இரா.சம்பந்தன் : தோல்வியின் அடையாளம் – யதீந்திரா

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி இராஜவரோதயம் சம்பந்தனை தமிழ் மக்களின் தலைவராக்கியது. அவர் தமிழ் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாதவொரு நபரானார். ஈழப்போராட்ட காலத்திலும், அதற்கு முன்னரும், தமிழ் தேசிய அரசியலில் சம்பந்தனென்னும் பெயர் தீர்க்கமான பங்கு எதனையும் வகித்திருக்கவில்லை. திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்டவர் என்பதை தவிர. இந்த பின்னணில் நோக்கினால், சம்பந்தன் ஒர் அரசியல் ஆளுமையாக செயலாற்றுவதற்கான காலமென்பது, 2009இற்கு பின்னர்தான் வாய்த்தது. இந்த அடிப்படையில், அவரது தலைமைத்துவத்திற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் இருந்தது. அதாவது, தமிழ் தேசிய அரசியலானது, அதுவரையில் யாழ்ப்பாண தலைமைத்துவங்களினாலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது. வரலாற்றில் முதல் முதலாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் தமிழ் தேசிய அரசியலுக்கு தலைமையேற்றார்.

இந்த அடிப்படையில் சம்பந்தனது தலைமைத்துவம் கவனிப்புக்குரியதாக இருந்தது. அவரது தலைமைத்துவத்திற்கு இன்னொரு வரலாற்று சிறப்புமிருந்தது. அதாவது, ஈழப் போரின் வீழ்ச்சிக்கு பின்னரான அரசியலை வழிநடத்தும் வரலாற்று பொறுப்பு அவருக்கு வாய்த்தது. முன்னாள் ஆயுத இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஓரே குடையின் கீழ் வழிநடத்துவதற்கான வாய்ப்பை பெற்ற முதல் அரசியல்வாதியும் சம்பந்தன்தான். இந்த பின்புலத்தில், அவரது தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள எவருமே பின்நிற்கவில்லை. வரலாற்றில் முதல் முதலாக, வடக்கு தலைமைகள் அனைவருமே, கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஒருவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைந்தன. இணைந்து பயணித்தன. முன்னாள் ஆயுத இயங்கங்களும் மிதவாத அரசியல் கட்சிகளும் ஒரணியாக பயணிப்பதற்கான அரசியல் சூழல் உருவாகியது. இந்த வாய்ப்பை, புதிய அரசியல் சூழலை சம்பந்தனால் ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடிந்ததா?

சம்பந்தன் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னணி செயற்பாடாளராக ஒருபோதுமே இருந்ததில்லை. அவர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வழியாக அரசியலுக்குள் பிரவேசித்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணி, 1976இல், தனிநாட்டுக்கான வட்டுக் கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த கோசத்துடன் 1977 பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டதன் மூலம்தான், சம்பந்தன் முதன்முதலாக நாடாளுமன்றம் சென்றார். இதிலுள்ள சுவார்சியமான விடயம். அதன் பின்னர் மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் 2001இல்தான், சம்பந்தன் தேர்தலில் பெற்றிபெற முடிந்தது. இடைப்பட்ட காலத்தில் சம்பந்தன் எந்தவொரு தேர்தல்களிலும் வெற்றிபெறவில்லை. 1994இல், திருகோணமலையில், தங்கத்துரையே வெற்றிபெற்றிருந்தார். தோல்வியடைந்த சம்பந்தன், பதவியை விட்டுத்தருமாறு தங்கத்துரையிடம் கேட்ட கதையை, திருகோணமலையின் பழைய தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் அறிவார்கள். தங்கத்துரை 1997இல், சிறீ சண்முகா இந்து மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற தாக்குதலின் போது, கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவரது இடத்திற்கு சம்பந்தன் நியமிக்கப்பட்டார்.

