மத சுதந்திரம் தொடர்பில் ஆராய குழு

மத சுதந்திரத்தை பறித்தல் மற்றும் மத உண்மைகளை திரிபுபடுத்துதல் போன்றவற்றை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பௌத்த, முஸ்லிம், இந்து, கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள், ஊடகங்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட குழுவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், மத போதனைகளை அவதூறு செய்வதைத் தடுக்கவும் சட்ட விதிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த முடியாது – ரணில் விக்கிரமசிங்க

இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘பிரான்ஸ் 24’ இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார்.

இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தொடர்பாக குறித்த நேர்காணலில் கேள்வியெழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில். “அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஊகங்கள் நிலவுகின்றன. சீன வர்த்தகர்களுக்கு அது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தெற்கு கடற்படை கட்டளை அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படும். ஹம்பாந்தோட்டை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் எங்களிடம் ஒரு படையணி உள்ளது.

சீனாவின் இராணுவப் பயன்பாடு குறித்து நிச்சயமாக எந்தப் பிரச்சினையும் இல்லை. இதே நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் தெற்கு துறைமுகத்தில் ஒரு முனையத்தையும் நடத்தி வருகிறது. அதனால்தான் எல்லா நாடுகளிலிருந்தும் போர்க்கப்பல்கள் வருகின்றன. முனையம் பற்றி யாரும் குறை கூறவில்லை; அவர்கள் கொழும்பைச் சுற்றி பயணிக்கின்றனர், ஆனால் அவர்கள் முனையத்தைப் பற்றி மட்டுமே புகார் செய்கிறார்கள். அவர்கள் நிர்வகிக்கும் துறைமுகம் அம்பாந்தோட்டை. எனவே, சீனாவுடன் எங்களுக்கு இராணுவ ஒப்பந்தம் இல்லை; இராணுவ உடன்படிக்கைகள் எதுவும் இருக்காது, சீனா அதில் நுழையும் என்று நான் நினைக்கவில்லை.

இலங்கை ஒரு நடுநிலை நாடு, ஆனால் இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினுள்ளும் வாகனங்கள் மாயம்!

சுகாதார அமைச்சின் 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ள அதேநேரம் 259 வாகனங்கள் வெளி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனங்கள் 1950 மற்றும் 1996 க்கு இடையில் பதிவு செய்யப்பட்டவை என பொதுக் கணக்குகள் தொடர்பான நாடளுமன்றக் குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இந்த வாகனங்களில் 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் அடங்கும் என்றும் இந்த வாகனங்கள் தொடர்பான வருவாய் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1115 மோட்டார் சைக்கிள்களில் பதினொரு மோட்டார் சைக்கிள்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரியவந்துள்ளதாகவும் அதில் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்கள் கள அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இந்த மோட்டார் சைக்கிள்கள் ஒப்பந்தத்தின் கீழ் கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுவதாகவும், அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் தனிப்பட்ட முறையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 425 வாகனங்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொணர முடிந்த போதிலும், அவை விற்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதா என்பதை கண்டறிவது கடினமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கு வாகன நிர்வாக முறைமை தொடர்பில் கோபா குழுவின் தலைவர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அந்த முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்கள் காணாமல் போவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோபா குழுத் தலைவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

மகாவம்சம் உலக நினைவக மரபுரிமை ஆவணமாக யுனெஸ்கோவினால் அங்கீகாரம்

இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலான மகாவம்சத்திற்கு யுனெஸ்கோ ஸ்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார ஸ்தாபனமான யுனெஸ்கோ (UNESCO), தமது சர்வதேச நினைவகத்தில் பாதுகாத்துவரும் ஆவணப் பொருட்களின் பட்டியலில் மகாவம்சத்தினையும் இணைத்துள்ளது.

கி.பி 6 ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து இலங்கையின் வரலாற்றைக்கும் கூறும் மகாவம்சத்தின் நம்பகத்தன்மை இலங்கையிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

மேலும் மகாவம்சம் தென்கிழக்கு ஆசியாவில் பௌத்தத்தை பிரபலப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது எனவும் மகாவம்சத்தின் பல கையெழுத்துப் பிரதிகள் பல நாடுகளில் இருப்பதுடன், இந்நூல் பேரரசர் அசோகரின் வரலாற்றை அறிய பெரும் பங்காற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஐ நடைமுறைப்படுத்த இந்தியா துணைநிற்கும் – பிரிட்டன் தமிழர் மத்தியில் அண்ணாமலை

காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழர்களுக்கு இந்தியா துணைபுரியும் என்று இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

லண்டன் – பர்மிங்ஹாமில் “தமிழராய் இணைவோம் – என் மண் – என் மக்கள்” என்ற இலங்கை – இந்திய புலம் பெயர் தமிழர்கள் பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், “2009 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது பெரும் போரை நடத்தியபோது, அதனைத் தடுக்க அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி, தி. மு. க. கூட்டணிகள் தவறிவிட்டன.

