வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இளைஞர்கள் மீது தாக்குதல் : ஒருவர் மருத்துவமனையில் : ஒருவர் கைது

மாங்குளம் துணுக்காய் வீதியில் நேற்று சனிக்கிழமை (டிச. 3) சிவில் உடையில் வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இளைஞர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு மேலும் இரு உத்தியோகத்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சமீப காலமாக பல்வேறு பிரதேசங்களில் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தும் ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சி நடவடிக்கையாக நேற்று மாலை மாங்குளம் துணுக்காய் வீதியில், மாங்குளம் நகருக்கு அருகில் உள்ள வீதியினூடாக சென்ற இளைஞரை சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இடைமறித்துள்ளனர்.

குறித்த உத்தியோகத்தர்கள் இளைஞரை சோதனை செய்ய முற்பட்டபோது “நீங்கள் யார்” என்று இளைஞர் கேட்டுள்ளார். அத்தோடு, அதிகாரிகளிடம் பணிக்கான அடையாள அட்டையை காண்பிக்குமாறும் கூறியுள்ளார். எனினும், அதிகாரிகள் தங்கள் அடையாள அட்டையை காண்பிக்க மறுத்துள்ளதாக குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வாக்குவாதத்துக்கு மத்தியில் இளைஞரின் சகோதரரும் அவ்விடத்துக்கு வந்துள்ளார். அவரும் அதிகாரிகளிடம் அடையாள அட்டையை கேட்க, இரு தரப்பினரும் முரண்பட்டுள்ளனர்.

அதன்போது சிவில் உடையில் இருந்த ஒருவர் சிவில் பாதுகாப்பு திணைக்கள அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதன் பிறகும் “வீதியால் செல்பவர்களை சிவில் உடையில் இடைமறித்து சோதனையிட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது” என இளைஞர் கேள்வியெழுப்ப, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வேளை சிவில் உடையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞர், பின்னர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து மாங்குளம் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணைகளை மேற்கொண்டபோது அதிகாரிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இளைஞரின் சகோதரர் தெரிவிக்க, அவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற பொலிஸார், அதிகாரிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்து, இளைஞரின் சகோதரரை கைதுசெய்துள்ளனர்.

அதனையடுத்து இரண்டு அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதலுக்குட்பட்ட இளைஞர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தற்போது கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீருடையின்றி சிவில் உடையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் செயற்பட்டமைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் வந்தால், அவர்கள் தங்களை அடையாளப்படுத்தி சோதனை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும், பொறுப்பின்றி கடமையாற்றும் அதிகாரிகள் மீது உரிய திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மாங்குளம் கற்குவாரி பகுதியில் திணைக்கள சீருடை அணியாத நிலையில், சிவில் உடையில், குறிப்பாக, ஒருவர் (ஜம்பர்) கட்டை காற்சட்டை அணிந்து, கணவர் வீட்டில் இல்லாதபோது மனைவி, பிள்ளைகள் மட்டுமே இருந்த நிலையில், வீட்டுக்குள் நுழைந்து, சோதனையிட்டுச் சென்றுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பல இடங்களில் திருடர்களும் அதிகாரிகள் என பொய் கூறி வீடுகளுக்குள் புகுந்து, பொருட்களை திருடிச் சென்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரிகள், தங்களது பணியாளர்களை உரிய அடையாளப்படுத்தலுடன் கடமைகளில் ஈடுபட பணிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவீரர் நாளும் மாற வேண்டிய உத்தியும்

“ஒப்பீட்டளவில் மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்து, கடந்த 13 ஆண்டுகளில் அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையை அரசாங்கம் இம்முறை கடைப்பிடித்தது என்பதில் சந்தேகம் இல்லை”

“விடுதலைப் புலிகளின் காலத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு சற்றும் சளைக்காத வகையில், சில இடங்களில் அதனை விட சிறப்பான முறையில் இம்முறை நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன”

கடந்த வாரம் இதே நாள் வடக்கு, கிழக்கு முழுவதும், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளால் நிரம்பியிருந்தது.

மாவீரர் துயிலும் இல்லங்கள், சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடங்கள் என, தமிழர் தாயகப் பகுதிகளில் சுமார் 50இற்கும் அதிகமான இடங்களில், பெரியளவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாவீரர் நாளின் உச்சக்கட்ட நிகழ்வு, மாலை 6.05 மணி தொடக்கம், 6.07 மணி வரை இடம்பெறும் நிகழ்வு தான்.

