சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஊழியர் குற்றப்பத்திரத்தை திருத்த அனுமதி

2019ஆம் ஆண்டு வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஊழியர் கனியா பனிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திருத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலேல்ல சட்டமா அதிபருக்கு, புதன்கிழமை (03) அனுமதி வழங்கினார்.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அண்மித்த காலப்பகுதியில் கொழும்பு கறுவாத் தோட்டம் பகுதியில் வைத்து வெள்ளை வாகனத்தில் வந்த ஐவர், தன்னைக் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி பல மணிநேரம் தடுத்து வைத்ததாக கறுவாத் தோட்டம் பொலிஸில் முறைப்பாடு கனியா பனிஸ்டர் பதிவு செய்தார்.

எனினும், மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பொய்யான சாட்சியங்களை சோடனை செய்ததாக கனியா பனிஸ்டர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

இலங்கை அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக பொய்யான தகவல்களை வழங்கியதாகவும், தனது கடத்தல் குறித்த விடயத்தில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதாகவும் கனியா பன்னிஸ்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தையிட்டியில் காணிகளை விடுமாறு போராடியவர்களை கைது செய்ய முயற்சி!

தையிட்டியில் காணிகளை விடுமாறு போராடியவர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் முயன்றதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்தும், சிங்கள குடியேற்றத்தை நிறுவும் நோக்கில் விகாரையை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு கோரியும் அப்பகுதி மக்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்தில் உள்நுழைந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் அப்பகுதிச் செல்லும் வீதிகளை மூடி அங்கிருப்பவர்களை கைது செய்ய முயன்றதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் ஆணையின்படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார்: ரெலோ

இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக மக்கள் ஆணையின் படி பேசுவதற்கு தமிழர் தரப்பு தயார் என ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (03.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்த ஆண்டின் இறுதியில் ஒரு முடிவை புதிய அரசியலமைப்பு மூலம் காண இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மே தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.

சந்தர்ப்ப வாதம்

இனப்பிரச்சினைக்கான தீர்வை எதன் அடிப்படையில் பேசுவதாக ரணில் விக்ரமசிங்க வெளிப்படையாக இதுவரை பொது வெளியில் கூறவில்லை.

அத்துடன் நம்பிக்கை தரும் வகையில் அவரது ஏனைய நடவடிக்கைகள் அமையவில்லை. அத்துடன் ஜனாதிபதியின் உரைகள் பதவி ஏற்பில் இருந்து மாறி மாறி சந்தர்ப்ப வாதமாகவே அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக நடாத்திய சனநாயக தேர்தல்களில் மக்கள் ஆணையாக அறுதிப் பெரும்பான்மையான மக்கள் சமஷ்டித் தீர்வு வேண்டும் என்றே ஆதரவு கோரியுள்ளனர்.

இனப்பிரச்சினை

இதற்கு ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் மிகப் பெரும் ஆதாரம் அதன் பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வான சமஷ்டி அடிப்படையில் பேச வருமாறு வெளிப்படையாக அரசாங்கம் அறிவித்தால் தமிழர் தரப்பு எப்போதும் தயாராகவுள்ளனர்.

இந்த நாட்டின் மீள முடியாத பின்னடைவுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வு கொடுக்கப்படாமை என்ற உண்மையை உணர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்கள் கபடத்தனமாக மறைக்காது வெளிப்படையாக இன நல்லிணக்கத்துடன் மேசையில் உக்கார தயார் என்றால் அது தான் தீர்வுக்கான ஆரம்பம் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தமிழ் மக்களை ஏமாற்றாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தர வேண்டும்: கோவிந்தன் கருணாகரம்

‘மக்களை ஏமாற்றாமல் உண்மையாக சிந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வினை வைத்துவிட்டு எங்களுடன் பேச வாருங்கள் நாங்கள் பூரண ஒத்துழைப்பினை தருகின்றோம்‘‘ என நாடாளுமன்ற உறுப்பினரும், நாயகம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசு தமிழ் தரப்புகளை ஏமாற்றி அரசாங்கத்தில் இணைய வைத்து பொருளாதாரத்தினை நிலை நிறுவுவதற்காக முயற்சி செய்வதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி நேற்றைய தினம் (01.05.2023) தமிழ் கட்சிகளுக்கு விடுத்த அழைப்பு தொடர்பில் (02.05.2023) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை

இது தொடர்பில் மேலும் கூறுகையில், ‘‘நேற்றை மேதின உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கியமான கருத்தினை வெளியிட்டிருந்தார்.

இந்த வருட இறுதிக்குள் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காணுவதற்கு உத்தேசித்துள்ளதாக கூறியிருக்கின்றார்.

இதேபோன்று தான் கடந்த ஆண்டும் சென்ற சுதந்திரதினத்திற்கு முன்னர் தீர்வினை காண வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த ஆண்டுக்குள் தீர்வினை காணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தமிழ் தரப்புகள் இந்த தீர்வு காணும் விடயத்தில் பின்னடிப்பதாகவும் விலகி தூர நிற்பதாகவும் கூறியிருந்தார்.

பேச்சுவார்த்தை

ஆனால் போராட்டம் நடைபெற்ற காலம் தொடக்கம் ஒரு பக்கம் ஆயுதப் போராட்டம் நடைபெற்றாலும் மாறிமாறி வந்த ஆட்சியாளர்களுடன் தமிழ் தரப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டே வந்தார்கள்.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட தன் பின்னர் மகிந்த ராஜபக்சவுடன் 18 சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியை விட அதிகாரம் கூடியவராக இன்றைய ஜனாதிபதி பிரதமராகயிருந்தார்.

அப்போது நாடாளுமன்றத்தினை இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் ஒரு சபையாக மாற்றி பல கூட்டங்களை நடத்திய போதும் அது ஏமாற்றப்பட்டதாகவே சென்றுவிட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்

அந்தவகையில் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னுடன் இணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வினை காணுவதற்கு முன்வர வேண்டும்.

இந்த நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைமைக்கு மாறியதற்கு இலங்கையின் இனப்பிரச்சினை தான் காரணம் என்பதை சிங்கள மக்களுக்கும் பேரினவாதிகளுக்கும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூறி அவர்களை தங்களுடன் இணைத்து இந்த இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

அதன் ஊடாக கொண்டு வரப்படும் தீர்வுத் திட்டத்தினை நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் வைத்துவிட்டு தமிழர்தரப்புடன் பேசவேண்டும்.

நாங்கள் என்றும் பேச்சுவார்த்தைக்கு பின்னடிப்பவர்களோ விலகி நிற்பவர்களோ அல்ல என்பதை நாங்கள் உறுதியாக தெரியப்படுத்துவோம்.

அதனைவிடுத்து தற்போதைய பொருளாதார நிலைமையினை சீர்செய்வதற்காக மீண்டும் மீண்டும் தமிழ் தரப்புகளை ஏமாற்றி அரசாங்கத்தில் இணைய வைத்து இலங்கையின் பொருளாதாரத்தினை நிலை நிறுத்துவதற்காக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக சிந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தினை முன்வைத்துவிட்டு எங்களுடன் பேசவாருங்கள்.

நாங்கள் பூரண ஒத்துழைப்பு தருவதுமட்டுமல்லாமல் புலம்பெயர்ந்துள்ள மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை கூட நிலை நிறுத்த உதவிசெய்வார்கள் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றோம்‘‘ என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நாட்டின் இனப்பிரச்சினைக்கு இவ்வருடத்துக்குள் தீர்வு – ஜனாதிபதி

நாட்டின் நீண்டகாலமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தமிழ் அரசியல் கட்சிகள் பின்னடிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நியாயமான, புதிய போட்டித்தன்மையுள்ள மற்றும் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

ஆகவே அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய விமானப்படை அதிகாரி இலங்கையை வந்தடைந்தார்

இந்திய விமானப் படை பிரதானி ஏர் சீஃப் மார்ஷல் சவுத்ரி, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை ஏர் சீஃப் மார்ஷல் சவுத்ரி சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சொந்தமாக காணி வாங்கி விகாரை அமைக்க விண்ணப்பித்துள்ள பிக்கு

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தனியார் காணி ஒன்றினை கொள்வனவு செய்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், அக்காணியினுள் விகாரை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம் கந்தரோடை பகுதியில் தமிழ் – பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்களும், அதன் எச்சங்களும் காணப்படுகின்றன. அவை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.

