வட மாகாணத்தை இலக்காக கொண்டு சுற்றுலாத்துறையை, கைத்தொழிலை விரிவுபடுத்த விசேட கவனம் – ஹரின்

கொழும்பில் இருந்து யாழ். பலாலி விமான நிலையத்துக்கான ‘லயன் எயார்’ விமான சேவை இம்மாதம் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

வடக்கு மாகாணத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை விரிவுபடுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (டிச. 2) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை, சுற்றாடல் துறை மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளலாம்; ஆலோசனைகளை முன்வைக்கலாம்.

யாழ்.பலாலி விமான நிலையத்துக்கான ‘லயன் எயார்’ விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை சேவையை மேம்படுத்துவது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் மேம்பாட்டுக்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என்றார்.