மரபுரிமைகளை பேண யாழில் உண்ணாவிரத போராட்டம்!

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று(16) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் ஆரம்பமானது

தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகள்

1.அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

2.குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

3.இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

4.மட்டு. மயிலத்தனை மடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.

5.போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பாரிய குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாநோன்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு

நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க திறைசேரி தவறியதால், உள்ளூராட்சித் தேர்தல் குறித்து நீதித்துறையே முடிவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான திகதி நிச்சயமற்ற நிலையில் இருக்கும் அதேவேளை தம்மால் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நேற்று தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேர்தலை நடத்துவது குறித்த எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி 25ஆம் திகதி தேர்தல் நடத்தப்படாது என இரண்டாவது தடவையாக உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்ற பொலிஸார் கடும் முயற்சி

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசனி அம்மனை குறிக்கும் நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.

நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பில் பால் அபிசேகம் உருத்திர சேனா அமைப்பினால் செய்யப்பட்டது.

இந்த நிலையில் உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரைணக்கு உள்படுத்தப்பட்டனர்.

உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திர சேனா அமைப்பினர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு அனுமதியுமின்றி அமைக்கப்பட்ட நாகபூசனி அம்மனின் சிலையை அகற்ற தீவிர நடவடிக்கையில் யாழ்ப்பாணம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, குறிகாட்டுவான் இறங்குதுறையில் வைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்த அரச மரத்தை கடற்படையினர் திறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பினை வெளியிட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் உரிமைகளை முக்கியமானவையாக பெறுமதிமிக்கவையாக பைடன் நிர்வாகம் கருதினால் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு பைடன் நிர்வாகம் தெளிவான செய்தியை தெரிவிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மனித உரிமையின் அனைத்து அளவுகோல்களிலும் தோல்வியடைந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் உரிமைகள் மிக முக்கியமானவை என பைடன் நிர்வாகம் கருதினால் இந்த சட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்படவேண்டும் அல்லது முற்றாக கைவிடப்படவேண்டும் என்ற செய்தியை ஜனாதிபதி ரணில்விக்கிரமசி;ங்க அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு தசாப்தகாலமாக சிறுபான்மையினத்தவர்களையும் தன்னை விமர்சிப்பவர்களையும் தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து பைடன் நிர்வாகமும் அமெரிக்க காங்கிரசும் அமைதியாகயிருந்தால் அது மாற்றுநிலைப்பாடுடையவர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திறனை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ள நாஸ் பல தசாப்தகாலங்களாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல்கொடுத்துவந்துள்ள இலங்கையின் சிவில் சமூகத்தை அவமதிக்கும் செயலே உத்தேச சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அல்லது மோசமான சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் அதிகாரிகள் உத்தேச சட்டத்தை கொண்டுவரவில்லை மாறாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்குவைத்து அவர்களை மௌனமாக்கும் நோக்கத்துடனேயே இந்த உத்தேச சட்டம் கொண்டுவரப்படுகின்றது எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தை இலக்கினை ஆரம்பிக்கவுள்ளது – பாரிஸ் கிளப்

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தை இலக்கினை ஆரம்பிக்கவுள்ளதாக பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், ஜப்பான், இந்திய நிதி அமைச்சர்கள் மற்றும் இலங்கையின் தலைவர், பிரதிநிதிகள், கடன் வழங்குநர்கள் என பலரும் கலந்துக்கொண்டு இந்த பேச்சுவார்த்தை தளத்தினை அமைத்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை(12.04.2023) பாரிஸ் கிளப் தெரிவித்திருந்தது.

இதற்கமைய கடன் வழங்கும் குழுக்கள் எதிர்கால கடன் நிவாரண ஒப்பந்தத்திற்கான விதிமுறைகள் பற்றியும் பேசப்பட்டு வருகின்றது.இதேவேளை நியாயமான சுமை பகிர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் மறுசீரமைப்பின் ஒப்பீடு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க விரும்புவதாக பாரிஸ் கிளப் அறிவித்துள்ளது.

மேலும் இச்செயற்பாட்டில் பொதுத்துறை கடன் வழங்குநர்களும் வரவேற்கப்படுகிறார்கள் என பாரிஸ் கிளப் அழைப்பு விடுத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

90 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன

எதிர்வரும் 19ஆம் திகதியன்று ஏல விற்பனையினூடாக 90 மில்லியன் ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91நாட்களில் முதிர்வடையும் 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்திற்கு விடப்படவுள்ளன.

மேலும் 364 நாட்களில் முதிர்வடையும் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஏற்பாடுகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட மாட்டாது

ஏற்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகள் பூர்த்தியாகும் வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி மீண்டும் அறிவிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், இப்போது பேச யாரும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் உலக ஜனநாயக தினத்தில் நடத்தப்பட எதிர்பார்ப்பு

சர்வதேச இளைஞர் தினம் அல்லது உலக ஜனநாயக தினத்தில உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்விலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய அறிக்கையின் இறுதி வரைவு கையளிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச எல்லைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாற்றங்கள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படுமாயின் தற்போதுள்ள நிலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முதல் இந்திய பிரதமர் நான்தான் என நரேந்திரமோடி பெருமிதம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகனின் டெல்லி இல்லத்தில், தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தப்பட்டது. பிரதமர் மோடி, ஆளுநர்கள் தமிழிசை மற்றும் சிபி ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக எம்எல்ஏ நயினார் நாகரேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது பேச்சை தொடங்கினார். “இந்தியா உலகின் பழமையான ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாயும்கூட. இதற்குப் பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. ஒரு முக்கியமான குறிப்பு தமிழகத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட் 1,100-1,200 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் நாட்டின் ஜனநாயக மதிப்பீடுகள் குறித்த அம்சங்களை வெளிப்படுத்துகின்றன.அங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கிராம சபைக்கான உள்ளூர் அரசியலமைப்பு போன்றது. இதில் பேரவையை எப்படி நடத்த வேண்டும், உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறை எப்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அந்த காலகட்டத்தில், ஒரு உறுப்பினர் எப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று சமீபத்தில் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை குறிப்பிடும் விதமாக பேசினார்.

