தாண்டியில் மேய்ச்சற்தரைப் பிரச்சனைக்காக இடம்பெறும் பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வந்து அகிம்சை ரீதியாக போராட்டமொன்றை நடத்தினார்கள். ஆனால், இந்தப் பிக்கு செய்யும் அடாவடிகளை பார்த்துக் கொண்டிருக்கும் பொலிசார் அமைதியான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மாணவர்களை சிறைப்பிடித்து நீதிமன்றத்தின் முன்நிறுத்தி சிறையில் அடைக்கின்ற கைங்கரியத்தினையே செய்துள்ளனர். இவ்வாறாயின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாடு இந்த நாட்டில் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

எமது நாட்டை இன்று ஆள்வது யார்? ஆளும் கட்சிக்கே தாம் தான் ஆளும்கட்சியென்று புரியாத அவல நிலை. இன்று நம் நாட்டின் ஜனாதிபதியை விரட்டுவோம், வரவு செலவுத்திட்டத்தைத் தோற்கடிப்போம் என்று எதிர்க்கட்சிகள் கோசமிட்ட காலம் போய் ஆளும் கட்சியினரே இவ்வாறு கோசமெழுப்புவது சாதாரணமாகியுள்ளது.

எமது ஜனாதிபதி அவர்கள் ஒரிரு நாட்களின் முன் மேற்குலக நாடுகளுக்கு அறைகூவல் ஒன்று விடுத்தார். ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை போன்றவற்றுக்கு மேற்குலக நாடுகள் வரும் போது பரிசுத்தமான கரங்களுடன் வரவேண்டுமென்றுரைத்தார். எமது ஜனாதிபதி அவர்களது புலமை, திறமை தொடர்பாக எனக்கு மதிப்புண்டு. ஆனால், இந்தக் கருத்தினை வெளியிடும் போது அவர் மறைமுகமாக எமது நாட்டில் நடைபெற்ற இனப் படுகொலையினையும், இனச் சுத்திகரிப்பினையும் ஏற்றுக் கொள்கின்றார் என்று கருதக் கூடியதாக இருக்கின்றது. ஹாசா யுத்தத்தில் இஸ்ரேல் நடத்தும் மனாதாபிமானமற்ற மனித உரிமை மீறும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணான நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவினை நல்கும் மேற்குலகம் எமது நாட்டின் மீது மட்டும் மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை கேள்விக்குட்படுத்தும் காரணம் என்ன? எனக் கோரியதன் மூலம் இன்று ஹாசாவில் இஸ்ரேல் செய்துவரும் இன அழிப்பையே அன்று நாங்களும் வடக்கு கிழக்கில் செய்தோம். இன்று இஸ்ரேலை ஆதரிக்கும் நீங்கள் அன்று நாம் செய்த செயலை கண்டிப்பதற்கு உங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என குறிப்பிடுவதன் மூலம் இஸ்ரேலும் நாமும் ஒன்றையே செய்தோம் என மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்.

எமது நாட்டில் சட்டங்கள் ஆக்கப்படுகிறது. காலத்துக்கு ஏற்ப சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்றுக் கொள்ளக்கூடிய பாராட்டப்பட வேண்டிய விடயங்களே இவை. ஆனால், இவை மட்டும் போதாது. இயற்றப்படும், திருத்தப்படும் சட்டங்கள் இன, மத, மொழி பேதமின்றி பிரதேச வேறுபாடுகளின்றி அரசாங்கப் பிரமுகர்கள், எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் என்ற வேறுபாடுகளின்றி பௌத்த, இந்து, கிறிஸ்த்தவ, இஸ்லாமிய மதகுருக்கள் என்று வேறுபாடின்றி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் நாட்டின் ஒற்றுமைக்கும், சமாதான, சகவாழ்வுக்கும் சவாலாக இருக்கும் அனைவர் மீதும் சட்டம் சமமாக பிரயோகிக்கப்படவேண்டும். அப்போது மட்டுமே எம் நாட்டில் சட்ட ஆட்சி நிலவும் இல்லையெனில் இன்றைய நிலைமை ஒரு தொடர்கதையாகவே முடியும். இது இன்று சமர்ப்பிக்கப்படும் கடற்றொழில் சட்டமூலத்துக்கும் பொருத்தமாகும்.

