பிரதேச செயலக பிரச்சினைக்கு திலகரிடம் பிரதமர் தினேஷ் உறுதி

நுவரெலியா மாவட்டத்தில் புதிய ஐந்து பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டபோதும் அவை முறையற்ற வகையில் முழுமையான பிரதேச செயலகமாக அல்லாமல் உப செயலகமாக அமைகலகப்பட்டமையை மறுத்து மலையக அரசியல் அரங்கம் கடந்த ஒராண்டு காலமாக பல்வேறு போராட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடாத்தி வந்துள்ளது.

அதன் பயனாக அண்மையில் பாராளுமன்ற கலந்தாய்வு கூட்டத்திலும் இந்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து இது குறித்து பேசி இருந்தத்துடன் கலந்தாய்வு கூட்டத்தின் பின்னர் நேற்று (09) மேலதிக விளக்கங்களுக்காக பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து உரையாடப்பட்டது.

பிரதேச செயலக பிரச்சினைக்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாக

பிரதமர் தினேஷ் குணவர்தன உறுதி அளித்ததாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று (9/11) புதன்கிழமை பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு வழங்கி இருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரவிக்கப்பட்டுள்ளதாவது.

நுவரெலியா மாவட்டத்தில் புதிய ஐந்து பிரதேச செயலகங்கள் அமைப்பின் அநீதி குறித்து மலையக அரசியல் அரங்கம் கடந்த ஒராண்டு காலமாக பல்வேறு போராட்டங்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடாத்தி வந்துள்ளது.

முன்னைய அமைச்சரினால் முழுமையான பிரதேச செயலகங்களுக்கான வர்த்தமானி பிரகடனம் வெளியிட்டுள்ள போதும் காலி மாவட்டத்தில் அவை முழுமையாகவும் நுவரெலியா மாவட்டத்தில் அவை உப செயலகாமாகவும் திறக்கப்பட்டுள்ளமை பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டார்.

பிரதேச சபைச் சட்டத்திருத்த விடயத்திலும் எதிர்கட்சி உறுப்பினராக இருந்த காலத்திலும் கூட தமது பூரண ஒத்துழைப்பு வழங்கியதை அவருக்கு நன்றியுடன் நினைவு கூர்ந்து இந்த விடயத்திலும் நுவரெலியா மாவட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறு வேண்டினோம். விடயங்களை நன்கு உள்வாங்கிக்கொண்ட பிரதமர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக தமது பதவிக்காலத்தில் இந்தப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை விரைவாகப் பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்தார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

16 பிரேரணைகள் அடங்கிய பிரகடனம், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வெளியீடு

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ்பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாள் மக்கள் பிரகடனம் இன்று (08) காலை 10.30 மணிக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள 08 மாவட்டங்களிலும் நடைபெற்றது.

இதில் திருகோணமலை மக்கெய்சர் வெளியரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்கள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வெளியிடப்பட்ட மக்கள் பிரகடனம் பின்வருமாறு அமைகின்றது.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்பேசும் மக்களான நாம், அதிகாரப் பகிர்வு கோரிய எமது தொடர் நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாளான, 8 கார்த்திகை 2022 ஆகிய இன்றைய தினம் (08), வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களுக்கான நிலைபேறான அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை முன்வைக்கிறோம்.

கடந்த காலங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களைக் கருத்திற்கொண்டும், 13 ஆவது திருத்தத்தின் சாராம்சத்தைப் பரிசீலித்தும், குறிப்பாக 2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் மத்தியத்துவத்துடன் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிநடாத்தலில் ஜி. எல். பீரிஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினால் ஒஸ்லோ உடன்படிக்கை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட “ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான தீர்வு” என்பதனை சீர்தூக்கிப் பார்த்தும் இந்தப் பிரகடனம் மக்களின் குரலாக வெளிப்படுகிறது.

தமிழ் பேசும் மக்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டு பாரம்பரியமாக தமக்கேயான தனித்துவமான அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பிராந்தியத்தில் எண்ணிக்கைப் பெரும்பான்மையினரான தமிழ் மக்களுடன் எண்ணிக்கைச் சிறுபான்மையினரான தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட முறையில் மேற்கொண்டுவந்த இனவாத அடிப்படையிலான அரசியல், மொழி, பொருளாதார, சமூக ரீதியான அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளின் காரணமாகவே வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துள் மாகாண முறைமையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும், தமிழ் மொழியும் அரச கரும மொழியாக அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், 2006ல் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாண அலகு பிரிக்கப்பட்டு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக்கப்பட்டன.