ஈழ ஆயுத விடுதலைப் போராட்ட காலத்தில் சம்பந்தன் அதன் மீதான தீவிர ஆதரவாளராக ஒரு போதுமே இருந்ததில்லை. முக்கியமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை சம்பந்தன் ஒருபோதுமே ஏற்றுக்கொண்டவரல்ல. இவ்வாறானதொரு பின்னணியில்தான், சம்பந்தன் விடுதலைப் புலிகளால் இலக்குவைக்கப்பட்ட நபரானார். சந்திரிக்கா குமாரதுங்கவுடன் நெருக்கமாக இருந்த காலத்தில், சம்பந்தன் விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் இருந்ததாகவே பரவலாக பேசப்பட்டது. 2012இல், சம்பந்தன் ஆற்றிய பாராளுமன்ற உரையொன்றின் போது, அவரே இதனை குறிப்பிட்டிருக்கின்றார். 2001இல், இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சி 109 ஆசனங்களோடு வெற்றிபெற்றது. ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காலமானது, விடுதலைப் புலிகள் அமைப்பை பொறுத்தவரையில், முக்கியமானதொரு திருப்புமுனைக்குரிய காலமாக இருந்தது. 2001 செப்டம்பரில், அமெரிக்க இரட்டை கோபுரங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குலைத் தொடர்ந்து, உலக அரசியல் நிலைமைகள் சடுதியாக மாற்றமடைந்தன. பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய யுத்தத்தை அமெரிக்கா பிரகடணம் செய்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் விடுதலைப் புலிகள் அமைப்பு, ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்தது. சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தன. இதே 2001இல்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உருவானது.

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் சம்பந்தனுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் இருந்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு, பொங்கு தமிழ் நிகழ்வுகளில் பங்குகொள்வது, அவர்களது கூட்டத்தில் பேசுவது என்பதை தவிர பிரத்தியேக முக்கியத்துவங்கள் இருக்கவில்லை. ஏனெனில் விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளையமைப்பாகவே செயற்பட்டிருந்தது.

2004இல் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக விடுதலைப் புலிகள் அமைப்பு மாவட்டங்கள் தோறும் பணியாற்றியிருந்தது. இதன் காரணமாகவே, 2004இல், திருகோணமலையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெறமுடிந்தது. 2005இல், இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்கும் நோக்கில், விடுதலைப் புலிகள் அமைப்பு தேர்தல் பகிஸ்கரிப்பை அறிவித்திருந்தது. இந்த முடிவை அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரித்திருந்தது. உண்மையில் இதனை சம்பந்தன் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தன் எதிர்க்கவில்லை. ஏனெனில் விடுதலைப் புலிகளை விரோதித்துக்கொள்ள சம்பந்தன் விரும்பவில்லை. சம்பந்தனும் கூட்டமைப்பும் அன்றைய சூழலில் முற்றிலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தனர் என்பதற்கு, இதனைவிடவும் வேறு சான்றுகள் தேவையில்லை.

ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வியை தொடர்ந்து அரசியல் நிலைமைகள் வேகமாக மாற்றமடைந்தது. தேர்தல் பகிஸ்கரிப்பில் தொடங்கிய புலிகளின் புதிய அரசியல் நகர்வுகள், இறுதியில் அவர்களுக்கான புதைகுழியானது. இந்தப் பின்புலத்தின்தான் சம்பந்தனது புதிய அரசியல் அவதாரம் ஆரம்பிக்கின்றது. அதுவரையில் எந்தவொரு முக்கியத்துவமற்றிருந்த இராஜவரோதயம் சம்பந்தன் எவராலும் தவிர்க்க முடியாதவராக மாறுகின்றார். உள்நாட்டிலும், ராஜதந்திர தரப்பினர் மத்தியிலும் கவனிப்புக்குரிய தமிழ் தலைவரென்னும் அந்தஸ்த்தை பெறுகின்றார்.

சம்பந்தனது ஆளுமைக்குரிய காலமாக 2010 தொடக்கம் 2020 வரையான காலப்பகுதியை மட்டுமே குறிப்பிட முடியும். சம்பந்தனது ஆரம்பகால நகர்வுகளை உற்று நோக்கினால் ஒரு விடயத்தை தெளிவாகப் பார்க்கலாம் விடுதலைப் புலிகள் அமைப்பு (பிரபாகரன்-பாலசிங்கம்) எந்த இடத்தை சரியாக விளங்கிக் கொள்ளா முடியாமல் சறுக்கியதோ, அந்த இடத்தை கெட்டியாக பற்றிக்கொள்வதையே சம்பந்தன் ஒரு பிரதான வழிமுறையாக பற்றிக்கொள்ள முற்பட்டார். அதாவது, இந்திய, அமெரிக்க ஆதரவை வெற்றிகொள்ள வேண்டும். 2010, ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்ததிலிருந்து, 2015இல் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக செயற்பட்டதுவரையில், அனைத்துமே இந்திய மற்றும் மேற்குலக விருப்பங்களை ஆதரிப்பதாகவே இருந்தது. இந்திய மற்றும் அமெரிக்க விருப்பங்களுடன் முக்கியமாக புதுடில்லியின் ஆதரவை வெற்றிகொள்ளும் உபாயங்களை இந்தக் கட்டுரை வரவேற்கின்றது. அதுதான் சரியானதும் புத்திசாலித்தனமான அரசியலுமாகும். ஆனால் 2010இற்கு பின்னர் கிடைத்த வாய்ப்புக்கள் எவற்றையுமே சம்பந்தன் முறையாகவும் நேர்மையாகவும் கையளவில்லை. இந்த இடத்தில்தான் சம்பந்தனது தோல்வியின் கதை ஆரம்பிக்கின்றது.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். சம்பந்தனுக்கு முன்னர் இருந்தவர்கள் வெற்றிபெற்றவர்களா? பதில் சுலபமானது. அனைவருமே தோல்விடைந்தவர்கள்தான். ஆனால் அவர்கள் தோல்வியடைந்த காலமும், அன்றைய அரசியல் சூழலும் முற்றிலும் மாறுபட்டது. ஆனால் சம்பந்தனது காலத்தில் உள்ளுக்கும், வெளியிலும் எந்தவொரு சவாலும் இருந்திருக்கவில்லை. அதே வேளை, போருக்கு பின்னரான அரசியல் சூழலை கையாளும் முழுமையான ஆளுமையுள்ள ஒருவராகவே சம்பந்தன் இருந்தார். அனைத்துமே சம்பந்தனது கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. சம்பந்தன் மீது அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடியளவிற்கு கூட்டமைப்புக்குள் எவரும் இருந்திருக்கவில்லை. அவர்கள் அனைவருமே சம்பந்தனை பின்தொடர்வதற்கு தயாராகவே இருந்தனர்.

ஆனால் அனைத்தையும் சம்பந்தன் அவரது தலைமைத்துவ மோகத்தாலும், கட்சி மோகத்தாலும், அரசியல் நேர்மையின்மையாலும் போட்டுடைத்தார். 2010இல், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார். அவரைப் போன்ற சிக்கலான ஒருவரை கையாளுவதிலுள்ள சிக்கல்களை இந்தக் கட்டுரை புரிந்துகொள்ளுகின்றது. ஆனால் இதனை ஒரு படிப்பினையாகக் கொண்டு, ஏனையவர்களை தொடர்ந்தும் அரவணைத்துச் செல்லும் தலைமைத்துவத்தை சம்பந்தன் வழங்கியிருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்து, அதனை ஒரு பலமான தேசிய இயக்கமாக மாற்றவேண்டுமென்று ஏனைய கட்சிகளும், தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்டிருந்த புத்திஜீவிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.

