குருந்தூர் விவகாரத்தை கோயில் நிர்வாகமும் முல்லை மக்களும் தான் முடிவெடுக்க வேண்டும் – சபா குகதாஸ்

குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும் மாறாக சட்டவிரோத விகாரைகளை அமைத்த விகாராதிபதிகளும் இந்து அமைப்பு என்ற பெயரில் புலனாய்வு அமைப்புக்களின் பின்னணியில் இயங்கும் போலி நபர்களும் முடிய அறைக்குள் முடிவுகளை எடுக்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

குருந்தூர் மலை விடையத்தில் நீதிமன்ற கட்டளைகளை திசை திருப்பும் நோக்கில் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் சிவன் ஆலயம் அமைத்தல் என்ற பித்தலாட்ட நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். காரணம் குருந்தூர் மலையில் மிகப் பழைமை வாய்ந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அழிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் சட்டவிரோதமானது எனவும் அதனை நீக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

அவ்வாறான நிலையில் சட்டவிரோத கட்டடங்களை அமைத்த விகாராதிபதிகளுடன் இணைந்து பிறிதொரு இடத்தில் சிவன் ஆலயம் அமைத்தல் என்பது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதாகவும் நீதிமன்ற கட்டளைகளை சிங்கள ஆட்சியாளர்களும் அரச இயந்திரமும் அவமதிப்பதற்கு அப்பால் கோயில் நிர்வாகமும் அவமதிப்பதாக அமையும் அவ்வாறான ஒரு சூழ்ச்சிதான் போலி இந்து அமைப்பின் பினாமிகளால் மேற்கொள்ளப்படுகின்றது.

குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களமும் சிங்கள பௌத்த பிக்குகளும் மேற் கொள்ளும் திட்டமிட்ட அடாவடிகளையும் நீதிமன்ற கட்டளைகளை மீறுகின்ற செயற்பாடுகளையும் நியாயப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் இந்த முன்னகர்வு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என் குறிப்பிட்டுள்ளார்.

குருந்தூர் மலையில் பொலிஸ் பாதுகாப்போடு ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல் வழிபாடுகள்

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையில் பௌத்த மக்களும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்த வழிபாட்டுக்கு குமுழமுனை, தண்ணிமுறிப்பு வீதியால் சென்ற மக்கள் பொலிஸாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் விதிகளுக்கமைய, ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நிலத்தில் கல் வைத்து, அதன் மீது தகரம் வைத்து, அதற்கு மேல் கல் வைத்து பொங்கல் பொங்கினர்.

ஒரு இடத்தில் மட்டுமே நெருப்பு மூட்ட அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை, ஏனைய பக்தர்கள் பொங்கல் பொங்க அனுமதிக்கப்படவில்லை.

அதன்படி, குறித்த ஓர் இடத்தில் நெருப்பு மூட்டி, இரண்டு தடவைகள் பானையில் பொங்கல் பொங்கி, படைத்து வழிபாடுகளை மேற்கொண்டபோது, அவ்விடத்தில் பௌத்த துறவிகளால் குழப்ப நிலை ஒன்றும் ஏற்பட்டது. எனினும், அதனை பொலிஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மறுபக்கம், பௌத்த விகாரையில் பௌத்த மக்களாலும் பௌத்த துறவிகளாலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு பகுதிகளுக்கும் இடையில் பொலிஸாரின் பாதுகாப்பு பலமாக போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் பொங்கல் பொங்கி படைத்து, பூசை வழிபாடுகளை மேற்கொண்டு பிரசாதங்களை பரிமாறினார்கள்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.

 

இதேவேளை, பௌத்த விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகளில் வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் தலைமையில் 29 தேரர்கள் மற்றும் சுமார் 300 பேர் வரையிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

குருந்தூர் மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானம்

முல்லைத்தீவு- குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன.

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பெளத்த இந்து அமைப்புகள் இதனை அறிவித்தன. நாளைய தினம் (18)குருந்தூர் மலையில் சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிகழ்வில் ஆரியகுளம் நாக விகாராதிபதி, குருந்தூர் மலை விகாராதிபதி, தையிட்டி விகாராதிபதி, நாவற்குழி விகாராதிபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறைகள் எதையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – அலி சப்றி

மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வை காண்பது தொடர்பில் இலங்கை எந்தவொரு வெளிபொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரிஇராஜதந்திர சமூகத்தினருக்கு மீண்டும் தெளிவாக தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவையின் அமர்வு அடுத்தமாதம் இடம்பெறவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் குறித்;த அலுவலகம் மூலமும் ஏனைய அமைப்புகள் மூலமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நான் தெளிவுபடுத்தியுள்ளேன் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து கொழும்பை தளமாக கொண்ட இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்தும்தெளிவுபடுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தராதங்களிற்கு ஏற்ற பயங்கரவாத தடைச்சட்டம் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஆதரித்த நாடுகளின் முக்கிய வேண்டுகோளாக காணப்படுகின்றது.

பொருளாதாரமீட்சி மற்றும் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும்அவர் எடுத்துரைத்துள்ளார்.

இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் கைது

இந்த ஏழு இலங்கையர்களும் நேற்று புதன்கிழமை (16) எல்லை தாண்டியபோது கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

ஜோர்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஏழு இலங்கையர்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், ஜோர்தானிய – இஸ்ரேல் எல்லையில் பணிபுரிய ஆபிரிக்கா, ஆசியா மற்றும் துருக்கியைச் சேர்ந்தவர்கள் அங்கீகரிக்கப்படாமல் நுழைந்ததாகப் பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த வருடம் இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க முயன்ற 52 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் நிதி நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண சீனா தயார்

இலங்கையின் நிதி நெருக்கடி சவால்களுக்கு தீர்வினை காண்பதற்கு உதவுவதற்கு தயார் என சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வங் யி இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஸ் குணவர்த்தனவுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா எப்போதும் இலங்கையின் நம்பகதன்மை மிக்க மூலோபாய சகா என தெரிவித்துள்ள அவர் இலங்கை எப்போதும் சீனாவிற்கு நட்பாகயிருந்துள்ளது முக்கிய நலன்கள் குறித்த விடயங்களில் சீனாவிற்கு ஆதரவாக விளங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இறைமை சுதந்திரம் மற்றும் தேசிய கௌரவம் ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கைக்கு சீனா எப்போதும் ஆதரவை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஒக்டோபரில் சீன ஆராய்ச்சிக் கப்பல் விஜயம்

இலங்கைக்கு ஒக்டோபர் மாதத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை மீண்டும் பெரும்புவிசார் அரசியல் சிக்கலை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கையின் அம்பாந்தோட்டை கொழும்புதுறைமுகங்களில் தரித்துநிற்கும் என எதிர்பார்க்கப்படும் சீனாவின் சியான் 6 ஆராய்ச்சி கப்பல் குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது.

ஒக்டோபர் 25ம் திகதி சீன கப்பல் இலங்கையை வந்தடையும் என்பதை இலங்கை கடற்படை நேற்று உறுதி செய்துள்ளது.

குறிப்பிட்ட கப்பல் 17 நாட்களுக்கு இலங்கையில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும்.

இலங்கையின் நாரா அமைப்புடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவே இந்த கப்பல் இலங்கை வருகின்றது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை ருகுணுபல்கலைகழகத்துடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறிப்பிட்ட கப்பல் இலங்கைக்கு வருகின்றது என நாரா தெரிவித்துள்ளது.

தனது ஆராய்ச்சிகளுக்கு அவசியமான மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்காக அந்த கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தவுள்ளதாக நாரா தெரிவித்துள்ளது.

பிரான்ஸின் போர்வையில் இலங்கையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த முயற்சி

பிரான்ஸ் என்ற முகமூடி அணிந்து இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிக்கிறது. திருகோணமலையில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய புலனாய்வு சேவை கடுமையாக எதிர்த்துள்ளது என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

திருக்கோணமலை மாவட்டத்தில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தை அமைக்க பிரான்ஸ் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியின் குறுகிய நேர இலங்கை விஜயத்துக்கான நோக்கம் தற்போது வெளிப்பட்டுள்ளது.

திருகோணமலையில் பிரான்ஸ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தை அமைக்கும் கோரிக்கையை தேசிய புலனாய்வு சேவை கடுமையாக எதிர்த்து இந்த யோசனை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பிரதான பேசுபொருளாக காணப்படும் பின்னணியில் பிரான்ஸுக்கு இடமளித்தால் அது தவறான எடுத்துக்காட்டாக அமையும்.

பிரான்ஸை தொடர்ந்து அமெரிக்கா, சீனா, உள்ளிட்ட பலம்வாய்ந்த நாடுகளுக்கும் இலங்கையில் முகாமிட அனுமதி வழங்க நேரிடும்.

திருகோணமலைக்கு பிரான்ஸ் வரவில்லை நேட்டோவில் பாதுகாப்பில் மேற்குலகில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. உலகில் அதிகாரமிக்க மையமான இந்திய பெருங்கடல் எதிர்வரும் காலங்களில் ஆசியாவின் நூற்றாண்டு என அழைக்கப்படும் என்று இராணுவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உலகிலும், ஆசியாவிலும் பலமான போட்டி நாடுகளாக இந்தியாவும் சீனாவும் காணப்படுகின்றன. இந்திய பெருங்கடலின் முக்கிய கேந்திரமாக இலங்கை காணப்படுவதால் பலமிக்க போட்டி நாடுகள் இலங்கையில் ஏதாவதொரு வழியில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள ஆரம்பத்தில் இருந்து முயற்சிக்கின்றன.

அமெரிக்கா 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எக்சா,சோபா மற்றும் எம்.சி.சி. ஆகிய ஒப்பந்தங்கள் ஊடாக இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்தது. நல்லாட்சி அரசாங்கம் அதற்கு சார்பாக செயற்பட்டது. நாட்டு மக்களின் எதிர்ப்பை ஒன்றிணைத்து அமெரிக்காவின் முயற்சியை முறியடித்தோம்.

பிரான்ஸ் ஊடாக தனது நோக்கத்தை அடைய அமெரிக்கா முயற்சிக்கிறது. இலங்கையில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தை அமைக்க வேண்டிய தேவை பிரான்ஸூக்கு கிடையாது. பிரான்ஸ் என்ற முகமூடி அணிந்துக் கொண்டு எம்மை ஏமாற்ற முடியாது என்பதை அமெரிக்காவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

இந்திய அரசினால் கடல்சார் கண்காணிப்பு டோனியர் விமானம் இலங்கை விமானப் படைக்கு கையளிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் இந்திய – இலங்கை உறவுகள் மேலும் வலுப்பெற்றதுடன் எதிர்காலத்தில் இருநாடுகளும் பரந்துபட்ட புரிதலுடன் செயற்பட வேண்டும் என எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தின் வருடாந்த பராமரிப்பு சேவைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தல் மற்றும் அதற்கு மாற்றீடாக கடல்சார் கண்காணிப்பு டோனியர் விமானமொன்றை இலங்கை விமானப்படைக்கு கையளிப்பதற்காக இன்று (16) கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, இந்திய கடற்படையின் டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் 2022 ஓகஸ்ட் 15 ஆம் திகதி இரண்டு வருட காலத்திற்கு இலங்கை விமானப்படையிடம் கையளிக்கப்பட்டது.

மேற்படி கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒரு வருடம் தொடர் சேவையை முன்னெடுப்பதற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்ததோடு, விமானத்தின் வருடாந்த பராமரிப்புக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த விமானத்திற்கு மாற்றீடாக மற்றுமொரு டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க,

‘‘நமது அயல் நாடான இந்தியா பெருமளவான உதவிகளை வழங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட கால உறவு உள்ளது. இலங்கை பொருளாதாரச் சரிவை எதிர்கொண்ட போது இந்தியாவின் நட்புக்கும் அப்பாற்பட்ட சகோதரத்துவத்தை உணர முடிந்தது.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டிருந்த இந்திய விஜயத்தின் பலனாக இருநாடுகளினதும் உறவு மேலும் வலுப்பெற்றது. அதற்கமைய எதிர்காலத்திலும் இருநாடுகளும் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்ற தீர்மானித்துள்ளன. தொடர்பு என்பது மிக முக்கியமானதாகும். அது விரிவான அர்த்தத்தை கொண்ட சொற்பதமாகும். அதனை வீதித் தொடர்புகள், மக்கள் இடையேயான தொடர்புகள், பொருளாதார தொடர்புகள், விநியோகத் தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு தொடர்புகளாக இருக்கலாம்.

கடந்த காலத்தில் கடினமாக நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டிருந்த போது, எமது கடல்சார் பணிகளுக்கு அவசியமான எரிபொருளை அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் நமது விமானப்படைக்கும் கடற்படைக்கும் வழங்கியிருந்தன.

விமானங்கள் மற்றும் மற்றைய இயந்திரங்களையும் பழுதுபார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்த நிலையில், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மத்தியில் விமானப் படையின் தேவைகளையும் பூர்த்தி செய்வது கடினமாக அமைந்திருந்தது.

புதிய தொழில்நுட்பங்களுக்கு அமைய எமது விமானங்களையும் வடிவமைக்க வேண்டிய தேவை இருந்தாலும், எமது பொருளாதாரச் சரிவினால் அதனை செய்ய முடியவில்லை. அந்த வகையில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன்.

எமது கடல்சார் நடவடிக்கைகளை கண்காணிக்கும் போது, சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம், ஆயுத கடத்தல் மற்றும் ஆள்கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் முக்கியமானதாக காணப்படுகின்றன. இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள நாடு என்ற வகையில் எமக்கு பெருமளவான பொறுப்புகள் காணப்படுகின்றன.

நாம் முகம்கொடுக்க வேண்டிய சவால்கள் தினமும் மாற்றமடைவதால், எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பணியாற்ற வேண்டும். இலங்கை கடற்படை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலும் தற்போதுள்ள நெருக்கடிகள் இருக்கவில்லை. யுத்த காலத்தில் இலங்கை விமானப் படை மீது சார்ந்திருந்த பணிகள் வேறுபட்டவையாகும். புதிய தொழில்நுட்பம் மற்றும் காலத்துடனான மாற்றங்களுக்கு இணையாக நாமும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும். அந்த நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம் ஜனாதிபதியால் தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக மணல் வியாபாரத்தை தடுக்கவும் வனவள கட்டமைப்பைப் பாதுகாக்கவும் அவதானம் செலுத்த வேண்டும். எமது நாடு சூரிய சக்தியும் காற்று வலுவும் நிரம்பிய நாடாகும். நாம் அவற்றை பாதுகாக்க வேண்டும். அந்த பணிகளில் படையினருக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.’’ என்று தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருடன் இந்திய உயர்ஸ்தானிகராலயப் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயமே – முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன்

சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய விவகாரமே என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு பகுதியிலே பேசும் பொருளாக காணப்படுகின்ற குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் விவகாரம் சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்றது. அவ் ஆலயத்தின் வரலாறு அதாவது எம் தமிழ் இந்துக்கள் இவ் ஆலயத்தினை எவ்வாறு வழிபாட்டார்கள் என்ற வரலாறு மிகப்பெரியது பழமையானது.

இருந்தும் அண்மைக்காலமாக சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையிலே அங்கு சென்று பொங்கல் வைத்து வழிபட முடியாத நிலை இந் நாட்டிலே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இருந்தும் பக்தர்கள் மத வேறுபாடுன்றி அங்கு சென்று பல்வேறுபட்ட வழக்குகளையும் தொடர்ந்திருக்கின்றார்கள் .

அந்தவகையில் அண்மையில் இடம்பெற்ற வழக்கிலே முல்லைத்தீவு நீதிமன்றம் மிகத்தெளிவாக கூறியிருக்கின்றது குருந்தூர் மலை ஐயனை நாம் எந்த தடையுமின்றி வழிபடவும், கலாசாரத்தை பேணவும் சகல உரிமை உண்டு என நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.

எனவே நிர்மூலப்பட்ட எமது பாரம்பரியமான பொங்கல் நிகழ்வை தொடர்ந்து செய்ய எமது ஆலயத்தின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வருகின்ற 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சரியாக 9 மணியளவில் மிக பிரமாண்டமான முறையிலே பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் எனவே இப்பிரதேசத்தில் இருக்கும் மக்கள் அன்றைய நாளை முழுமையாக எங்கள் வரலாற்றை, பண்பாட்டையும், குருந்தூரானுடைய வழிபாட்டு தன்மைகளை பேணுவதற்காக சகலரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு அதுமட்டுமல்லாது இம் மாவட்டத்திலே இருக்கும் சகோதர மதத்தவர்களும் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி எமது வழிபாட்டை நாம் தொடர்ந்து கொண்டு செல்ல வழிசமைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.