1987இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை மூலமான 13 ஆவது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டு இற்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

இந்தக் கால இடைவெளியில் இலங்கை அரசினால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுடன் தமிழர்கள் மீது போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர் இடப்பெயர்வு மற்றும் பலவருடகால அகதிமுகாம் வாழ்வை அனுபவித்தனர். போரினால் இருப்பிடங்களும், சொத்துக்களும், வாழ்வாதாரங்களும் மரங்கள் உட்பட முற்றாக அழிக்கப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டதின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இராணுவமயமாக்கம், திட்டமிட்ட முறையிலான நில அபகரிப்பு, மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தலை இன்றுவரையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக எதிர்கொண்டுவரும் அரசியல் அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவந்து, கௌரவாமான, உரிமைகளுடன் கூடிய வாழ்வை வாழ்வதற்கு அடிப்படையான நிலைபேறான அரசியல் தீர்வொன்றின் அவசியத்தை வலியுறுத்துகிறோம்:

  1.  வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்
  2.  ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மத்திய அரசினால் மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்
  3. ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் பெண்கள் ஐம்பது வீதம் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்
  4.  முதலமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் சபையின் தலைமை உறுப்பினராக திகழ்வார்
  5. ஆளுநர் என்பவர் மாகாணத்தின் மக்கள் பிரதிநிகள் சபையைக் கட்டுப்படுத்தாதவராகவும் மத்திய அரசின் கௌரவ பிரதிநிதியாகவும் இருக்க வேண்டும்
  6. வடக்கு கிழக்கு மாகாண எல்லைக்கு உட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்
  7. மாகாண மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக்கொண்ட அபிவிருத்திசார் சர்வதேச ஒப்பந்தங்களை மாகாண ஆட்சி மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதில் சர்வதேச வணிகம், தொழிற்றுறை அபிவிருத்தி, நகரமயமாக்கல் அடங்கலான கட்டுமான அபிவிருத்தி ஆகியன அடங்கல் வேண்டும்
  8. காணி மற்றும் மாகாண ஆட்சியின் அதிகாரத்துக்கு உட்பட்ட ஏனைய அனைத்து விவகாரங்கள் சாhந்தும் சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாகாண ஆட்சிக்கு வழங்கப்பட வேண்டும்
  9. மாகாண அலகிற்கான பொலிஸ், உளவுத்துறை சேவைகள் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்
  10. நீதித்துறை, அரச நிர்வாகம், கல்வி, பொதுச்சுகாதாரம், பொதுப்போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்சாரம், எரிபொருள் அடங்கலான ஏனைய அனைத்து துறைகளும் கவனத்திற்கொள்ளப்பட்டு மாகாண ஆட்சிக்குள்ள அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
  11. தற்போது வடக்கு கிழக்கில் காணப்படும் இராணுவமயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கான இராணுவம் என்பது 1983களுக்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும்
  12. தற்போதைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் கரையோரப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மிதக்கும் கடற்படைத்தளங்களை தேவையான கடற்பிரதேசங்களில் மத்திய அரசு அமைக்க வேண்டும். இதன்மூலம் மக்கள் காணிகள் இராணுவத்தின் வசமிருந்து விடுவிக்கப்படுவதுடன் இயல்புவாழ்வை மீளப்பெற முடியும்
  13. இலங்கையின் மத்திய அரசானது, வடக்கு கிழக்கு மாகாண அலகு பொருளாதாரப் பலம் அடைவதற்காக குறிப்பிட்ட காலம்வரையில் தேவையான நிதிசார் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்
  14. தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்கள் சார்ந்து பொறுப்புக் கூறும் கடப்பாட்டை இலங்கை அரசு கொண்டுள்ளது. எனவே சர்வதேச சட்டங்களுக்கு அமைய ஐ.நா.வின் வழிகாட்டலில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து நீதிப்பொறிமுறைகளை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்
  15. வடக்கு கிழக்கு மாகாண அலகானது மாகாணத்துக்குள் வாழும் அனைத்து இன, மத மக்கள் மத்தியிலும் சகவாழ்வு, இன-மத நல்லிணக்கம், ஒருமைப்பாடு, சகோதரத்துவம் ஆகிய நிலைபேறான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்
  16. மத்திய அரசானது, இலங்கை நாட்டின் மக்கள் அனைவரினதும் ஜனநாயக வாழ்வு, இன நல்லிணக்கம், சகவாழ்வு, ஒருமைப்பாடு, சகோதரத்துவம் ஆகிய மனிதப் பண்புகளை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்

வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு ஐக்கிய இலங்கைக்குள் மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க நாம் அயலிலுள்ள நட்புநாடான இந்தியாவையும், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜேர்மன், அடங்கலான மையக்குழு நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும், ஐ.நா.சபையையும் கோருகிறோம். என மக்கள் பிரகடனம் அமைந்திருந்தது.

 

Posted in Uncategorized

அரசியல் தீர்வை வழங்காமல் புதிதாக வருகின்ற முதலீடுகளால் பயனில்லை – சம்பந்தன்

இலங்கையில் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதைத் தாம் வரவேற்பதாகவும், இருப்பினும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாக இருக்கக்கூடிய அரசியல் தீர்வின்றி புதிதாக வருகின்ற முதலீடுகளால் எவ்வித நன்மையும் கிட்டாது என்றும் இலங்கைக்கு வருகைதந்துள்ள கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள அவ்வர்த்தகப்பிரமுகர்கள் குழுவினர், தமிழ்மக்களுக்கு மிக அவசியமான 5 – 6 தீர்வுகளைப் பட்டியலிட்டு தம்மிடம் வழங்கினால் அதனை கனேடிய அரசாங்கம் மற்றும் கனேடியத்தூதுவருடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்க தம்மால் முடியும் என்றும், அதனூடாக பொருளாதார மீட்சிக்குப் பங்களிப்புச்செய்யும் அதேவேளை அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தையும் வழங்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பை ஏற்று இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் நோக்கில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் தலைமையில் கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் 17 பேரடங்கிய குழுவொன்று கடந்த வாரம் நாட்டை வந்தடைந்துள்ளதோடு பல தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தி வருகின்றது  என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களை பாதிக்கும் வகையில் இராணுவ சோதனை சாவடிகள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வீதி சோதனை சாவடிகளை அமைத்து போதைப்பொருளை கடத்தலை கட்டுப்படுத்த முடியாது என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் போதைவஸ்து பாவனை என்பது யுத்தத்துக்கு பின்னரே அறிமுகமானது. இன்றுவரையும் யாழ்ப்பாணம் முப்படையினுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. இங்கு யார் என்ன செய்தாலும் படையினருக்கு உடனடியாகவே தகவல்கள் தெரியும்.

மஞ்சள் கடத்தப்படும் போது உடனடியாக பிடிக்கப்படுகின்றது. வேறு பொருட்கள் வரும்போது உடனடியாக கடத்தல் குழு பிடிக்கப்படுகிறது. ஆனால் போதை வஸ்து வரும் போது அவ்வாறான நிலை காணப்படுவதில்லை. கடற்படையினர் இந்திய மீனவர்கள் வரக்கூடாது என்பதற்காக பல ரோந்து நடவடிக்கையை ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்திய மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.இலங்கை கடற்படை திறமையாக செயல்படும்போது கேரள கஞ்சாவை இங்கு தடை செய்ய முடிவது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல.

பல்வேறு போதைப்பொருட்கள் தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திற்கு தாராளமாக வருகின்றது. ஆனையிறவு சோதனைச்சாவடி, வவுனியா சோதனைச் சாவடிகளை தாண்டி மிகப் பெருமளவிலான போதைவஸ்துக்கள் வருவதுடன் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

யாழ்ப்பாணத்து வீதிகளில் சோதனைச் சாவடிகளை போடுவதால் போதைவஸ்துகளை நிறுத்திவிட முடியாது. கொழும்பிலிருந்து வரும் போதைவஸ்துகளை தடுப்பதும் இந்தியாவில் இருந்து வரும் போதைவஸ்துகளை தடுப்பதற்கும் இராணுவத்தை வீதியில் போடுவதால் நிறுத்தி விட முடியாது. பிரதான வீதிகளில் சாவடிகளை போட்டால் உள்வீதிகள் எவ்வாறு செல்ல முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.

