மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி மின் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு

மின்கட்டண திருத்தம் ஊடாக இந்த ஆண்டில் 777 பில்லியன் ரூபா வருமானத்தை திரட்டிக் கொள்ள மின்சார சபை எதிர்பார்த்துள்ளது.

நடுத்தர வருமானம் பெறும் 50 இலட்சம் மின்பாவனையாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்.

முறையாக செயற்படாவிட்டால் முட்டைக்கு நேர்ந்துள்ள கதியே மின்சாரத்திற்கு நேரிடும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் எவ்வித பரிந்துரைகளையும் மின்சாரத்துறை அமைச்சு முன்வைக்கவில்லை.

பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்திறகு அப்பாற்பட்ட வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை மின்சாரத்துறை அமைச்சர் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது நியாயமற்றது.

சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கான மின்கட்டணத்தை 125 சதவீதத்தாலும்,பெரு தொழிற்துறைக்கான மின்கட்டணத்தை 150 சதவீதத்தாலும். சுற்றுலாத்துறைக்கான மின்கட்டணத்தை 150 சதவீதத்தாலும் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் (2022) ஆகஸ்ட் மாதம் மின்கட்டணம் நூற்றுக்கு 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டதால் மின்பாவனைக்கான கேள்வி நூற்றுக்கு 15 சதவீதத்தால் குறைவடைந்தது,சிறு மாற்றும் நடுத்தர தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மின்பாவனைக்கான கேள்வி முழுமையாக குறைவடையும்.

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆணைக்குழுவிற்கு முரணாக மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

கடந்த ஆகஸட் மாதம் 31ஆம் திகதி மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது. ‘இதனால் இலங்கை மின்சார சபை 220 பில்லியன் ரூபா இலாபம் அடைந்து. இலாபத்தை காட்டிலும் நட்டம் அதிகமாக உள்ளது என மின்சார சபை குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்து இவ்வருடம் 777 பில்லியன் வருமானத்தை பெற்றுக் கொள்ள இலங்கை மின்சார சபை உத்தேசித்துள்ளது.

இந்த இலாபத்தில் 100 பில்லியன் ரூபாவை நடுத்தர வருமானம் பெறும் 50 இலட்ச மின்பாவனையாளர்களிடமிருந்து அறவிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

குறைந்த மின் அலகுகளை பாவிக்கும் மின்பாவனையாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.

முட்டை பிரச்சினை நாட்டில் பெரும் பிரச்சினையாகவுள்ளது. முட்டை விலை அதிகரிப்பை தொடர்ந்து முட்டை மாபியாக்கள் முட்டைகளை பதுக்கி அதிக விலைக்கு விற்கிறார்கள், முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை கூட அரசாங்கத்தினால் நியமிக்க முடியாத நிலை காணப்படுகிறது. பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்திற்கு அமைய செயற்படாவிட்டால் முட்டைக்கு ஏற்பட்டுள்ள கதியே மின்சாரத்திற்கு ஏற்படும் என்றார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன்

நாட்டில் தற்போது காணப்படுகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக இருந்தால், அதற்கான அடிப்படையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு எட்டப்பட வேண்டும். அவ்வாறான தீர்வினை வழங்குவது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தார்.

தற்போது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விரைவான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவை வெற்றி பெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற தீர்வை ஏற்கப்போவதில்லை என்பது உறுதியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உட்பட சர்வகட்சிகளுடன் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தொடர்ச்சியாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட இதர விவகாரங்கள் தொடர்பில் விரைவானதொரு நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது. இந்த முயற்சி வெற்றிபெறுமா, இல்லையா என்பது குறித்து உறுதியான, நம்பிக்கையான கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது.

இருப்பினும், எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்குரிய சந்தர்ப்பமொன்று கிட்டியுள்ளது. அவ்விதமாக கிட்டியுள்ள சந்தர்ப்பத்தினை நாங்களாக புறமொதுக்கியதாக இருக்க முடியாது. ஆகவே, தற்போதைய விரைந்த முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு எம்மால் இயலுமான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளோம்.

அதேநேரம் தற்போது நாட்டில் காணப்படுகின்ற நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால், அவற்றுக்கு அடிப்படையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்குரிய நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுத்தப்பட்டால் தான், நாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்து சூழல்களிலும் மாற்றங்கள் நிகழும். சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி முகவரங்கள் உதவிகளை வழங்கும்.

சர்வதேச நாடுகள் கடன் மறுசீரமைப்புக்களை செய்யும். ஆகவே தான் ஆட்சியில் உள்ள அரசாங்கம் தீர்வு விடயத்தில் கரிசனை கொண்டுள்ளது.

