சம்பிக்க ரணவக்க தலைமையில் ஐக்கிய குடியரசு முன்னணி திங்களன்று அங்குரார்ப்பணம்

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி என்ற புதிய அரசியல் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை (22) மஹரக தேசிய இளைஞர் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேசன் உட்பட முக்கிய தரப்பினர் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ’43ஆவது படையணி’ என்பதை ஆரம்பித்து செயற்பாட்டு ரீதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

இளைஞர், யுவதிகளை முன்னிலைப்படுத்தி புதிய அரசியல் கட்சியான ‘ஐக்கிய குடியரசு முன்னணி’ நாளை மறுதினம் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய குடியரசு முன்னணி கட்சியை முன்னிலைப்படுத்தி போட்டியிடுவார் என அரசியல் களத்தில் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் முதலீடுகளை செய்யுமாறு புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ரணில் கோரிக்கை

போரினால் ஏற்பட்ட அச்ச நிலை காரணமாக இடம்பெயர்ந்து பன்னாடுகளிலும் வாழும்  புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வர்த்தகங்களை முன்னெடுக்கவும், முதலீடுகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  அதற்கு தேவையான ஒழுங்குகளை செய்யுமாறும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே இந்த விடயத்தை ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதன்போது ஜனாதிபதியிடம் கருத்துரைத்த ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார,

புலம்பெயர் தமிழர்கள் பலர் இலங்கையில் அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைக்க விரும்புகின்றனர். எம்முடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினர்.

குறிப்பாக, ஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க புலம்பெயர் தமிழர்கள் ஆர்வமாக உள்ளனர். உண்மையில், அவர்கள், நெருக்கடியான இந்த நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு தயாராகவே உள்ளனர். சம்பிரதாயபூர்வமான தமிழ் அரசியல் கட்சிகள் மீது புலம்பெயர் தமிழர்களுக்கு தற்போது நம்பிக்கை இல்லை. அவர்கள் அதனை விரும்பவும் இல்லை.

இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் வளமான மாற்றத்தையே புலம்பெயர் தமிழர்கள் விரும்புகின்றனர். வடக்கு, கிழக்கில் உள்ள இளையோரும் அதனையே கோருகின்றனர்.

எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வடக்குக்கு மீண்டும் செல்லவுள்ளேன். எனவே, இந்த நேரத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிப்பது சிறந்தது என்று நீண்ட விளக்கத்தை அளித்தார்.

இதற்கு மறுமொழியளித்து ஜனாதிபதி ரணில் கூறுகையில், புலம்பெயர் தமிழர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அழையுங்கள். அவர்களுக்கு தேவையன ஒத்துழைப்புகளை வழங்குங்கள். அரசியலில் ஈடுபடும்போது, உலக அரசியல் போக்கை போன்று தேசிய அரசியல் நகர்வுகள் குறித்தும் மதிப்பாய்வு செய்யுங்கள். இது அனைவருக்கும் முக்கியமானது என கூறினார்.

இலங்கையுடன் புதிய சோபா உடன்படிக்கை எதனையும் முன்னெடுக்கும் திட்டமில்லை- அமெரிக்கா

இலங்கையுடன் மீண்டும் புதிய சோபா உடன்படிக்கை எதனையும் முன்னெடுக்கும் திட்டம் எதுவுமில்லை என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களிற்கான அமெரிக்க பணியகத்தின் துணை உதவிச்செயலாளர் அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வது குறித்து தற்போது அமெரிக்கா சிந்திக்கவில்லை என அவர்தெரிவித்துள்ளார். இது குறித்து நாங்கள் தற்போதைக்கு சிந்திக்கவில்லை என அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார்.

இருநாடுகளிற்கும் இடையில் சோபா உடன்படிக்கையை செய்துகொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் 2019 இல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் அமெரிக்கா இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமான விதத்தில் செயற்படுகின்றது என தெரிவித்துள்ள அப்ரீன் அக்தர் குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு விவகாரங்களில் மிகவும் நெருக்கமாக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கடற்படைக்கு அமெரிக்க கடற்படை கலத்தை வழங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா விசேட கடல்ரோந்து விமானமொன்றை இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அது அடுத்தவருடம் இலங்கைக்கு வந்துசேரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தோபசுபிக் பிராந்தியத்தில் இலங்கையை அமெரிக்க வலுவான சகாவாக கருதுகின்றது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

யேர்மனியின் “டுசில்டோர்வ்” நகரில் உணர்பூர்வமாக நடைபெற்ற தமிழினப் படுகொலை மே 18 நினைவேந்தல்!

