வெலிக்கடை தியாகிகள் தினம் ரெலோ யாழ் மாவட்ட அலுவலகத்தில் நினைவுகூரல்!

வெலிக்கடை சிறையில் உயிரிழந்த குட்டிமணி தங்கத்துரை உள்ளிட்டவர்களின் 38 ஆம் ஆண்டு தேசிய வீரர்கள் தினம் நிகழ்வு யாழ் மாவட்ட ரெலோகட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 38வது தேசிய வீரர்கள் தினம் நிகழ்வு இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினரும்,யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் முன்னணிப் போராளிகளான தேவன், நடேசுதாசன், குமார், சிவபாதம், சிறிக்குமார், மரியாம்பிள்ளை,குமாரகுலசிங்கம் உள்ளிட்ட வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட 53 அரசியல் கைதிகளின் நினைவுத தினம் இன்று அக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் சுடரேற்றி மலர் தூவி, மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் நிரோஷ்,ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்,தலைமை குழு உறுப்பினரும் பொருளாளருமான விந்தன்,யாழ் மாநகரசபையின் பிரதி முதல்வருமாகிய ஈசன்,நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளரும்,யாழ் மாவட்ட இளைஞர் அணி தலைவருமாகிய ஜெய்கரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற தவிசாளர்கள், உப தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் சுகாதார முறைப்படி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நாட்டில் இறுதி தமிழன் இருக்கும் வரையில் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வுகள் நடந்தேயாகும் ரெலோ மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் சத்தியசீலன்

தடைகள் மூலம் எமது நினைவுகளைத் தடுத்துவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால் இந்த நாட்டில் இறுதி தமிழன் இருக்கும் வரையில் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வுகள் நடந்தேயாகும் என மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய வீரர்கள் தினம் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்திய சீலன் தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 38வது தேசிய வீரர்கள் தினம் நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வருமாகிய க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேசசபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், போரதீவுப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் க.ரஜனி, மட்டக்களப்பு மாசகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட அளவினர் கலந்து கொண்டனர்.

1983ம் ஆண்டு ஜுலைக் கலவரத்தின் போது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கதுரை மற்றும் தளபதி குட்டிமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் உட்பட படுகொலை செய்யப்பட்டிருந்த 53 அரசியற் கைதிகளையும் நினைவுகூரும் முகமாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் ஜுலை 25 தொடக்கம் 27 வரையில் தேசிய வீரர்கள் தினமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வினை நடாத்துவதற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோருக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் பங்குபற்றுதல் இல்லாமல் மேற்படி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன் போது பிரதேச சபைகளின் தவிசாளர்களினால் குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறுப்பினர்களால் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது மாநகர பிரதிமுதல்வர் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது இனத்தின் விடுதலைக்காக, எமது தமிழ் மக்களுக்காக இன்னுயிரைக் கொடுத்த எமது தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது கடந்த காலங்களில் எவ்வித தடங்கலும் இன்றி மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தினால் தமிழர்கள் தொடர்பான எவ்வித நிகழ்வுகளையும் நடாத்த அனுமதிக்கவில்லை. எமது பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் கட்சியின் உபதலைவர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோருக்கு இந்நிகழ்வினை நடாத்துவதற்கு நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கட்சியின் பிரதிநிதிகளாகிய எம்மால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படுகின்றது.

நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் கொவிட் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பேணி இந்நிகழ்வினை நாம் நடாத்துகின்றோம்.

தடைகள் மூலம் எமது நினைவுகளைத் தடுத்துவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால் இந்த நாட்டில் இறுதி தமிழன் இருக்கும் வரையில் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வுகள் நடந்தேயாகும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

மன்னாரில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளுக்கு இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள், அக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன், ஈ.பி.ஆர்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

வெலிக்கடை தியாகிகள் தினம் முல்லைத்தீவில் நினைவுகூரல்!