தமிழ் – பௌத்த எச்சங்கள் காணப்படும் இடத்திற்கு அருகில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான சுமார் 06 பரப்பு காணியினை தென்னிலங்கையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த காணிக்குள் புதிய விகாரை ஒன்றினை அமைக்கவுள்ளதாகவும், விகாரை அமைக்கவுள்ள காணிக்கு அருகில் தொல்லியல் எச்சங்கள் காணப்படுவதனால், விகாரை அமைப்பதால் அதற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா ? அக்காணியில் விகாரை அமைக்கலாமா ? என தொல்லியல் திணைக்களத்திடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க அனுமதி வழங்கியவுடன், ஏனைய அனுமதிகளை விரைந்து எடுத்து, விகாரை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பிக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழின விடுதலையே தொழிலாளர்களுக்கான விடுதலை – சபா குகதாஸ்

மே ஒன்று உலக தொழிலாளர் தினம். எமது தமிழர் தாயகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை இழந்து ஒடுக்கப்படுகின்ற சமூகமாக தொடர்ந்து தங்கள் வாழ்வில் போராடி வருகின்றனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் 29.04.2023 அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிங்கள ஆட்சியாளர்களின் நிலையற்ற பொருளாதார கொள்கையினால் தொழிலாளர்களின் உரிமைகள் பெயரளவில் வரையறை செய்யப்பட்டாலும் பாதிக்கப்படும் போது தொழிலாளர்களுக்கான நியாயங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவதுடன், அரசின் அதிகார வர்க்கம் மேற்கொள்ளும் சுரண்டல்களும், ஊழல்களும் தொழிலாளர் வர்க்கத்தை மீண்டெழ விடாது தொடர்ந்து ஒடுக்குமுறையில் வைத்துள்ளது.

தமிழர்களின் மறுக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்கான விடுதலை கிடைக்கும் வரை தமிழர் தேசத்தின் தொழிலாளர்கள் சிங்கள ஆட்சியாளர்களால் ஒடுக்கப்படுவார்கள். எனவே தமிழின விடுதலையே தொழிலாளர்களின் விடுதலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளை கவனத்தில் எடுக்க முடியாது

“வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சியினர் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாகவுள்ளனர். அவர்களின் ஆட்டத்துக்கு ஆட முடியாது” என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தனவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“தமிழ் மக்களை உசுப்பேத்தி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாட தொழிலாக உள்ளது.

இதனூடாக அவர்கள் தங்கள் சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹர்த்தால் போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது. தமிழ் மக்களை ஏமாற்றவே இப்படியான போராட்டங்களைத் தமிழ்க் கட்சியினர் நடத்துகின்றனர்.”என தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வடக்கு – கிழக்கில் கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, ஹர்த்தால் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று நீதிமன்றத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எஞ்சிய கோரிக்கைகள் தொடர்பில் அரசு கவனம் செலுத்துகின்றது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த உண்மையை கண்டறியப் போகிறார்கள்? எம்.எஸ்.எம் ஐயூப்

தென்ஆபிரிக்காவில் அமைக்கப்பட்டதைப் போன்ற உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் நோக்கில், தென்ஆபிரிக்க அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவும் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரியும் கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை தென்ஆபிரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் அந்நாட்டின் ஜனாதிபதி சிறில் ரமபோஸா மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் சந்தித்தனர். உண்மையை கண்டறியும் பொறிமுறையொன்றை நிறுவுதல் பற்றி, இவ்வருடம் ஜனவரி மாதம் அமைச்சரவை எடுத்த முடிவொன்றின் பிரகாரமே, இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக இதுகுறித்து அரசாங்கம் தெரிவித்திருந்தது.

‘உண்மையயைக் கண்டறியும் பொறிமுறை’ என்று பொதுவாக இதை அழைத்தாலும் இது இனப்பிரச்சினை தொடர்பானது. அதேவேளை, இதில் வெளிநாட்டமைச்சர் சம்பந்தப்படுவதன் மூலம், இது இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொள்வதைப்பார்க்கிலும் வெளிநாட்டு அரங்குகளை நோக்கமாகக் கொண்ட காரியம் என்பதும் தெளிவாகிறது.