ஒரு நிமிடம் மணியொலி, ஒரு நிமிட அகவணக்கம், அதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் மற்றும் ஈகச்சுடர்கள் ஏற்றப்படுதல்.

இந்த நிகழ்வுக்காக தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள துயிலுமில்லங்கள் மற்றும் நினைவிடங்கள் ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் மாவீரர் நாள் என்பது மிகப் பெரியளவிலான ஏற்பாடுகளுடன், இடம்பெறும் ஒன்று.

தீபம் ஏற்றும் நேரத்தில் ஒவ்வொரு துயிலுமில்லத்தை நோக்கியும் ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுப்பது வழமை.

விடுதலைப் புலிகள் 1989ஆம் ஆண்டில் இருந்து, இதற்கான ஒழுங்கமைப்பு நடைமுறைகளை படிப்படியாக வகுத்துக் கொண்டனர்.

விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான காலகட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இருந்த போது, மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு எந்த அனுமதியும் இருக்கவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில், இத்தகைய நிகழ்வுகளை தடுக்கும் முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டன. அதனையும் தாண்டி நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

நல்லாட்சி அரசின் காலத்தில் ஓரளவுக்கு நீக்குப் போக்கான அணுகுமுறை காணப்பட்டது. அதனால் துயிலுமில்லங்களில் தீபம் ஏற்றும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆனால் இந்தமுறை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், விடுதலைப் புலிகளின் பெயர்களைப் பயன்படுத்தாத வகையில், நினைவேந்தல்களை முன்னெடுக்கத் தடையில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தது.

சில இடங்களில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், தலையிருக்க வால் ஆடியது போல, அங்காங்கே, தங்களின் அடாவடித்தனங்கள், கைவரிசையைக் காட்டியிருந்தனர்.

ஆனாலும் ஒப்பீட்டளவில் மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்து, கடந்த 13 ஆண்டுகளில் அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையை அரசாங்கம் இம்முறை கடைப்பிடித்தது என்பதில் சந்தேகம் இல்லை.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் உரையாற்றிய போது இந்த அணுகுமுறையை வரவேற்றிருந்தார். இதனை ஒரு நல்லெண்ண சமிக்ஞை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நினைவேந்தல் உரிமை தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுவது குறித்து கடந்த பல ஆண்டுகளாகவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும், வேறு பல அரங்குகள், அறிக்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

தமிழர்கள் இழந்த தமது உறவுகளை நினைவுகூரும் உரிமையை அனுவிக்கும் நிலை இருக்க வேண்டும் என்றும் அதனை அரசாங்கம் பறிக்க கூடாது என்றும், சர்வதேச அளவில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதுவரை காலமும் அதற்கு மசிந்து கொடுக்காத அரசாங்கம் இந்த முறை ஒரு வித்தியாசமான முடிவை எடுத்திருக்கிறது.

இந்த நிலையில், தமிழர் தாயகம் எங்கும் மாவீரர்களுக்காக சுடர் ஏற்றவும் அஞ்சலி செலுத்தவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் துயிலுமில்லங்களுக்கு சென்றிருந்தனர்.

அத்தருணம் உணர்வுபூர்வமான ஒன்று. அதனை வார்த்தைகளால்- எழுத்துக்களால் வர்ணிக்க முடியாது. அத்தகைய இடங்களில் நேரடியாக தரிசனம் செய்தவர்களுக்கு அந்த உண்மை இலகுவாகப் புரிந்து விடும்.

வாருங்கள் என்று யாரும் அழைக்கவில்லை. வீடுகளுக்கு வாகனங்களை அனுப்பி ஆட்களையும் திரட்டவில்லை.

ஆனாலும் மாலைப் பொழுதில், குழந்தைகள் தொடக்கம், முதியவர்கள் வரை, துயிலுமில்லங்களை நோக்கித் திரண்டு சென்றனர்.

மாவீரர்களுக்கு உணர்வு ரீதியாக ஒன்றித்திருந்து அஞ்சலித்து விட்டு வெளியேறிச் சென்றனர். எல்லாமே அமைதியாக நடந்தேறின.

இதனை ஒழுங்கமைக்க விடுதலைப் புலிகள் இருக்கவில்லை. அவர்களால் வழிநடத்தப்படவும் இல்லை.