தொடர்ந்து, “ஒரு நாடாக, இந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது நமது பொறுப்பு, ஆனால் இதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும், இப்போது எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “உலகின் பழமையான மொழி தமிழ் என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும். சென்னையிலிருந்து கலிபோர்னியா வரை, மதுரையில் இருந்து மெல்போர்ன் வரை, கோயம்புத்தூரில் இருந்து கேப் டவுன் வரை, சேலத்தில் இருந்து சிங்கப்பூர் வரை என உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழர்களை காணலாம். எந்த நாடுகளுக்குச் சென்றாலும், தமிழர்கள் தங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களையும் எடுத்துச் செல்கிறார்கள். அதனால்தான் பொங்கலாகட்டும், புத்தாண்டாகட்டும், தமிழ் பண்டிகைகள் உலகம் முழுவதும் கொண்டாப்படுகின்றன.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பலமுறை பல சாதனை செய்த தமிழர்களை பற்றி பேசி இருக்கிறேன். ஐ.நா. சபையில் தமிழ் மொழியைப் பற்றிக் குறிப்பிட்டேன். தமிழ் இலக்கியமும் அதிகமாக மதிக்கப்படுகிறது. தமிழரின் பண்பு குறித்து தமிழ்த் திரையுலகம் நமக்கு பல படைப்புகளை வழங்கி உள்ளது.

இலங்கையில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த முதல் இந்திய பிரதமர் நான்தான். இலங்கையில் உள்ள தமிழர்கள் உதவிக்காகக் காத்திருந்தனர், எங்கள் அரசாங்கம் அவர்களுக்காக நிறைய செய்தது. நான் யாழ்ப்பாணம் சென்றபோது, அங்கு தமிழர்களுக்காக இந்திய அரசால் கட்டப்பட்ட வீடுகளை ஒப்படைக்கபட்டன. வீட்டில் நுழையும் முன் பால் காய்ச்சும் பாரம்பரிய சடங்கு, அதில் நானும் கலந்துகொண்டேன்.

அதன் வீடியோக்கள் தமிழ்நாட்டில் வெளியானபோது தமிழ் மக்களிடம் இருந்து நான் நிறைய அன்பை பெற்றேன்.எனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற “காசி-தமிழ் சங்கமம்” வெற்றிகரமாக நடத்தப்பட்டது. காசிக்கும் தமிழகத்துக்கும் பழமையான வரலாற்று தொடர்புகள் உள்ளன.

காசி நகரத்தில் உள்ள எந்தப் படகோட்டியிடம் பேசினாலும், அவருக்கு பல தமிழ் வாக்கியங்கள் தெரியும். காசி தமிழ் சங்கமத்தில், ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தமிழ் புத்தகங்கள் வாங்கப்பட்டதும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை நிறுவப்பட்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தமிழகம் மற்றும் தமிழர்கள் குறித்தும் பிரதமர் மோடி நெகிழ்ந்து பேசினார்.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிற்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்குமான சந்திப்பு இலண்டனில் நடைபெற்றது

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிற்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்குமான (ரெலோ) சந்திப்பு இன்று மாலை 13-4-2023 இலண்டனில் உள்ள வெளிவிவகார அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்றது.

இதில் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த ரெலோ செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் (ஜனா) மற்றும் பிரித்தானிய கிளையின் தலைவர் சாம் சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் எதிர்வரும் புரட்டாதி மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் கூட்டத்தில் உள்வாங்க வேண்டிய பல முக்கிய விடயங்கள், பயங்கரவாத தடைசட்டம், தொடர்ச்சியான நில அபகரிப்பு தொல்பொருள்,வன இலாகா, பாதுகாப்பு அமைச்சு ஊடாக வட கிழக்கில் தமிழ் இனத்தின் இனபரம்பலை குறிவைத்து மேற்கொள்ளப்படும் அரசின் திட்டமிட்ட செயற்பாடுகள், கடந்த நாலு வருடங்களாக திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்யபடும் மாகாண சபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், தனது அரசியல் அமைப்பையே மீறி செயற்படும் அரசின் செயற்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் 72 வருடங்களாக இழுத்தடிப்பு செய்யப்படும் தமிழ் இனப்பிரச்சினை, 12 வருடங்களாக எதையுமே அமுல் படுத்தாத UNHRC தீர்மானங்கள், 16 தடவைகள் IMF பரிந்துரைகள் எதையுமே நடைமுறை படுத்தாமல் மீண்டும் 17 வது தடவையாக IMF கையேந்தும் நிலைக்கு சென்ற அரசின் தவறான கொள்கைகளை சுட்டிக்காட்டி இவ்வாறான ஒரு அரசுடன் மூன்றாவது தரப்பு மத்தியஸ்தம் இன்றி அரசியல் தீர்வுக்கான சாத்தியமான அறிகுறிகள் இல்லையெனவும் பிரித்தானியாவை இந்தியாவுடன் இணைந்து இலங்கையில் தமிழ் இனத்திற்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்விற்கான அழுத்தம் கொடுக்க படவேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது.

மேலும் அரசியல் கொந்தளிப்பான நாட்டில் பொருளாதார வளர்ச்சி அடையமுடியாது என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு பதிலாக கிளர்ச்சியை அடக்கவே சர்வதேச நிதிகளை அரசு இயந்திரம் பாவிக்கும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized