புற்றுநோய் மருந்துகளிற்கு பெரும் தட்டுப்பாடு

15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10,000 புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து  ஏறபட்டுள்ளது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்  தெரிவித்துள்ளது.

புற்றுநோயாளிகளிற்கு 15 பிரதான மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கின்றன 90 வீதமான மருந்துகளிற்கு தட்டுப்பாடு காணப்படுகின்றது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

நாங்கள் சுகாதார அமைச்சிற்கு இது குறித்து அறிவித்துள்ளோம்,இதனுடன் தொடர்புபட்ட வேறு தரப்பினரும் இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்,எனினும் ஆபத்தில் சிக்குண்டுள்ள மக்களை காப்பாற்ற  சுகாதார அமைச்சு எதனையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்தால் புற்றுநோயை குணப்படுத்தலாம்,கிகிச்சை தாமதமானால் அது பரவும் மருத்துவர்களால் எதனையும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர்தனியாரிடமிருந்து மருந்துகளை பெறுமாறு எங்களால் எங்கள் நோயாளிகளை கேட்கமுடியும்,ஆனால் எங்கள் நோயாளிகளில் 90 வீதமானவர்களால் அது முடியாது மருந்துகளின் விலை 50,000 ரூபாய்க்கும் அதிகம் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

இலங்கை மூன்று நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது

இந்தியா சீனா தாய்லாந்துடன் இலங்கை வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.

தனது பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக உலக நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டுள்ள நிலையிலேயே இலங்கை இந்த மூன்று நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.

2018 இல் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்காக தாய்லாந்து அதிகாரிகள் திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளனர் எனசுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து இலங்கையின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் முக்கிய அதிகாரி கே.ஜே வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளான இந்தியா சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் பெப்ரவரி மார்ச்சில் ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது முதலீட்டை கவர்வது குறித்தே கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ள அவர் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2023 அல்லது 2024 ஆரம்பத்திற்குள் இந்த பேச்சுவார்த்தைகளை முடிவிற்கு கொண்டுவருவதே எனது நோக்கம் என கே.ஜே வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் காரணமாக இந்த பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டன நாங்கள் பேச்சுவார்த்தைகளிற்காக சென்றுகொண்டிருக்கின்றோம் என தாய்லாந்து  அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் சாதகமான பிரதிபலிப்பைச் செய்யாவிடில் பேச்சை தொடர்வதில் பயனில்லை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் உள்ளிட்ட உடனடியான பிரச்சினைகள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காது விட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் எவ்விதமான பயன்களும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத் தரப்பிடம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும் பத்தாம் திகதி முதல் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக அரசாங்கத்திடமிருந்து சாதகமான சமிக்ஞைகள் வெளிப்பட வேண்டும் என்று காலக்கெடுவை விதித்துள்ளதோடு, தற்போதைய அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்களை முன்னெடுப்பது தொடர்பான திட்ட முன்மொழிவொன்றையும், நிரந்தரமான அரசியல் தீர்வு விடயத்தில் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான திட்ட முன்மொழிவொன்றையும் தனித்தனியாக கையளிப்பதற்கும் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்பினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று ஏற்கனவே எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டுக்கு அமைவாக நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் மாலை ஐந்து மணிமுதல் ஆறுமணி வரையில் இடம்பெற்றிருந்தது.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும் பத்தாம் திகதி தொடர்ச்சியான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தையில் ஆளும் தரப்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தன, அமைச்சர்களான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தாவது,

கடந்த, மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை நானும் சம்பந்தனும் சந்தித்தபோது, தமிழ் அரசியல் கைதிகளில் ஐவரை உடனடியாக விடுதலை செய்ய முடியும் என்றும், அபகரிக்கப்பட்ட நிலங்களில் ஒருபகுதிகயை உடனடியாக விடுவிக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், அதுதொடர்பில் எவ்விதமான குறைந்த பட்ச செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை நாம் அவர்களிடத்தில் தெரிவித்திருந்தோம். அவ்விதமான நிலையில் அடுத்தகட்டம் நோக்கி எவ்வாறு நம்பிக்கையுடன் நகர்வது என்பது தொடர்பிலும் நாம் கேள்விகளைத் தொடுத்திருந்தோம்.

எம்மைப்பொறுத்தவரையில் முன்னெடுக்கப்படும் பேச்சுக்கள் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமானால் அரசாங்கத்திடமிருந்து எமது மக்கள் சார்ந்த உனடியான பிரச்சினைகளில் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தப்படாது பேச்சுக்களை முன்னெடுப்பதில் எவ்விதமான பயன்களும் இல்லை என்பதையும் அரசாங்கத்திடம் நேரடியாகவே தெரிவித்துள்ளோம்.

இவ்வாறான நிலையில் அடுத்த பத்தாம் திகதி தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தப்பேச்சுவார்த்தை வெற்றிகரமான நகர வேண்டுமாயின் அரசாங்கம் சாதகமான பிரதிபலிப்பைச் செய்ய வேண்டியுள்ளது. அதுவரையில் அரசாங்கத்திற்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம், தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முன்னதாக எம்மால் இரு திட்ட முன்மொழிவுகள் ஜனாதிபதியிடத்தில் கையளிக்கப்படவுள்ளன. அதில் முதலாவது, தற்போதைய அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலானதாகும். அடுத்த திட்ட முன்மொழிவானது, இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான முன்னெடுப்புக்களின்போது, நிரந்தரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அதிகாரப்பகிர்வினை மையப்படுத்தியதாகும்.

இந்த இரு முன்மொழிவுகளும் விரைவில் எம்மால் அனுப்பி வைக்கப்படவுள்ளன. ஏற்கனவே 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் தடையாக காணப்படுகின்ற அரசியலமைப்பு சட்ட ஏற்பாடுகள் பற்றிய ஆவணம் ஜனாதிபதியிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.

தீர்வுக்கான பேச்சுக்களில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும் : ஹக்கீம் கோரிக்கை

இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்கின்ற விவகாரத்தில் சகல தரப்புகளும் இணங்குகின்ற நல்லதொரு தீர்வை மிக விரைவில் பெற்றுத்தறுவதற்கான முயற்சியை ஜனாதிபதி உளப்பூர்வமாக எடுப்பாரானால் அதில்  முஸ்லிம் தரப்பையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் இந்த பேச்சுவார்த்தை சம்பந்தமாக விசமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரிய விடயமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு தொடர்பாகவும் ஜனாதிபதி  தமிழ் கட்சிகளுடனும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.

இது சம்பந்தமாக விசமத்தனமான பிரசாரங்கள் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது கவலைக்குரிய விடயம்.  இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்து, தமிழ் மக்களின் அபிலாசைகள் என்பது சில சமயங்களில் முஸ்லிம்களின் அபிலாசைகளுடன் முரண்பட்ட விடயங்களாக இருக்கின்றபோது, தேவையற்ற சந்தேகங்களை குழப்பி ஒட்டுமொத்த  இனப்பிச்சினைக்கான தீர்வு வருகின்ற சாத்தியப்பாட்டை குறைக்க முயற்சிக்கப்படுகின்ற விடயமாக உணர்கிறேன்.

அதனடிப்பையில் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு பிரதேசத்தையும் ஒரு அரசியல் அலகாக ஆக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பிலே நீண்டகாலமாக தெரிவிக்கப்பட்ட விடயமாக இருந்தபோதிலும் அதிலே முஸ்லிம் தரப்பு சற்று மாற்றமான கருத்தை கொண்டிருக்கின்றது என்ற யதார்த்தத்தை தமிழ் தரப்பு புரிந்துகொண்டிருக்கும் என நாங்கள் முழுமையாக உணர்ந்திருக்கின்றோம்

அந்த அடிப்படையிலே இந்த விவகாரத்திலே தேவையற்ற விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொள்ளாமல், அரசாங்கமோ தமிழ் தரப்போ இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்கின்றபோது இந்த விவகாரத்தில் கரிசனை உடைய ஏனைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு இதற்கான தீர்வுகளை காண்பார்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

அதனால் பிரச்சினைக்கான தீர்வு வருகின்றபோது அதனை இவ்வாறான விஷமத்தனமான பிரசாரங்கள் மூலம் குழப்பியடிக்க முனையாமல் இணக்கப்பாட்டுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நம்பிக்கையுன் இருக்கின்றன.

எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விவகாரத்தில் சகல தரப்புகளும் இணங்குகின்ற நல்லதொரு தீர்வை மிக விரைவில் பெற்றுத்தறுவதற்கான முயற்சியை ஜனாதிபதி உளப்பூர்வமாக எடுப்பாரானால்  முஸ்லிம் தரப்பையும் இதில் இணைத்துக்கொண்டு இந்த விவகாரத்தில் இறுதித் தீர்வை காண்பார் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம் என்றார்.

அரசியல்வாதிகளுக்கே முதலில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் -சரத் பொன்சேகா

புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். ஏனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள்.

பாடசாலை மாணவர்கள் பாதணிகளுக்கு பதிலாக பாடசாலைக்கு சாதாரண செருப்பு அணிந்து வர கல்வி அமைச்சு அனுமதி வழங்குமாறு மக்கள் கோரும் அவல நிலை தோற்றம் பெற்றுள்ளது ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஊழல் மோசடி அரசியல்வாதிகள் போராட்டத்திற்கு அச்சமடைந்துள்ளார்கள்,  போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும் ஆகவே நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறும் எதிர்பார்த்தேன்,இருப்பினும் ஒருசில காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்படுகிறது.

கந்தகாடு புனர்வாரழ்வு மத்திய நிலையத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் முன்பு 2 வருட காலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, இறுதி ஆண்டில் தொழிற்துறை தொடர்பான பயிற்சி வழங்கப்படும் ஆனால் தற்போது 06 மாதங்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கும் தரப்பினர் ஹெரோய்ன் போதைப்பொருள்பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்க பயிற்றுவிக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் தற்போது ஐஸ்போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டியுள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 350 பேரை பராமரிக்க 90 இராணுவத்தினர் மாத்திரம் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகவே கந்நகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கு அவதானம் செலுத்துவதை விடுத்து போதைப்பொருள் வியாபாரத்தை முழுமையாக இல்லாதொழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கஞ்சிபான் இம்ரானுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இவ்விடயத்தின் தேசிய புலனாய்வு பிரிவின் செயற்திறனை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோர் மூன்று வேளை உணவை இருவேளையாக குறைத்துக் கொண்டுள்ளார்கள்.

பாடசாலை பாதனிக்கு பதிலாக சாதாரண செருப்பை அணிந்துக் கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தர கல்வி அமைச்சு அனுமதி தர வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கும் நிலைக்கு நாடு அவலத்தை எதிர்கொண்டுள்ளது.

புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு தான் புனர்வாழ்வு வழங்க வேண்டும்,எனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்தார்கள்.

போராட்டத்திற்கு ஊழல் அரசியல்வாதிகள் அச்சமடைந்துள்ளார்கள்.ஆகவே நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்க வேண்டும்.போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும் என்றார்.

போராட்டத்தில் ஈடுப்படும் உரிமையை முடக்கும் புனர்வாழ்வு சட்டமூலம் – எதிர்க் கட்சித் தலைவர் சஜித்

போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுப்படும் உரிமையை முடக்கும் வகையில் புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில்  உள்வாங்கப்பட்டுள்ள தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டகாரர்கள். முறையற்ற மற்றும் வன்முறையில் ஈடுபடும் தரப்பினர், ஆகிய சொற்பதங்களை நீக்கி கொள்வீர்களா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில் உள்ள ஒருசில சொற்பதங்களை நீக்குவதாக உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்காக இந்த சட்டமூலம் கொண்டு வரப்படும் என்பதையும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை மீளப்பெற்றுக் கொள்ளவில்லை,சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் பிற்போடப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இன்று (05) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என எதிர்க்கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சரின் ஆலோசனைக்கு அமைய இந்த சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது என நம்புகிறேன்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் விடயதானங்களை உள்ளடக்கிய வகையில் புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தை சபைக்கு மீண்டும் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துகிறேன்.