எல்லாவற்றையும் அந்தந்தப் பகுதி மக்களே பார்த்துக் கொண்டனர். அவர்களே துயிலுமில்லங்களை துப்புரவாக்கி, அலங்கரித்து. அந்த நாளுக்காக தயார்படுத்தினர். ஒழுங்கமைப்புகளையும் செய்து நிறைவேற்றினர்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு சற்றும் சளைக்காத வகையில், சில இடங்களில் அதனை விட சிறப்பான முறையில் இம்முறை நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன.

இந்தமுறை மாவீரர் நாளும் அதற்காக திரண்ட தமிழ் மக்களும், இலங்கை அரசாங்கம் தனது கடந்த கால உத்திகளை மறு ஆய்வு செய்து கொள்வதற்கும், எதிர்கால அணுகுமுறைகளை வகுத்துக் கொள்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை மறுக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தடயங்களே இருக்க கூடாது என்று, எல்லா துயிலுமில்லங்களும் அழிக்கப்பட்டு, பல இடங்கள் படைத்தளங்கள் ஆக்கப்பட்டன.

நினைவேந்தியவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிடித்து நீண்டகாலம் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இவற்றையெல்லாம், தாண்டி விடுதலைப் புலிகள் இல்லாத – அவர்கள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக, அவர்களின் இலட்சியம் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டதாக, அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்குப் பின்னரும் மாவீரர் நாள் என்பது தமிழர்களால் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கின்ற ஒரு நாளாக போற்றப்படுகிறது.

இந்த நாளை தமிழர்களின் மனங்களில் இருந்து மறைக்கின்ற ஒட்டுமொத்த முயற்சியும் தோல்வியடைந்து விட்டது என்பதை இது உணர்த்தியிருக்கிறது.

இதற்கு மேலும், மாவீரர் நாள் போன்ற நினைவேந்தல்களைத் தடுப்பது பயனற்ற உத்தி என்பதை அரசாங்கமும், அதன் கருவிகளும் உணர்ந்து கொள்ளாவிட்டால், இனி எப்போதும் அவர்களால் அந்த புரிந்துணர்வுக்கு வர முடியாது.

மாவீரர் நாளுக்குத் தடைகளை ஏற்படுத்தி, குழப்பி வந்ததன் மூலம், அரச படைகள் தான், தமிழ் மக்களில் இருந்து விலகிச் சென்றனரே தவிர, விடுதலைப் புலிகளோ, மாவீரர்களோ அல்ல.

மாவீரர்களின் நினைவுகளை இல்லாமல் செய்வது சாத்தியமற்றதென உணருகின்ற போது, அதனை சரியாக கையாளுவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

அவ்வாறு செய்வது புத்திசாலித்தனமானது. இனங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை தோற்றுவிக்க உபயோகமானதாக இருக்கும்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடக்கி ஒடுக்கி விட முடியாது என்பதும் இதன் மூலம் இடித்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்குள் இன்னமும் விடுதலை நெருப்பு அணையவில்லை. அந்த நெருப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது முக்கியம்.

இதனை தீபமாகவும் பயன்படுத்தலாம், தீப்பந்தமாகவும் மாற்றலாம்.

அரசாங்கம் தமிழர்களுக்கான உரிமைகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுப்பது தான், எல்லா தரப்பினருக்கும் சாதகமான யதார்த்தபூர்வான அணுகுமுறையாக இருக்கும்.

மாறாக, கடந்த 13 ஆண்டுகளாக நினைவேந்தல்கள் தொடர்பாக கடைப்பிடிக்கப்பட்ட உத்திகளைப் போல, இனியும் தொடரும் நிலை ஏற்பட்டால், அது பாதகமான விளைவுகளையே தோற்றுவிக்கும்.

தமிழர் மக்களை அரவணைத்துச் செல்லும் போக்கை அரசாங்கம் கடைப்பிடிக்க விரும்பினால், மாவீரர் நாள் போன்று எல்லா விடயங்களிலும் புதிய அணுகுமுறைகளையும் சிந்தனைகளையும் வகுத்துக் கொள்ள வேண்டும்.

அது சிங்களத் தலைவர்கள் மீது தமிழ் மக்கள் நல்ல பிப்பிராயத்தைக் கட்டியெழுப்பவும் உதவும்.

-சத்ரியன்

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் ஒற்றுமையாக செயற்படுவது அவசியம் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

இனப்பிரச்சினை தீர்வுக்கு தற்போது அனைவரும் இணக்கம் தெரிவித்துத்துள்ளதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தரப்பினர் ஒற்றுமையாக செயற்படுவது அவசியமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (டிச. 03) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் காலம் காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு எந்த அடிப்படையில் தீர்வு எட்ட முடியும் என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் குறிப்பிட்ட வகையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறுமா ? என்பதை அறியவில்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி சபையில் இருந்த அரசியல் கட்சி தலைவர்களிடம் வினவிய போது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டார்கள்.

