மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான 2வது அபிவிருத்திக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான இரண்டாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று (04) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இராசமாணிக்கம் சாணக்கியன், கிழக்கு மாகாண பிரதம செயலார் ஆர்.எம்.பீ.எஸ். ரத்னாயக ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

குறிப்பாக இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான இரசாயன மற்றும் சேதன உரத்தினை விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இதன்போது கடந்த ஆண்டில் மாவட்டத்தில் மெற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும் இம்மாவட்டத்தின் பொருளாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், மாவட்ட பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பு பிரதானிகள், பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் மோசடியில் ஈடுபட்டவர்களை கூட தெரிவு செய்வார்கள் – தேர்தல் ஆணையாளர்

அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் திலினிபிரியமாலியை கூடதெரிவு செய்வார்கள் என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள்; மிகவும் குறைந்தளவு அரசியல் அறிவை வெளிப்படுத்துகின்றார்கள் அரசியல் அறிவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் மிகவும் குறைந்தளவு அரசியல் விழிப்புணர்வு காணப்படுவதால் மோசடி சந்தேகநபர் திலினி பிரியமாலி போன்றவர் கூட நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார்.

பிரியமாலி நாளை தேர்தலில் போட்டியிட்டால் என்ன நடக்கும் ஆம் அவர் வெற்றி பெறுவார் நாட்டின் நிலைமை அவ்வளவு மோசமானதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் அறிவு அல்லது விழிப்புணபுர்வு என்பது மிகவும் மோசமானதாக காணப்படுகின்றது,இதனை உயர்த்துவதற்கு அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான அரசியலமைப்பு மாற்றங்களை கொண்டுவருவதற்கான பொருத்தமான நபர்களை மக்கள் தெரிவு செய்வதற்கு மக்கள் அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களாக இருக்கவேண்டும்,இதனை மாற்றாமல் எங்களால் ஊழல்மோசடி நிறைந்த அரசியல் முறைமையையோ அல்லது சமூகத்தையோ தெரிவு செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மொடல்கள் நடிகர் நடிகைகள் பாடகர்கள் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலமானவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் அவர்களிற்கு அதிக வாக்குகளை வழங்குகின்றனர் சிறைச்சாலையிலிருந்து விடுதலையான நபர் ஒருவர் விடுதலையான பின்னர் தேர்தலில் போட்டியிட்டால் அவர் அதிக வாக்குகளை பெறும் வாய்ப்புள்ளது எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குரங்கம்மை நோய் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவுரை

நாட்டில் முதன் முறையாக குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து கடந்த முதலாம் திகதி நாட்டுக்கு வருகை தந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு குரங்கம்மை நோய்க்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

தோலில் பழுக்கள் மற்றும் சோர்வு உள்ளிட்ட நோய் அறிகுறிகள் ஏற்பட்டமையால் , சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த இளைஞன் தேசிய பாலியல் நோய் சிகிச்சை பிரிவிற்குச் சென்றுள்ளார். இதன் போது இளைஞனுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் , அவரது மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனைகளில் இளைஞன் குரங்கம்மை நோய்க்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் சிகிச்சைகளுக்காக தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு முதலாவது குரங்கம்மை நோயாளர் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் துரிதமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவிக்கையில்,

‘குரங்கம்மை நோய்க்கு உள்ளாகியுள்ள ஒருவருடன் நேரடியாக ஸ்பரிச தொடர்பினை பேணுவதால் மாத்திரமே , இந்நோய் ஏனையோருக்கு பரவும். நோய்க்கு உள்ளானவரின் தோல் பகுதியில் ஏற்படும் பழுக்களிலிருந்து வெளியேறும் திரவம் நோய் பரவுவதற்கு ஏதுவாக அமையும் காரணியாகும். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு காய்ச்சலுடன் உடலில் பழுக்கள் போன்ற அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் துரிதமாக வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்துகின்றோம்.

குறிப்பாக தமது இனப்பெருக்க உறுப்புக்களை அண்மித்த பகுதிகளில் இவ்வாறான பழுக்கள் ஏற்பட்டால் , விரைவில் சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும். இந்நோய்க்கு உள்ளாகுபவர்கள் நோயிலிருந்து முற்றாக குணமடையும் வரை பாலியல் உறவுகளை தவிர்ப்பது அவசியம். எவ்வாறிருப்பினும் இந்நோய் குணப்படுத்தக் கூடியதாகும். இந்நோய் தொடர்பில் நாடு என்ற ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து தொழிநுட்பரீதியில் தீர்மானங்களை எடுக்கப்படும் வரை அநாவசியமாக யாரும் கலவரமடையத் தேவையில்லை.’ என்றார்.