போதை வஸ்தை இல்லாமல் செய்வது நோக்கமா? சோதனைச்சாவடியை போடுவது நோக்கமா என்ற கேள்வி எழுகிறது. மீண்டும் இங்கு சோதனை சாவடிகள் அமைப்பது சாதாரண மக்களை பாதிக்கும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர் இலங்கை விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய வர்த்தகத் தூதுவர், லோர்ட் டேவிஸ் மூன்று நாள் விஜயமாக கொழும்பு வந்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய முன்னாள் வங்கியாளரும் , முன்னாள் தொழிற்கட்சி அமைச்சருமான இவர், 2020 அக்டோபரில் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜோன்சனினால் இலங்கைக்கான இங்கிலாந்து பிரதமரின் வர்த்தக தூதுவராக நியமிக்கப்பட்டார்.

வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கிலும், இங்கிலாந்து-இலங்கை பொருளாதார கூட்டாண்மையின் பரஸ்பர வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் அவர் பல்வேறு வணிக மற்றும் அரசாங்க பங்குதாரர்களை சந்திப்பார் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதிகளவு இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சவூதி அரசாங்கம் ஒப்புதல்

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை வீட்டுப் பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதற்கும், கட்டுமானம் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு அதிகமான இலங்கையர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளதாக, இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் சவூதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பொறியியலாளர் அஹ்மத் பின் சுலைமான் அல்ரஜி ஆகியோருக்கு இடையிலான செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலின் போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

சில காலமாக கட்டுமானத் துறையில் பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருந்த பல வேலை வாய்ப்புகள் புதிய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் திறமையான தொழிலாளர்களுக்கு திறக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கலந்துரையாடலின் போது, ​​சவூதி அரேபிய மனித வளங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர், சவூதி அரேபியாவில் நிர்மாண மற்றும் சுகாதாரத் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு இருதரப்பு குழுக்களை நியமிக்க ஒப்புக்கொண்டார்.

இலங்கை வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் நிலவும் முறைகேடுகளை களைவது தொடர்பாக 30 நாட்களுக்குள் பரிந்துரைகளை வழங்க ஆலோசனைக் குழுவொன்றை நியமிப்பதற்கும் அவர் இணக்கம் தெரிவித்திருந்தார்.

இலங்கை தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பளத்தை மேலும் அதிகரிக்க சவூதி  அமைச்சர் இணக்கம் தெரிவித்திருந்தார். இது தொடர்பான பரிந்துரைகளும் முப்பது நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. சவூதி அரேபியாவில் வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது இலங்கையில் உபரி ஊழியர்களைக் கொண்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

வீட்டுப் பணியாளர்களின் ஆட்சேர்ப்புக் கட்டணம் மற்றும் அது தொடர்பான செலவுகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், தவறான செயல்களில் ஈடுபட்ட சுமார் 400 வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் இராஜதந்திர பிரதிநிதிகள் மற்றும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

சர்வதேச நாணய நிதிய முகாமைத்துவ பணிப்பாளரை சந்தித்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்டலினா ஜோர்ஜியேவா ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எகிப்தில் இடம்பெற்று வரும் கோப் – 27 மாநாட்டில் பங்குபற்றவதற்காக அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு பல்வேறு தரப்பினருடனும் முக்கிய சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளார்.

அதற்கமையவே நேற்று செவ்வாய்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அன்டலினா ஜோர்ஜியேவாவையும் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது கடன் முகாமைத்துவம் தொடர்பில் வெற்றிகரமான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் கானா நாட்டின் நிதி அமைச்சர் மற்றும் மாலைதீவின் சபாநாயகர் ஆகியோர் மொஹமட் நஷீட் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இ.தொ.காவிற்கும் இடையில் கலந்துரையாடல்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து, TANTEA தோட்டங்களில் குடியேறியுள்ள பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினை தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும்  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்றவர்களின்  வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் கூட்டுப் பொறுப்பு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அரசாங்கங்களுக்கும் உண்டு.

