மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பம்

புத்தசாசன அமைச்சு தூங்கிக்கொண்டு இருப்பதாக குற்றம் சுமத்தப்படுவதாகவும் ஆனால் புத்தசாசன அமைச்சு விழிப்புடனே செயற்பட்டு வருவதாக புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் மத உண்மைகளை திரிபுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதாற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் பொலிஸார் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் பௌத்த மதத்தை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதாகவும் அந்த நடவடிக்கை புத்தசாசன அமைச்சின் நேரடி தலையீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயல்களைத் தடுப்பதற்கு காவல்துறையில் புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

புத்த சாசன அமைச்சு தூங்குகிறது என்று குறிப்பிட்டிருந்ததையும் அவதானித்துள்ளேன்.புத்த சாசன அமைச்சு 24 மணிநேரமும் விழித்திருக்கிறது. அதனால்தான் இதுபோன்ற விஷயங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டவுடன், புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டு வர தீர்மானித்துள்ளேன் என தெரிவித்தார்.

ஜெனிவா 53ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான அழுத்தம் குறையும்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது.

எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நிகழ்ச்சி நிரல்களின்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், 19ஆம் திகதி பிற்பகலில் இலங்கை பற்றிய வாய்மொழி அறிவிப்பை வழங்குவார்.

அன்றைய தினமே அவர், ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் நிகரகுவா மற்றும் இலங்கை பற்றிய தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.

முன்னதாக 2022 செப்டம்பர் 51/1 தீர்மானத்தின் கீழ், 2023 செப்டம்பர் 2023 இல் நடைபெறவுள்ள 54வது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்க இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால், எதிர்வரும் ஜூன் மாத அறிக்கை கடுமையானதாக இருக்காது என்று ஜெனீவா தரப்பு தெரிவித்துள்ளது.

2022இல் ஐக்கிய நாடுகளின் மனிதை உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51-1 தீர்மானத்தின்போது 20 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.20 நாடுகள் வாக்களிக்கவில்லை.

இந்த தீர்மானத்தின்படி, இலங்கையில் நல்லிணக்கத்தில் முன்னேற்றம் உட்பட மனித உரிமைகள் நிலைமையை கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும் உயர் ஸ்தானிகர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மீதான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் தாக்கம் மற்றும் மனித உரிமைகள் பேரவைக்கு அதன் ஐம்பத்து மூன்றாவது மற்றும் ஐம்பத்தி ஐந்தாவது அமர்வுகளில் வாய்வழி புதுப்பிப்பை வழங்குதல், ஐம்பத்து நான்காவது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதன் ஐம்பத்தி ஏழாவது அமர்வில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான கூடுதல் விருப்பங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கை என்பன இந்த தீர்மானத்தின்படி வலியுறுத்தப்பட்டுள்ளன.

நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளது

சர்வதேச நாணயநிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளது என இந்தியவெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவிகளை செய்துள்ளது என வலியுறுத்தியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகள் வளைகுடாநாடுகள் தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய விஸ்தரிக்கப்பட்ட அயலை உருவாக்குவது குறித்து பிரதமர் மோடி அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைகழகமொன்றில் மோடியின் இந்தியா எழுச்சிபெறும் சக்தி என்ற கருப்பொருளில் உரையாற்றுகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புகளும் அண்டை நாடுகளில் இந்தியா பற்றிய பார்வையும் மாற்றமடைந்துள்ளன இலங்கையில் கடந்த வருடத்தில் என்ன இடம்பெற்ற விடயங்களை விட வேறு எதுவும் வியத்தகு விதத்தில் இதனை வெளிப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடந்த வருடம் பெரும்பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நாங்கள் உதவினோம் எனவும் தெரிவித்துள்ள ஜெய்சங்கர் சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு உதவியதை விட நாங்கள் அதிகளவு உதவியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