இந்த சட்டமூலத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டகார்கள்,முறையற்ற மற்றும் வன்முறைகளில் ஈடுப்படும் நபர் என்ற சொற்பிரயோகங்கள் தொடர்பில் எமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.

சுதந்திர மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு அமைய போராட்டத்தில் ஈடுப்படும் இளைஞர்களை அடக்கும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆகவே இந்த சட்டமூலம் மக்களாணை மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரானது.

போதைப்பொருளை நாட்டில் இருந்து முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும்.ஆனால் போதைப்பொருள் ஒழிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுப்படும் மக்கள் உரிமைகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட வேண்டாம்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்திற்கு அமைய சட்டமூலத்தை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும்.

ஆனால் போதைப்பொருள் ஒழிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு இளைஞர்களின் போராட்ட உரிமைகளை முடக்க வேண்டாம்.ஆகவே இந்த சட்டமூலத்தில் உள்ள குறைப்பாடுகளினால் தான் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதற்கமைய இன்றைய தினம் சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெறவில்லை.

ஆகவே குறைபாடுகள் இல்லாமல் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் போதைப்பொருள் ஒழிப்பு என்ற எண்ணக்கருவிற்கு அமைய சட்டமூலத்தை சமர்ப்பித்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ புனர்வாழ்வு பணியக சட்டமூலம் இன்று,நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல,சபைக்கு சமர்ப்பித்துள்ள சட்டமூலத்தை மீளப் பெற்றுக் கொள்ளவில்லை,சட்டமூலத்தின் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.

10 வருட காலத்திற்கு முன்னர் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளை அப்படையாக கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டது.இந்த சட்டமூலத்தில் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்துவதாக உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் நடவடிக்கை சட்ட வரைபுக்கு உட்படாத வகையில் முன்னெடுக்கப்படுகிறது. புனர்வாழ்வளித்தல் நடவடிக்கை சட்ட வரைபுக்கு உட்பட்ட வகையில் அமைய வேண்டும் என்பதற்காக சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டகாரர்கள்,முறையற்ற மற்றும் வன்முறையில் ஈடுப்படும் தரப்பினர்,ஆகிய சொற்பதங்களை நீக்கி கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தில் உள்ள ஒருசில சொற்பதங்களை நீக்குவதாக உயர்நீதிமன்றத்திற்கு  அறிவித்துள்ளோம். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்காக இந்த சட்டமூலம் கொண்டு வரப்படும் என நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளோம் என்றார்.

மின் கட்டண அதிகரிப்பு விவகாரத்தில் அமைச்சரவைக்கு கூட எம்மை மீறி செயற்பட முடியாது – பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

மின் கட்டண அதிகரிப்பு விவகாரத்தில் அமைச்சரவைக்கு கூட எம்மை மீறி செயற்பட முடியாது. இதற்காக சட்டமா அதிபரையோ , நீதிமன்றதையோ நாட வேண்டிய அவசியமும் இல்லை.

சட்டத்தின் பிரகாரம் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமக்கே காணப்படுவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (டிச.05) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது முகாமையாளரின் மின் கட்டண திருத்த யோசனையே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதிஷ்டவசமாக அமைச்சரவை அது தொடர்பான தீர்மானத்தை ஒரு வாரத்திற்கு காலம் தாழ்த்தியுள்ளது. அமைச்சரவை அந்த யோசனையை அங்கீகரிக்காது. மாறாக அமைச்சரவை அதற்கு அங்கீகாரமளித்தாலும் , பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை ஏற்காது.

கடந்த மாதம் மின் உற்பத்திக்காக நிலக்கரிக்கு பதிலாக எரிபொருள் பயன்படுத்தப்பட்டமையினால் 13 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது.

எனவே உரிய நேரத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும். தொழிற்துறைகளின் வீழ்ச்சிக்கு மத்தியில் மின்கட்டணத்தை அதிகரிப்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல.

இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெறுவதற்கு எவ்வித அவசியமும் இல்லை. ஆணைக்குழுவிற்கு எதனை செய்ய முடியும் , எதனை செய்ய முடியாது என்பது சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே எமக்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய தேவையும் கிடையாது. இறுதி தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் எமக்கிருக்கிறது. அதனை முகாமைத்துவம் செய்யும் இயலுமையும் எமக்கு காணப்படுகிறது.

முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கமைய 180, 300 அலகுகளை விட அதிக மின்சாரத்தை உபயோகிப்பவர்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. மாறாக நிலையான கட்டணங்களே அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இல்லாத மக்களிடமிருந்து மேலும் மேலும் சுரண்டுவதற்கு எம்மால் இடமளிக்க முடியாது.

எம்மை மீறி அமைச்சரவையினாலும் இவ்விடயத்தில் தீர்மானங்களை எடுக்க முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கான சட்டத்தினை தயாரித்தார் என்பதற்காக அவரால் அதற்கு உரிமை கோர முடியாது.

இது மக்களின் சட்டமாகும். ஆணைக்குழு உறுப்பினர்களான எம்மால் அரசியல் செய்ய முடியாது. அதே போன்று அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இருக்க முடியாது.

மின் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில் அதனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு மாத்திரமே செய்ய முடியும். எம்மை மீறி கட்டண திருத்தங்களை மேற்கொள்வதாயின் ஆணைக்குழு தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

முன்னாள் பரிசுத்த பாப்பரசரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உயிர்நீர்த்ததையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன் கிழமை (ஜன 04) முற்பகல் கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்டின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உயிர்நீர்த்ததையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை (05) கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.

இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்டின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தைக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வியாழக்கிழமை (ஜன.05) விஜயம் செய்தார்.

அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நினைவுக்குறிப்பேட்டில் குறிப்பொன்றையிட்டதுடன், பதினாறாம் பெனடிக்ட் பரிசுத்தப் பாப்பரசரின் நினைவுப் புகைப்படத்திற்கு அஞ்சலியும் செலுத்தினார்.

இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையையும் சந்தித்து தனது இரங்கலையும் தெரிவித்தார்.

நீதிமன்றில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தமையால் வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளருக்கு சிறைத் தண்டனை

வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் நிமல் அதிகாரி, நீதிமன்ற நடவடிக்கையின் போது அவமரியாதையான முறையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த குற்றத்திற்காக சில மணித்தியாலங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக பொலன்னறுவை நீதவான் நிமால் அதிகாரியை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக்குள் வைத்ததாக லங்காதீப பத்திரிகை தெரிவித்துள்ளது.

தனது பிரதேச சபையின் மின்சார ஊழியர் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நிமால் அதிகாரி நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

ருஹுனுகெத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரம் எடுத்தமை தொடர்பில் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நிமால் அதிகாரி விசாரணைக்கு ஆஜராகியிருந்ததுடன், அவமரியாதையாக நடந்துகொண்டதால், மூன்று மணித்தியால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, நீதிபதியால் அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

களுத்துறையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான முதலாவது கட்டுப்பணத்தை செலுத்தியது பெரமுன

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முதலாவது கட்டுப்பணத்தை களுத்துறை மாவட்ட தேர்தல் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை செலுத்தியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினர் தேர்தல் செயலகத்திற்குச் சென்றுள்ளதோடு, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய பொதுஜன பெரமுன களுத்துறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரப் பணிகளையும் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.