மேலும் மலையகத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டிய 10,000 வீடுகள் குறித்தும், பெருந்தோட்ட இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில்  இந்திய ஆசிரியர்களை நியமித்து,புதிய பாடநெறிகள் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்ரஸால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இதன் போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் அரசியல் பிரிவுக்கான முதன்மைச் செயலாளர் திருமதி பானு ஆகியோர் தெரிவித்தனர்.

போதை பொருள் பயன்பாடு, கலாச்சார சீரழிவுகளுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும் – கலாநிதி ஆறுதிருமுருகன்

போதை பொருள் பயன்பாடு,  கலாச்சார சீரழிவுகளுக்கு எதிராக  பெண்கள்  போராடினால் இந்த  பிரச்சினைகளை தீர்க்க முடியும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் முழுநிலா கலைவிழா நிகழ்வு திங்கட்கிழமை (07) மாலை பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

 இன்றைய சமுதாயத்தில் செயல்பாடுகள் வேதனைக்குரிய விடயமாக மாறி உள்ளது. இன்றைய நாகரீகமாக வீதிகளில் சும்மா நிற்பதே  வேலையாக உள்ளது. இத்தகைய ஒரு சமுதாயத்திற்காக கடந்த காலங்களில் போராட்டங்கள் இடம்பெற்றது. எத்தனை இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை எதிர்கால சமுதாயத்திற்காக இறந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று வேதனை தரும் விடயமாக மாறி உள்ளது.இன்றைய சமுதாயத்திற்கு  துன்பங்களை சொல்லி வழக்காத நிலை உருவாகியுள்ளது.

தண்ணிர் போத்தலை காசுக்கு வாங்கி குடிப்பதை கெளரவம் என்று நினைக்கத் தொடங்கியுள்ளோம். கிணற்றில் தண்ணீர் அள்ளி குடித்து தையிரியத்துடன் வாழ்ந்த சமுதாயம் இன்று எல்லாத்திற்கும் காசு கொடுக்கிறோம். இவற்றில்  மாற்றம் வேண்டும்.

எத்தனையோ தேசங்களில் பலர் கடின உழைப்பு ஊழைக்கிறார்கள். மேலைநாடுகளில் பல்கலை மாணவர்கள் பகுதி நேரமாக வேலை செய்கிறார்கள். இங்கும் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு வந்துள்ள தென்னிலங்கை மாணவர்கள் பகுதிநேரமாக விடுதிகளில்  வேலை செய்கிறார்கள்.

வீட்டில் கஸ்டம் என்பதால் நாங்கள் வேலை செய்து உழைக்கிறோம் என்கிறார்கள். எமது பகுதியில் பல்கலைக்கழகம் கிடைத்தவுடன் பல லட்சம் பெறுமதியில் மோட்டார்சைக்கிள்  கொடுத்துள்ளார்கள்.அவர் சும்மா சுற்றி திரிகிறார்கள்.இவ்வாறு செய்து கொடுத்துவிட்டு போதை ,கலாச்சார சிரழிவு என  மற்றவர்களை குறை கூறுபவர்களாக மாறிவிட்டோம்.

இதற்கு முழு குற்றவாளிகளும் நாங்கள் தான் எங்களுடைய பிள்ளைகள் தான் அறுவடை செய்கின்றோம். வெளியிலிருந்து வந்து எங்களுக்கு தீமை செய்யலாம் ஆனால்  நாங்கள் திடமாக இருந்தால் எங்களை யாரும் மாற்றிவிட முடியாது.போதைவஸ்தை வெளியில் இருந்து விதைக்கிறார்கள் என்பதற்கு அப்பால் ஏன் இதற்குள் செல்கிறிர்கள் என்பதே கேள்வி?

போதைவஸ்தை ஏழைகள் செய்வதாக நினைக்கவேண்டாம் பணக்காரர்தான் அதனை வியாபாரமாக்கிறார்கள். இன்று போதைவஸ்தை பற்றி கதைக்கிறோம் 2009 ஆண்டிற்கு பின்னர் வடக்கில் எத்தனை மதுசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனை கண்டித்து ஏன்  பெண்கள் ஏன் இதனை தடுக்க முன்வரவில்லை? போராட்டம் செய்ய முன்வரவில்லை?  பெண்கள் எல்லாம் படித்தவர்கள்  பல இடங்களிலும் தலைமை பொறுப்பில் உள்ளார்கள் கார்கள் வாகனங்கள் ஒடுகிறார்கள்.

பெண்கள் போதை ,சீரழிவு போன்ற பிரச்சினைகளை கையில் எடுத்தால் இந்த நாட்டில் பல பிரச்சினைகள் தீரும் சமுதாயம் பழுதாவதற்கு இளம் பிள்ளைகளை பிழை கூறமுடியாது. பெற்றோரிடம் இருக்க வேண்டிய ஒழுக்கம் ,பண்பாடு ஆசிரியர்களிடம் இருக்கவேண்டிய ஒழுக்கம் பண்பாடு இவை சரியாக அமைகின்ற போதுதான் சமுதாயத்தை வழிநடத்த முடியும் என்றார்

பொலிஸார் சிறுவர்களையும் சித்திரவதைக்கு உட்படுத்தும் மனநிலையில் உள்ளனர் அம்பிகா சற்குணநாதன்

பொலிஸார் எங்களை தாக்கினார்கள்.  அவர்கள் எங்களை முழங்காலில் இருக்கவைத்தனர். அட்டைகளை எங்கள் மீது விட்டனர் மின்சார சித்திரவதை செய்தனர் .எங்கள் கைகளில் விலங்கிட்டு ஜீப்பிற்கு கொண்டு சென்ற அவர்கள் எங்களை ஜீப்பில் முழங்காலிடச்செய்து மின்சார சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்  மாணவர் ஒருவரின் தோல் உரிந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

ஆசிரியர்கள் மாணவர்களிற்கு உடல்ரீதியான தண்டனையை வழங்கிய பொலிஸார் மாணவர்களை தண்டித்த  மில்லனியாசம்பவம் இலங்கையில் அரச அதிகாரிகள் சிறுவர்களிற்கு வன்முறைகளை தயக்கமின்றி பயன்படுத்துவதை  வெளிப்படுத்தியுள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது புதிய விடயமல்ல,இது அமைப்பு ரீதியானது. தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் இவ்வாறான கலாச்சாரம்  தொடர்வதற்கு காரணமாக உள்ளது.

வன்முறைகளை இவ்வாறு மிகவும் சாதாரணமாக பயன்படுத்துவது சமூகத்தில் வன்முறைகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணியாக காணப்படுகின்றது.

எந்த வித தயக்கமும் இன்றி  உடனடியாக சித்திரவதைகளில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ள பொலிஸாருக்கு ஏனைய சூழ்நிலைகளில் வன்முறைகளை பயன்படுத்துவது கஸ்டமான விடயமாகயிருக்காது.

உதாரணத்திற்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வன்முறைகளை  அல்லது வீதியில் தவறான திசையில் வாகனத்தை செலுத்துபவர்களை தண்டிப்பது போன்றவை. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் எங்களை தாக்கினார்கள்  அவர்கள் எங்களை முழங்காலில் இருக்கவைத்தனர் அட்டைகளை எங்கள் மீது விட்டனர் மின்சார சித்திரவதை செய்தனர் எங்கள் கைகளில் விலங்கிட்டு ஜீப்பிற்கு கொண்டு சென்ற அவர்கள் எங்களை ஜீப்பில் முழங்காலிடச்செய்து மின்சார சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள்  மாணவர் ஒருவரின் தோல் உரிந்து இரத்தம் கொட்ட தொடங்கியது.

சித்திரவதை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் அடையாளங்கள் தெரியாமலிருப்பதற்காக கால்பாதத்தில் கொட்டனால் அடித்துள்ளனர்- ஸ்கான் பண்ணுவதன் மூலம் மாத்திரமே ஏற்பட்ட காயங்களை கண்டுபிடிக்க முடியும்.

இவற்றை பொலிஸ் நிலையத்தில் வைத்து செய்யவில்லை பொலிஸ் ஜீப்பில் கொண்டு செல்கையில் இதனை தெரிவித்துள்ளனர் – வழமையான தந்திரோபாயம்.

பொலிஸார் ஆபாசமான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர்,இங்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து சித்திரவதைகளும் பெரியவர்களிற்கு எதிராக பயன்படுத்தப்படுபவை.

10 வயது மாணவர்கள் மீது  இந்த சித்திரவதைகளை பொலிஸார் பயன்படுத்தியமை மிருகத்தனம்  சமூகத்தில் ஆழமாக்கப்படுவதையும்,உளவியல் சமூக தலையீடுகள் அவசியம் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.