குரங்கம்மை நோய் அறிகுறிகளாக ஆரம்பகட்டத்தில் காய்ச்சலும் , பின்னர் உடற் தோல் பகுதியில் படர் தடிப்புக்கள் என்பன ஏற்படும். இவை இலகுவில் இனங்காணப்படக் கூடிய அறிகுறிகளாகும். இரு பிரதான பிறழ்வுகள் மூலம் இந்த நோய் பரவுகின்றது. குறித்த பிறழ்வுகள் 10 சதவீதம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியவை. இவற்றை பி.சி.ஆர். பரிசோதனை ஊடாக இனங்காண முடியும். அதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏனைய ஆய்வு கூடங்களிலும் காணப்படுகின்றன.

கொவிட் வைரசுடன் ஒப்பிடும் போது , குரங்கு அம்மை வைரஸ் 50 ஆண்டுகள் பழமையானதாகும். எனினும் இது கொவிட் தொற்றை விட குறைவான வேகத்திலேயே பரவக்கூடியது. இதற்கான மருந்துகள் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சின்னம்மை நோய்க்காக பயன்படுத்தப்படும் தடுப்பூசியானது, குரங்கு அம்மை நோய்க்கு எதிராக 85 சதவீதம் சாதகமாக பலன் தரக்கூடியது.

ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளமையின் காரணமாகவே, ஏனைய நாடுகளை பாதுகாப்பு முன்னாயத்தங்களை மேற்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அவசர சுகாதார நிலைமை கடந்த ஜூலை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடலட்டை பண்ணைகளால் வடக்கு மீனவர்கள் பாதிப்பு

போரின் பின்னர் வடக்கு பகுதிகளில் அரச அனுசரணையுடன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றபோதிலும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் எந்தளவு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது குறித்து அவதானம் செலுத்தவேண்டியது அவசியமாகிறது.

விவசாயிகள், மீனவர்கள் உட்பட சிறு கைத்தொழில்களில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் பற்றியும், அந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை என்பதே பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அண்மைக்காலமாக வடக்கில் மீனவர்கள் கடலட்டை பண்ணைகளால் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அரச கட்டமைப்புகளில் முறைப்பாடு அளித்தும், எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வடக்கு மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வடக்கில் உள்ள கடலட்டை பண்ணைகளால் உள்ளூர் மீனவர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. மாறாக, அந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

அங்குள்ள கடலட்டை பண்ணைகளின் பின்னணியில் சீனர்கள் இருப்பதாகவும், அவர்கள் இந்த கடலட்டை பண்ணைகளின் விருத்திக்காக நிதியுதவி செய்வதாகவும் மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அந்த பண்ணைகளில் உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தாமல், வெளியூர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு இந்தப் பண்ணைகள் வழங்கப்படுகின்றன.

அது மாத்திரமன்றி, கடலட்டை பண்ணைகள் அமைந்துள்ள கடல் பகுதிகளுக்கு பிரதேச மீனவர்களை கூட அனுமதிப்பதில்லை எனவும் அப்பகுதி மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அனுமதியற்ற கடலட்டை பண்ணைகளால் அப்பிரதேசத்தில் வாழும் மீனவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், நலிவடைந்துள்ள மீனவர்களுக்கு மென்மேலும் இடையூறுகளை ஏற்படுத்தும் விடயங்களை தடுத்து நிறுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் மீனவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்தீவில் அண்ணளவாக 50 ஏக்கர் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் பவளப்பாறைகள், மீன் இனப்பெருக்கம் செய்யும் இயற்கை வளங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. அப்பிரதேசத்தை விட்டு அங்கு வாழும் மீனவர்களும் வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“இப்பிரதேசத்தில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டால், சிறு மீன்பிடி தொழிலாளர்களாகிய நாம் பிரதேசத்தை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, இப்பிரதேசத்தின் பூர்வீக தொழிலான கடற்றொழிலை மேற்கொண்டு, வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான உரிமையை எமக்கு பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2023 இற்கு முன்னர் காணாமல்போனோர் விசாரணைகள் நிறைவடையும் – நீதியமைச்சர்

அடுத்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிக்கப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் நேற்று நீதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போது, அவர் இதனை தெரவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையும், சட்ட முறைமையை புதுப்பிப்பதற்கு பல புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையும் தூதுவர் பாராட்டினார்.