13 பிளஸ் இணக்கம் தெரிவித்தார்கள். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை  முழுமையான அதிகாரங்களுடன் பகிரக்கப்பட வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாக உள்ளது.

அதிகாரங்களுடன் மாகாண சபை செயல்படும் போது எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அனைத்து மாகாணங்களுக்கும் முழுமையாக அதிகாரங்கள் உரித்துடையதாக்கப்பட வேண்டும்.  இனப்பிரச்சினை என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரதான விடயம்.

இனப்பிரச்சினைக்கு தீர்வுக்கு அனைவரும் இணக்கம் தெரிவித்துத்துள்ளதை தமிழ் தரப்பினர் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போது இளம் தலைமுறையினர் இனம்,மதம் பேதம் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். ஆகவே அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள எமது புலம்பெயர் உறவுகளை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைக்கிறார்கள். புலம்பெயர் அமைப்புக்கள் முதலீடு செய்ய வேண்டுமாயின் வங்கிக் கட்டமைப்பு சில விடயங்களை  திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

வட – கிழக்கு மாகாண வீட்டுத் திட்டங்களை இடையில் நிறுத்தாமல் முடித்துத் தாருங்கள் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்தை துரிதமாக நிறைவு செய்ய எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். எமது மக்கள் படும் துன்பம் குறித்து கரிசனை கொள்ளுங்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

எவ்வித திட்டமிடலும் இல்லாத வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தினால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

இடைநிறுத்தப்பட்டுள்ள நிர்மாண பணிகள் மீள ஆரம்பிக்கப்படும்.புதிய வீடமைப்பு திட்டங்கள் ஏதும் ஆரம்பிக்கப்படமாட்டாது என வீடமைப்புத்துறை அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  சனிக்கிழமை (டிச. 03) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நல்லாட்சி அரசாங்கத்தில் நன்மை என்று கருதி செய்த விடயங்களில் வீட்டுத்திட்டம் உரிய இலக்கை அடையவில்லை. வீட்டுத்திட்டம் சிறந்ததாக அமைந்திருந்தால் இன்று ஏழ்மை நிலையில் வாழும் மக்கள் நன்மை அடைந்திருப்பார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அறிமுப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் ஏழ்மையில் வாழந்த மக்கள் இன்று மென்மேலும் பாதிக்கப்பட்டு, வங்கி கடனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வீட்டுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியுதவி இதுவரை முழுமையாக மக்களுக்கு கிடைக்காததால் மக்கள் அரைகுறை குடியுறுப்புக்களுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை பிறிதொரு அரசியல் கொள்கை கொண்ட கட்சி ஆட்சிக்கு வரும் போது அந்த அபிவிருத்தி திட்டத்தை கண்டு கொள்வதில்லை.

வீட்டுத்திட்ட கடனால் பெரும்பாலானோர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள். பலர் சொல்லனா பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ஒரு அரசாங்கம் எடுத்த செயற்திட்ட அபிவிருத்தி பணிகளை தொடர கூடாது என்ற நிலைப்பாடு அரசுகளுக்கு இருக்க கூடாது. வீட்டுத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன தீர்வு, நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியாக உள்ளார் என்றார்

பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் மாத்திரமே தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்துவோம் – ஜீவன்

ஹொரண பிளாண்டேஷன் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் போராட்டத்தை நிறுத்தலாம் என யாரும் நினைக்கவேண்டாம்.

அடுத்த வாரம் இடம்பெறும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் மாத்திரமே தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்துவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஹொரண பிளாண்டேஷனில் இடம்பெற்றுவந்த பல்வேறு தவறுகள் இடம்பெற்று வந்தன, அதனை நாங்கள் முன்சென்று பேசியும் நடவடிக்கை எடுக்காததால் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றாேம்.

இதுதொடர்பாக அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றது. பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவோம். இந்த தோட்டத்தில் பிரச்சினைக்கு பிரதான காரணம், அந்த பிரதேசத்தில் 25குடும்பங்கள் இருக்கின்றன.

