பிக்குக்களை பகைத்து 13 ஐ முழுமையாக அமுல்படுத்த முடியாது – மைத்திரி சவால்

சமஸ்டி ஆட்சி முறைமையை சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் கடுமையாக எதிர்க்கிறார்கள். சமஸ்டி வெறுப்பை தோற்றுவிக்கும்.

நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். சிங்கள மக்களையும், பௌத்த பிக்குகளையும் பகைத்துக் கொண்டு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாது.

அதற்கான வாய்ப்பு இல்லை. நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலை அடைந்துள்ள போது 13 ஆவது திருத்தம் என்ற இருப்பக்கமும் பற்றி எரியும் பந்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் கையில் எடுத்துள்ளார். என்பதை அறியவில்லை.

13 ஆவது திருத்தத்திற்கு சிங்களவர்கள் இடமளிக்க மாட்டார்கள் என்பதால் 1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த அரச தலைவர்கள் எவரும் 13 ஆவது திருத்தத்திற்கு கைவைக்கவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்ற யோசனையை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முதலில் முன்வைத்தது.

சகல அரசியல் கட்சிகளை ஒன்றிணைந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் முயற்சியை ஆளும் தரப்பினரே பலவீனப்படுத்தினார்கள், அதனை அனைவரும் நன்கு அறிவார்கள். சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தால் அதற்கு முழுமையாக ஆதரவு வழங்குவோம் என்பதை மீண்டும் குறிப்பிடுகிறோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை உரையில் குறிப்பிட்டார்.

13 ஆவது திருத்தம் தற்போதைய பிரதான பேசுபொருளாக உள்ளது. 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக பௌத்த பிக்குகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தம், அரசியலமப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவை ஒன்றுடன் ஒன்றுத் தொடர்புப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் வடக்கு மக்களுக்கு அரசியல் ரீதியில் பாரிய அநீதி இழைக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவ சிதம்பரம் 1987 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கைக்கு எதிரான பாரதூரமான விடயங்களை இந்தியாவிடம் குறிப்பிட்டார்.

அதிகார பகிர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு அவர் இந்தியாவிடம் வலியுறுத்தினார்.

சிவ சிதம்பரத்தின் யோசனைகளை செயற்படுத்தியிருந்தால் 1987 ஆம் ஆண்டுக்கு முன்னரே இலங்கையில் யுத்தம் தோற்றம் பெற்றிருக்கும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரம் தொடர்பில் இந்தியா மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தையின் காரணமாக 1987 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன முழு நாட்டிற்கும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார்.

இக்காலப்பகுதியில் விடுதலை புலிகள் தாக்கம் தீவிரமடையும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் கலவரம் தோற்றம் பெறும் என புலனாய்வு தகவல் கிடைக்கப் பெற்றும் ஜே.ஆர் ஜயவர்தன கடும் அழுத்தத்திற்கு மத்தியில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இக்காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அமர்தலிங்கம் கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் மக்களுக்கு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

இலங்கை இவ்வாறான பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டது. இதன் விளைவாகவே பிற்பட்ட காலப்பகுதியில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெற்றன.

சமஷ்டி ஆட்சி முறையில் அதிகார பகிர்வு அவசியம் என  வடக்கு தலைமைகள் குறிப்பிடுகிறார்கள். சமஷ்டிக்கு சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். சமஷ்டி என்றால் வெறுப்புக்கள் தோற்றம் பெறும். 13 பிளஸ் என மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்திற்கு குறிப்பிட்ட காரணத்தினால் தற்போது சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளது.

மாகாண சபை தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட போது உயர்நீதிமன்றம் ஒருசில திருத்தங்களை முன்வைத்தது.13 ஆவது திருத்தத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டால் நாடு பிளவுப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ்வாறன பின்னணில் எவ்வாறு 13 ஆவது திருத்தத்ததை முழுமையாக அமுல்படுத்துவது.

1987 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த எந்த அரசாங்கமும், அரச தலைவர்களும் 13 ஆவது திருத்தம் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.

மாகாண சபை நிர்வாக கட்டமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும்.  இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் ஜே.ஆர் ஜயவர்தன மாவட்ட அபிவிருத்தி சபை என்ற யோசனையை கொண்டு வந்தார். தேர்தலும் இடம்பெற்றது, பின்னர் மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை இரத்து செய்யப்பட்டது.

நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வு காண வேண்டும். நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் காணப்படும் போது இருபுறமும் பற்றி எரியும் விளக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் கையில் எடுத்துள்ளார் என்பதை அறியவில்லை.

ஜே.ஆர்.ஜயவர்தன 13 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து ஜனாதிபதிகளாக பதவி வகித்த எவரும் 13 ஆவது திருத்தத்தில் கை வைக்க செல்லவில்லை.

எனது ஆட்சி காலத்தில் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

சிங்கள பௌத்த மக்களை பகைத்துக் கொண்டு எதனையும் செய்ய முடியாது, ஆகவே நாட்டின் இன அடிப்படையில் பிளவுப்படாமல்  அனைவரும் வாழ வேண்டும். நாட்டின் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போது 13 ஆவது திருத்தம் ஊடாக பிறிதொரு பிரச்சினை தோற்றம் பெற இடமளிக்க முடியாது.

மாவட்ட அபிவிருத்தி சபை ஸ்தாகிப்பப்பட வேண்டும். உலக நாடுகளில் சமஸ்டி ஆட்சி உள்ள போது இலங்கையில் ஏன் சமஸ்டி ஆட்சி முறைமையை அமுல்படுத்த முடியாது என தமிழ் அரசியல் தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள். பிற நாடுகளை போல் சமஷ்டி ஆட்சியை அமுல்படுத்தும் தன்மை இலங்கையில் தற்போது இல்லை என்றார்.

Posted in Uncategorized

இந்திய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குழுவினர் யாழ் வந்தடைந்தனர்

இந்தியாவின் மீன்வள மத்திய இணை அமைச்சர் அடங்கிய குழுவினர் பலாலி சர்வதேச விமானத்தை வந்தடைந்தனர்.

இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை தலைமையிலான இந்திய அரசின் உயர்மட்ட குழுவினர் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்திய துணைத் தூதுவர், சிவசேனை அமைப்பின் தலைவர், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டவர்கள் இந்திய குழுவினை மாலை அணிவித்து,பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

இந்திய அரசின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் சனிக்கிழமை இந்திய மத்திய இணை அமைச்சர் கலந்து கொள்வார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்வார்.

இந்திய அமைச்சர் குழுவினருக்கு இன்று மதியம் வடக்கு மாகாண ஆளுநர் மதிய விருந்துபசாரமளித்தார்.

அதன் பின்னர் யாழ். பொது நூலகத்தில் இடம்பெறுகின்ற உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்ள உள்ளார்.

அதன் பின்னர் காங்கேசன்துறைக்கு செல்ல உள்ள அமைச்சர் காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

நாளைய தினம் இந்திய அரசின் நிதி பங்களிப்பில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்ல உள்ளதாக இந்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை வெள்ளிக்கிழமை மாலை, கொக்குவில் பொக்ஸ் விடுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிற்கு இந்திய குழுவினர் இரவு விருந்துபசாரமளிக்கின்றனர்.

நேற்று பௌத்த பிக்குகள் எரித்தது 13ஐ அல்ல, ஒட்டுமொத்த நாட்டை எரித்துள்ளார்கள்

நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் எரித்தது 13வது திருத்தத்தை அல்ல, அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையே எரிக்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதியின் நேற்றைய அக்கிராசன உரை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒட்டுமொத்தமான ஜனாதிபதியின் அக்கிராசன உரையிலே அதிகாரங்களைப் பரவலாக்கி புறையோடிப்போயுள்ள இந்த இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வைக்காண வேண்டும் என்ற அடிப்படையில் அவர் உரையாற்றி இருந்தாலும், பொலிஸ் அதிகாரமற்ற அதிகாரப் பரவலாக்கல், ஒற்றையாட்சிக்குள்ளே அதிகாரப் பரவலாக்கல் என்பதை எங்களால் எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கையின் 75வது சுதந்திர தினம் இந்த வாரம் கொண்டாடப்பட்டிருக்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்ததோ என்னவோ ஆனால் தமிழ் மக்களுக்கான சுதந்திரம் இல்லாமலே இருக்கின்றோம். ஒரு சொட்டு இரத்தமும் சிந்தாமல் சுதந்திரம் அடைந்தது இந்த நாடு. சுதந்திரம் அடைந்த போது இந்த நாட்டின் பொருளாதாரம் ஜப்பானின் பொருளாதாரத்திற்கு நிகராக இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் தற்போது பொருளாதார ரீதியிலே ஜப்பான் எங்கிருக்கின்றது, இலங்கை எங்கிருக்கின்றது என்பதை நாங்கள் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

இந்தியாவைப் பொருத்தமட்டில் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் போரடி சுதந்திரம் அடைந்த போது பாகிஸ்தான், பங்காளதேசம் போன்றன ஒன்றாகவே இருந்தன. பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்தாலும் பாகிஸ்தானை விட அதிகமான முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்வது மாத்திரமல்லாமல் அவர்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், வளமாகவும் கூட இருந்து கொண்டிருக்கின்றார்கள். அங்கெல்லாம் முஸ்லீம்கள் வாழும் பிரசேங்களிலே இந்துக் கோயில்களோ இந்துக்கள் வாழும் பிரதேசங்களிலே பள்ளிவாசல்களோ அடாத்தாகவோ பலாத்காரமாக அமைக்கப்படுவதில்லை.

ஆனால், இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ் மக்கள் தமிழ் பேசும் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கை சுதந்திரமடைந்த 1948ல் இருந்து முப்பது ஆண்டுகள் தமிழ் மக்கள் அகிம்சை ரீதியாகவும், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆயுத ரீதியாகவும் போராடி வந்திருக்கின்றார்கள். 1949ம் ஆண்டு இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கு மாகாணத்தைக் கபளீகரம் செய்வதற்காகவும், அங்குள்ள தமிழ், தமிழ் பேசும் மக்களை சிறுபான்மையினராக மாற்றுவதற்குமான வேலைத்திட்டத்தை கல்லோயாக் குடியேற்றம் மூலம் ஆரம்பித்தார்.

1921ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெறுமனே 0.5 வீதம் சிங்கள மக்கள் வாழ்ந்த வரலாறு இருக்கும் போது இன்று 24 வீதமாக அவர்கள் உயர்ந்திருக்கின்றார்கள் என்றால் கல்லோய தொடக்கம், சேருவில, கந்தளாய் வரை குடியேற்றங்களை ஆரம்பித்தது மாத்திரமல்லாமல், அம்பாறை, சேருவில போன்ற தனித் தேர்தல் தெகுதிகளையும் உருவாக்கி இன்று 24 வீதமாக மாற்றியிருக்கின்றீர்கள்.

1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தீர்கள், ஸ்ரீ யைக் கொண்டு வந்தீர்கள். அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ பிரச்சனைகள் இங்கு நடந்து வந்திருக்கின்றன. 1958, 1978, 1983 ஆகிய ஆண்டுகளிலே பாரிய இனக்கலவரங்களை உண்டுபண்ணியது மாத்திரமல்லாமல் 1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் மூலமாக தெற்கிலிருந்து வடகிழக்கிற்குக் கூடத் தமிழர்கள் செல்லமுடியாமல் கடல்வழியாக அனுப்பிய வரலாறுகளும் இருக்கின்றன. அதுமாத்திரமல்லாமல் வெலிகடை வெஞ்சிறையில் 53 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். தமிழ் ஆயுதப் போராட்டத்தை முதல் முதலில் தொடக்கிய தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களான குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் மிகவும் கொடூரமாகக் கொல்லப்பட்டர்கள்.

குட்டிமணி அவர்கள் நீதிமன்றத்திலே உரையாற்றும் போது எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்படுகின்றது. அந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால் நான் ஒரு குட்டிமணி இறப்பேன். ஆனால் அதன் பின் ஆயிரம் ஆயிரம் குட்டிமணிகள் இந்த நாட்டிலே வடகிழக்கிலே உருவாகுவார்கள். அவர்கள் மூலமாக தமிழீழம் மலரும். மலரும் தமிழீழத்தை எனது கண்களால் நான் பார்க்க வேண்டும். எனவே என்னுடைய கண்களை ஒரு பார்வையற்ற தமிழனுக்கு வழங்க வேண்டும் என்று கூறியதற்காக அவரைக் கொன்றதோடு மாத்திரமல்லாமல், அவரது கண்களைத் தோண்டி சப்பாத்துக் கால்களில் மிதித்த வரலாறுகள் கூட இருக்கின்றது.

1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்தே ஆயுதப்போராட்டம் வீறுகொண்டதை அனைவரும் அறிவோம்;. வடகிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தார்கள். மிகவும் உக்கிரமாக இந்த நாட்டிலே போர் நடந்த வரலாறுகள் இருக்கின்றன. 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் எற்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் நாங்கள் தனி ஈழம்பெற்றிருப்போம், தனிநாடு மலர்ந்திருக்கும் என்று இன்றும் தமிழர்கள் கூறுகின்றார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமாக ஏற்பட்ட 13வது திருத்தச் சட்டம் அரசியலமைப்பில் ஒரு அங்கமாக இருக்கும் போது அந்த அரசியலமைப்பை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் நிறைவேற்றாமல் இருப்பதென்பது அரசாங்கமே அரசியலமைப்பை மீறுவதாகவே அமையும்.

எனக்கு முன் உரையாற்றிய உதயகம்மன்பில அவர்கள் 13வது திருத்தத்தின் பின்னர் இந்த நாட்டை 7 ஜனாதிபதிகள் ஆட்சி செய்திருந்தார்கள் யாருமே பொலிஸ் அதிகாரத்தை அமுலாக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதிலிருந்து நீங்களே அரசியலமைப்பை மீறிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதே தெளிவாகின்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் உரையாற்றும் போது இந்த நாடு பௌத்த நாடு பௌத்த பிக்குகளை எதிர்த்துக் கொண்டு எதனையும் செய்ய முடியது அவர்களைப் பகைத்துக் கொண்டு இந்த நாட்டிலே ஒரு தீர்வைத் தர முடியாது என்ற கோணத்திலே உரையாற்றியிருந்தார்.

நான் அவருக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் 2015ல் அவரை ஜனாதிபதி ஆக்கியது சிறுபான்மை மக்கள். ஆனால் இன்று அந்த மக்களது கருத்தைக் கூட கருத்தில் எடுக்காமல் அவர் இந்த உரையை ஆற்றியிருப்பதையிட்டு அவர் குறித்தும், அவருக்காக வடகிழக்கு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டேன் என்ற அடிப்படையிலும் நான் வெட்கப்படுகின்றேன்.

ஆயுதப் போராட்டம் ஏற்பட்டதன் காரணாகவே 13வது திருத்தச் சட்டம் உருவானது 13வது திருத்தம் என்பது தமிழ் மக்களுடைய ஒரு அரசியற் தீர்வல்ல. தமிழ் மக்களின் அரசியற் தீர்வுக்கு இதனை ஒரு ஆரம்பப் புள்ளியாகவே கருதுகின்றோம். எனவே எங்களுக்குத் தேவை மீளப்பெறமுடியாத ஒரு சமஸ்டி என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். ஏனெனில் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களையே மீளப்பெற்ற வரலாறுகளே இருக்கின்றன.

நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் 13வது திருத்தத்தை எரிக்கின்றார்கள். நீங்கள் எரித்தது 13வது திருத்தத்தை அல்ல, ஒட்டுமொத்த நாட்டையே எரிக்;கின்றீர்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். பண்டா செல்வா ஒப்பந்தம் ஏற்பட்ட போது கொழும்பில் இருந்து கண்டிக்கு யாத்திரை சென்றது எதற்காக? அன்று அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்றால் இந்த நாடு அழிவுப் பாதைக்குச் சென்றிருக்காது என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

முறையற்ற வரி விதிப்பிற்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்கள், பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முறையற்ற வரி விதிப்பினூடாக அரசாங்கம் பொதுமக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளமைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்ட தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40-க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து  எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இதற்கு இணையாக அரச, தனியார் துறை வைத்தியர்கள் 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒரு பிரிவான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகவும் வாகன போக்குவரத்திற்கு  தடை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதனிடையே, புதிய வரிக்கொள்கைக்கு எதிராக இலங்கை மின்சார சபை ஊழியர்கள், கொழும்பு கோட்டை மின்சார சபை தலைமையகத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் கொழும்பு கோட்டையின் பல்வேறு வீதிகளில் முன்னெடுக்கப்படுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு அமைவாக அமைதியான போராட்டங்கள் மற்றும் பேரணியினை முன்னெடுக்க முடியும் என கோட்டை நீதவான் திலின கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் யாராவது செயற்படும் பட்சத்தில், பொலிஸாருக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைய செயற்படுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பின் பல்வேறு வீதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கறுவாத்தோட்ட பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பௌத்தாலோக மாவத்தை, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தை, தேர்ஸ்டன் வீதி, ஏனர்ஸ்ட் டி சில்வா மாவத்தை உள்ளிட்ட வீதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவானிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை நிராகரித்த கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ், பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய செயற்படுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, அநீதியான வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பினால் நாட்டின் பல வைத்தியசாலைகளின் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

கொழும்பு – ஹைட்பார்க்கில் பிரதான எதிர்ப்பு நடவடிக்கையும் இடம்பெற்று வருகின்றது.

அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மொட்டுக்கு முரண்பாடு அல்ல – மஹிந்த ராஜபக்ஷ

ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கொள்கை பிரகடன உரையாற்றிய போது, ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.

இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் மஹிந்தவிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

கோட்டாபயவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் 3 மணிநேர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபாய் பணம் தொடர்பிலேயே இதன்போது வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானிலுள்ள இல்லத்திற்குச் சென்று வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விசேட அபிவிருத்தித் திட்டம்

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “காங்கேசந்துறை துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும். விரிவாக்கப்படும். திருகோணமலையை நவீன சர்வதேச நகரமாக அபிவிருத்தி செய்யப்படும்.

மோதல்களுக்கு அகப்பட்டு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்னடைந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

நேரடி வரிகளை அதிகரித்து வரிச்சுமையை குறைக்க முடியும்; ஜனாதிபதி ரணில்

நேரடி வரிகளை அதிகரிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வரிச்சுமையை குறைக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது ஆற்றிக்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலை தொடர்ந்தால் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடியும் எனவும், இந்த ஆண்டு இறுதியில் வட்டி விகிதங்களை குறைக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் தான் பிரபலமடைவதற்காக இந்த பதவியை பெறவில்லை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீள கட்டியெழுப்ப செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்காக இந்த வருட இறுதிக்குள் பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கமாக குறைக்கும் இலக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத தீர்மானம் என்றாலும் நாட்டைக் கட்டியெழுப்ப அத்தகைய தீர்மானங்களை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பலன்களை எதிர்வரும் 2-3 ஆண்டுகளில் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு – ஜனாதிபதி

ஒற்றையாட்சி முறைக்குள் அதிகப்பட்ச அதிகாரங்களோடு பல காலமாக இருக்கும் இனப் பிரசினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இருப்பினும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் துரிதமாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்ட விதிகள் மற்றும் சட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை

புதிய சட்ட விதிகள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘புதிய சட்ட விதிகள் மற்றும் சட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

  • பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுச் சட்டம்
  • ஆண் பெண் பாலின சமத்துவ சட்டம்
  • பெண்களை வலுவூட்டும் சட்டம்
  • சிறுவர் பாதுகாப்பு சட்டம்
  • இளைஞர் நாடாளுமன்ற மறுசீரமைப்புச் சட்டம்
  • போதைப்பொருள் தடுப்பு கட்டளையிடும் தலைமையக சட்டம்
  • உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
  • பயங்கரவாத தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம்
  • தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பிரசித்த நாட்டிய கட்டுப்பாட்டுச் சட்டம் இல்லாதொழிக்கப்படும். அரசியலமைப்பில் உள்ள கருத்து தெரிவிக்கும் உரிமையினை அடிப்படையாகக் கொண்டு கலைப் படைப்புக்களை வகைப்படுத்தும் சட்டம் தயாரிக்கப்படும்.

எமது நாடு காலநிலை மாற்றங்களுக்கு உட்படும் வலயத்தில் அமைந்துள்ளது. ஆகவே தான் நாம் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். அது தொடர்பில் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டால் எமக்கு பசுமை ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகிறது.

அவை அனைத்தையும் கவனத்திற் கொண்டு நாம் இந்த சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

  • காலநிலை மாற்றச் சட்டம்
  • சமூக நீதிக்காக ஆணைக்குழுச் சட்டம்
  • மீள் காடு வளர்ப்பு மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டம்
  • உயிரோட்ட முறைமை சட்டம் – மகாவலி கங்கை, சிங்கராஜ வனம், சிவனொலிபாத பிரதேசம் மற்றும், வனச் சிகரம்
  • ஹோட்டன் சமவெளி, நக்கில்ஸ், ஆதமின் பாலம் ஆகியன இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
  • கடல் வள ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவ சட்டம்.
  • முத்துராஜவெல பாதுகாப்புச் சட்டம்.

பொருளாதாரம் தொடர்பாகவும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அரச செலவு முகாமைத்துவத்துக்காக ஸீரோ பட்ஜட் அல்லது பூச்சியத்தை அடிப்படையாக கொண்ட வரவு செலவுச் செயன்முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.

  • வருமான அதிகாரச் சட்டம்
  • வெளிநாட்டு கடன் முகாமைத்துவச் சட்டம்
  • உணவுப் பாதுகாப்புச் சட்டம்
  • அரச சொத்து முகாமைத்துவச் சட்டம்
  • பொருளாதார ஸ்திரத்தன்மை சட்டம்
  • தேசிய ஓய்வூதிய பங்களிப்புச் சட்டம்
  • புதிய மதுவரிச் சட்டம்
  • அந்நிய செலாவணிச் சட்ட திருத்தம்
  • புன்வத் சட்டம்
  • வெளிநாட்டு வியாபார மற்றும் முதலீட்டு சட்டம்
  • டிஜிட்டல் தொழில்நுட்ப சட்டம்
  • கறுவா அபிவிருத்தி திணைக்களச் சட்டம்
  • பரஸ்பர இணக்கப்பாட்டின் கீழான விவாகரத்துச் சட்டம்

இவ்வாறான பொருளாதார சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை வெற்றியடையச் செய்ய வேண்டுமாயின் சரியான விடையங்களின் அடிப்படையில் மக்களுக்கு அறிவூட்டுதல் ஓர் அத்தியாவசியமான விடயமாக காணப்படுகிறது. “ எனத் தெரிவித்துள்ளார்