இந்த விஜயம் தொடர்பான செய்தி வெளியான போதும், அமைச்சர்கள் நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களில் அதைப் பற்றி பெரிதாக எதுவும் வெளியிடவில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று அரசாங்கம் அறிவிக்கவும் இல்லை. போரால் பாதிக்கப்பட்டவர்களாவது அதைப் பற்றி எந்தவோர் அக்கறையை செலுத்தவும் இல்லை. ஆணைக்குழுக்கள் பற்றி, இலங்கை மக்களுக்கு இருக்கும் கசப்பான அனுபவமே அதற்குக் காரணமாகும்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போது, சர்வதேச மனித உரிமை அமைப்பு அதைப் பற்றி ஓர் ஊடக அறிக்கையை வெளியிட்டது. ‘பொறுப்புக் கூறலைப் பற்றிய பிரச்சினையை சர்வதேச சமூகம் எழுப்பும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இலங்கை அரசாங்கம் ஓர் ஆணைக்குழுவை நியமிக்கும். அக்குழு நீண்ட காலத்தை இழுத்தடித்துவிட்டு, எவ்வித பயனையும் காணாமல் முடிவடைந்துவிடும்’ என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

உண்மைதான்! 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை அடுத்து 1984ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வட்ட மேசை மாநாட்டை கூட்டினார். அதில் ஒரு பயனும் கிடைக்கவில்லை.

1985ஆம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தைகளை அடுத்து ஜே.ஆர்., 1986ஆம் ஆண்டு அரசியல் கட்சி மாநாட்டைக் கூட்டினார். அதில் ஓரளவுக்கு அதிகார பரவலாக்கல் ஆராயப்பட்டது.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை புலிகள் நிராகரித்து மீண்டும் போரை ஆரம்பித்த போது, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1989ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டை ஆரம்பித்தார். அத்தோடு அவர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவென மங்கள முனசிங்க தெரிவுக்குழுவை நியமித்தார். அவர் காணாமற்போனவர்களைப் பற்றிய ஆணைக்குழுவையும் நியமித்தார்.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் 1995ஆம் ஆண்டு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தார். அது நூற்றுக்கு மேற்பட்ட அமர்வுகளை நடத்திய பின்னர் கைவிடப்பட்டது. காணாமற்போனவர்களைப் பற்றி அறிய, பிராந்திய ரீதியில் மூன்று ஆணைக்குழுக்களை சந்திரிகா நியமித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கென 2006ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி, அதன்மூலம் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை நியமித்தார். அது பலமுறை கூடி, 2010ஆம் ஆண்டு, அதன் அறிக்கையை மஹிந்தவிடம் கையளித்தது. அறிக்கை காணாமல் போய்விட்டது.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கென, 2006ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பகவதியின் தலைமையில் வெளிநாட்டு நிபுணர் குழுவை மஹிந்த நியமித்தார். அக்குழு, அரசாங்கத்திடம் இருந்து போதிய உதவி கிடைக்கவில்லை என்று இடைநடுவில் கலைந்துவிட்டது. அதையடுத்து வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற முக்கிய சில மனித உரிமை மீறல் சம்பவங்களைப் பற்றி ஆராய, உதலாகம ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. மஹிந்தவின் காலத்திலேயே காணாமற்போனவர்களைப் பற்றிய பரணகம ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து, போரில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதற்காகவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கம், புதியதோர் ஆணைக்குழுவை நியமிப்பதாக 2020 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் கூறியது. ஒரு வருடம் கடந்து அடுத்த மனித உரிமைகள் பேரவை கூட்டம் நெருங்கிய போது, உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி நவாஸின் தலைமையில் அந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அக்குழு கடந்த பெப்ரவரி மாதம் ஆறாம் திகதி, தனது இறுதி அறிக்கை நகலிலுள்ள பரிந்துரைகளின் ஒரு சாராம்சத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தது. அதிலும் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையின் அவசியம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், அவ்வாறானதொரு பொறிமுறையை அமைக்கவென அமைச்சர்கள் தென்ஆபிரிக்காவுக்குச் சென்றிருந்தனர்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையைப் பற்றிய கருத்து ஆராயப்படுவது முதல் முறைல்ல! இது அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவடைந்தது முதல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் ஏனைய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் வலியுறுத்தி வரும் ஒரு விடயமாகும்.

கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் காலத்தில் இதுவும் காணாமற்போனோருக்கான அலுவலகம் உள்ளிட்ட வேறு சில காரணங்களும் முக்கிய விடயங்களாக மேலெழுந்து வந்தன. ஆயினும் போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்த நிலையில், அவ்வாறானதொரு பொறிமுறையை உருவாக்க இப்போது தான் படிக்கப் போகிறார்கள்.

