இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கியமைக்கு பிரித்தானிய எம்.பி அதிருப்தி

பிரித்தானியா இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கியது மிகுந்த மனவேதனையை தருகின்றது என பிரித்தானிய தாராளவாத ஜனநாயக் கட்சித் தலைவர் எட்வேட் டேவி (Rt. Hon. Sir Ed Davey MP) தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கும் அதன் அனைத்துலக வர்த்தகக் கொள்கைக்கும் இடையிலான தொடர்புகள் தொடர்பில் கூட்டு விசாரணையொன்றை ஆரம்பிக்கக்கோரி பிரித்தானிய தாராளவாத ஜனநாயக் கட்சித் தலைவாரான எட்வேட் டேவி கடிதம் ஒன்றை கடந்த 9ம் திகதி அனுப்பி வைத்துள்ளார்.

மக்களவையின் வெளிவிகாரத் தெரிவுக்குழுத் தலைவர், அலிசியா கார்ன்ஸ் (Alicia Kearns MP, Chair of the Foreign Affairs Commons Select Committee) அதன் அனைத்துலக வர்த்தக தெரிவுக்குழுத் தலைவர் அங்னஸ் மைக்நீல் (Angus MacNeil MP, Chair, International Trade Commons Select Committee)ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப்பபட்டுள்ள அக்கடிதத்தில், பிரித்தானியா நீண்டகாலமாகவே உலகில் மனித உரிமைகளைப் பாதுகாத்து வந்துள்ளது. அதற்கு களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது.

அதனால் உலகளவில் மனித உரிமைகளைப் பேணிப்பாதுகாப்பதில் எமது வெளிவிவகாரக் கொள்கைளும் அனைத்துலக வர்த்தகக்கொள்ளையும் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை தொடர்பில் எங்கள் நாடு கடைப்பிடித்துவரும் கொள்கைகள் தொடர்பில் தனது தொகுதியில் வாழும் மக்கள் கவலையடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எட்வேட் டேவி வர்த்தக அமைச்சராக இருந்த 2010-2012 காலப்பகுதியில் பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கு வரிச்சலுகை வழங்காதிருப்பதை தான் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

துரதிஸ்டவசமாக 2015-2016 இல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பிரித்தானியாவும் இலங்கையும் இவ்வரிச்சலுகையை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்யா, சீனா தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தினால் எழுந்துள்ள விளைவுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பிரித்தானியாவில் வெளிவிவகாரக் கொள்கையும் அதன் அனைத்துலக வர்த்தகக்கொள்கையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கவேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானியா அரசாங்கம் நீண்டகாலமாகவே இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக தனது கரிசனையினைத் தெரிவித்து வந்தது. இருந்தபோதிலும் இன்று அந்நாட்டிற்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நளினி, முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலை

உச்ச நீதிமன்ற உத்தரவின் பிரதி கிடைக்கப்பெற்ற காரணத்தினால் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தண்டனை அனுபவித்து வந்த, நளினி, முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சனிக்கிழமை மாலையே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டதையடுத்து, நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் முடிந்து சிறையிலிருந்து விடுதலையாகினர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, தனது தாயாரின் உடல் நிலையை கவனித்துக் கொள்ள பிணை கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிபந்தனையின் பேரில் பிணை வழங்கப்பட்டது. பிணையில் வெளிவந்த நளினி வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருந்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 10 மாதமாக அவர் பிணையில் தனது தாயார் பத்மா உடல் நிலையை கவனித்து வந்த சூழ்நிலையில், நேற்று அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்பின் பிரதி சிறைச்சாலைக்கு கிடைக்கப்பெற்ற நிலையில், பிணையில் உள்ள நளினியை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்பு சிறையில் விடுதலைக்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சாந்தன், முருகன் ஆகியோரும் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

சாந்தன் முருகன் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைப்பதற்காக, அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது போலவே, மற்ற நால்வரும் அடைக்கப்பட்டிருக்கும் புழல் மற்றும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கும் உச்ச நீதிமன்றத்தின் விடுதலை செய்யும் உத்தரவு கிடைக்கப்பெற்றது.

இதையடுத்து, புழல் சிறையில் இருந்து ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதற்கான நடைமுறைகள் முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்தனர். இருவரையும் பேரறிவாளன் வரவேற்றார். இருவரும் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது உறவினர்கள் சிறைக்கு வெளியே இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நளினியின் வழக்குரைஞர் புகழேந்தி பேசுகையில், நளினி இனி சுதந்திர பெண். அவர் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கலாம் என்று கூறினார். மேலும், அவர் சென்னையிலேயே இருப்பாரா அல்லது லண்டனில் தனது மகளுடன் இருக்க விரும்புவாரா என்று கேட்டதற்கு, அது பற்றி அவர் இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

முருகனின் நிலை குறித்துக் கேட்டதற்கு, விடுதலையாகும் 4 இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சாந்தன், இலங்கைக்குத் திரும்ப விரும்புவதாகக் கூறியுள்ளார். அதற்கான நடைமுறைகள் முடியும் வரை அவர் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்படுவார் என்று புகழேந்தி தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்த ஆறு பேரில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்கிற முருகன், சாந்தன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

எரிபொருள் கப்பல்களுக்கு தாமதக் கட்டணமாக 6 மாதங்களில் 10 மில்லியன் டொலர்கள்

டொலர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கம் எரிபொருள் இறக்குமதிக்காக கடந்த ஆறு மாதங்களில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை தாமதக் கட்டணமாக கப்பல் நிறுவனங்களுக்கு செலுத்தியுள்ளது என்று டெய்லி மிரர் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அந்நியச் செலாவணி நெருக்கடியின் விளைவாக, கப்பல் நிறுவனங்களுக்கு செலுத்த போதுமான அமெரிக்க டாலர்களைக் கண்டுபிடிக்கும் வரை எரிபொருள் சரக்குகளை இறக்குவதை தாமதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது.

இது தாமதத்தை விளைவிக்கிறது. மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை இராஜாங்க அமைச்சர் சானக கடந்த ஆறு மாதங்களில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தாமதக் கட்டணமாக கப்பல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்காலத்தில் அதனைத் தவிர்ப்பதற்கான வழிமுறையை அரசாங்கம் வகுக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கோரி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

“இந்த பொறிமுறையானது நடைமுறைக்கு வந்ததும், விநியோகஸ்தர்களிடமிருந்து விலை மனுக்கோரல் ஊடாக சேமிப்பு கிடங்குகளில் சேமிப்பதற்கு விரும்புபவர்களிடம் இருந்து எரிபொருள் சேமிப்புக்காக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் வழங்குவோம். பின்னர் பணம் செலுத்திய பின்னர் அதனை பயன்பாட்டுக்காக பெற்றுக்கொள்வோம். எனத் தெரிவித்தார்.

இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி இல்லாததால், இலங்கை தற்போது QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்கிறது.

QR குறியீட்டு முறையின் கீழ் விநியோகிக்க ஒரு மாதத்திற்கு 120,000 டன் டீசல் மற்றும் 100,000 டன் பெட்ரோலை நாடு இறக்குமதி செய்கிறது.

எரிபொருள் கொள்வனவுக்கான வெளிநாட்டுக் கடன் பத்திரங்கள் தொடர்பில் கேட்டதற்கு, நிறைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ரஷ்யாவின் கடன் வசதி குறித்து கருத்து தெரிவித்த அவர், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றார்

கடும் மழையால் யாழில் 1025 பேர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 305 குடும்பங்களை சேர்ந்த 1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது எனவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் டி.என் சூரியராஜா தெரிவித்தார்

கரவெட்டி,யாழ்ப்பாணம்,பருத்தித்துறை, மருதங்கேணி,சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் பாதிப்புகள் கூடுதலாக உணரப்பட்டுள்ளன. இதில் பருத்தித்துறைப்பிரதேச செயலர் பிரிவில் அதிகபட்சமாக 201 குடும்பங்களை சேர்ந்த 690 அங்கத்தவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் 16 குடும்பங்களை சேர்ந்த 46 அங்கத்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் 24 குடும்பங்களை சேர்ந்து 72 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 54 குடும்பங்களை சேர்ந்த 177 பேரும், யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவில் 25 குடும்பங்களை சேர்ந்த 80 பேரும் கரவெட்டி பிரதேச செயலக பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 அங்கத்தவர்களும் பாதிப்படைந்துள்ளன அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் கலந்துரையாடல்

21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு சந்திப்புகள் இடம்பெற்றன.

பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்பு பேரவையின் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க, அரசியலமைப்புச் சபைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நியமனங்களை உடனடியாக சபாநாயகரிடம் கையளிப்பதற்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது ஒப்புக்கொண்டனர்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாத மூன்று உறுப்பினர்களை அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களாக தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரும் வர்த்தமானி ஒன்றை வெளியிடுவதற்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு 02 வார கால அவகாசம் வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

வௌிநாட்டு பணம் அனுப்பல்களுக்கு ஊக்குவிப்புத் தொகை

தனியொரு பணப்பரிமாற்றத்தில் 20,000 ரூபாய்க்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட வௌிநாட்டு நாயணங்களை அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உரிமம் பெற்ற வங்கிகள் அல்லது வௌிநாட்டுப் பணத்தை பெற்றுக் கொள்ளும் முகவர்களிடமிருந்து குறித்த பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

பயனாளர்களின் பரிமாற்றல் செலவு மீளளிப்பாக இந்த ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

சம்பந்தனுக்கு நேரில் இ.தொ.க வாழ்த்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு ´ஜனநாயகப் பொன் விருது´ வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போசகர் சிவராஜா,பிரதி தலைவி அனுசியா சிவராஜா, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இரா.சம்பந்தன் ஆற்றிய சேவைகளுக்காக இவ்விருது பல வருடங்களுக்கு முன்னதாக கிடைத்திருக்க வேண்டியது என்றும், இவ்விருதானது தங்களுடைய அளப்பரிய சேவையை எடுத்துக் காட்டுகிறது எனவும் இவ்விருது கிடைத்தமைக்கு முழு மலையக மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இ.தொ.கா தெவித்துள்ளது.

இரா.சம்பந்தன் இ.தொ.காவின் வாழ்த்துக்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்ததுடன், தனக்கும் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்குமிடையிலான நட்புறவையும் நினைவுப்படுத்தினார்.

மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் எனது சிறந்த நண்பர் அவருடன் இணைந்து பல அறிவுப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டுள்ளளோம். மலையக மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் வரலாற்று சாதனைப் படைத்தவை என்றும், அரசாங்கத்தால் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்க்கப்பட்டு, முகவரியற்ற சமூகமாக மாற்றப்பட்ட போது அம்மக்களுக்காக அரசாங்கத்திற்கு எதிராக முன்னின்று பல போராட்டங்கள் செய்து, அதை வெற்றிக்கொண்டு, மலையக மக்களுக்காக பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுத்து அவர்களை ஒரு ஆளும் சமூகமாக மாற்றினார். அவருடைய அரசியல் சாணக்கியத்தை ஈடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக சமூக மேம்பாட்டிற்காக தொடர்ந்தும் வெற்றிகரமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையால் 9,300 மெட்ரிக் தொன் யூரியா விநியோகம்

ஐக்கிய நாடுகள் சபை இலங்கையின் சில பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 9,300 மெட்ரிக் தொன் யூரியாவை விநியோகிக்க உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), அமெரிக்க-யுஎஸ்எய்ட் (USAID), நிதியுதவியுடன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு, ஆகிய இடங்களில் 2.5 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடும் சிறுபோக நெல் விவசாயிகளுக்கு 9,300 மெட்ரிக் தொன் யூரியாவை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள கமநல சேவை நிலையங்களில் தகுதியான விவசாயிகளின் விநியோக பட்டியல் வெளியிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விநியோக பட்டியல்கள் 18, நவம்பர் 2022 வரை காட்சிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இந்திய தூதுவர்கள் திருகோணமலை விஜயம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோர், இராஜதந்திர பணியாளர்களுடன் திருகோணமலை லங்கா ஐஓசி முனையத்துக்கு சென்றுள்ளனர்.

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பிற்கு பங்களிக்கும் அதன் செயற்பாடுகள் குறித்து இரண்டு இராஜதந்திரிகளுக்கும் லங்கா ஐஓசி பணியாளர்கள் விளக்கமளித்ததாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை திருகோணமலை முனையத்தில் இருந்து இலங்கை சந்தைக்கான, லங்கா சுப்பர் டீசலின் முதலாவது விநியோகத்தையும் இந்திய உயர்ஸ்தானிகர், இதன்போது கொடியசைத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.

அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவரிடம் கையளிப்பு

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் “அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனம்” இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம்  கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள தூதரகத்தில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்து  கலந்துரையாடினர்.

அதன்பின்னர் இப் பிரகடனத்தை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜனிடம் கையளித்தனர்.