13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் தமிழீழம் மலரும் – விமல் வீரவன்ச

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும். தமிழீழம் மலர அது வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும். – இவ்வாறு உத்தர லங்கா சபாவவின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்தார்.

“13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் நாடு பிளவுபடாது. எனவே, இந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்க வேண்டுமானால் யாராவது நாடாளு மன்றத்தில் 22 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து 13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும்’ என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற சர்வ கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்திருந்த உத்தர லங்கா சபாவவின் தலைவர் விமல் வீரவன்சவிடம் ஜனாதிபதியின் மேற்படி கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:- அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபட்டே தீரும். அது தமிழீழம் மலர வழிவகுக்கும். நாடெங்கும் மீண்டும் இரத்த ஆறு ஓடும். இப்படியான நிலைமை ஏற்படக் கூடும் என்று ஜனாதிபதிக்கும் தெரியும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இதைப் பல தடவைகள் நாம் தெரிவித்து விட்டோம்.

தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற மமதையுடன் ஒவ்வொரு நாளும் வாய்க்கு வந்த மாதிரி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் ரணில் விக்கிரமசிங்க.

சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஏமாற்றும் நோக்குடனேயே ஜனாதிபதி செயற்படுகின்றார். ஆனால், சிங்கள மக்கள் எப்போதும் விழிப்பாகவே இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இப்படியான கருத்துக்களை வெளியிட்டுத் தனது பதவிக் காலத்தை இழுத்தடிப்பார் என்று தெரிந்துதான் அவரின் சர்வகட்சிக் கூட்டத்தை நாம் புறக்கணித்தோம். என்றார்.