ஆனால் சம்பந்தனோ, அவற்றை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இதன் காரணமாக கூட்டமைப்பு பலவீனமடைந்து கொண்டே சென்றது. கூட்டமைப்பு பலவீனமடைவது தமிழ் தேசிய அரசியலை பலவீனப்படுத்துமென்னும், சிறிதளவு கரிசனை கூட சம்பந்தனிடம் இருக்கவில்லை. சம்பந்தனது தவறுகளால் இறுதியில் கூட்டமைப்பு சிதைவடைந்தது. கூட்டமைப்பின் தலைவராக இருந்து கொண்டே, கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சிகளுக்கு சம்பந்தன் துணைபோனார். ஒரு அரசியல் அமைப்பின் தலைவரே, அதனை சிதைக்க முயற்பட்ட அதிசயம் தமிழ் தேசிய அரசியலில் மட்டுமே நிகழ்ந்தது. சம்பந்தனின் தவறுகள் இன்று அவர் உயிரோடு இருக்கின்ற போதே, கூட்டமைப்பை சிதைத்துவிட்டது. கூட்டமைப்பிலிருந்து தமிழசு கட்சி வெளியேற முற்பட்ட போது, கூட்டமைப்பின் தலைவராக அதனை தடுக்க சம்பந்தன் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

இன்று மீளவும் தமிழ் அரசியல் உரையாடல்கள் 13வது திருத்தச்சட்டத்திற்கே திரும்பியிருக்கின்றது. இதனை முன்கூட்டியே கணித்து, அப்போதே பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இந்தக் கட்டுரையாளர் பல்வேறு சந்தர்பங்களில் இதனை வலியுறுத்தியிருக்கின்றார். ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தை உச்சளவில் பயன்படுத்தியிருக்க முடியும். தமிழர்களுக்கு வாய்ப்பான சூழல் அப்போதிருந்தது. ஆனால் சம்பந்தன் தான்தோன்றித்தனமாக அனைத்தையும் நாசமாக்கினார். வரமுடியாத அரசியல் யாப்பிற்காக ஜந்து வருடங்களை வீணாக்கினார். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, புதுடில்லியை எட்டியும் பார்க்கவில்லை. அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, இந்திராகாந்தியுடன் நட்புறவை ஏற்படுத்தியிருந்தார். தமிழினத்திற்காக அந்தப் பதவியை உச்சபட்டசமாக பயன்படுத்தியிருந்தார். ஆனால் மரியாதையுடன் புதுடில்லிக்கு விஜயம் செய்ய வேண்டிய சம்பந்தனோ, பத்தோடு பதினொன்றாக, அரசாங்க அமைச்சர்களோடு இணைந்து புதுடில்லி சென்றிருந்தார். சம்பந்தனது எதிர்கட்சி தலைவர் தகுதியை பயன்படுத்தி, புதுடில்லியின் ஆலோசனையுடன் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தை சிறப்பாக கையாண்டிருக்கலாம். ரணில்-மைத்திரி அரசாங்கமும் அதனை நிராகரித்திருக்காது. ஏற்கனவே 13 பிளஸ் தொடர்பில் வாக்குறுதியளித்திருந்த மகிந்த ராஜபக்சவும் ஒரு கட்டத்திற்கு மேல் அதனை எதிர்த்திருக்க வாய்ப்பில்லை. இறுதியில் தமிழ் இனத்திற்கு எந்தவொரு பயனுமில்லாமல் அனைத்தும் முடிவுற்றது. கோட்டபாய ராஜபக்ச அதிகாரத்தை கைப்பற்றியதை தொடர்ந்து மீளவும் அனைத்தும் பழைய நிலைமைக்கே திரும்பியது.