இலங்கை இராணுவம் உலக நாடுகளின் பேருதவியோடு 2009ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கில் முல்லை மாவட்டத்தின், முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொண்ட தமிழ்த் தேசிய இனம் மீதான அதி உச்ச அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில், ஈழத்தமிழர் மக்களவை, தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு ஆகியன ஒன்றிணைந்து யேர்மனியின் நான்கு (04) பிரதான பெரு நகரங்களில் உணர்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நான்கு நகரங்களில் ஒன்றான, யேர்மனிய மத்திய மாநில ஆளுகைக்குட்பட்ட “டுசில்டோர்வ்” நகரிலே பாராளுமன்ற அமைவிடத்திற்கு முன்பாகவுள்ள “லான்ராக்” நினைவுத் திடலில் நிகழ்வுகள் யாவும் மிகவும் உணர்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் பி.ப 2.30 மணியளவில் டுசில்டோர்வ் நகர பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலிருந்து மக்கள் பேரணியாக வலிசுமந்த கோசங்களை எழுப்பியபடி, பி.ப 4.15 மணியளவில் நினைவுத் திடலினை வந்தடைந்ததும் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாயின.

பொதுச்சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல், பொதுப்படங்களுக்கான மலர்மாலை அணிவித்தல், மலர், சுடர் வணக்கம், அகவணக்கம் என்பன இடம்பெற்றது.

அவற்றைத் தொடர்ந்து கவி வணக்கம், இசை வணக்கம், வலியுணர்த்தும் நடனம், தமிழ் மற்றும் வாழ்விட மொழியிலான உரைகள் என்பன இடம்பெற்றதுடன் தமிழ் இளையோர் அமைப்பின் உறுதியுரையும் இடம்பெற்று நிகழ்வுகள் நிறைவுபெற்று, இறுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுடனான உப்புக்கஞ்சியும் வழங்கப்பெற்றது.

புலம்பெயர் தாயக மக்கள், குர்திஸ்தான் மக்கள் பிதிநிதிகள், இடதுசாரிக் கட்சி உறுப்பினர், அருட் தந்தையரென பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை தொடர்பான புகைப்பட காட்சிப்படுத்தல்கள், வாழ்விட மொழியிலான துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் என்பன தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழம் குறித்து சர்வஜனவாக்கெடுப்பு – இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் – புதிய தீர்மானத்தை சமர்ப்பித்தனர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

தமிழீழம் குறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என கோரும் தீர்மானமொன்றை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சனப்பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பித்துள்ளனர்.

அமெரிக்க காங்கிரசின் டெபராரொஸ் பில் ஜோன்சன் இருவரும் இணைந்து ஈழத்தமிழர்கள் ஜனநாயகரீதியாகவும் சமத்துவமாகவும் பிரதிநிதித்துவம் செய்யப்படவேண்டும், நீடித்த அமைதியான அரசியல் தீர்வை காண்பதற்கு பொதுவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோரும் இருகட்சி தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் தமிழ்இன அழிப்பின் 14 வருடநினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழர்கள் ஈடுபட்ட தருணத்திலேயேஅமெரிக்கா காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளனர்.

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் தமிழர் தாயகப்பகுதிகளை இலங்கை இராணுவம் தொடர்ந்தும் ஆக்கிரமித்துள்ளதாகவும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ்மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காக குரல் எழுப்புவதை தடுக்கும் ஆறாவது திருத்தச்சட்டம் காரணமாக கருத்துசுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள தீர்மானம் தெரிவித்துள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும்,ஈழத்தமிழர்களின் பாராம்பரிய தாயகத்தை அங்கீகரிக்கவேணடும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் தீர்மானத்தின் நகலில் தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பைப் பதிவு செய்ய கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் அலி சப்ரி அழைப்பு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை தொடர்பில் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

‘இலங்கையில் இனப்படுகொலை’ நடந்தது என கனடா பிரதமர் வெளிப்படுத்தியது தொடர்பாக எதிர்ப்புப் பதிவு செய்ய கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் அலி சப்ரி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று (மே 18) கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரிப்பதாக கூறியது. அதில் இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டது.

கனேடியப் பிரதமரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இலங்கை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு தேசத்தின் தலைவரின் இத்தகைய பொறுப்பற்ற மற்றும் துருவமுனைப்பு அறிவிப்புகள் கனடாவிலும் இலங்கையிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக வேற்றுமையையும் வெறுப்பையும் வளர்க்கிறது என்று அமைச்சு மேலும் கூறியது.

கனடா மற்றும் அதன் தலைவர்கள் வெறுப்பு, தவறான தகவல் மற்றும் தீவிரவாத கருத்துக்களை ஊக்குவிக்கும் வகையில் கனடாவில் இருந்து அறிவிப்புகளை வெளியிடுவதை தவிர்க்குமாறும், திரிபுபடுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் இலங்கை மீதான உதவியற்ற கவனத்தை நிறுத்துமாறும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.

எனினும், இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதில் கனடா உறுதியாக உள்ளது. இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சுக்கு கனடா தகவல் வழங்கியது. இனப்படுகொலை தகவலை நீக்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோளை கனடா கண்டுகொள்ளவில்லை.