இன்றைய தேவை கருதி ஒரு முக்கிய விடயம் ஒன்றை இந்த உயரிய சபையின் கவனத்தின் பால் ஈர்க்க விளைகின்றேன். எமது நாட்டில் பொருட்களின் விலைவாசிகள் நினைக்க முடியாத அளவுக்கு உயர்வடைந்து வருகின்றது. மக்கள் வாழ முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்ணுவதே சிரமம் என்னும் நிலை இன்னும் ஓரிரு நாட்களில் ஏற்படினும் ஆச்சரியமில்லை. உயர் வருமானம் பெறும் அரச உத்தியோகத்தர்கள், நிபுணத்துவ உத்தியோகத்தர்கள், தொழில் சார் வல்லுனர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றார்கள். சாதாரண மக்கள் மின்சாரம், எரிபொருள், எரிவாயு என்பவற்றை பாவிக்க முடியாத அளவுக்கு இவற்றின் விலையேற்றம் உள்ளது.

ஓன்றிணைந்த தொழிற் சங்கங்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாவாவது தேவை என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது. இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு போதுமானதென நியாயமாகச் சிந்திக்கும் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால், இதையாவது அரச ஊழியர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற முறையான நிதி நிருவாக முகாமைத்துவத்தினை ஏற்படுத்த வேண்டும். அரச உயர் மட்டத்தில் நிலவும் ஊழல்கள் முற்றாக இல்லாமலாக்கப்படவேண்டும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எரிபொருட்கள், எரிவாயு, அத்தியாவசியப் பொருட்கள் இருந்த விலைகளை நாம் அறிவோம் அரச ஊழியர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த சம்பளத்தையே தற்போதும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது விலைவாசிகள் மூன்று மடங்கு உயர்ந்திருக்கின்றது. உண்மையிலேயே அவர்கள் தங்கள் சம்பளத்தில் மூன்று மடங்கு உயர்வினைக் கேட்க வேண்டிய நிலையில் வெறுமனே இருபதாயிரம் சம்பள உயர்;வையே கேட்கின்றார்கள். எனவே எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அண்மையில் தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக அந்த இறக்குமதியாளர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய கூற்று எமது நாட்டில் ஊழல் இன்னமும் எந்த அளவுக்கு வேரோடி உள்ளது என்பதற்கு தக்க உதாரணமாகும். இவற்றைக் கருத்தில் கொண்டு எமது மக்களின் எதிர்கால வாழ்வின் சுபீட்சத்துக்காக சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத்திட்டம் வழி வகுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஒரு வாரத்தில் வெளியேற்ற ஜனாதிபதி உத்தரவு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள விவசாயிகளை அந்த பகுதியிலிருந்த ஒரு வாரத்துக்குள் சட்டரீதியாக வெளியேற்ற வேண்டுமென பொலிசார், மகாவலி திணைக்களத்துக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரையான மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் முன்னாள் ஆளுனர் அனுராதா யகம்பத், பௌத்த பிக்குகளின் துணைகளுடன் சிங்கள விவசாயிகள் சட்டவிரோதமாக குடியேற்றப்பட்டு, இனமுறுகல் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கால்நடைகள் மேய்ச்சல் தரையின்றி சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடந்தது.

ஜனாதிபதி, ஜனாதிபதி செயலாளர், மகாவலி திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், பதில் அரச அதிபர், ஏறாவூர் பற்று, செங்கலடி பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன், கிழக்கு ஆளுனர், மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் (ஜனா), சிவநேசதுரை சந்திரகாந்தன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட நிலங்கள், அந்த மாவட்ட மக்களிற்கே பயன்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலன்னறுவை, அம்பாறை பகுதிகளை சேர்ந்த சிங்களவர்கள் அங்கு சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக மகாவலி திணைக்களமும் சுட்டிக்காட்டியது.

அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நீதிமன்றத்தின ஊடாக ஒரு வாரத்தில் வெளியேற்றி, நிலமையை சுமுகமாக்கமாறு ஜனாதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

தனிநாடு கேட்கும் தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்கு சரத்வீரசேகர போன்றவர்களே காரணம்; ஜனா எம்.பி தெரிவிப்பு

இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் காணாவிடின் இந்த நாடு எதிர்காலத்திலே பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் தான் இருக்கின்றதென்பதையும், தமிழ் மக்கள் மத்தியில் தனிநாடு, என்ற நினைப்பு விலகாமல் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்பதனை இந்த சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலே முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் இலங்கையிலே தமிழ் மக்களின் ஆயுத போராட்ட அமைப்பு அழிந்தாலும் அவர்களின் தனிநாடு கனவு அழியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். 2009லே எங்களது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன் தனிநாடு தான் தமிழர்களின் ஒரே இலக்கு என்று பயணித்துக் கொண்டிருந்த நிலைமை தற்போது இன்னும் வீரியம் அடையக் கூடிய விதத்திலே மக்களின் மனநிலை இருக்கின்றது.

2009லே சர்வதேசத்தின் உதவியுடன் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த அரசு தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்பில் அவர்களின் அபிலாசைகள் நிறைவேறும் அளவிற்கு 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக பிளஸ் பிளஸ் அமுல்ப்படுத்தி தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம் என்று சர்வதேசத்திற்குக் கூறியது. இறுதியில் வடக்கு கிழக்கு தமிழர்களை மிகவும் கஸ்டத்திற்கும், மனவேதனைக்கும் உட்படுத்தும் செயற்பாடுகளையே செய்கின்றது.

வடக்கு, கிழக்கை பௌத்த மயமாக்கும் நோக்கத்துடன் மாத்திரமல்லாமல் வடக்கு ,கிழக்கிலே சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கைக் கபளீகரம் செய்து தமிழர்களின் குடிப்பரம்பலைக் குறைக்கும் நடவடிக்கையிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு கோட்டபாயவுடன் இணைந்து இயங்கிய வியத்மக அமைப்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நாட்டை மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கின்ற அரசுகளின் நிலைப்பாடு தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை இன்னும் உறுதியாக்குவதாகவே இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்திலே திருகோணமலையையும் அம்பாறையையும் தங்களது குடியேற்றத்தின் ஊடக தமிழர்களை முதன்மை இடத்தில் இருந்து திருகோணமலையில் இரண்டாம் இடத்திற்கும், அம்பாறையில் மூன்றாம் இடத்திற்கும் கொண்டு சென்றவர்கள் தற்போது மட்டக்களப்பில் தங்களது கைங்கரியத்தைச் செய்வதற்கு தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அயல் மாவட்டத்தவரைக் கொண்டு வந்து சேனைப் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் அங்கு அவர்களைக் குடியேற்றுவதற்கான திட்டங்கள் இடம்பெறுகின்றன.

மாகாணசபை காலத்திலே நாங்கள் அதனைத் தடுத்திருந்தோம். அவர்களை அங்கிருந்து வெளியேற்றியிருந்தோம். ஆனால் தற்போதைய ஆளுநருக்கு முன்னர் இருந்த ஆளுநர் வியத்மக அமைப்பின் முக்கிய உறுப்பினர் அனுராதா ஜகம்பத் அவர்கள் இந்;த மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் பெரும்பான்மையின மக்களின் ஆக்கிரமிப்பைத் தூண்டியிருந்தார். தற்போது அவர் இல்லாமல் இருந்தாலும் அவர்களின் பின்புலத்தில் இருந்து இந்த விடயத்iதை தூண்டிக் கொண்டிருக்கின்றார்.

நாட்டின் ஜனாதிபதி கடந்த சனி ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு வந்திருந்த போது அம்பிட்டிய தேரர் தலைமையில் மட்டக்களப்பில் போராட்டம் நடத்தியதோடு மாத்திரமல்லாமல் ஜனாதிபதியின் பதாதைக்கு தும்புத்தடியால் அடித்த விடயத்தை உலகமே பார்த்தது. இதனை தமிழர் ஒருவரோ, அல்லது தமிழ் பேசும் ஒருவரோ அல்லது தமிழ் பேசும் மதகுரு ஒருவரோ செய்திருந்தால் அவரின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்.

இந்த நாட்டை மக்கள் பிரதிநிதிகள் ஆள்கின்றார்களா? அல்லது புத்தபிக்குகள் ஆள்கின்றார்களா என்ற கேள்விக்குறி ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் இருக்கின்றது. இவ்வாறான புத்தபிக்குகள் தான் வியத்மக அமைப்புடன் இணைந்து வடக்கு கிழக்கை கபளீகரம் செய்திருக்கின்றார்கள். அந்த வகையிலே மயிலத்தமடு மாதவணையில் புதிதாக ஒரு விகாரையை அமைத்து அங்கு புதிது புதிதாக ஆட்களைக் கொண்டு வந்து அந்த பிரதேசத்தில் சேனைப் பயிர்ச்செய்கையை முன்னெடுத்து வருகிறார்கள்.

இதன் காரணமாக காலம் காலமாக தங்கள் கால்நடைகளை அந்த இடத்தில் மேய்த்துக் கொண்டிருக்கும் பண்ணையாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்ககான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும், சிவில் செயற்பாட்டாளர்களையும் புத்த பிக்கு உள்ளிட்டவர்கள் சிறைப்பிடித்த கைங்கரியம் கூட அங்கு இடம்பெற்றது.

தற்போது பெரும்போக வேளாண்மை செய்யும் காலம் தொங்கி விட்டது. பண்ணையாளர்கள் தங்கள் மாடுகளை மேய்ச்சற் தரைக்குக் கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்றது. ஒருபுறம் இந்த மாவட்டத்தின் வேளாண்மைச் செய்கையைத் தொடங்குவதற்கு விவசாயிகள் மாடுகளை அப்புறப்படுத்துமாறு தெரிவிக்கின்றார்கள். மறுபுறம் மாடுகளை தங்கள் மேய்ச்சற் தரைக்கு கொண்டு செல்ல விடாமல் அத்துமீறி ஊடுருவியிருக்கும் பெரும்பான்மையினர் தடுக்கின்றார்கள். இவ்வாறான நிலைமை இருக்க பண்ணையாளர்கள் தங்கள் மாடுகளை ஆற்றிலா அல்லது கடலிலா மேய்ப்பது.

இன்று அந்தப் பண்ணையாளர்கள் 29 நாளாக சுழற்சி முறையிலான அகிம்சைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி கடந்த வாரம் இங்கு வந்து அவர்களின் ஒருசில பிரதிநிதிகளைச் சந்தித்து செவ்வாய்க் கிழமைக்குள் ஒரு தீர்வு தருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் இன்று வெள்ளிக்கிழமையாகின்றது எந்தவொரு தீர்வும் இல்லை. காலத்தை இழுத்தடிப்பதும், மக்களை ஏமாற்றியி அரசியல் நடத்துவதும் தான் இந்த ஜனாதிபதியின் செயற்பாடு என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

இந்த தேய்ச்சற் தரை விடயம் தொடர்பாக நாங்கள் பலமுறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில், பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றோம், ஒத்திவைப்புப் பிரேரணையைக் கூட கொண்டு வந்திருக்கின்றோம், பல போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றோம். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்திலே ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். ஒருவர் முஸ்லீம் காங்கிரஸைச் சேர்ந்தவர், தமிழ் மக்களின் மத்தியில் இருந்து இருவர் அரச தரப்பிலே இராஜாங்க அமைச்சர்களாகவும், நாங்கள் இருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாகத் தெரிவு செய்யப்பட்டு மாவட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

என் சக பாராளுமன்ற உறுப்பினர் தம்பி சாணக்கியன் அவர்கள் நடத்திய ஊடக சந்திப்பலே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் குறை கூறியிருந்தார். அவர் என்னையும் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் குறை கூறியிருந்தார். என்னை அவர் குறிப்பிட்டு நான் எங்கிருக்கின்றேன் என்று தெரியாது என்று குறிப்பிட்டிருந்தார். அது அவருக்கு தெரியாமல் இருக்கலாம் ஏனெனில் அவர் மாவட்டத்தில் இருப்பதில்லை. ஆனால், எமது மாவட்ட மக்களுக்குத் தெரியும் பாராளுமன்ற அமர்வுகள் அற்ற நாட்களில் எமது மாவட்ட மக்களின் தேவைகளை என்னால் முடிந்தளவில் நான் அவர்களைச் சந்தித்து பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றேன். அவரைப் போன்று தான் நினைத்த போது மாவட்டத்திற்கு வந்து ஒரு ஊடக சந்திப்பினையும், ஆர்ப்பாட்டத்தினையும் செய்துவிட்டு போகும் பாராளுமன்ற உறுப்பினர் நான் அல்ல.

கடந்த பாராளுமன்ற அமர்விலே மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்ற விடயத்தையும் குறிப்பட்டிருந்தார். உண்மை நான் கலந்து கொள்ளவில்லை தான். கடந்த பாராளுமன்ற அமர்வில் வெள்ளிக்கிழமை அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை நான் பாராளுமன்ற சிற்றுண்டிச் சாலையில் இருக்கும் போது தம்பி சாணக்கியன் என்னை வந்து சந்தித்து என் மணி விழா சம்மந்தமாகக் கலந்துரையாடினார்.

அதன்பின்னர் நான் வாகனத்தில் ஏறிச் செல்லும் போது சக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த போராட்ட விடயத்தைத் தெரிவித்தார். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த என்னை சாணக்கியன் சந்தித்து கலந்துரையாடும் போது இந்த விடயம் சம்மந்தமாக ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்கவில்லை. அன்றைய நாள் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை.

மறுநாள் வெள்ளிக்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினர் விநோ அவர்கள் பேச இருந்த நேரத்தை எடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. முதல்நாள் ஆட்கள் இன்மையால் இப்போராட்டம் கைவிடப்பட்டதாகவும் மறுநாள் நடைபெறும் விடயம் எனக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்றும் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரிடம் இவர் கூறியதாகவும் நான் அறிந்தேன்.

அன்று நான் கொழும்பில் தான் நின்றேன். நான் மட்டுமல்ல செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன், சாள்ஸ் உள்ளிட்ட பலரும் அங்குதான் இருந்தோம். இந்த மாவட்ட மக்கள் சம்மந்தமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள் ஒற்றுமையாக எல்லோருக்கும் அறிவித்து செய்திருந்தால் அது பிரயோசனமாக இருந்திருக்கும். அதுமாத்திரமல்ல கடந்த சில நாட்களுக்கு முன்னர் மலையகப் பிரச்சனை சம்மந்தமாக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அவர்களுடன் கைகோர்த்திருந்தோம். அவர்களுக்கும் பண்ணையாளர்கள் தொடர்பான ஆர்ப்பாட்ட விடயத்தினைச் சொல்லியிருந்தால் அவர்களும் எம்முடன் இணைந்திருப்பார்கள். தனிப்பட்ட ரீதியிலே அரசியல் செல்வாக்கைப் பெற வேண்;டும், மற்றவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்று செய்து விட்டு குறை கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

இந்த மாவட்டத்தில் பல கட்சிகள் பல சுயேட்சைக் குழுக்களில் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டார்கள். ஆனால் தெரிவு செய்யப்பட்டவர்கள் வெறும் ஐந்து பேர்தான். நாங்கள் பாராளுமன்ற உறுப்பினாராக வந்ததன் பிற்பாடு இந்த மாவட்ட மக்களின் அனைவரின் பிரதிநிதியே தவிர தனக்கு வாக்களித்த மக்களுக்கான உறுப்பினர் அல்ல என்பதே எனது நிலைப்பாடு. இதனை ஏனையவர்களும் மனதில் நிறுத்த வேண்டும்.