இவ்வருடம் நடைபெற்ற 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த நவம்பர் மாதம் கூறினார். அதற்காகவென பேச்சுவார்த்தைகளையும் ஆரம்பித்தார். பின்னர், இரண்டு வருடங்களில் பிரச்சினையை தீர்ப்பதாக கூறினார். இந்தப் பின்னணியில், இந்த உண்மையைக் கண்டறியும் பொறிமுறை பற்றிய விடயமும், களத்தில் குதித்துள்ளமை முக்கியமாகும்.

இங்கு எழும் பிரதான பிரச்சினை என்னவென்றால், எதைப்பற்றி அரசாங்கம் உண்மையயை கண்டறியப் போகிறது என்பதாகும். இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில், நாம் எங்கே பிழை விட்டோம் என்பதைப் பற்றி அரசாங்கம் ஆராயப் போகிறதா அல்லது, போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களைப் பற்றி ஆராயப் போகிறதா?

மனித உரிமைகள் விடயத்தைத்தான் ஆராயப் போகிறது என்றால், எந்தக் கால கட்டத்திலான சம்பவங்கள் ஆராயப்படப் போகின்றன? மக்கள் விடுதலை முன்னணிக்கும் அரச படைகளுக்கும் இடையிலான மோதலின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களும் ஆராயப்படப் போவதாக ஒரு சிங்கள பத்திரிகை கடந்த வாரம் செய்தி வெளியிட்டு இருந்தது.

அவ்வாறாயின், 1971 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அரசாங்கம் ஆராயப்போகிறதா? இது வேகமாக வளர்ந்து வரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களைக் குறி வைத்து ஆரம்பிக்கப் போகும் திட்டமா என்ற கேள்வியும் அதன்படி எழுகிறது.

வடக்கு, கிழக்கு போரை மட்டுமே கருத்தில் கொண்டாலும், போர் முடிவடைந்து 14 வருடங்கள் உருண்டோடிவிட்டன. கருத்தில் கொள்ளப்படப்போகும் சம்பவங்களோடு சம்பந்தப்பட்ட சாட்சியாளர்களில் எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என்பது பெரும் கேள்வியாகும். அத்தோடு போரால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானோர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் எத்தனை பேர் சாட்சியமளிக்க முன்வருவார்கள் என்பது அடுத்த கேள்வியாகும்.

அதேவேளை நீதி, நியாயம் பற்றிய விடயத்தில் இலங்கை மக்கள் இன ரீதியாக வெகுவாக பிரிந்து சிந்திக்கும் நிலையில் உள்ளனர். சிலர் செஞ்சோலை தாக்குதலை நியாயப்படுத்தும் அதேவேளை, சிலர் புறக்கோட்டை குண்டு வெடிப்பை நியாயப்படுத்துகின்றனர். இந்த நிலையில், உண்மையைக் கண்டறிவதானது மிகவும் கடினமான விடயமாகும்.

அத்தோடு மனித உரிமைகள் விடயத்தில் எவ்வகையான நியாயத்தை வழங்க வேண்டும் என்பதிலும் மக்கள இன ரீதியாக பிரிந்து சிந்திக்கின்றனர். சிலர் குற்றவாளிகளைத் தண்டிப்பதன் மூலமே நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்க, வேறு சிலர் குற்றங்களை பரஸ்பரம் ஏற்று ஐக்கியத்தை உருவாக்க வேண்டும் என்கின்றனர்.

2018ஆம் ஆண்டு அதாவது, ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றில் விசாரணைகள் மூலம் உண்மையை கண்டறிந்தாலும் அவற்றைப் பாவித்து எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் பொதுவானதோர் உடன்பாட்டை ஏற்படுத்த எடுக்கும் முயற்சியே மேலும் கருத்து மோதல்களை உருவாக்கும் என்றே தெரிகிறது.

எனினும் கடந்த காலத்தில் அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதிகளை கவனிக்கும் போது, உண்மையைக் கண்டறியும் பொறிமுறையைப் பற்றியும் பெரிதாக எதிர்ப்பார்ப்புகளை வைத்திருப்பதில் பயனில்லை என்றே கூற வேண்டும். அதுதான் இதுவரை கண்டறிந்த உண்மையாகும்.