அந்த வகையில், ஆட்சியில் உள்ள அரசாங்கம் நியாயமான தீர்வினை வழங்குவதற்கான கடப்பாட்டை கொண்டிருக்கின்றது. எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் அந்த தீர்வு அமைய வேண்டும். மீளப்பெற முடியாத வகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகின்ற வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அக்கருமங்கள் பிரிக்க முடியாத, பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எம்மை பொறுத்தவரையில், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற எந்தவொரு தீர்வினையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்றார்.

ஒரு நாட்டின் உந்து சக்தி மக்களின் இறையாண்மை – சஜித் பிரேமதாச

பாரிய நெருக்கடிகளை சந்தித்தும் பல நெருக்கடிகள் இன்னும் முடிவடையாத நிலையிலும் 2023 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், இருள் மறையும் வெற்றிக்கான பாதையை தெளிவுபடுத்தும் தீர்க்கமான மற்றும் வெற்றிகரமான ஆண்டாக இந்த ஆண்டு அமைய பிரார்த்திப்போம்.

ஒரு நாடாக கடந்த வருடம் முழுவதும் கேட்ட மற்றும் எதிர்கொண்ட பல செய்திகள் நல்லதை விட கெட்டவையாகவே இருந்தன. தூர நோக்கு இல்லாத ஆட்சி முறையால் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வங்குரோத்து நிலைமைக்கு ஆளாகிய படுமோசமான ஆண்டாகவும்,இந்த நாட்டில் பொதுமக்களின் தீர்க்கமான வெற்றி எழுச்சிக்கான தனித்துவமான ஆண்டாகவும் 2022 ஆம் ஆண்டை குறிப்பிட முடியும். இந்த உன்னத எழுச்சிக்கு நாமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

ஒரு நாடாக, நாம் பல சவால்களுடன் 2023 ஆம் ஆண்டை எதிர்கொள்கிறோம் நாட்டின் தற்போதைய ஆட்சியை மீட்சியாக மாற்றுவதற்கான முன்னணி நடவடிக்கைகள் இந்த வருடத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். தோல்வியடைந்த ஆட்சியின் துன்பத்தை இந்நாட்டு மக்கள் இனியும் அனுபவிக்க முடியாது என்பதே யதார்த்தம்.

எனவே, நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லக்கூடிய மற்றும் கொண்டு செல்ல வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றி புதிதாக நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு நாட்டின் உந்து சக்தி மக்களின் இறையாண்மை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்து அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாதாள உலக தலைவர் கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவுக்குத் தப்பி ஓட்டம்

சமீபத்தில் பிணையில் விடுதலையான பாதாள உலக தலைவரான கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கு தப்பி சென்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஞ்சிப்பானை இம்ரான் தமிழ்நாட்டிற்கு தப்பிச்சென்றுள்ள தகவல் கிடைத்ததும் மாநிலத்தின் புலனாய்வு பிரிவினர் தமிழ் நாட்டின் கரையோர பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில பொலிஸ் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

டிசம்பர் 25 ம் திகதி படகு மூலம் தமிழ்நாடுசென்றுள்ள இம்ரானையும் அவரது சகாவையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கொலைக் குற்ற அச்சுறுத்தல் போன்றவற்றிற்காக இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டுவந்த இம்ரான், 2019 இல் துபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

சமீபத்தில் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியிருந்தது.

பிணையில் விடுதலையானதும் கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவிற்குள் நுழைய திட்டமிட்டுள்ளார் என மத்திய புலனாய்வு வட்டாரங்களும் நம்பகத்தன்மை மிக்க தரப்புகளும் தமிழ்நாடு புலனாய்வு பிரிவினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன.

அவர் நீதிமன்றத்திலிருந்து தலைமன்னார் சென்றார் அங்கு அவரது சகாக்கள் அவர் தமிழ்நாட்டிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

இனப் பிரச்சனை தீர்வுக்கு 5 யோசனைகளை முன் வைத்தார் தயான் ஜயதிலக

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைக் காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் சர்வகட்சி மாநாட்டின் ஊடாக வெற்றி பெறுவதாக இருந்தால் அதில் காணப்படுகின்ற தடைகளை முதலில் இனங்கண்டு களைய வேண்டுமென கலாநிதி தயான் ஜயத்திலக வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், குறித்த தடைகளை களைந்து பேச்சுவார்த்தை முயற்சிகள் வெற்றி பெறுவதற்காக யதார்த்தமாக முன்னெடுக்கப்படக்கூடிய ஐந்தம்ச யோசனைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

அந்த யோசனைகளில் முதலாவதாக, 13ஆவது திருத்தச்சட்டம் பற்றிய விவாதம் முடிவுறுத்தப்பட வேண்டும் என்பதோடு, அதற்கமைவாக இறுதி நிலை ஒப்பந்தமானது உச்சநீதிமன்றத்தின் வரையறுக்கப்பட்ட காலப்பகுதியில் (15 ஆண்டுகள் வரை) முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்ற உத்தரவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் ஊடாகவே, இனங்களுக்கு இடையிலான துருவமுனைப்படுத்தலின்றி முழுமையாக நடைமுறைச்சாத்தியமாக்க முடியும்.

