இந்தியா முழுவதும் தமிழ்மொழியைப் பரப்ப ‘தமிழ் பிரச்சார சபா’ ; இந்திய மத்திய அரசு திட்டம்

தமிழ் மொழியை நாடு முழுவதிலும் பரப்ப ‘தமிழ் பிரச்சார சபா’ தொடங்கப்பட உள்ளது. இந்தி பிரச்சார சபாவை போல் அனைத்து மாநிலங்களிலும் இதனை அமைக்க மத்திய அரசு அதிரடி திட்டம் வகுத்துள்ளது.

தென்னிந்திய மாநிலங்களில் இந்தி மொழியை பரப்புவதற்காக சென்னை, தி.நகரில் 1918-ம் ஆண்டில் தென்னிந்திய இந்தி பிரச்சார சபை மகாத்மா காந்தியால் நிறுவப்பட்டது. தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் நோக்கில், இந்த நிறுவனத்தை அன்னி பெசன்ட் அம்மையார் 1918-ம் ஆண்டு, ஜூன் 17-ல் தொடங்கி வைத்தார். இந்தியை ஊக்குவிக்க மகாத்மா, தனது மகன் தேவதாஸ் காந்தியை சென்னைக்கு அனுப்பி, இங்கு தங்கவைத்து பிரச்சாரமும் செய்திருந்தார். மகாத்மாவும் தி.நகரில் 10 நாட்கள் தங்கி அதன் நிர்வாகத்தை நேரடியாக கவனித்துள்ளார்.

இதன் கிளைகள் திருச்சி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளாவில் 6,000 வரை வளர்ந்துள்ளன. மத்திய அரசின் நிதியுதவியுடன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையங்களில் ஒன்றாக இது உள்ளது. இங்கு பல்வேறு நிலைகளில் இந்திமொழிக் கல்வி நேரிலும், தபாலிலும் கற்பிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இந்தவகையில், தமிழ்மொழியை நாடு முழுவதும் பரப்ப ‘தமிழ் பிரச்சார சபா’ தொடங்கப்பட உள்ளது. இதன் கிளைகள் வட மாநிலங்கள் அனைத்திலும் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் சான்றிதழ், பட்டயப்படிப்பு என பல வகையில் தமிழ்க் கல்வி போதிக்கப்பட உள்ளது.

இதை இதுவரை எவரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக மத்திய அரசு அமைக்கிறது. இந்தி பிரச்சார சபாவை போலவே இதை அமைத்து மத்திய அரசின் நிதியை அதற்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தி பிரச்சார சபா போன்று தமிழ் பிரச்சார சபாவையும் தன்னாட்சி அதிகாரத்துடன் தமிழ் அறிஞர்கள் குழு நிர்வகிக்க உள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய கல்வி அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “தமிழ் பிரச்சார சபா என்பது பிரதமரின் யோசனை. அவருக்கு தமிழ் மொழி மீதுள்ள ஈடுபாட்டினால் இந்த சபா அமைக்கப்பட உள்ளது. இதற்கான பாடத்திட்டங்கள் தற்போது மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரதிய பாஷா சமிதி (தேசிய மொழிகளுக்கான அமைப்பு) நிர்வாகத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தன.

தமிழ் பிரச்சார சபாவுக்கும் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் பிரச்சார சபா மூலம் தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கு நாடு முழுவதிலும் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட உள்ளது. கடந்த 2014-ல் பிரதமராக பதவியேற்றது முதல் தமிழின் பெருமைகளை நரேந்திர மோடி பேசி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பரில் நடைபெற்ற ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியில், “தமிழ் உலகின் பழமையான மொழி” என்று கூறி பிரச்சினைக்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இத்துடன் நின்றுவிடாமல், எவரும் செய்யாத வகையில், தமிழை வளர்க்க அவர் தமிழ் பிரச்சார சபா தொடங்குவது பெரிய அளவில் வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

உண்டியல் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

உண்டியல் பணப்பரிமாற்ற முறையின் மூலம் 8.2 மில்லியன் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும், கொழும்பு 12, கெசல்வத்தை, டாம் வீதியில் வைத்து இரண்டு நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

வத்தளையைச் சேர்ந்த 39 வயதுடைய பிரதான சந்தேகநபர் மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கெசல்வத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு – ஜனாதிபதி

“வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு. அதை எந்தத் தரப்பும் கேள்விக்குட்படுத்த முடியாது. அத்துடன் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாது.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“வடக்கில் மத ரீதியில் அண்மைக்காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும். இந்தப் பிரச்சினைகளை வைத்து அல்லது பிரச்சினைகளை மேலும் தூண்டிவிட்டு எவரும் அரசியல் இலாபம் தேட முயலக்கூடாது.

நீதிமன்ற வழக்கில் ஒரு பிரச்சினை இருந்தால் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய அரசு நடவடிக்கை எடுக்கும். எனினும், வடக்கில் மத ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைகளை வளர விடாமல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேரில் விரைந்து தீர்வு காண்போம்.” – என்றார்.

நயினாதீவில் வீதி ஒன்றுக்கு சிங்களப் பெயர்

யாழ் நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீதி ‘‘அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ பெரஹெர மாவத்தை’‘ என இரவோடு இரவாக மாற்றப்பட்டுள்ளது.

இது தற்போதைய அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் செயற்பாடு என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் பகுதியில் இருந்து நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு செல்லும் படகு பயணக் கட்டணச் சீட்டில் நயினாதீவு எனும் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

நயினாதீவில் நாகபூசணி அம்மன் கோவிலும் மற்றும் நாகவிகாரையும் அமைந்துள்ளது.