வெலிக்கடை சிறையில் உயிரிழந்த குட்டிமணி தங்கத்துரை உள்ளிட்டவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ரெலோகட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இன அழிப்பை தொடர்ந்து ஜூலை 25, 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறச்சாலைக்குள் நடைபெற்ற படுகொலைகளில் உயிரிழந்த குட்டிமணி தங்கத்துரை உள்ளிட்ட 53 அரசியல் கைதிகள் படுகொலை செய்ததன் 38வது நினைவு தினம் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் 38வது கருப்பு ஜூலை , வெலிக்கடை படுகொலை நினைவுதினம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர்களின் படத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம்,முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.

Posted in Uncategorized

படுகொலை செய்தவர்களை மீண்டும் படுகொலை செய்கிறது கோட்டாபய அரசாங்கம் ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு இலங்கை அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் 1983 யூலை மாதம் 23 திகதியில் இருந்து 27 வரை நான்காயிரத்திற்கு அதிகமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

வெலிக்கடைச் சிறையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட விடுதலைப் போராளிகள் உள்ளிட்ட 53 பேர் வெட்டியும் கொத்தியும் படுகொலை செய்யப்பட்டு கைதிகளின் உடல் உறுப்புக்கள் வெட்டப்பட்டு காடையர்களால் புத்த பிரானுக்கு படைக்கப்பட்டன. கைதிகளின் குருதியை காடையர்கள் குடித்து கூத்தாடினர்.

இதனை கறுப்பு யூலைப் படுகொலை என்ற பெயரில் 37 ஆண்டுகளாக சுவர் ஒட்டிகள் ஒட்டி தமிழர் தாயகம் எங்கும் நினைவேந்தப்பட்டு வருகின்றது.

இம்முறை 38 ஆண்டு நினைவேந்தலுக்குகான சுவர் ஒட்டிகள் ஒட்டப்படும் போது தற்போதைய கோட்டாபய அரசாங்கம் இராணுவ இயந்திரத்தை தூண்டி சவர் ஒட்டிகளை கிழித்தும் கழிவு ஒயில் கொண்டு மறைத்தும் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய செயற்பாடுகள் ஏதேச்ச அதிகாரப் போக்குடன் படுகொலை செய்தவர்களை மீண்டும் படுகொலை செய்கின்ற கொடூரமான பாசிச நடவடிக்கையாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காத போதும் அவர்களை நினைவேந்தல் செய்யக் கூட தடுத்தல் அப்பட்டமான மனிதவுரிமை மீறலாகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்க ஆட்சியாளர்கள் நீதி கொடுக்கவே நினைவேந்தல் செய்ய அனுமதியே கொடுக்க தயார் இல்லை என்றால் தமிழ் மக்களுக்கு உள் நாட்டில் திட்டமிட்ட அடக்கு முறைகள் தொடரவுள்ளன என்பது உண்மை.

Posted in Uncategorized

அச்சுறுத்தல்கள் மத்தியிலும் வலி கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்

இராணுவ பிரசன்னம் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இன்று காலை 9 மணிக்கு உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள், பணியாளர்களின் பங்கேற்புடன் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. வெலிக்கடை சிறையில் 1983 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், உட்பட 53 அரசியல் கைதிகளுக்கும் அவ்வேளை படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமாக இரண்டு நிபுடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொது ஈகைச்சுடர் தவிசாளரினால் ஏற்றி வைக்;கப்பட்டு உரை நிகழ்த்தப்பட்டது. அதில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல அவர்களை நினைவு கூர்வதும் இராணுவ மயமாக்கலின் ஊடாக தடை செய்யப்படுகின்றது. இன்றைய தினம் கூட சுகாதார நடைமுறைகளுக்கு முழுமையாக மதிப்பளித்து நினைவேந்தலினை நாம் செய்ய முற்பட்ட போது காலையிலேயே பொலிசார் எமது அலுவலகம் முன்பாக நோட்டமிடுகின்றனர்.