சம்பந்தனை புத்திக் கூர்மையுள்ளவரென்று சிலர் சொல்வதுண்டு. அது உண்மைதானா? பிராந்திய சக்தியான இந்தியாவின் பிரதமர், உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர், கடந்த 21 வருடங்களாக இந்தியாவில் தொடர்ந்தும் வெற்றியை மட்டுமே கண்டுகொண்டிருந்தவரான, சிறி நரேந்திரமோடி – கூட்டமைப்பை சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருந்தார். புதுடில்லி வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தனோ, சில்லறைத்தனமான காரணங்களை கூறி அந்த சந்திப்பை பிற்போட்டார். மாவையின் மகனுக்கு திருமணம்- அதற்கு போக வேண்டியிருக்கின்றது. இதுதான், ஒரு பிராந்திய சக்தியின் தலைவரை சந்திப்பதை பிற்போடுவதற்கு சம்பந்தன் கூறியிருந்த காரணம். ஒரு பத்தாமாண்டு மட்டுமே படித்தவர் கூட, இவ்வாறானதொரு காரணத்தை கூறியிருக்கமாட்டார். இதுதான் சம்பந்தனது புத்திக் கூர்மையோ? அப்போதே கூட்டமைப்பின் பங்காளிகள் சம்பந்தனை கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றியிருக்க வேண்டும். ஏனெனில் அப்போதே கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் தகுதியை சம்பந்தன் இழந்துவிட்டார்.

2010-2020 காலப்பகுதி வரையில் சம்பந்தனது அனைத்து நகர்வுகளுமே தோல்வியிலேயே முடிந்திருக்கின்றது. இன்று கூட்டமைப்பிலும் சம்பந்தன் இல்லை. தமிழரசு கட்சியிலும் சம்பந்தனை பொருட்படுத்த எவருமில்லை. தவறுகள் பின்னர் தவறுகள் மீண்டும் தவறுகள், இதுதான் கடந்த பத்துவருடங்களாக சம்பந்தன் செய்தவை. தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் இராஜவரோதயம் சம்பந்தனது இடம், தோல்விக்கும், ஏளனத்திற்கும், அரசியல் முட்டாள்தனத்திற்குமான சான்றாகும். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில், இனிமேல், இடம்பெறப் போகும் எதற்கும் சம்பந்தன் காரணமாக இருக்கப் போவதில்லை. சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது, கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி, நாங்கள் எங்கோ சென்றுவிட்டோமென்று கூறியிருந்தார். ஆனால் அதனை தாண்டி எங்கும் செல்லவில்லை, செல்லவும் முடியாதென்பதே, மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறாயின் அதனை தாண்டி எங்கோ சென்றுவிட்டோமென்னும் வாதத்தின் பெறுமதியென்ன? இதனை சரியாக புரிந்துகொண்டு செயற்பட்டிருந்தால், சம்பந்தன் தோல்வியடைந்திருக்க வேண்டியதில்லை. இப்போது, சம்பந்தன் ஒரு தோல்வியின் அடையாளம் மட்டுமே

தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன்

நாட்டில் தற்போது காணப்படுகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக இருந்தால், அதற்கான அடிப்படையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு எட்டப்பட வேண்டும். அவ்வாறான தீர்வினை வழங்குவது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் கடப்பாடாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தார்.

தற்போது தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விரைவான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவை வெற்றி பெறுவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற தீர்வை ஏற்கப்போவதில்லை என்பது உறுதியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உட்பட சர்வகட்சிகளுடன் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தொடர்ச்சியாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட இதர விவகாரங்கள் தொடர்பில் விரைவானதொரு நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது. இந்த முயற்சி வெற்றிபெறுமா, இல்லையா என்பது குறித்து உறுதியான, நம்பிக்கையான கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது.

இருப்பினும், எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்குரிய சந்தர்ப்பமொன்று கிட்டியுள்ளது. அவ்விதமாக கிட்டியுள்ள சந்தர்ப்பத்தினை நாங்களாக புறமொதுக்கியதாக இருக்க முடியாது. ஆகவே, தற்போதைய விரைந்த முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு எம்மால் இயலுமான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளோம்.

அதேநேரம் தற்போது நாட்டில் காணப்படுகின்ற நெருக்கடியான நிலைமைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால், அவற்றுக்கு அடிப்படையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்குரிய நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுத்தப்பட்டால் தான், நாட்டின் பொருளாதாரம் உட்பட அனைத்து சூழல்களிலும் மாற்றங்கள் நிகழும். சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி முகவரங்கள் உதவிகளை வழங்கும்.

சர்வதேச நாடுகள் கடன் மறுசீரமைப்புக்களை செய்யும். ஆகவே தான் ஆட்சியில் உள்ள அரசாங்கம் தீர்வு விடயத்தில் கரிசனை கொண்டுள்ளது.

அந்த வகையில், ஆட்சியில் உள்ள அரசாங்கம் நியாயமான தீர்வினை வழங்குவதற்கான கடப்பாட்டை கொண்டிருக்கின்றது. எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் அந்த தீர்வு அமைய வேண்டும். மீளப்பெற முடியாத வகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகின்ற வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அக்கருமங்கள் பிரிக்க முடியாத, பிளவுபடுத்தப்படாத ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

எம்மை பொறுத்தவரையில், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற எந்தவொரு தீர்வினையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்றார்.

அரசுடனான பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பங்களிப்பு தொடரும் – சம்பந்தன்

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மத்தியஸ்தம் அல்லது மேற்பார்வை அவசியம் என்று கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மற்றும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திய விக்கினேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தில் இந்தியாவின் வகிபாகம் மிகவும் முக்கியமானது.

இலங்கையில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் அத்தனை விடயங்களையும் இந்தியா நன்கு அறிந்துள்ளது.

குறிப்பாக, 1983ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் விவகாரம் சம்பந்தமாக இந்தியா விசேடமாக கரிசனை கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகவே 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது.

அதன் பின்னரான காலத்திலும், தமிழ் மக்களின் விவகாரங்களில் இந்தியா முழுமையான பங்களிப்பினை செய்தே வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் பங்களிப்பினை புதிதாக கோரவேண்டியதில்லை.

தற்போது தமிழர் தரப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளின்போதும் இந்தியாவின் வகிபாகம் நிச்சயமாக இருக்கும்.

தற்போதைய சூழலில் அந்த வகிபாகம் எவ்வாறானது என்று வரையறுக்கப்படாவிட்டாலும், நிச்சயமாக இந்தியா தனது பாத்திரத்தினை முக்கியமானதாக வகிக்கவுள்ளது.

அந்த வகையில், தமிழ் மக்கள் தமது நியாயமான அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்கு இந்தியா நிச்சயமாக தனது பங்களிப்பை பூரணமாகவும் அர்ப்பணிப்புடனும் வழங்கும் என்றார்.

சம்பந்தனின் செயற்பாடுகள் தமிழ் மக்களின் பேரம் பேசும் பலத்தை பலவீனப்படுத்துகிறது- ரெலோ சபா குகதாஸ்

சிங்கள பேரினவாத அரசாங்கம் மிகவும் பலவீனம் அடைந்து சர்வதேச உதவிகள் தடைப்பட்டு அதனை பெற்றுக் கொள்ள தமிழர் தரப்பை எப்படி கையாள முடியும் என்று பலவிதமான  அனுதாப அறிக்கைகளை ஆட்சித் தரப்பு தமிழர்கள் மீது வெளிப்படுத்தும் சூழ்நிலையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் அரசுக் கட்சியின் நடவடிக்கை தமிழர்களின் பேரம் பேசும் பலத்தை பலவீனப் படுத்துவதாகவே உள்ளது என மக்கள் ஆதங்கப்படுகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழ் தேசிய தலைமைகள் இணைந்து ரணிலின் அழைப்பில்  கடந்த 13 திகதி சந்தித்த போது கொடுத்த  கோரிக்கைகளை நிறைவேற்ற ஐனவரி 31 திகதி வரை காலக்கெடு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர் அதற்கான நல்லெண்ண வெளிப்பாடு முறைப்படி அரசாங்கத்தால் கிடைப்பதற்கு முன்பாக தாங்களாக வலிந்து சந்திக்க சம்பந்தன் சுமந்திரன் சென்றமை ரணில் அரசாங்கத்தை காப்பாற்றி தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதாகவே உள்ளது.
தமிழர் தரப்பு  இந்தியாவின் மேற்பார்வையில் இனப்பிரச்சினைக்கான  தீர்வினை முன்னெடுக்க வேண்டும் என உறுதியாக இருப்பதை ரணில் அரசாங்கம் விரும்பவில்லை காரணம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஏமாற்று நாடகத்தை கடந்த காலங்கள் போல நிகழ்த்த முடியாது இதனால் எரிச்சொல்ஹெம் ஊடாக உள் நாட்டுக்குள் அரசாங்கத்துடன் பேசி தீர்வு காண்பது தான் உறுதியான தீர்வு என  சம்பந்தன் சுமநதிரன் ஊடாக டீலினை முன்னகர்த்தி சம்பந்தனையும் சுமந்திரனையும் சந்திக்க வைத்தார் ஆனால்   இந்த சந்திப்பை ஏனைய தமிழ்க் கட்சிகள் நிராகரித்து ரணிலுக்கு கடிதம் எழுதியமையால்  ஐனாதிபதி செயலகம் இந்த சந்திப்பு உத்தியோக  பூர்வமானது இல்லை என அறிவித்துள்ளது
ஆனால் இந்த நடவடிக்கைகள் யாவும் தமிழர் தரப்பையும் தமிழ் மக்களின் பேரம் பேசும் பலத்தையும் பலவீனப்படுத்துவதாகவே அமையும் மாறாக சிங்கள ஆட்சியாளர்கள் பொறுப்புக் கூறலில் இருந்தும் தீர்வு வழங்குவதில் இருந்தும் கடந்த காலங்களைப் போல தப்பிக்க வழி திறக்கும்  எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பந்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் இரட்டை வேடம் அம்பலம் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

கடந்த 13 ஆம் திகதி சர்வகட்சித் தலைமைகளை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா சந்தித்து கலந்துரையாடிய போது தமிழ்த் தேசியம் சார்ந்த நான்கு கட்சி தலைவர்கள் இணைந்து மூன்று கோரிக்கைகளை கொடுத்து அதனை நடைமுறைப் படுத்துவதற்கான கால எல்லையாக 2023 ஐனவரி 31 வரை வழங்கிவிட்டு அதற்கு முன்பாக மீண்டும் இன்று 21/12/2022 சம்பந்தன் ரணிலை சந்திப்பதற்கான தீர்மானத்தை தமிழரசுக் கட்சி தனித்து எடுத்திருப்பது ரணில் அரசை காப்பாற்றவா?
ஏனைய கட்சிகளுடன் இணைந்து எடுத்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யவா? தமிழர்களை பலவீனப்படுத்தி தோற்கடித்த எரிச்சொல்ஹெமின் தலைமையில் பேசவா? தமிழ் மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை பலவீனப்படுத்தவா? என வினவியுள்ளார் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ்.

தற்போதைய நிலை தொடரின் வட கிழக்கு மக்கள் அடையாளத்தை இழக்க வேண்டி ஏற்படும் – சம்பந்தன்

வடக்குகிழக்கில் தற்போது காணப்படும் நிலை தொடர்ந்தால் தமிழ் தமிழ் மக்கள் அடையாளம் சுயமரியாதை ஏன் கௌரவத்தை கூட பேண முடியாத நிலையேற்படும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கவலை வெளியிட்டுள்ளார்

புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

அரசியல்தீர்வு தொடர்பில் இலங்கை அரசாஙகம் தீர்வுகளை முன்வைக்கவில்லை,ஒரு பக்கத்தில் வடக்கிலும் கிழக்கிலும்மீள்குடியேற்றம் காரணமாக சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது அதேவேளை வன்முறைகள் மற்றும் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழ் மக்கள் நாட்டிலிருந்து தப்பி வெளியேறுகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மக்கள் அடையாளம் சுயமரியாதை ஏன் கௌரவத்தை கூட பேண முடியாத நிலையேற்படும்.

சர்வதேச சமூகம் இந்த நிலையேற்படுவதற்கு அனுமதிக்ககூடாது. உலகிற்கு இது பிழையான முன்னுதாரணமாக மாறும்.

பிராந்தியத்திலும் நாட்டிலும் சமாதானத்தை சர்வதேச சமூகம் விரும்பினால் அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்கு நேரில் இ.தொ.க வாழ்த்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு ´ஜனநாயகப் பொன் விருது´ வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போசகர் சிவராஜா,பிரதி தலைவி அனுசியா சிவராஜா, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இரா.சம்பந்தன் ஆற்றிய சேவைகளுக்காக இவ்விருது பல வருடங்களுக்கு முன்னதாக கிடைத்திருக்க வேண்டியது என்றும், இவ்விருதானது தங்களுடைய அளப்பரிய சேவையை எடுத்துக் காட்டுகிறது எனவும் இவ்விருது கிடைத்தமைக்கு முழு மலையக மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இ.தொ.கா தெவித்துள்ளது.

இரா.சம்பந்தன் இ.தொ.காவின் வாழ்த்துக்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்ததுடன், தனக்கும் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்குமிடையிலான நட்புறவையும் நினைவுப்படுத்தினார்.

மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் எனது சிறந்த நண்பர் அவருடன் இணைந்து பல அறிவுப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டுள்ளளோம். மலையக மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் வரலாற்று சாதனைப் படைத்தவை என்றும், அரசாங்கத்தால் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்க்கப்பட்டு, முகவரியற்ற சமூகமாக மாற்றப்பட்ட போது அம்மக்களுக்காக அரசாங்கத்திற்கு எதிராக முன்னின்று பல போராட்டங்கள் செய்து, அதை வெற்றிக்கொண்டு, மலையக மக்களுக்காக பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுத்து அவர்களை ஒரு ஆளும் சமூகமாக மாற்றினார். அவருடைய அரசியல் சாணக்கியத்தை ஈடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக சமூக மேம்பாட்டிற்காக தொடர்ந்தும் வெற்றிகரமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அரசியல் தீர்வை வழங்காமல் புதிதாக வருகின்ற முதலீடுகளால் பயனில்லை – சம்பந்தன்

இலங்கையில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வின்றி புதிதாக வருகின்ற முதலீடுகளால் எவ்வித நன்மையும் கிட்டாது என்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள அவ்வர்த்தகப்பிரமுகர்கள் குழுவினர், தமிழ்மக்களுக்கு மிக அவசியமான 5 – 6 தீர்வுகளைப் பட்டியலிட்டு தம்மிடம் வழங்கினால் அதனை கனேடிய அரசாங்கம் மற்றும் கனேடியத்தூதுவருடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்க தம்மால் முடியும் என்றும், அதனூடாக பொருளாதார மீட்சிக்குப் பங்களிப்புச்செய்யும் அதேவேளை அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தையும் வழங்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பை ஏற்று இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் தலைமையில் கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் 17 பேரடங்கிய குழுவொன்று கடந்த வாரம் நாட்டை வந்தடைந்துள்ளதோடு பல தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தி வருகின்றது  என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயக பொன்’ விருது

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

‘இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்’ நிறுவனத்தால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தன்னைஅர்ப்பணித்த மூத்த அரசியல் பிரமுகரை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகின்றது.

‘இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்’ நிறுவனத்தின் வருடாந்த டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் பாடநெறியை முடித்த 75 பேர் டிப்ளோ பட்டத்தைப் பெற்றனர்.

இந்த வருடாந்த டிப்ளோமா வழங்கும் விழாவில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய பாடங்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த புகழ்பெற்ற அரசியல் பிரமுகர்களின் மதிப்பீடு நடத்தப்படுகின்றது.

அதற்கமைய, அதில் இரா.சம்பந்தன், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் ஜனநாயகப் பொன் விருதைப் பெற்றார். நான்கு தசாப்த கால பாராளுமன்ற வாழ்க்கையில் ஜனநாயகத்துக்காகச் சம்பந்தன் காட்டிய அர்ப்பணிப்பை மதிப்பிடுவதே இதன் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரியவும் கலந்துகொண்டார்.

Posted in Uncategorized