ஆனால், பாரதிய ஜனதா கட்சி இந்தப் போரை எதிர்த்தது”, என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல், மற்றும் பா. ஜ. க. அரசாங்கத்தின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகள் குறித்தும் அவர் இதன்போது விளக்கமளித்தார்.

கஜேந்திரகுமார் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அமெரிக்க இராஜதந்திரிகளை விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு பிளிங்கனுக்கு வலியுறுத்தல்

அண்மையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஏனைய தமிழ் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அமெரிக்க இராஜதந்திரிகளை அனுப்பி அவர்களின் விசாரணைகளை அவதானிக்க அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோணி பிளிங்கனை அமெரிக்கத் தமிழ் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தி உள்ளன.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) மனித உரிமைகள் அமைச்சினால் செயலாளர் பிளிங்கனுக்கு ஒரு கூட்டு கடிதத்தில் இந்த முறையீடு அனுப்பப்பட்டுள்ளது.

“இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சமீபத்திய செயல்பாடுகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க நாங்கள் கூட்டாக எழுதுகிறோம், மேலும் எங்கள் கவலைகளை நிவர்த்தி செய்ய சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்தக் கவலைகளில் முக்கியமானது, இந்துக் கோயில்கள் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியச் சின்னங்களை அழிப்பதும், அதைத் தொடர்ந்து பௌத்தர்கள் யாரும் வசிக்காத தமிழ்ப் பகுதிகளில் புத்த கோயில்களைக் கட்டுவதும் ஆகும். இது இலங்கை பாதுகாப்புப் படையினரின் தீவிர ஆதரவுடனும் பாதுகாப்புடனும் செய்யப்படுகிறது” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

“தமிழர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியபோது, ​​இலங்கை காவல்துறை அவர்களைத் துன்புறுத்தியது மற்றும் சமீபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஒன்பது மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) அரசியல் கட்சியின் சட்ட ஆலோசகர் திரு. சுஹாஷ் கனகரத்தினம் ஆகியோரைக் கைது செய்தது.”

“இந்த அரசியல் கட்சி உறுப்பினர்கள் உட்பட தமிழர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறையாமல் தொடர்கின்றன, அதே அரசியல் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான (எம்.பி.) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேறொரு கிராமத்தில் தனது தொகுதியினருடன் சந்திப்பு நடத்தியபோது, ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகள் சிவில் உடையில் குறுக்கிட்டனர். அவர்களின் அடையாளத்தைத் திரு.பொன்னம்பலம் கோரியபோதும் அவர்கள் இணங்க மறுத்துவிட்டனர். பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைநகர் கொழும்பில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்காகக் காத்திருக்கும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் ஒரு பெண் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டனர். ”

“தெளிவாக, தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் சிவில் சமூகத்தின் மீதான அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் தந்திரோபாயங்கள், தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும் வகையில் உள்ளன. இவை இலங்கை அரசாங்கத்தில் அதி உயர் மட்டத்தின் ஆதரவுடனே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றிய சவேந்திர சில்வா, அந்த அதிகாரத்தின் நெம்புகோல்களைக் கட்டுப்படுத்துகிறார்” எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்காக சவேந்திர சில்வா மீது விதிக்கப்பட்ட அமெரிக்கத் தடைகள் வெளிப்படையாக மீறப்பட்டு, அவர் தலைமை அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். சமீபத்தில் அவருக்குக் கூடுதலாக அளிக்கப்பட்ட இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சிவில் சமூகத்தின் மீதான அதிகாரங்கள், தமிழர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ள ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையைப் பயன்படுத்தி மீண்டும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு அவருக்குக் கூடுதல் ஊக்கத்தையும் தண்டனையின்மையையும் வழங்கியுள்ளன”

” குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களால் நாட்டை திவால் நிலையில் இருந்து பிணை எடுப்பு நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இந்த பாரதூரமான சூழ்நிலைக்குத் தீர்வு காணுமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.”

“கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து இராஜதந்திரிகளை அனுப்பி, நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போது அவதானிப்பதன் மூலம், அரசின் இத்தகைய செயல்பாடுகளைத் தடுப்பதற்கான முதல் படியை நீங்கள்எடுப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று இந்தக்கூட்டுக் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டுக் கடிதத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளது:

1. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA); contact@fetna.org
2.இலங்கைத் தமிழ்ச் சங்கம்; President@sangam.org
3. ஐக்கிய தமிழ் அமெரிக்கர்கள் பிஏசி; info@tamilamericansunited.com
4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), மனித உரிமைகள் அமைச்சு; Secretariat@tgte.org
5. ஐக்கிய அமெரிக்கத் தமிழ் செயல் குழு (USTAG); info@theustag.org
6. உலகத் தமிழ் அமைப்பு; wtogroup@gmail.com

ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்; உயர் அடுக்கு பாதுகாப்பிற்கு உத்தரவு

விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி நாட்டிற்கு வரும் போது உயர் அடுக்கு வாகன பேரணிக்கு, எதிரான அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் சில வகையான நாச வேலைகளில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆயுதக் குழுக்களின் தாக்குதல் சாத்தியம், சினைப்பர் தாக்குதல் அபாயம், பொது மக்களால் குழப்ப நிலைகளை ஏற்படுத்தும் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் சாத்தியம் உள்ளிட்ட 6 விடயங்கள் தொடர்பான அபாயம் உள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, ஜனாதிபதி மற்றும் பிரமுகர்களுக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எவ்வாறு பாதுகாப்பை வழங்குவது என்பது தொடர்பில் 8 அம்சங்களின் கீழ் நீண்ட விளக்கத்துடன் அறிவுறுத்தல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் – ஜனா எம்.பி

இந்த நாட்டில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கவேண்டும் திட்டமிட்டு  1949 ம் ஆண்டு முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கு மாகாணத்திலே கல்லோயா குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்த காலம் தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் காணிகள் அபகரித்து விகாரைகள் அமைக்கும்  திட்டங்களை செய்து வருகின்றனா் என வடக்கு கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 33வது நினைவு அஞ்சலி சனிக்கிழமை (24) அனுஸ்டிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர்  உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை போராட்டத்திலே  பல நாட்டகள் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடுக்கள் நிறைந்த நாளாக இருக்கின்றது.

அந்த நாட்களின் ஒரு நாளாகவே 19 யூன் 1990 ம் ஆண்டு விடுதலைப் போரட்ட பாதையிலே ஒரு கறுப்பு புள்ளி விழுந்த நாளாகும்.

தமிழ் மக்கள் ஆயுத போராட்டத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல ஆயுத போராட்டம் எங்கள் மீது திணிக்கப்பட்டது இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து நாங்கள் தமிழினம் இரண்டாம் தர பிரஜைகளாக இந்த நாட்டிலே அழைக்கப்பட்டோம் .

இவ்வாறு தனி சிங்களசட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட 1957, 1958, 1978, போன்ற கலவரங்களை தொடர்ந்து மிகவும் மோசமாக83 கலவரத்தை உருவாக்கி கப்பல் மூலம் வட கிழக்கிற்கு சொந்த நாட்டிலே அகதிகளை அனுப்பிய வரலாறு ஆகும்.

இவ்வாறு தமிழர்கள் மீது நடந்தேறிய இனழிப்பிற்கு எதிராக அகிம்சை மூலமாக போரடிய எமது தலைவர்கள் அதில் நம்பிக்கையிழந்து உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாங்கள் ஆயுத போராட்டத்திற்குள் தள்ளப்பட்டோம் அதனால் 1969 ஆயுத போராட்டம் முதல் முதல் தமிழ்ஈழ விடுதலை இயக்கம் அதில் பிரபாகரன் உட்பட போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் இருந்தார்கள்.

இந்த நிலையில் 83 கலவரத்தை அடுத்து ஈழவிடுதலை போராட்டம் ஒரு வித்தியாசமான பாதைக்குள் சென்றது. முன்னணியில் 5 போராட்ட இயக்கங்கள் இருந்தது அப்போது அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் தான் எமது இலக்கை அடையமுடியும் என 1984 ம் ஆண்டு ஈழ தேசிய விடுதலை முன்னணி என்று ஈரோஸ், ரொலே, ஈபிஆர்எல்எப். என மூன்றும் ரி.என்.எல்.எப். உருவாகியது பின்னர் விடுதலைப் புலிகளும் அதில் இணைந்தனர் என்பது வரலாறுகள்.