இதற்கான படகுச் சேவையில் குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குச் செல்லும்போது இங்கு இரண்டு விதமான இன பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் பயணிப்பார்கள்.

ஆனால், தமிழிலே நயினாதீவு என்பதுதான் தொடக்கத்தில் இருந்து பாவனையில் உள்ள பெயர். அப்படி இருக்கும்போது தற்போது நாகதீப என்று மட்டும் எழுதப்பட்டுள்ள பயண கட்டணச் சீட்டு வழங்கப்பட்ட விடயம் மிகப் பெரிய சலனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இப் பயணக் கட்டணச்சீட்டு சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றது.

அண்மைக் காலங்களில் தமிழர் பகுதியை சிங்களவர்கள் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆக கொஞ்சம் கொஞ்சமாய் தமிழர் தேசம் பறிபோய்கொண்டு தான் இருக்கிறது என்பதை வெளிவரும் அனைத்து விடயங்களும் உறுதிப்படுத்துபவையாகவே காணப்படுகிறது.

வெடுக்குநாறி ஆதிசிவனாலய அழிப்பு, திருக்கோணேசர் ஆலயக்காணி அபகரிப்பு முயற்சி, வடமுனை நெடிய கல்மலை பெளத்தாலய நிருமாணிப்பு, கரடியனாறு குசலான மலை முருகன் ஆலய அபகரிப்பு முயற்சி போன்ற பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகையில் வடக்கு கிழக்கில் பல சைவ ஆலயங்கள் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆலயங்களில் சில சிதைக்கப்பட்டு இருக்கின்றன . அதே போல சில ஆலய சூழலுக்குள் பௌத்த மத அடையாளங்கள் நிறுவப்பட்டு இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சீர்திருத்தங்கள் அவசியம் – ஐ.எம்.எவ்

இலங்கை எதிர்நோக்கி வரும் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக் கடன் நிவாரணம் கிடைத்துள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார நிலை படிப்படியாக மீண்டு வரத் தொடங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்டகால பொருளாதார பிரச்சினைகள் மற்றும் தவறான கொள்கை முடிவுகளினால் இலங்கை வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்ததாக ப்ரூவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள நிலைமையிலிருந்து விடுபட சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 04 வருடங்களில் 03 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளதுடன், அந்த பாரிய பிரச்சினையை தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கவும், நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்கவும், வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்கவும், கடன் நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் ஏற்கனவே புதிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை அதிகாரிகள் சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரு பீட்டர் ப்ரூவர் கூறுகிறார்.

பொருளாதாரத்தை வலுப்படுத்த, அதிக வருமானம் ஈட்டுபவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

அதற்காக, முற்போக்கான வரி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது, பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம்.

சர்வதேச நாணய நிதியம் அதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்றும் இலங்கையின் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதற்கு நெருக்கமாக செயற்படும் என நம்புவதாகவும் பீட்டர் ப்ரூவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர் தாயகப் பிரதேசங்களைக் காக்க இரு கட்டமைப்புக்கள் உருவாக்கம்

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று வவுனியாவில் இன்று உருவாக்கப்பட்டது.

தமிழர்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.

இதன்போது குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்வினையாற்றுவதற்காக இரு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் பௌத்தமயமாக்கல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், காணிகள் அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பான தரவுகளை சேகரித்து அவற்றை துல்லியமாக அடையாளம் காண 7 பேர் கொண்ட கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

அத்துடன் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக வடகிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் சாத்வீகப்போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக மற்றொரு கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மதகுருமார்கள், தமிழ் அரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைகழகம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சி, தமிழர் விடுதலைகூட்டணி, ஜக்கியதேசிய கட்சி, ஶ்ரீ தமிழ் ஈழ விடுதலைஇயக்கம் போன்ற அரசியல் கட்சிகளும், பொது அமைப்பினரும் கலந்துகொண்டனர்

ஆக்கிரமிப்புக்களை எதிர்த்து வடக்கு கிழக்கில் போராட்டம்

வெடுக்குநாறி, குருந்தூர்மலை, கன்னியா, பச்சனூர்மலை உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று மற்றும் மத வழிபாட்டு இடங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோரி வடக்கு கிழக்கில் போராட்டம் இடம்பெறவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி, காணிகள் ஆக்கிரமிப்பை கைவிடக்கோரியும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தினை அமுலாக்கப்படுவதை நிறுத்துமாறும் இந்தப்போராட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளதாக கூறினார்.

ஆகவே குறித்த போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன ஆதரவினை வெளியிட்டுள்ள என்றும் அதேபோன்று வடக்கு, கிழக்கு வாழ் ஒட்டுமொத்த தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப் படுகொலையை எதிர்த்து பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ரெலோவின் ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்

தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் இடம்பெறவுள்ளது.

ஆளும்தரப்பில் இருந்து எதிர் தரப்பில் இருந்து பல அனுபவமிக்க அரசியல்வாதிகள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகியவர்களும் அரசாங்கத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி 30 அமைச்சர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும்

உள்ளூராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அறிக்கையை கையளித்ததன் பின்னர், மக்களுக்கு அறிவிப்பதற்காக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள 8,000க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதே குழுவின் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நாளை தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடல்

வவுனியாவில் சமகால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முகமாக வவுனியாவில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கான ஒன்றுகூடல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வவுனியாவில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில் இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பதிய மாக்ஸிஸ லெனினிச கட்சி என்பனவும் கலந்துகொள்ளவுள்ளது.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள், காணி ஆக்கிரமிப்புக்கள், தமிழர் பாரம்பரியங்களை அழிக்கும் செயற்பாடுகள் உட்பட அரசியல் தீர்வு விடயங்களில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான கட்டமைப்பாக இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Posted in Uncategorized