இரண்டாவதாக, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் இந்தியாவினையும் உள்ளீர்த்ததானதொரு கிரமமான அணுகுமுறை அவசியமாகின்றது.

மூன்றாவதாக, மாகாண சபைகள் தற்போதுள்ள நிலைமைகளை விடவும் மேலும் வினைத்திறனாக செயற்படுவதற்கு அனைத்து தரப்பினரும் இணங்குவதோடு அதுபற்றிய விவாதத்தங்கள் நீடித்துச் செல்லாது பூச்சியமாக்கப்பட வேண்டும்.

நான்காவதாக, பொறுபுக்கூறல் குறித்து டெஸ்மண்ட் டி சில்வாவின் அறிக்கையை செயற்படுத்த முடியும். அதேநேரம், போர்க்கால பொறுப்புக்கூறல் தொடர்பிலான விடயங்களை படையினருக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்க கூடாது.

ஐந்தாவதாக, பிரஜைகளுக்கு இடையிலான பாகுபாடுகளை எதிர்க்கும் அதேநேரம், சமத்துவமான நிலைமைகளை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்தோடு, இனப்பாகுபாடு, இனவாதம், மற்றும் சகிப்புத்தன்மை குறைவடைதல் ஆகியவற்றை எதிர்த்துப்போராடுவதற்காக டேர்பன் பிரகடனம் மற்றும் ஐ.நாவின் வழி வரைபடத்தினை பின்பற்ற வேண்டும்.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2008-2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்மொழியப்பட்ட செயற்றிட்டத்தினை நடைமுடைப்படுத்துவதோடு உண்மையான சமத்துவத்தினை  அறிவார்ந்த சமூகங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சிங்கள பேரினவாதத்தின் மீளமுடியாத வெற்றியின் அவதாரம் என்று கருதிய கோட்டாபய ராஜபக்ஷ, அரகலவியின் எழுச்சியால் பதவி கவிழ்க்கப்பட்டு வெளியேற்றப்பட்ட படிப்பினை நம்முன்னே உள்ளது. ஆகவே, இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலை தொடர்ச்சியாக வளர்த்துச் செல்லாது அரசியல்தலைவர்கள் இதயசுத்தியுடன் செயற்படுவார்கன் என்று நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இளைஞர்களின் கோரிக்கைப்படி அரசியல் முறைமையில் மாற்றம் – புத்தாண்டு வாழ்த்தில் ஜனாதிபதி

புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

எண்ணிலடங்கா  சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 எனும் புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கின்றோம்.

முன்னெப்போதும் இல்லாதவாறு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் நம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பாரிய சுமை மற்றும்  நம்மில் பெரும்பாலானோர் சந்தித்த பின்னடைவு ஆகியவற்றை நான் நன்கு அறிவேன்.

எனினும், நாம் ஏற்கனவே நெருக்கடியான நிலையைக் கடந்துவிட்டதாக கருதுகின்றேன். 2023 புதிய ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு புதிய திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும்.

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனினும் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலையடைந்த ஏனைய நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை நாம் இன்னும் அடையத் தவறிவிட்டோம்.

நாட்டில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் தற்போதுள்ள அரசியல்  முறைமையில் மாற்றம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்கோரிக்கையைப் புறக்கணிக்க முடியாது. எதிர்வரும் தசாப்தத்திற்குள் வளமான இலங்கையை கட்டியெழுப்ப உத்தேசித்துள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை நாம் அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வேலைத்திட்டத்தில் நாட்டை முன்னிலைப்படுத்தி, அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும்  தீர்க்கமான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருந்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

புதிய நம்பிக்கைகளுடன் நாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகரமான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைய வேண்டுமென பிரார்த்திப்பதுடன் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவ அன்னையின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து 2023 ஆம் ஆண்டை தொடங்குங்கள் – யாழ் ஆயர் வாழ்த்துச் செய்தி

2023ஆம் ஆண்டை  தேவ அன்னையின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள் என யாழ் ஆயர் அருட்கலாதிதி ஐஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2023ஆவது புதிய ஆண்டு மலருகின்ற வேளை இப்புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும்  இப்புதிய ஆண்டு உங்கள் உள்ளத்து எண்ணங்கள், ஏக்கங்கள் அனைத்தையும் நிறைவு செய்யும் இறை ஆசீர் மிக்க ஆண்டாக அமைய முதலில் வாழ்த்துகிறோம்.