எனவே இந்த நாடு உருப்படியாக இருக்க வேண்டும் என்றால் எங்களுடைய இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைக் கொண்டு வந்து எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு சுயாட்சியை உருவாக்கினால் தான் இந்த நாடு உருப்படும். அவ்வாறில்லாவிட்டால் இந்த நாடு எதிர்காலத்திலே பிரிவதற்கான சாத்தியக் கூறுகள் தான் இருக்கின்றதென்பதை இந்த சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

சரத் வீரசேகர கூறியது போன்று தமிழ் மக்கள் மத்தியில் இருந்து இன்னமும் தனிநாடு, தமிழீழம் என்ற நினைப்பு விலகவில்லை, விலகாமல் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ஜனாவின் வாக்குமூலம் : தமிழ் இளைஞர்கள் அனைவரும் படித்து அறிய வேண்டிய வராலாற்று ஆவணம் – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

இன்று அக்டோபர் மாதம் முதலாம் தேதி தனது அகவை அறுபதை எட்டும் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பா.உ தனது அனுபவத் தொகுப்பான ஜனாவின் வாக்கமூலம் என்ற நூலை வெளியிடுகிறார்.

இந்நூல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது பிறந்த நாளிலே பல அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்கள் மத்தியில் வெளியிடப் படுகிறது.

தனது பதின்ம வயதிலே, இனத்தின் விடுதலைக்காக சகலவற்றையும் துறந்து உயிரைத் துச்சமாக எண்ணி ஆயுதப் போராட்டத்தை வரித்துக் கொண்டு ஒரு இளைஞன் புறப்படுகிறான். களத்திலே விழுப் புண்களை சுமக்கிறான். தனது கனவிலும் கொள்கையிலும் மாறாத நம்பிக்கையோடு போராட்டத்தில் ஈடுபடுகிறான்.

வீரமும் தீரமும் அர்ப்பணிப்பும் ஆயுத பலமும் இருந்தால் விடுதலையை காணலாம் என்ற கனவு நனவாகியதா? தன் வாழ்நாளில் சந்தித்த மாற்றங்கள் என்ன? பயணித்த பாதை சரியானதா? இலக்கை எட்ட முடிந்ததா? எதிர்கொண்ட சிக்கல்கள் முகம் கொடுத்த பிரச்சினைகள் என்ன?
மாற்றங்களை ஏற்றுக் கொண்டாரா? அடைந்த பயன்கள் பெற்றெடுத்த வெற்றிகள் என்ன?

தேசம், தேசியம், போராட்டம், அதன் வடிவம், மாற்றம், தொடர்ச்சி என்ன பல விடயங்களை தொகுத்து இந்த நூலின் வடிவத்தில் ஜனா தந்திருக்கிறார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகால போராளியாக பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக ஒரு அரசியல் தலைவனாக அரசியல் வாழ்க்கையிலே இவ்வளவு காலமும் அவர் கடந்து வந்த பாதைகள் என்பவற்றின் அனுபவப் பகிர்வை வடித்து தந்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் பயணித்த பலருக்கு எழுதுவதற்கு ஆக்கபூர்வமான வரலாறுகள் இல்லை. விடுதலைப் போராட்டத்தில் பயணிக்காத பலர் இன்று விடுதலை பற்றி பேசுகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் ஒரு சிறுவனாக தேசிய பயணத்தில் போராளியாக ஆரம்பித்து இன்று ஒரு அரசியல் தலைவனாக அகவை 60 தொடுகின்ற ஒருவரின் அனுபவப் பதிவில் அனைத்து தற்கால மற்றும் எதிர்கால தமிழ் இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் புதைந்துள்ளன.

ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி அதில் பங்கு பற்றிய ஒருவருடைய நேரடி வாக்குமூலம் தரப்பட்டுள்ளது. செவி வழி கதைகளை கேட்டு போராளிகளையும் போராட்டத்தையும் விமர்சிக்கின்ற பலருக்கு இந்த வாக்குமூலம் தக்க பதிலாக அமையும் என்று கருதப்படுகிறது.

ஒரு போராட்டத்தின் இலக்கு, அதை அடைவதற்கு படுகின்ற துன்பங்கள், அதில் செல்வாக்குச் செலுத்துகின்ற உள்ளக வெளியக காரணிகள், அவற்றை கையாளும் திறமை, அத்திறமை இல்லாவிட்டால் இனம் படுகின்ற துன்பம் என்ற பல விடயங்களை இந்த வாக்குமூலம் புட்டுக்காட்டி உள்ளது.

வாழும் போராளியாக துணிச்சலோடு இந்த வாக்குமூலத்தை ஜனா பதிவு செய்துள்ளது தன்னுடைய சொந்த வாழ்க்கையை மாத்திரமல்ல தமிழ் இளைஞர்களின் குறிப்பாகப் போராளிகளின் வாழ்க்கையை படம் போல எடுத்துக் காட்டியுள்ளது.

இதை தனிப்பட்ட ஒரு ஜனாவின் வாக்குமூலமாக கருதாமல் ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று ஆவணமாக படித்துப் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய புத்தகமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

குருசுவாமி சுரேந்திரன்
பேச்சாளர்- ரெலோ-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜனாவின் வாக்குமூலம்: 40 வருட போராட்ட, அரசியல் வரலாறு நூல் ஒக்ரோபர் 1இல் வெளியீடு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) , எதிர்வரும் ஒக்ரோபர் 1ஆம் திகதி 60 வயதை பூர்த்தி செய்யவுள்ள நிலையில், அன்று மட்டக்களப்பில் நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.

ஜனாவின் வாக்குமூலம்- எனது 40 வருட போராட்ட, அரசியல் வரலாறு என்ற நூல் வெளியிப்படவுள்ளது.

இதையொட்டி ஒக்ரோபர் 1ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறும் நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராசசிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் ஆகியோருடன், கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானும் நிகழ்வில் உரையாற்றவுள்ளனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீண்டகால தேவையினை பூர்த்தி செய்ய நடவடிக்கை – ஜனா எம்.பி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீண்டகால தேவையாகயிருந்த இருதய சிகிச்சைப்பிரிவிற்கான இருதய சோதனைக்கான இயந்திரத்தினை சுகாதார அமைச்சு வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று(02.09.2023) அவரது மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி குறித்த இயந்திரத்தினை வழங்குவதற்கு சுகாதார அமைச்சரும் சுகாதார அமைச்சரின் செயலாளரும் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2021ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கென கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரமொன்று வேறுமாவட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அதனை பெறுவதற்கு பல்வேறு பிரயனத்தனங்கள் செய்து கொண்டுவரப்படாத நிலையில் இந்த இயந்திரத்தினை கொண்டுவர அனைவரும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மயிலத்தமடு,மாதவனை பகுதியில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து வெளியிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் 30ஆம் திகதி போராட்டத்துக்கு முழு ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு

வடக்கு-கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஜனநாயக கூட்டமைப்பினர் முழு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்- எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் உலகெங்கும் நினைவு கூரப்படவுள்ளது. இந்நிலையில் வடக்கில் மன்னாரிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் எதிர்வரும் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எனவே இந்த போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவையும் வழங்குவது மாத்திரமல்லாது எமது உறவுகளுக்கான நீதியை பெற்றிட தேசியத்தின்பால் ஈர்ந்துள்ள அனைவரும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும்- என்றார்.

இவ்ஊடகவியலாளர் சந்திப்பில் புளொட் அமைப்பின் இணைப்பாளர் கேசவன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மத்தியகுழு உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம், ரெலோ அமைப்பின் பிரசன்னா இந்திரகுமார், ஜனநாயப் போராளிகள் கட்சி இணைப்பாளர் நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.