அதுபோன்று இராணுவப் புலனாய்வாளர்கள் அலுவலக வாசலில் காத்து நிற்கின்றனர். இதை அடுத்து பல உறுப்பினர்கள் அச்சத்தின் நிமிர்த்தம் இந் நிகழ்வில் பங்கேற்கவில்லை.
உலகம் அறிந்த கறுப்பு யூலை போன்ற இனவாதத் தாக்குதல்கள் இனியும் தமிழ் மக்கள் மீது முடுக்கிவிடக்கூடாது என்பதற்காகவும் எமது நினைவு கூர்தல் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவும் அனுஸ்டிக்கின்றோம்.

ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் முழுமையான அனுசரனையோடு ஏமுத மக்குள் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையில் மிகக் கெடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். எமது தலைவர்கள் சிறையில் கண்கள் தோட்டப்பட்டு கொல்லப்பட்டனர். தமிழ் மக்களின் சொத்துக்கள் வாக்காளர் இடாப்பில் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இழிக்கப்பட்டன.

இடிப்படையில் இவைகள் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள். இவை போன்று தமிழர் வரலாற்றில் ஏராளமான கொடுமைகள், மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. இவை எதற்கும் 38 ஆண்டுகள் கடந்தபோதும் எமக்கு நீதி வழங்கப்படவில்லை.

இனி நடைபெறாது என்பதற்கும் உத்தரவாதமில்லை என்ற நிலைமையினையே இனத்திற்கு மறுக்கப்படும் நீதி உணர்த்துவதாக ரெலோவின் மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized
Velikkadai Sirai Padukolai

வெலிக்கடை தியாகிகளை நினைவுகூர்ந்த சுவரொட்களைத் ஒட்டுவதை தடுப்பதற்கு யாழில் இராணுவம் கடும் பிரயத்தனம்

வெலிக்கடை சிறைப்படுகொலையினை நினைவு கூர்ந்து சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு இராணுவத்தினர் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்ததுடன் ஏற்கனவே தம்மால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் இனந்தெரியாதவர்கள் கழிவு ஒயில் பூசி வருவதாக ரெலோவின் மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோவின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதாசன், குமார், சிறீக்குமார், மரியாம்பிள்ளை, குமரகுலசிங்கம், உட்பட 53 அரசியல் கைதிகளுக்கும் அவ்வேளை படுகொலை செய்யப்பட்டவர்களையும் அஞ்சலித்து ரெலோ வடக்குக் கிழக்கு பூராகவும் சுவரொட்டிகளை ஒட்டி வருவதுடன் தொற்றுக் காலப்பகுதியைக் கருத்தில் கொண்டு மாவட்ட மட்ட அஞ்சலி நிகழ்வுகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இந் நிலையில் இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் (27) வலிகாமம் கிழக்குப் பகுதியில் உரும்பிராய் பகுதியில் சுவரொட்டி ஒட்டியபோது உரும்பிராய்ச் சந்தியில் கன்டர் வாகனத்தில் தரித்து நின்ற பெருமளவான இராணுவத்தினர் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தடுத்தனர். பின்னர் என்னுடன் நின்றிருந்தவர்களின் கைளில் இருந்த சுவரொட்டிகளை பறிக்க முயற்சித்தனர். நாம் வழங்கவில்லை. இதனையடுத்து எமக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இராணுவத்தினர் எம்மை பிரதேசத்தினை விட்டு வெளியேறுமாறு கூறினர். எனினும் நாம் எமது பிரதேசத்தில் நடமாடுவதை தடுக்க நீங்கள் யார் என கேட்டேன். இதனைத் தொடர்ந்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை சுற்றிச் சுற்றி படம் எடுத்து எங்கோ வட்சப் அனுப்பினர்.

கறுப்பு யூலை நாடறிந்த உலகறிந்த படுகொலை இதை நினைவு கூர்வதை எவரும் தடுக்க முடியாது என்றோம். நான், நீங்கள் எந்த இராணுவ முகாமைச் சேந்தவர்கள் எனக் கேட்டேன். அவ்வாறு தங்கள் எந்த இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள் கூறமுடியாது என்றனர். பின்னர் உரும்பிராய் சந்தியில் இருந்து நாம் வெளியேறியவுடன் அவ்வாறாக முரண்பட்ட இராணுவத்திற்குப் புறம்பாக பீல் பைக்கில் நான்கு இராணுவத்தினர் எனது பிக்கப்பிற்கு முன்னும் பின்னுமாக குறிப்பிட்ட தூரம் பின்தொடர்ந்து பின்வாங்கிச் சென்றனர்.