உங்களில் எவரேனும் இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்டிருந்தால் இந்த உதவியால் இந்தியா குறித்து மாற்றமடைந்துள்ள கருத்தினை அவதானிக்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இன்று பெரிய இலட்சியம் மிக்க செல்வாக்கு மிக்க இந்தியாவிற்காக முயற்சிக்கின்றோம் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் அயல்களை விஸ்தரிக்க முயல்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்த விஸ்தரிக்கப்பட்ட அயல் எவ்வாறானதாகயிருக்கவேண்டும் என்பது குறித்தும் ஆராய்கின்றோம்,அது இந்து சமுத்திரத்தில் உள்ள தீவுகளாக இருக்கலாம்,தென்கிழக்காசியா வளைகுடாவில் உள்ள நாடுகளாகயிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியஅரபு இராச்சியம் சவுதிஅரேபியா ஆகிய நாடுகளுடான உறவுகள் பெருமளவு மாறியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் அயலை பற்றிய மிகவும் சுருக்கப்பட்ட பார்வையிலிருந்து நாங்கள் இலட்சியம் மிக்க பார்வையை நோக்கிமாறியுள்ளோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதவி விலகவுள்ள அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் தலைவர்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு நிதியினை வழங்காத நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அச்சகத்தின் தலைவர் திருமதி கங்கானி கல்பனா லியனகே புதிய அறிவிப்பொன்றை விடுத்தள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக, ஊடக அமைச்சுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுத்துள்ளதாக அரசாங்க அச்சகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை பதில் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொடர்ந்தும் பணிபுரியுமாறு அமைச்சு அறிவித்தல் வழங்குமானால் அதற்கேற்ப பணியைத் தொடர்வதாகவும், மாறாக இடைநிறுத்தப்பட்டால், தானும் அதற்குத் தயாராக இருப்பதாகவும் திருமதி லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சீனாவின் உரங்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் – தலைவிரித்தாடும் ஊழல் மோசடிகள்

நாட்டு மக்கள் இக்கட்டான நிலையில் தத்தளிக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளுக்கு சென்று உரை நிகழ்த்திக்கொண்டிருப்பதாக ஜக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகை எப்படி ஆள்வது, சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்று உலகத் தலைவர்களுக்குப் பல்வேறு உபதேசங்கள் வழங்கப்படுகின்றன.

உலகத் தலைவர்களுக்கு உபதேசம் செய்யும் ஜனாதிபதி தனது அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு உபதேசம் செய்ய முடியவில்லை ஏனெனில் இந்த அரசாங்கத்தில் உள்ள மோசடிகள், ஊழல்கள் மட்டுமன்றி அரசாங்கத்தின் கையாலாகாத்தனம், தோல்விகள் இவையனைத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதிலும் ஜனாதிபதி இவற்றையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எருவுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் கொடுக்கப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நாட்டில் மோசடிகளும் ஊழல்களும் தலைவிரித்தாடியுள்ளன.

ஆனால் அந்த அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை, வெளியிடப்படவில்லை.

மறுபுறம், அரசாங்கம் மோசடி மற்றும் ஊழல் சட்டமூலம் பற்றி பேசுகிறது. மோசடி, ஊழல் போன்ற சட்டமூலத்தை எடுத்துக்கொண்டாலும், மோசடி, ஊழல்கள் குறித்து வெளியாகியுள்ள அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடாது என்று கூறுகின்றனர்.

சீன உரங்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சீன குற்றக்குழுக்களின் கேந்திர நிலையமாக இலங்கை மாறும் அபாயம்

அண்மையில் இலங்கையில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகளை அளுத்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸ் அறிக்கைகளின்படி, சந்தேக நபர்கள் பல மாதங்களாக இணையம் ஊடாக பல்வேறு நாடுகளில் உள்ள தனிநபர்களிடமிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை சட்டவிரோதமாக பெற்றுள்ளனர்.

அளுத்கம, களுஅமோதர பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் குறித்த குழுவினர் தங்கியிருந்ததாகவும், பல்வேறு தூதரகங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டபோது, சீனப் பிரஜைகள் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணத்தை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இணையவழி மோசடிக்காக சீன நாட்டவர்கள் வேறொரு நாட்டில் தடுத்து வைக்கப்படுவது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். அதிகரித்து வரும் இந்த பிரச்சினையை சமாளிக்கவும், மேலும் பரவாமல் தடுக்கவும் அதிகாரிகள் முனைப்புடன் செயற்பட வேண்டும். இதுபோன்ற மோசடி நடவடிக்கைகள் ஒழிக்கப்படுவதை உறுதி செய்வது அவசியம், இது அனைவருக்கும் பாதுகாப்பான இணையச் சூழலுக்கு வழிவகுக்கும்.

முன்னதாக, காத்மாண்டுவின் வௌ;வேறு பகுதிகளில் இதேபோன்ற நடவடிக்கைகளுக்காக 122 சீன பிரஜைகளை கைது செய்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இணையவழி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது சீன நபர்களை நேபாள பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இலங்கையில் கைது செய்யப்பட்டவர்களிடத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிராகரம், இந்த முறை, சந்தேக நபர்களுக்கு எதிராக இணையவழி மோசடி வழக்கைத் தொடர வலுவான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

சந்தேக நபர்கள் வாட்ஸ்அப் மூலம் மக்களை கவர்ந்திழுக்கும் சலுகைகளை வழங்குவார்கள், பின்னர் டெலிகிராம் மூலம் இணையவழி வகுப்புகளில் சேருவதற்கு அழைத்து அவர்களை நம்ப வைப்பார்கள் என்று பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளர்.

இந்த மோசடித் திட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் சுமார் 4.7 மில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு குறித்த பாதிக்கப்பட்ட நபரை 30சதவீதத்திற்கு மேல் நிகர லாபம் தரும் இணையவழி வணிகத்தில் முதலீடு செய்வதாகக் கூறியே ஏமாற்றியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுபோன்ற இணையவழி மோசடி சம்பவங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிச் சுமை மட்டுமல்ல, உலகளாவிய இணையப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

எனவே, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை செயற்படுத்துவதும் அவசியம். குற்றவாளிகளுக்கு எதிராக அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுப்பது மற்றும் அவர்களின் குற்றங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்கப்படுவதை உறுதி செய்வதும் முக்கியமாகின்றது.

சந்தேகநபர்களான சீனப்பிரஜைகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோசடி செய்து, மில்லியன் கணக்கான மக்களை ஏமாற்றி, இலங்கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத சூதாட்டம் போன்ற சீனப் பிரஜைகளை உள்ளடக்கிய குற்றச் செயல்கள் உள்நாட்டில் அதிகரித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் சீன முதலீடுகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளாக உள்வரும் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக அதிகளவான சீன பிரஜைகள் காணப்படுகின்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்றாலும், சிறுபான்மையினர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, அண்மைய ஆண்டுகளில் பலரை கைது செய்து வருகிறது.

எவ்வாறாயினும், சீன நிதியுதவி திட்டங்களில் பணியாற்றுவதற்காக சீன குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவது தவறான முன்னுதாரணமாகின்றது. மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து கேள்விகளை எழுப்புகிறது. வெளிநாட்டுப் பிரஜைகளின் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்த போதிலும், அது தொடர்ந்து கரிசனை செலுத்த வேண்டியதாக உள்ளது.

சீன நிறுவனங்கள் தங்கள் திட்டங்களுக்கு உதவ மலிவான தொழிலாளர்களை தேடுவது இந்த போக்குக்கு ஒரு காரணமாக இருக்கலாம். குறைந்த கூலிக்கு வேலை செய்ய தயாராக இருக்கும் சீன குற்றவாளிகளை கொண்டு வருவதன் மூலம், இந்த நிறுவனங்கள் தொழிலாளர் செலவில் பணத்தை சேமிக்க முடியும்.

எவ்வாறாயினும், இந்த நடைமுறை நெறிமுறையற்றது மட்டுமல்ல, இது இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவே இலங்கையில் சீனக் குற்றவாளிகளின் ஊடுருவலுக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம்.