அந்த குடும்பங்கள் அங்குள்ள தரிசு நிலங்களில் விவசாயம் செய்துவந்தனர். இவர்களில் 5குடும்பம் தோட்டத்தொழிலாளர்கள். ஏனையவர்கள் இவர்களின் பிள்ளைகள். இவ்வாறான நிலையில் அந்த பிரதேசத்தில் வெளியாளர்கள் விவசாயம் செய்வதாக தோட்ட முகாமையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு வெளியாட்கள் யாரும் இல்லை. தோட்டத்தில் பிறந்து, வளர்ந்தவர்களே அங்கு இருக்கின்றனர். பல்வேறு தோட்டங்களில் இவ்வாறு தோட்டங்களில் பிறந்து வளர்ந்தவர்களை வெளியாட்கள் என ஒதுக்கி, அவர்களை மிருகங்களைவிட மோசமான முறையில்  நடத்திவருகின்றன.

இந்த மக்கள் விவசாயம் செய்த இடங்கள் பவவந்தமாக பறிக்கப்பட்டுள்ளன. என்றாலும் தொழில் அமைச்சருடன் கலந்துரையாடி அதனை மீள பெற்றுக்கொடுத்தோம்.

அத்துடன் ஹொரண பிளாண்டேஷன் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக துரைமார்களுடன் கலந்துரையாட முற்பட்டபோதும் அவர்கள் அதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. ஆனால் தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்தாவிட்டால் பொலிஸில் முறைப்பாடு செய்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று, தொழிற்சங்க போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு சிவில் உடையில் வந்த சிலர் அங்கு இருந்துள்ளனர். அவர்கள் யார் என விசாரித்தபோது குற்றப்புலனாய்வு விசேட பிரிவு என தெரிவித்துள்ளனர்.

இன்று பாடசாலைகளில் ஐஸ் பாேதைப்பொருளை தடுப்பதற்கு முடியாத இவர்கள், தொழிற்சங்க போராட்டத்தை தடுப்பதற்கு அங்குவந்து, தொழிலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும்.

அத்துடன் ஹொரண பிளாண்டேஷன் ஹெலீஸ் நிறுவனத்துக்கு கீழ் இருப்பதாகும். இதன் உரிமையாளர் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவாகும். நாட்டை பாதுகாப்பதாக பாராளுமன்றத்துக்கு வந்தவர்.தோட்டத்தொழிலாளர்களை பாதுகாக்க முடியாத இவர் எப்படி நாட்டை பாதுகாப்பார்? அத்துடன் இவர் தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு எதிராக ஹட்டன், நோர்வூட் மற்றும் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்றார். அதேநேரம் ஹொரண பிளாண்டேஷனில் அவர்களின் தொழில் நிறுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம்  தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கி்ன்றனர். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் மாத்திரமே தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்துவோம்.

அத்துடன் ஹொரண பிளாண்டேஷனில் தொழில் புரிந்துவரும் சிவகுமார் என்பவர் மின்சாரம் தாக்கி, கண்டி வைத்தியசாலையில்  அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவருக்கு பதிலளிக்க யாரும் இல்லை. துரைமார் அவரது மனைவியை இரகசியமாக அழைத்து, சிறியதொரு தொகையை தெரிவித்து, இந்த விடயத்தை கைவிடுமாறு தெரிவித்திருக்கின்றார்கள். தோட்டத்தொழிலாளி என்றால் அவ்வளவு கேவலமா என நாங்கள் கேட்கின்றோம். இந்த விடயத்தை நாங்கள் விடப்போவதில்லை என்றார்.

தமிழ் தரப்புக்கள் நிபந்தனைகளை விடுத்து, பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்ல வேண்டும் – ஜெஹான் பெரேரா

தமிழ்த் தரப்பின் சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழ்த் தரப்புக்கள் ஒன்றிணைந்த வடக்கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன.

இதுகுறித்து கருத்துவெளியிடும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த அவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளர்.

இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழ்த் தரப்புக்கள பங்கேற்பது மிகவும் முக்கிமானது. ஆனால், பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கு முன்னதாக, இணைந்த வட,கிழக்கு உட்பட சமஷ்டி அடிப்படையிலான தீர்வு என்ற விடயதத்தினை  அத்தரப்பு பிரதானமாக முன்வைத்துள்ளது.

இது, பேச்சுவார்த்தைகளுக்கான நல்லெண்ண சமிக்ஞை வெளிப்பாடுகளை பின்னயைச் செய்வதற்கான முயற்சியாகும்.

ஆகவே,தமிழ்த் தரப்பு இவ்வாறு பகிரங்கமான நிபந்தனைகளை விடுத்து, பேச்சுவார்த்தை மேசைக்குச் சென்று,அதன் பின்னர் சில விடயங்களை முன்வைக்க முடியும்.