இதேவேளை நாம் திரும்பி வரும் போது வல்லைப் பகுதி, ஆவரங்கால், புத்தூர் என சகல இடங்களிலும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் கழிவு ஒயில் பூசி மறைக்கப்பட்டிருந்ததுடன் சுவரொட்டிகள் அகற்ற கூடிய அளவிற்கு அகற்றப்பட்டிருந்தது.

இவ்வாறாக நினைவு கூர்வதற்கான உரிமை இராணுவ மயமாக்கலின் மூலம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வருடாவருடம் எமது கட்சி எமது தலைவர்களை நினைவுகூர்ந்து வருகின்றது. ஆனால் இம்முறை நினைவுகூரலை தடுப்பதற்கு கடும் பிரயத்தனங்கள் பிரயோகிக்கப்படுவதாக
ரெலோவின் மாவட்டப் பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

கறுப்பு ஜூலை நாளன்று தோண்டப்பட்ட ‘தமிழ்க்கண்’

தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட பச்சை அராஜங்கள் அரங்கேற்றப்பட்டு நேற்று (ஜூலை 23) ஆம் திகதியுடன் 38 வருடங்கள் கடந்துவிட்டன. அவ்வாறான நாளொன்றிலேயே மற்றுமொரு ‘தமிழ்க்கண்’ பிடுக்கப்பட்டுள்ளது.

1983 ஜூலைக் கலவரத்தின் ​போது, வெலிக்கடை சிறைச்சாலையில், குட்டிமணி உயிருடன் இருக்கும்போதே, அவருடைய கண்கள் இரண்டும் பிடுங்கியெடுக்கப்பட்டு புத்தனின் காலடியில் போடப்பட்டன என்பது வரலாற்று ஏடுகளில் உள்ளன.

ஆனால், விண்ணப்பத்திலி​ருந்தே ‘தமிழ்’ பலவந்தமாக பிடுங்கப்பட்ட மற்றுமொரு வரலாற்று துரோகமான நாளாக, 2021 ஜூலை ​23 ஐ பதிவிடவேண்டும். கறுப்பு ஜூலைக்கு 37 வயதாகியிருந்த ​2020 ஆம் ஆண்டு, பிறப்புச் சான்றிதழில் ‘இனம்’ இல்லாமல் செய்யப்பட்டு ‘இலங்கையர்’ எனப் புகுத்துவதற்கான ​யோசனை பிரேரிக்கப்பட்டிருந்தது.

அக்காலப்பகுதியில் தென்னிலங்கை சிங்கள கடும்போக்குவாதிகளின் இரத்தத்தை சூடாக்கி, வாக்கு வங்கிகளை நிரப்பிக்கொள்ளும் வகையில், அவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், கறைபடிந்த வரலாற்று நாளான ஜூலை 23இல், தமிழ்க்கண்ணை பிடுங்கியெடுத்தது ஏன்?