ஆனால் விடுதலைப் புலிகள் மாத்திரம் வடகிழக்கிலே இந்த போராட்ட பாதையில் நின்று இருந்தாலும் 2009 மே 18 உடன் இந்த ஆயத போராட்டம் முற்று முழுதாக மௌனிக்கப்பட்டது இந்த போரட்டம் மௌனிக்கப்படும் முன்னர் பல தலைவர்களை இழந்திருக்கின்றோம் அதில் போரட்ட தலைவர்கள் மாத்திரமல்ல மிதவாத கட்சியான தழிழர் விடுதலைக் கூட்டணி தமிழரசு கட்சி போன்றவற்றின் தலைவர்கள் அமிர்தலிங்கம் உட்பட பல தலைவர்களை இழந்திருக்கின்றோம்.

ஜே,ஆர். ஜெயவர்த்தனா காலத்திலே சமாதன பேச்சுக்கே இடமில்லாமல் தமிழ் மக்களின் குரல்வலையை நசுக்கினார் 2009 வரை தமிழ் மக்களை வஞ்சித்துக் கொண்ட அரசு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு வடகிழக்கில் வித்தியதசமான ஒரு திணிப்பை செய்துவருகின்றது

அதுதான் தமிழர் தேசத்தில் விகாரைகள் அமைக்கவேண்டும் தமிழரின் குடிபரம்பலை எவ்வளவு வேகமாக மாற்றி அமைக்கவேண்டும் இணைந்திருந்த வடகிழக்கை வெலிஓயா குடியேற்றம் மூலம் நில தொடர்பற்ற மாகாணங்களாக இரண்டு மாகாணங்களையும் பிரிப்பது போன்ற நடவடிக்கையை திட்டமிட்டு செய்துவருகின்றது

தற்போதைய எதிர்கட்சி தலைவாரான சஜித் நல்லாட்சி காலத்தில் புத்தசாசன அமைச்சராக இருந்தபோது வடகிழக்கில் ஆயிரம் விகாரை அமைக்கவேண்டும் என்ற அவர் தற்போது இலங்கையிலே ஆயிரம் தாது கோபுரங்களை படிப்படியாக அமைக்கவேண்டும் என கூறியுள்ளார்.

ஆகவே தற்போது வடகிழக்கில் நடந்து கொண்டிருப்பது ஒரு மௌன யுத்தம் தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு தமிழர் பிரதேசங்கள் எங்கும் விகாரைகள் குறிபாக உயர்ந்த மலைகளில் அமைப்பது சுற்றுலா பயணிகள் கூட இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை பறைசாற்றுவதற்காக இந்த திட்டங்களை செய்து வருகின்றனர்.

குருந்தூர் மலையிலே பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த காணிகள் இன்று தொல்பொருள் என்று பெயரில் அபகரிக்கட்டுள்ளது சரத்வீரசேகர, உதயகம்பன்வெல, விமல்வீரன்ச போன்ற அரசியல்வாதிகள் தங்களது நிரச்சி நிழலுக்குள் செயலாற்றிக் கொண்டு வடகிழக்கு மாகாணங்கள் தமிழ் தாயகம் என தம்பட்டம் அடிக்கும் தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக சரத்வீரதேசகர தெரிவித்தார்

எனவே தமிழர்களுடைய தாகம் விடுதலை நோக்கம் இன்னும் தனியவில்லை என அமைச்சருக்கு தெரியவேண்டும். அதேவேளை கோட்பாயாவின் விசுவாசியான புதிதாக தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வந்த வெளிநாட்டு அமைச்சர் ஒரே இரவில் தீர்வை கொடுக்கமுடியாது கிடைப்பதை பெற்றுக் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார் எனவே இனப்பிரச்சனை தோன்றி எத்தனை ஆண்டுகள் என அவருக்கு தெரியாமல் இருக்கலாம், ஒரே இரவில் இந்த பிரச்சனைக்கான தீர்வை கேட்கவில்லை

நாடு சுதந்திரமடைந்த காலம் இருந்தே தமிழர்கள் இனப்பரச்சனையை தீர்ப்பதற்காக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் தந்தை செல்வா பேச்சுவார்த்தை , பண்டா செல்வா ஒப்பந்தம்,  டட்லி செல்வா ஒப்பந்தம், மற்றும் திம்பு பேச்சுவார்த்தை, 2001 பேச்சுவார்த்தை 2009 பின் மகிந்தவுடன் 18 சுற்று பேச்சுவார்த்தை. உட்பட தற்போதும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

தற்போதைய ஜனாதிபதி ஒரு சர்வதேச அழுத்தத்தின் மத்தியிலே இந்த நாட்டை நடாத்துகின்றார் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது அதன் மூலம் உருவாகிய குறைமாத குழந்தையான மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது இந்த 13 திருத்த சட்டத்தை முற்று முழுதாக தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்காக யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை,

ஆனால் அரசியல் அதிகாரத்தில் ஆசையற்ற பத்மநாபா கிடைப்பதை எற்றுக் கொண்டு அதிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்வோம் என்ற அடிப்படையில் அந்த மாகாணசபை அதிகாரத்தை பெற்றுக் கொண்ட முதல் தலைவர் பத்மநாபா அதிகாரத்தில் ஆசையில்லாத காரணத்தால் முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்ளவில்லை அப்படிப்பட்ட ஒரு தலைவரது ஞாபகாத்த தினம்தான் இந்த 19 யூன் என்பது.

எனவே நாங்கள் கிடைப்பதை பெற்றுக் கொண்டு எங்கள் மக்களுக்கு துரோகம் செய்வதற்கு நாங்கள் அரசியல் செய்யவில்லை. தமிழ் தேசிய கூட்டடைப்பு விடுதலைப் புலிகள் இயங்கு நிலை இருந்த காலத்திலே 2001 உருவாக்கப்பட்டது அப்போது கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து தமிழ் மக்களுக்கு ஒரு பலமான அரசியல் சக்தி இருக்கவேண்டு என்ற காரணத்திற்காக இந்த கூட்டமைப்பை உருவாகினோம்.

2009 ம் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு அசைக்கமுடியத சக்த்தியாக இருந்தது 2004 தமிழ் விடுதலை கூட்டணி வெளியேறியது 2010 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெளியேறியது 2015 ஈபிஆர்எல்எப் வெளியேறியது அதேபோன்று 2023 தமிழரசு கட்சி வெளியேறியுள்ளது ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பலமான 5 கட்சிகள் கொண்ட அணியாக செயற்படுகின்றோம். என்றார்.

கோட்டாபாய ராஜபக்சவை இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறச்செய்வது என்பது சாத்தியமற்ற விடயம் – ஜஸ்மின் சூக்கா

இலங்கைஅரசாங்கம் கோட்டாபாய ராஜபக்சவை பொறுப்புக்கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் என சர்வதேச உண்மை நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பபாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

ஜூரிஸ்ட் இணையத்தளத்திற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரதூரமான மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது ஜேவிபி காலத்தில் கோட்டாபய ராஜபக்ச மாத்தளைக்கு பொறுப்பாக காணப்பட்டகாலம் வரை நீள்கின்றது என்பதை மனித புதைகுழிகள் குறித்த புதிய அறிக்கை வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அன்று தொடக்கம் இன்றுவரை ஜேவிபி காலத்தில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களோ அல்லது யுத்தத்தின் இறுதியில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களோ பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இடம்பெற்ற சம்பவங்களிற்காகவோ அல்லத யுத்தமுடிவில் இடம்பெற்ற சம்பவங்களிற்காகவோ இந்த அரசாங்கம் கோட்டாபாய ராஜபக்சவை பொறுப்புக்கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அதன் இருப்பிற்காகவும் ஆதரவிற்காகவும் கோட்டாபய ராஜபக்சவிற்கு கடமைப்பட்டிருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஐ.நா முழு ஒத்துழைப்பு வழங்கும் – ஐ.நா. பொதுச் செயலாளர் உறுதி

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸின் பரிஸ் நகரில் நடைபெறுகின்ற ‘புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்’ தொடர்பிலான மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டாரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு உறுதிளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம், பொருளாதார மீட்சிக்கான செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடம் தெளிவுபடுத்தினார்.

நிலையான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுகின்ற போதும் வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

நிலையான அபிவிருத்து இலக்குகளை மேம்படுத்தும் அதேநேரம் காலநிலையினால் ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புக்களை மட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட உபாய மார்க்க திட்டங்களை எடுத்துக்காட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கமைய முன்னெடுக்கப்படும் ‘காலநிலை சுபீட்சத்துக்கான திட்டமிடல்’ தொடர்பிலும் செயலாளர் நாயகத்துக்கு விளக்கமளித்தார்.

பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் , கடன் மறுசீரமைப்பு மற்றும் காலநிலை அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களின் போது இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இடையிலான ஒத்துழைப்புகளை பலப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.