இந்தப் போக்கின் பின்னணியில் உள்ள காரணங்கள் எதுவாக இருந்தாலும், சீனக் குற்றவாளிகள் இலங்கையில் இருப்பது கவலைக்குரியது என்பது தெளிவாகிறது. இந்த நபர்கள் இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம், மேலும் அவர்கள் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் பங்களிக்கலாம். அதுமட்டுமன்றி இலங்கையை குற்றச்செயல்களின் கேந்திரமாகக் கூட மாற்றலாம்.

இலங்கை அரசு அனுமதி வழங்கினால் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க தயார் – இலங்கைக்கான ரஷ்ய தூதுவர்

இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால், நாட்டில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள தமது நாடு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் (Levan S. Dzhagaryan) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அணு மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டத்திற்கு அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதற்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்க தமது நாட்டு அதிகாரிகள் தயாராகவுள்ளதாக ரஷ்ய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தேவையான எந்தவொரு கலந்துரையாடலுக்கும் விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான பிரிவில் சோதனை நடவடிக்கை தீவிரம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் VIP பயணிகள் முனையத்தில் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு விசேட கவனம் செலுத்துமாறு பணிப்புரைகள் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சிடம் இருந்து இந்த அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தற்போது உரிய பரிசோதனைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தை மக்கள் தொடர்ந்தும் துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமைக்கு ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி கவலை தெரிவிப்பு

கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் செயற்றிட்டம் இடையில் கைவிடப்பட்டமை தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பான் பிரதமர் Fumio Kishida-வை டோக்கியோ நகரில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

வௌிநாடு அல்லது வேறு ஒரு தரப்பினரது தலையீட்டுடன் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய செயற்றிட்டங்களை இரண்டு தரப்பினரதும் இணக்கப்பாடுகள் இல்லாமல் நிறுத்துவதற்கு அல்லது இரத்து செய்வதற்கு முடியாதவாறு எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக சட்டங்களை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

அனைத்து பாரிய செயற்றிட்டங்கள் தொடர்பிலான யோசனைகள், அந்த செயற்றிட்டங்களின் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியதை கட்டாயமாக்குவதாகவும் ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுவதற்காக ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக ஜப்பான் பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார்.

இதனிடையே, ஜப்பானின் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான அமைச்சர் Taro Kono-வை ஜனாதிபதி இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இலங்கையை நகர்த்துவதற்கான திட்டம் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக பேரவையினரையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக பேரவையின் 20 ஆவது ஆண்டு வருடப் பூர்த்தியை முன்னிட்டு இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது, இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீடுகளை ஆரம்பிப்பதற்காக தொழில் முயற்சியாளர்களின் பூகோள இயக்கமொன்றை உருவாக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வாவிற்கு பிரித்தானியா தடை விதிக்க கோரி கையெழுத்து சேகரிப்பு

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை சர்வதேச அமைப்பொன்று ஆரம்பித்துள்ளது.

இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் என்ற அமைப்பு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை இணையத்தளத்தில் ஆரம்பித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கையின் மிகமோசமான யுத்த குற்றவாளியான சவேந்திரசில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும் என கோரும் இந்த மனுவை சமர்ப்பிக்கின்றோம் என இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற நம்பகதன்மை மிக்க மனித உரிமை அமைப்பு ஜெனரல்சவேந்திரசில்வா குறித்த 50 பக்க ஆவணமொன்றை தயாரித்து 2020 ஜூலை மாதம் பிரிட்டிஸ் அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக அறிகின்றோம் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் தடைகள் குறித்த பிரிவிடம் இந்த ஆவணங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சமர்ப்பித்துள்ளது இந்த ஆவணம் 2020 ஜூலை ஆறாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தடை நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் ஏன் சவேந்திரசில்வாவை தடை செய்யலாம் என தெரிவிக்கின்றது எனவும் இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிகாலங்களில் சவேந்திரசில்வா 58 படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியவேளை உயிர்வாழ்வதற்கான உரிமை உட்பட மீறப்பட்டமை உட்பட இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களில் சவேந்திரசில்வாவிற்கு உள்ள தொடர்பு குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் ஆவணம் தெளிவாக தெரிவித்துள்ளது எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.