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வு பிரிவு ஸ்தாபிக்க தீர்மானம்

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வுப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பதிவாகி வருகின்ற இளம் தலைமுறையினருடன் தொடர்புடைய சட்ட விரோத சம்பவங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையாக சகல பாடசாலைகளினதும் ஒத்துழைப்புடன் இந்த புலனாய்வுப் பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைக் காலமாக நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பையும் பலவீனப்படுத்துவதற்கு வழிவகுத்த பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். பொது சேவையின் தரத்தை உயர்த்துவதுடன் தற்போதுள்ள அமைப்பில் தரமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

புதிய பட்டதாரிகளின் ஆளுமை, ஆர்வம், அறிவு மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது முக்கியத்துவமுடையதாகும். அனைத்து துறைகளிலும் சரியான நேரத்தில் சீர்திருத்தங்கள் அவசியமாகும்.

முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்குள் மாத்திரம் வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகளை அமைக்க தீர்மானம்

முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்குள் மாத்திரம் வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்டான, ஹல்பே கோபியாவத்தை பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை உரிமையாளரான ஓமான் பிரஜையொருவர் தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் பதிவாகாமல் இருப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அதற்கமைய, நாட்டில் உள்ள சில இடங்களுக்குள் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, கண்டி மாவட்டத்தை கேந்திர மையமாகக் கொண்டு, இவ்வாறான முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் பலவற்றை அமைப்பதற்கான இடங்களை தெரிவுசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகள் இந்நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் மாத்திரம் அவற்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் 200 ஆடை தொழிற்சாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் வெளியிடங்களிலும் அவை ஸ்தாபிக்கப்பட்டன.

இந்நிலையில், முதலீட்டு வலயங்களுக்குள் பிரத்தியேக பாதுகாப்பு அமைப்பு நடைமுறையில் உள்ளதால், முதலீட்டாளர்கள் மீது வெளியாட்கள் யாரும் செல்வாக்கு செலுத்தக்கூடாது என்பதற்காக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும், ஏற்றுமதி முதலீட்டு வலயங்களுக்கு வெளியில் அமைந்துள்ள வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறும், ஏதேனுமொரு தரப்பினரிடமிருந்து அநாவசியமான அழுத்தங்கள் காணப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் தொடர்பில் மீளாய்வுக் கூட்டம்

மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி, சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் முன்னெடுப்பது தொடர்பான மீளாய்வு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இன்று (19) வெள்ளிக்கிழமை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களில் மீள்புதுப்பிக்கத்தக்க உட்கட்டமைப்பு மற்றும் விநியோகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உமா ஓயா அனல்மின் நிலையத்தின் முதல் பாகத்தின் நிர்மாணப் பணிகள் ஆகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் பாகம் செப்டெம்பர் மாதத்திலும் நிறைவடையும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தின் நிர்மாண நிறுவனமான ‘ஃபராப்’ நிறுவனத்துக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாகவும், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டங்களின் கீழ் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் சேர்க்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு திட்ட நிர்மாண நிறுவனமான ‘ஃபராப்’ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி அலி வக்கிலி, உமா ஓயா திட்ட முகாமையாளர் மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் இது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது..

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமையை ஏற்றுக்கொள்ளுமாறு பிரித்தானிய பிரதமரிடம் கோரிக்கை

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக்கிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிட்டனிலும் வெளிநாடுகளிலும் வாழும் பாதிக்கப்பட்ட தரப்பினர், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர், இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனாக்கிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர்.

இக்கோரிக்கையை உள்ளடக்கி 900 க்கும் மேற்பட்டோரால் கையெழுத்திடப்பட்ட மனுவையும் அவர்கள் அக்கடிதத்துடன் இணைத்துள்ளனர். அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு 14 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை நினைவுகூருகின்றோம். இருப்பினும் இன்னமும் அதற்குரிய நீதி நிலைநாட்டப்படவில்லை.

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணையனுசரணை வழங்கியதன் மூலம் தமிழ்மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக பிரிட்டன் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுகின்றோம்.

அதேபோன்று தற்போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுவருகின்றது என்பதை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்திவருவதையும் வரவேற்கின்றோம்.

இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதையும், மேமாதம் 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவு நாளாகப் பிரகடனப்படுத்துவதையும் முன்னிறுத்தி கடந்த ஆண்டு மேமாதம் 18 ஆம் திகதி கனேடியப் பாராளுமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையை உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ்மக்களும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரும் பெரிதும் பாராட்டினர். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை அத்தீர்மானம் வழங்கியது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுமாறு உங்களிடமும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வலியுறுத்துகின்றோம். தேவையேற்படும் பட்சத்தில் இவ்விவகாரம் தொடர்பில் பிரிட்டன் தனியாகவோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ தீர்ப்பாயமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருக்கு எதிராக உடனடியாகப் பயணத்தடை விதிக்கப்படவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.