அதில் மிக முக்கியமாக, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துதல், 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல், அதற்கு அடுத்தபடியாக, இந்தயாவின் முறைமையை பின்பற்றி இறுதித் தீர்வினை காணுதல் உள்ளிட்ட படிநிலைமைகளில் செல்ல முடியும்.

ஏனென்றால், ஆரம்பத்திலேயே தென்னிலங்கைக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படும் வகையில் தமிழ்த் தரப்பு நிபந்தனைகளை விதித்தால்,அது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தும். அதேநேரத்தில் ஆட்சியில் உள்ள தரப்பினரும், ஆதரவினை விலக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமில்லை.

ஆகவே, பேச்சுக்களை ஆரம்பிக்கும்போது, கடுமையான விடயங்களை முன்வைப்பதான, ஏற்கனவே ஒற்றையாட்சி முறைமை என்றால் சந்தேகப்படும், தமிழர்களும், சமஷ்டி என்றால் தென்னிலங்கை சிங்களவர்களுக்கும் கடுமையான எதிர்ப்போக்கான நிலைமையே உள்ளது.  எனவே, அவ்விதமான சூழுல் உருவாகுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் நாடாளுமன்றுக்கு – சுசில் பிரேமஜயந்த

பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்னும் இரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு பதிலளித்தார்

சபாநாயகர் தலைமையில் சனிக்கிழமை (03) நாடாளுமன்ற அமர்வு கூடிய போது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளின் பிரதம கோலாசான் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்களின் அபிலாசைக்கு முரணாக அரசாங்கம் செயற்படுவதாக குறிப்பிடுவதை ஏற்க முடியாது.போராட்டத்தின் ஊடாக மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் அரசியலமைப்பின் பிரகாரம் நிறைவேற்றப்பட்டுள்ளன.நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்காக நாடாளுமன்ற மட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் தேசிய சபை, துறைசார் மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன்,புதிதாக மூன்று விசேட தெரிவுக் குழுக்களை அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார மறுசீரமைப்புக்காக நடைமுறையில் இருந்த சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.சமூக கட்டமைப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் விசேட தேவையுடையவர்களுக்கான சட்டம்,ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டங்கள் காலத்தின் தேவைக்கமைய திருத்தம் செய்யப்படவுள்ளன.

பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இயற்றுவதற்கான சட்டமூலம் இன்னும் இரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்றார்.

7 புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம்

7 புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2022ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருதுவதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அமைப்புகளில் குறித்த 7 அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஏழு அரசியல் கட்சிகள் வருமாறு

1. ஐக்கிய காங்கிரஸ் கட்சி
2. இரண்டாவது தலைமுறை
3. ஶ்ரீ லங்கா சமூக ஜனநாயகக் கட்சி
4. நாட்டுப்பற்றாளர் ஐக்கிய தேசியக் கட்சி
6. மக்கள் அறிவுசார் முன்னணி
7. ஈரோஸ் ஜனநாயக முன்னணி
3. ஜனநாயக மக்கள் காங்கிரஸ்

கடந்த நவம்பர் 28ஆம் திகதி கூடிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்ட முடிவு எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இதுவரை இலங்கையில் 79 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்ட 7 அரசியல் கட்சிகளுடன் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.

ஜனவரியில் இருந்து இணையத்தின் மூலம் கடவுச்சீட்டு விநியோகம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இணையத்தின் மூலம் கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.

திட்டத்தின் மூலம், ஒரு விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை வீட்டில் இருந்தபடியே திணைக்களத்துக்குச் சமர்ப்பிக்க முடியும்.

கைரேகை போன்ற விடயங்களுக்காக மாத்திரம் விண்ணப்பதாரர் திணைக்களத்துக்கு வரவேண்டியிருக்கும்.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கைரேகைகளைப் பெறுவதற்காக 50 முகப்பு அலுவலக மையங்களை நிறுவ திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 50 பிரதேச செயலக அலுவலகங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சம்பிக்க ராமவிக்ரம தெரிவித்துள்ளார்.

சுற்றுலா வீசாவில் ஆட்களை அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமங்களுக்குத் தடை

சுற்றுலா வீசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமையாளர்களின் உரிமம் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

டொலர்கள் இன்றி உண்டியல் வடிவில் பணத்தை கொண்டு வந்த பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழில்துறை அமைச்சின் வரவு – செலவுத் திட்டம் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.