உலகக் கத்தோலிக்க திரு அவையானது ஒவ்வொரு ஆண்டின் முதல் தினத்தையும் தேவ அன்னையின் தினமாகப் பிரகடனப்படுத்தி அன்றைய தினத்தில் அந்த புதிய ஆண்டு முழுவதிற்குமான தேவ அன்னையின் தாய்க்குரிய அன்பையும் பாசமிகு பராமரிப்பையும் வல்லமை மிக்க இறை பாதுகாப்பையும் பெற செபிக்கும்படி பணித்து நிற்கிறது.

நான் ஆண்டவரின் அடிமை உமது சொற்படியே  எனக்கு நிகழட்டும்; (லூக்கா1:38) என்று தேவ அன்னை இறைசித்தத்தை ஏற்று பல இன்ப துன்ப அனுபவங்கள் வழி தன் அர்ப்பண வாழ்வை வாழ்ந்து  இறைவனின் தாயாகவும் இறை மக்களின் தாயாகவும் விளங்கும் பாக்கியம் பெற்றவர்.

இன்று உலக மக்கள் அனைவரையும் தன் அன்பு மக்களாக அரவணைத்துப் பாதுகாத்துப் பாரமரித்து வருகிறாள்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆண்டு பல இன்பமான  அனுபவங்கள் வழியும்,  பல துன்பமான அனுபவங்கள் வழியும்  எம்மை  அழைத்துச் சென்று தன் பயணத்தை முடித்து எம்மை விட்டுக் கடந்து சென்று விட்டது.

மலர்கின்ற 2023ஆம் புதிய ஆண்டு எப்படி அமையுமோ என்ற ஏக்கமும், இனியதாய் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எம் எல்லோர் மனதுகளிலும் நிறையவே உண்டு.2023ஆம் ஆண்டை  தேவ அன்னையின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள். இப்புதிய ஆண்டு முழுவதும் தேவ அன்னை தன் தாய்க்குரிய அன்போடும் பாசத்தோடும் எம்மைப் பாதுகாப்பாள்   என்ற  நம்பிக்கை உங்கள் மனதில் நிறைந்திருக்கட்டும்.

தேவ தாயை எப்போதும்   எங்கிருந்தாலும் என்ன நடந்தாலும் உங்கள் அன்னையாக மனதிலிருத்தி என்ன செய்தாலும் அன்னையின் துணையுடன் செய்யுங்கள். அன்னை வெற்றியையே  பெற்றுத் தருவாள்.

இந்த ஆண்டு முழுவதும் என்ன நடந்தாலும் நான் ஆண்டவரின் அடிமை உமது சொற்படியே  எனக்கு நிகழட்டும் என மனதில் அடிக்கடி சொல்லிச் செபியுங்கள். இந்த வார்த்தைகளே  இந்த ஆண்டு முழுவதும் உங்கள் அனைவரையும் வழிநடத்தும் வார்த்தைகளாகட்டும்.

இறைவனின் அன்னையும், இறைமக்களின் அன்னையுமான  தேவ அன்னை தாய்க்குரிய அன்போடு எம் அனைவரையும் இவ்வாண்டு முழுவதும்  எத்தீங்குமின்றி பாதுகாத்து,வழிநடத்தி, எம் அனைத்துத் தேவைகளிலும் உடனிருந்து நிறைவு செய்ய, இறையாசீர் மிக்க வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என்றுள்ளது.

அரசாங்கத்தின் முடிவுகளால் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைகின்றது – ஷெஹான் சேமசிங்க

அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சவாலான தீர்மானங்கள் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை நோக்கிச் செல்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் பணவீக்கம் குறைந்திருப்பது பொருளாதாரம் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதற்கான அறிகுறி என்றும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நவம்பரில் 61.0 சதவீதமாக இருந்த பணவீக்கம் டிசம்பரில் 57.2 சதவீதமாகவும் உணவுப் பணவீக்கம் நவம்பரில் 73.7 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 64.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிவாஸரணம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தேங்காய் எண்ணெயின் மூலப் பொருள் செலவை சுமக்க வேண்டியுள்ளது – உற்பத்தியாளர்கள்

சந்தையில் கொப்பரையின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தரம் குறித்து எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும், தேவையான மூலப்பொருட்களுக்கு பெரும் செலவை சுமக்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தமது வாடிக்கையாளர்கள் பெருமளவு குறைந்துள்ளதாகவும், தற்போதைய மின்சார விநியோகத் தடை, மின்கட்டண அதிகரிப்பு என்பனவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அயல் நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த திட்டம்

இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுகள் இராஜதந்திர மட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வைத்த பிரேரணைக்கு தாய்லாந்து மட்டுமே விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் தாய்லாந்து அரசாங்கத்தின் தலைவர்களுடன் ஜனவரி 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதற்காக தாய்லாந்திற்கு அதிகாரிகள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த அரசாங்கத்தின் போது பங்களாதேஷுடன் ஆரம்பித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்தும் முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Posted in Uncategorized