விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முயற்சித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறுமலர்ச்சி தொடர்பான வழக்கில், திரைப்படத் துறை சார்ந்த ஒருவருக்கு எதிராகவும் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு, தமிழ்நாட்டின் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 13 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 14வது குற்றவாளியாக லிங்கம் என அழைக்கப்படும் ஆதிலிங்கம் என்பவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதன் மூலம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க சதி செயற்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக விநியோகிக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட சட்டவிரோதப் பணத்தை வசூலிக்கும் முகவராகவும் அவர் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆதிலிங்கம் என்பவர் தமிழ்த் திரைத் துறையில் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.