சிங்கள-பௌத்த வாக்குகளால் வெற்றியீட்டிய அரசாங்கமென மார்த்தட்டி கொள்ளும் இவ்வரசாங்கத்தின் செல்வாக்கு, நாளுக்கு நாள் சரிந்துகொண்டே போகிறது. அதனை தக்கவைத்துக் கொள்வதற்காக, சிறுபான்மை இனங்களுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பதற்கும், அதனூடாக செல்வாக்கை உயர்த்துகொள்ளும் வகையிலும், தமிழ்க்கண் மீது கையை வைத்திருந்திருக்கலாம்.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பில், ‘தமிழும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டும்’ என அழுத்தம் திருத்தமாகவே எழுதப்பட்டுள்ளது. வடக்கு- கிழக்கு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் அவை பின்பற்றப்படுவ​தே இல்லை. இந்நிலையில், சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்பப்படிவத்தை தமிழ் மொழியில் பூர்த்தி செய்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அப்படிவத்தை பூர்த்தி செய்யும்போது, பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல் வழிகாட்டி, மும்மொழிகளில் இருந்தாலும், விண்ணப்பத்தை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் மட்டுமே பூர்த்திச் செய்யவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்மொழியைப் பாதுகாப்பதற்காக அவ்வப்​போது போராடவேண்டிய மிகவும் துர்ப்பாக்கிய நிலைமையொன்று அண்மைய சில மாதங்களில் கண்டோம். தமிழ் இல்லாதொழிக்கப்பட்டு சீன மொழிக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை கண்ணுற்றோம். ஆக, மொழியுரிமையையும் பாதுகாக்கவேண்டிய இக்கட்டான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

சமாதான நீதவான் விண்ணப்பப்படிவ விவகாரத்துக்கு எதிரணியினர் ஏகோபித்த அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்பதுடன், ஆளும் தரப்புக்குள் இருக்கின்ற தமிழ்பேசும் சிறுபான்மையினர், கடுமையான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்கவேண்டும். இல்லையேல், இருப்பதையும் இழந்து நிர்வாணகோலத்தில் அலைவது வெகுதொலைவில் இருக்காது.

ஏற்கெனவே, எடுத்தியம்பியதைப் போல, ‘கெஞ்சி கோவணம் கட்டுவதை விட, நிர்வாணமே மேல்’ என்பதை காவடியெடுத்திருக்கும் சிறுபான்மை பங்காளிகள் உணர்ந்துகொள்ளவேண்டும். எல்லாவற்றுக்கும் தலையை அசைத்து, எதற்கெடுத்தாலும் மண்டியிடவே வேண்டுமென்ற நிர்ப்பந்தத்துக்குள் எதிர்கால சந்ததியினரை தள்ளிவிட்டு விடவேண்டாமென இடிந்துரைக்கின்றோம்

ஆசிரியர் தலையங்கம் Tamil Mirror

ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேருக்கு விளக்கமறியல் !

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று முற்பகல் கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தியபோதே அவர்களை ஓகஸ்ட் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் அவைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தீக்காயங்களுடன் இறந்த குறித்த 16 வயது சிறுமியின் உடலை மற்றொரு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமரர் ராஜமகேந்திரன் அவர்களுடைய இழப்பிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

கப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவரும் சக்தி மற்றும் சிரச ஊடகங்களின் நிர்வாக இயக்குனரும் ஆகிய ராஜமகேந்திரன் அவர்கள் அமரத்துவம் எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும் பெரும் துக்கமும் அடைந்தோம்.

துணிச்சல் மிக்கவராக இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் இழைக்கப்படும் அனைத்து தவறான செயற்பாடுகளையும் அஞ்சாது வெளிக் கொண்டுவருவதோடு, விமர்சனங்கள முன்வைத்து மக்களை தெளிவுபடுத்தி, தவறுகளை திருத்த எந்த சவால்களுக்கும் முகம் கொடுத்தவர். தன்னை சார்ந்தவர்களை சரியான முறையில் வழி நடத்தியவர்.

சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்ததோடு பாரிய உதவிகளையும் புரிந்து வந்தவர். நாட்டில் மக்கள் முகம் கொடுக்கும் அனைத்து அனர்த்தங்களுக்கு முன்னின்று தன்னுடைய குழுமத்தின் ஊடாக பாரிய உதவிகளை ஒழுங்கமைத்து மக்களுக்கு சென்றடைய வழி செய்தவர்.

துணிச்சலும் செயலாற்றலும் ஒருங்கே கொண்ட தலைவனாக தனது நாட்டிற்கும் மக்களுக்கும் மொழிக்கும், மதத்திற்கும் அயராது தொண்டாற்றிய ஆத்மா இன்று மௌனித்து இருக்கிறது. அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். அவர் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கும் அவரது குழும நிர்வாகிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized