பொருளாதார மீட்சி, நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை – பிரிட்டன் பிரதிநிதிகள் பேச்சு

நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் நல்லிணக்க செயற்பாட்டில் முன்னேற்றகரமான நகர்வு என்பன குறித்து இலங்கை மற்றும் பிரிட்டனின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துரையாடியுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுக்கும் பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர வெளியுறவுச் செயலாளர் பிலிப் பார்றனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று செவ்வாய்கிழமை (17) வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது வருட பூர்த்தியில் இச்சந்திப்பு இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

இச்சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய நிலைவரம் மற்றும் 2023இல் சமூக – பொருளாதார உறுதிப்பாடு, நல்லிணக்கம் மற்றும் மீட்சி ஆகியவற்றை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் என்பன குறித்து வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பிலிப் பார்றனுக்கு விளக்கமளித்தார்.

இலங்கையின் முயற்சிகளை ஊக்குவித்த பார்றன், இவ்விடயத்தில் இலங்கைக்கு பிரிட்டன் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.

தற்போது பொருளாதார மீட்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இலங்கை விசேட அவதானம் செலுத்தியிருக்கிறது.

இந்நிலையில், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் கீழ் பிரிட்டனுடன் இலங்கை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து பிரஸ்தாபித்த அருணி விஜேவர்தன, அதன் மூலம் பிரிட்டன் சந்தைக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு இலகுவாக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர் குடிப்பெயர்வு ஆகியவற்றில் பிரிட்டனின் ஒத்துழைப்பு வலுவடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான இயலுமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் காலநிலை மாற்ற சவால்களுக்கான துலங்கல்கள், 2030ஆம் ஆண்டில் 70 சதவீத புதுப்பிக்கத்தக்க சக்திவலு உற்பத்தியை அடைதல் என்ற இலங்கையில் இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் என்பன பற்றியும் ஆராயப்பட்டது.

மேலும், இரு நாடுகளினதும் அக்கறைக்குரிய விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் செயற்றிறன் மிக்க வெளியீட்டை பெறல் ஆகியவற்றை முன்னிறுத்தி, இவ்வருடத்தின் முதற்காலாண்டில் இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுப்பது குறித்து இரு தரப்பினரும் பரஸ்பரம் தமது விருப்பத்தை வெளியிட்டனர்.

வேலன் சுவாமி கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

வேலன் சுவாமிகள் சற்றுமுன்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொலிசாரினால் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இந்நிலையில், வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்துகொண்ட போது யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர். அதன் போது பொலிஸாரின் தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டனர்.

அதன் போது பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அவ்வேளை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினால் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐ.எம்.எப். வழங்கும் வழங்கும் கடனுதவி இலங்கையின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்காது – அலி சப்றி

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிக் கிடைத்தால்கூட, இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், “இலங்கையின் கடன்மறுசீரமைப்புக்கு இந்தியா சாதகமான பதிலை வழங்கியுள்ளது.

அந்நாடு நேரடியாக ஐ.எம்.எப்.இற்கு இதனை அறிவித்துள்ளதாக த ஹிந்து பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும் எமக்கு சாதகமான பதிலை வழங்கும் என்று நம்புகிறோம்.

எனவே, சிறந்த பெறுபேறு ஊடாக ஐ.எம்.எப்.உடன் எம்மால் பேச்சு நடத்த முடியும்.

எனினும், ஐ.எம்.எப். வழங்கும் 2.9 பில்லியன் டொலர் நிதியால் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது.

ஆனால், நீண்ட காலமாக தீர்க்கமுடியாத பல தேவைகளை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை இதனால் நிறைவேற்ற முடியும் என நாம் நம்புகிறோம்.

நாம் படிப்படியாகத் தான் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர முடியும். குறுகிய கால பிரசித்தமான தீர்மானங்களை எடுத்து, இந்த நாட்டை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதல்ல எமது முயற்சி.

மாறாக நடைமுறைச்சாத்தியமான விடயங்களைத்தான் நாம் மேற்கொள்ள வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் – காணி அதிகாரங்களினால் நாடு துண்டாடப்படும் – சரத் வீரசேகர

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, சமஷ்டி கட்டமைப்பை நாட்டில் கொண்டுவரும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வீடொன்று பற்றியெறியும்போது சுருட்டை பற்றவைத்ததைப் போன்று, இன்று சில தமிழ்க் கட்சிகளும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் ஒரு சில சர்வதேச நாடுகளும் செயற்பட்டு வருகின்றன.

நாடு இன்று பொருளாதாரப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், நாட்டை துண்டாட, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்கள்.

இந்து – லங்கா ஒப்பந்தத்திற்கு இணங்க, வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து ஒருவருடத்திற்குள் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டும் என்றே கூறப்பட்டிருந்தது. அது 13 ஆவது திருத்தசட்டம் கிடையாது.

அத்தோடு, இந்த ஒப்பந்தத்தில் அதிகாரத்தை பரவலாக்கல் தொடர்பாகக் கூறப்படவில்லை.

அப்படியிருக்கையில், எவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் வந்தது? இது இந்தியாவின் தேவைக்காக எம்மீது சுமத்தப்பட்ட ஒன்றாகும்.

இந்த சிறிய நாடு 9 மாகாணங்களாக பிரிந்து செயற்பட வேண்டிய அவசியம் கிடையாது.

அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன. அங்கு மேற்கு வெர்ஜீனியா மாநிலமானது இலங்கைளவு பரப்பளவைக் கொண்ட மாநிலமாகும்.

அதேபோன்று அமெரிக்காவின் அலஸ்கா மாநிலமானது இலங்கையை விட பாரிய மாநிலமாகும்.

இப்படியான மாநிலங்களைக் கொண்ட ஒரு நாட்டில்தான் சமஷ்டி முறைமை தேவைப்படுகிறது.

அதைவிடுத்து இலங்கை போன்றதொரு சிறிய நாட்டை சமஷ்டியாக்க முற்படுவதானது, இலங்கையை பிரிக்கவேயாகும். இலங்கையென்பது ஒற்றையாட்சி முறைமைக்கொண்ட நாடாகும்.

69 இலட்சம் மக்கள் வாக்களித்து, எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்கியிருப்பதானது, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்துவதற்கல்ல.

மாறாக ஒற்றையாட்சியை பாதுகாத்து நாட்டை முன்னேற்றவே என்பதை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, 13 ஐ அமுல்படுத்தி, நாட்டில் சமஷ்டியை ஏற்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். 13 ஐ நாம் இப்போதும் நடைமுறைப்படுத்தி தான் வைத்துள்ளோம்.

ஆனால், பொலிஸ் – காணி அதிகாரங்களை வழங்கி ஐக்கிய இலங்கையை பிரிக்க நாம் என்றும் இடமளிக்கப் போவதில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினக் கொண்டாட்டச் செலவுகள் எதிர்காலத்திற்கான முதலீடு – ஜனாதிபதி

சுதந்திர தினக் கொண்டாட்டச் செலவுகள் எதிர்காலத்திற்கான முதலீடாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் அதிகளவு செலவு செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று சுதந்திரத்திற்குப் பின்னர் எமக்கு 75 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. சுதந்திரம் அடைந்து 100 வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் நாட்டின் மறுசீரமைப்புக்கு அவசியமான பல நிறுவனங்களை உருவாக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய வரலாற்று தொடர்பிலான  நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றை மறந்து விட்டோம் என்பதே தங்கள் மீது  இப்போதுள்ள பாரிய குற்றச்சாட்டு என தெரிவித்துள்ள ஜனாதிபதி, அப்படியானால் அவ்வாறானதொரு நிறுவனத்தை ஆரம்பித்தே ஆக வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், பொருளியல் மற்றும் வர்த்தக நிறுவனமொன்றை நிறுவவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிப்பதாக இந்தியா ஐ.எம்.எப் இற்கு தெரிவிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் கடன் உதவியை பெறுவதற்கான தீவிர முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் நிதி உதவியை பெறுவதற்கு இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக இந்தியா மற்றும் சீனாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இலங்கையானது, இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டொலர் கடன்களை வழங்கவேண்டியுள்ளது.

இதுவும் கடன் மறுசீரமைப்பின் கீழ் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கடந்த வருடம் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு துரித உதவியாக 4 பில்லியன் டொலர்களை வழங்கியது.

எவ்வாறாயினும், இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும், இதுதொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திற்கு இந்தியா அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியது

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்திற்கான கட்டுப் பணத்தை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி இன்றைய தினம் புதன்கிழமை(18) காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ரெலோ உட்பட ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இன்றைய தினம் புதன்கிழமை(18) காலை மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஜனநாயக போராளிகள் கட்சி,தமிழ் தேசிய கட்சி ஆகிய 5 கட்சிகளும் இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகள் உள்ளிட்ட மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர்.

வவுனியா மாநகரசபையில் ரெலோ ஆட்சி அமைக்கும் – வினோ எம்.பி நம்பிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் வவுனியா மாநகரசபையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ மேயரை நியமித்து ஆட்சி அமைக்கும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது மற்றும் வட்டாரங்களில் வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பங்காளி கட்சிகளுக்கிடையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மாநகரசபை மற்றும் 3 பிரதேச சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி போட்டியிடுகின்றது.

இதன்போது வவுனியா மாநகரசபையில் குறித்த கூட்டணி வெற்றிபெறும் பட்சத்தில் மாநகர மேயரை நியமித்து ஆட்சி அமைக்கும் பொறுப்பு தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோவும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஈ. பி. ஆர். எல். எப் கட்சியும் செட்டிகுளம் பிரதேச சபையில் புளொட்டும் வவுனியா வடக்கு பிரதேச சபையில் ஜனநாயக போராளிகள் கட்சியும் ஆட்சி அமைக்கும் பெறுப்பை குறித்த கூட்டணி பகிர்ந்துள்ளது.

இந் நிலையில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பிலும் பங்காளி கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டியுள்ளதாகவும் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – இலங்கை உயர் ஸ்தானிகர் இடையே சந்திப்பு

இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளின் பரஸ்பர உறவை பேணுதல், மீட்டெடுத்தல் மற்றும் ஒத்துழைப்பு வழங்குதல் குறித்து இந்த கலந்துரையாடப்பட்டது.

இது இந்தியா- இலங்கை இடையே நடைபெறும் வழக்கமான உரையாடலின் ஒரு பகுதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வார இறுதியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த சந்திப்பு நடந்துள்ளது.

எனினும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பயணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

13ஐ முழுமையாக அமுல்படுத்தினால் நாடு பிளவுபடும்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் நாடு குறுகிய காலத்திற்குள் பிளவுபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதால் வடக்கின் பிரிவினைவாத, சாதி அடிப்படையிலான அரசியல் தலைவர்களின் நோக்கம் நிறைவேறுமா தவிர தமிழ் மக்களின் உண்மை பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரிவினைவாத அரசியல் கட்சிகள் அடையாளப்படுத்தும் இன அடிப்படையிலான பிரச்சினை, நாங்கள் அடையாளப்படுத்தும் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களின் மனங்களை வெல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது உண்மை எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் அடிப்படையில் சர்வக்கட்சி தலைவர் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் பிரிவினைவாத அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தல், ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விசேட நிதியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் முழுமையாக விடுதலை செய்ய வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இராணுவத்தினர் மீது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.