இலங்கையில் ஊழலைத் தடுப்பதற்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அமெரிக்க தூதுவர் பாராட்டினார். இரு நாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன், இலங்கையில் புதிய அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காகவும், இது தொடர்பில் அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காகவும் அமைச்சருக்கு தூதுவர் தனது நன்றியை தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாடும் சேவைகள் உள்ளிட்ட நலன்புரி திட்டங்களுக்கும் தூதுவர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதன்போது காணாமல் போனவர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிக்கப்படும் என்று நீதியமைச்சர் அமைச்சர், அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

இலங்கையில் முதலாவது குரங்கு அம்மைத் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த முதலாம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கை வந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள நபர் களனி பிரதேசத்தைச் சேர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் குறித்த முழுமையான விபரங்களை அடுத்த சில நாட்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன வெளியிடுவார்

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்,குறிப்பிட்ட பகுதியில் சோதனையை மேற்கொண்டவேளை இது உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் பிற்போட முயற்சிக்கும் ரணில் – திஸ்ஸ விதாரண

மாகாண சபை தேர்தலை காலவரையறையின்றி பிற்போட்டுள்ளதை போன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் பிற்போட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.

திட்டமிட்ட வகையில் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லாவிடின் நீதிமன்றம் செல்வோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தியுள்ளமை அவதானத்திற்குரியது. மாகாண சபைகள் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும். மாகாண சபைகள் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை 2018 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 139 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளுராட்சிமன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக பதவி வகித்த பைஸர் முஸ்தப்பா அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து, அவரும் அறிக்கைக்கு எதிராகவே வாக்களித்தார். இதனை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்லை நிர்ணய மீளாய்வு குழுவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமித்தார்.

3 மாத காலத்திற்குள் மீளாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. மாகாண சபை தேர்தலை நடத்தாமலிருக்க நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த சூழ்ச்சி வெற்றிப்பெற்றது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கத்திற்கமைய மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு எவ்வித தடைகளும் கிடையாது.எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

இவரது கருத்திற்கமைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபிக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கிடையாது.பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழு தொகுதிவாரி முறைமையிலான தேர்தல் முறைமை சிறந்தது என அறிக்கை சமர்ப்பித்துள்ளது,தேர்தல் முறைமையில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கிடையாது,பிரதமர் தினேஷ் குணவர்தன

கடன்களின் ஸ்திரத்தன்மை குறித்த உத்தரவாதத்தை விரைந்து பெறும் முனைப்பில் இலங்கை

பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மை குறித்த நிதியியல் உத்தரவாதத்தை விரைவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இருதரப்புக்கடன் வழங்குனர்களுக்கு இடையிலான தனித்துவமான ஒருங்கிணைவொன்று ஏற்படுத்தப்படுவதைத் தாம் ஊக்குவிப்பதாகத் தெரிவித்திருக்கும் நிதியமைச்சு, தமக்கிடையிலான (இருதரப்புக்கடன் வழங்குனர்களுக்கு இடையிலான) கலந்துரையாடல்கள் மற்றும் தர்க்கங்களைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கூட்டிணைந்த உத்தரவாதத்தை வழங்குவதற்கு ஏதுவான வாய்ப்பை இருதரப்புக்கடன் வழங்குனர்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கம் என்று விளக்கமளித்திருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்ட நிலையில், அதன்மூலமான நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வது அவசியமாகும்.

அதற்கமைய கடன்களின் ஸ்திரத்தன்மை தொடர்பில் கடன்வழங்குனர்களிடமிருந்து உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்வதும், கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதும் இன்றியமையாதவையாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையகால நுண்பாகப்பொருளாதார நிலைவரம், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் மறுசீரமைப்புக்கள், கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி இலங்கை அதன் வெளியகக் கடன்வழங்குனர்களுக்கு விளக்கமளித்திருந்தது.

அதன்போது காண்பிக்கப்பட்ட சுருக்க விளக்கப்படம், கடன்வழங்குனர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் என்பன நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் இலங்கைக்கு பெருமளவான கடன்களை வழங்கிய முதல் 10 நாடுகளின் பட்டியலில் சீனா, ஜப்பான், இந்தியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, கொரியா, ஜேர்மனி, பிரிட்டன், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் காணப்படுவதுடன் மொத்தக்கடன்களில் அவை முறையே (சதவீதங்களில்) 52.0, 19.5, 12.0, 2.9, 2.4, 2.2, 1.4, 1.4, 1.0, 0.9 சதவீதமான கடன்களை வழங்கியிருக்கின்றன.

இக்கணிப்பீட்டின்படி இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு மொத்தமாக 14.1 பில்லியன் டொலர்களை இலங்கை மீளச்செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் கடன்கள் ஸ்திரமற்றநிலையில் காணப்படும் நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்காது என்று வெளியகக்கடன்வழங்குனர்களிடம் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை, எனவே ‘பொதுகடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இருதரப்புக்கடன்வழங்குனர்கள் ஆதரவளிப்பர்’ என்ற நம்பிக்கையை சர்வதேச நாணய நிதியத்திற்கு வழங்கக்கூடியவாறான நிதியியல் உத்தரவாதத்தை வழங்கமுன்வரவேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருக்கின்றது.

அதுமாத்திரமன்றி இத்தகைய நிதியியல் உத்தரவாதத்தை விரைவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு இடையிலான தனித்துவமான ஒருங்கிணைவொன்று ஏற்படுத்தப்படுவதைத் தாம் ஊக்குவிப்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கை, தமக்கிடையிலான (இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு இடையிலான) கலந்துரையாடல்கள் மற்றும் தர்க்கங்களைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கூட்டிணைந்த உத்தரவாதத்தை வழங்குவதற்கு ஏதுவான வாய்ப்பை இருதரப்புக்கடன்வழங்குனர்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கம் என்றும் விளக்கமளித்திருக்கின்றது.

அத்தோடு இந்த உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தமது அனைத்து இருதரப்புக்கடன்வழங்குனர்களுடனும் சர்வதேச நிதிவழங்கல் கட்டமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருவதாகவும் இலங்கை தெரிவித்திருக்கின்றது.

செயற்பாடுகளின்றி இருக்கும் பொருளாதார மத்திய நிலையங்களை செயற்படுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை பிரதேச விவசாயிகளும் மக்களும் நன்மையடையும் வகையில் செயற்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தினை இன்று (03.11.2022) மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் தொடர்புபட்ட அதிகாரிகளுடன் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் புதிதாக 200 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள 20 கடைகளைக் கொண்ட பொருளாதார மத்திய நிலையத்திற்கான நிர்வாகத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் உருவாக்குவதுடன், எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிக்கைக்கான வியாபார செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் அதனைத் திறந்து வைப்பதற்கு தீர்மானிக்கப்ட்டுள்ளதுடன், அதற்கு முன்னர் பூரணப்படுத்தப்பட வேண்டிய வேலைகளையும் பூர்த்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர், சந்தையின் தற்போதைய நிலைவரங்கள் நேரடியாக பார்வையிட்டனர்.

அதன்பின்னர், குறித்த சந்தைத் தொகுதியை சிறப்பாக செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, கிராமிய பொருளாதார அமைச்சும் கரைச்சி பிரதேச சபையும் இணைந்து அனைத்து தரப்பினரும் நன்மையடையும் வகையில், கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான, பொறிமுறையை வகுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கரைச்சி பிரதேச சபையின் எதிர்பார்ப்புக்களை ஒருவார காலத்தினுள் சமர்ப்பிப்பதற்கு பிரதேச சபையின் தலைவர் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு வாரங்களில் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை செயற்படுத்துவதற்கான தீர்மானகரமான கூட்டத்தை கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையமானது 40 கடைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் சந்தையின் அமைவிடம், போக்குவரத்து குறைபாடு, பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தையில் மொத்த வியாபாரமும் மேற்கொள்ளப்படுகின்றமை உட்பட பல்வேறு காரணங்களினால், பொருளாதார மத்திய நிலையத்தினால் உரிய பலனை பெறமுடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.  இந்நிலையிலேயே இன்றைய கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்கள் குழப்பகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்-கவிஞர் காசி. ஆனந்தன்

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்த பின் இலங்கை அரசாலும் அதனோடு சேர்ந்தியங்கும் தமிழ் அரசியலாளர்கள் மற்றும் இலங்கை அரச புலனாய்வாளர்களுடன் சேர்ந்தியங்கி வருபவர்களாலும் மக்கள் பல குழப்பகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவரும் உணர்ச்சி கவிஞருமான காசி. ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை,