நயினாதீவில் வீதி ஒன்றுக்கு சிங்களப் பெயர்

யாழ் நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீதி ‘‘அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ பெரஹெர மாவத்தை’‘ என இரவோடு இரவாக மாற்றப்பட்டுள்ளது.

இது தற்போதைய அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் செயற்பாடு என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் பகுதியில் இருந்து நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு செல்லும் படகு பயணக் கட்டணச் சீட்டில் நயினாதீவு எனும் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

நயினாதீவில் நாகபூசணி அம்மன் கோவிலும் மற்றும் நாகவிகாரையும் அமைந்துள்ளது.

இதற்கான படகுச் சேவையில் குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குச் செல்லும்போது இங்கு இரண்டு விதமான இன பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் பயணிப்பார்கள்.

ஆனால், தமிழிலே நயினாதீவு என்பதுதான் தொடக்கத்தில் இருந்து பாவனையில் உள்ள பெயர். அப்படி இருக்கும்போது தற்போது நாகதீப என்று மட்டும் எழுதப்பட்டுள்ள பயண கட்டணச் சீட்டு வழங்கப்பட்ட விடயம் மிகப் பெரிய சலனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இப் பயணக் கட்டணச்சீட்டு சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றது.

அண்மைக் காலங்களில் தமிழர் பகுதியை சிங்களவர்கள் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆக கொஞ்சம் கொஞ்சமாய் தமிழர் தேசம் பறிபோய்கொண்டு தான் இருக்கிறது என்பதை வெளிவரும் அனைத்து விடயங்களும் உறுதிப்படுத்துபவையாகவே காணப்படுகிறது.

வெடுக்குநாறி ஆதிசிவனாலய அழிப்பு, திருக்கோணேசர் ஆலயக்காணி அபகரிப்பு முயற்சி, வடமுனை நெடிய கல்மலை பெளத்தாலய நிருமாணிப்பு, கரடியனாறு குசலான மலை முருகன் ஆலய அபகரிப்பு முயற்சி போன்ற பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகையில் வடக்கு கிழக்கில் பல சைவ ஆலயங்கள் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆலயங்களில் சில சிதைக்கப்பட்டு இருக்கின்றன . அதே போல சில ஆலய சூழலுக்குள் பௌத்த மத அடையாளங்கள் நிறுவப்பட்டு இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சீர்திருத்தங்கள் அவசியம் – ஐ.எம்.எவ்

இலங்கை எதிர்நோக்கி வரும் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக் கடன் நிவாரணம் கிடைத்துள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார நிலை படிப்படியாக மீண்டு வரத் தொடங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்டகால பொருளாதார பிரச்சினைகள் மற்றும் தவறான கொள்கை முடிவுகளினால் இலங்கை வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்ததாக ப்ரூவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள நிலைமையிலிருந்து விடுபட சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 04 வருடங்களில் 03 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளதுடன், அந்த பாரிய பிரச்சினையை தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கவும், நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்கவும், வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்கவும், கடன் நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் ஏற்கனவே புதிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை அதிகாரிகள் சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரு பீட்டர் ப்ரூவர் கூறுகிறார்.

பொருளாதாரத்தை வலுப்படுத்த, அதிக வருமானம் ஈட்டுபவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

அதற்காக, முற்போக்கான வரி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது, பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம்.

சர்வதேச நாணய நிதியம் அதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்றும் இலங்கையின் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதற்கு நெருக்கமாக செயற்படும் என நம்புவதாகவும் பீட்டர் ப்ரூவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர் தாயகப் பிரதேசங்களைக் காக்க இரு கட்டமைப்புக்கள் உருவாக்கம்

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று வவுனியாவில் இன்று உருவாக்கப்பட்டது.

தமிழர்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.

இதன்போது குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர்வினையாற்றுவதற்காக இரு கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் பௌத்தமயமாக்கல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், காணிகள் அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பான தரவுகளை சேகரித்து அவற்றை துல்லியமாக அடையாளம் காண 7 பேர் கொண்ட கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

அத்துடன் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக வடகிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் சாத்வீகப்போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக மற்றொரு கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மதகுருமார்கள், தமிழ் அரசுக்கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைகழகம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சி, தமிழர் விடுதலைகூட்டணி, ஜக்கியதேசிய கட்சி, ஶ்ரீ தமிழ் ஈழ விடுதலைஇயக்கம் போன்ற அரசியல் கட்சிகளும், பொது அமைப்பினரும் கலந்துகொண்டனர்

ஆக்கிரமிப்புக்களை எதிர்த்து வடக்கு கிழக்கில் போராட்டம்

வெடுக்குநாறி, குருந்தூர்மலை, கன்னியா, பச்சனூர்மலை உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று மற்றும் மத வழிபாட்டு இடங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக் கோரி வடக்கு கிழக்கில் போராட்டம் இடம்பெறவுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி, காணிகள் ஆக்கிரமிப்பை கைவிடக்கோரியும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்டத்தினை அமுலாக்கப்படுவதை நிறுத்துமாறும் இந்தப்போராட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளதாக கூறினார்.

ஆகவே குறித்த போராட்டத்திற்கு, அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன ஆதரவினை வெளியிட்டுள்ள என்றும் அதேபோன்று வடக்கு, கிழக்கு வாழ் ஒட்டுமொத்த தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட கலாசார அடிப்படையிலான இனப் படுகொலையை எதிர்த்து பாரிய எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ரெலோவின் ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்

தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் இடம்பெறவுள்ளது.

ஆளும்தரப்பில் இருந்து எதிர் தரப்பில் இருந்து பல அனுபவமிக்க அரசியல்வாதிகள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகியவர்களும் அரசாங்கத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி 30 அமைச்சர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இரண்டு நாட்களில் பிரதமரிடம் கையளிக்கப்படும்

உள்ளூராட்சி அதிகார சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கையளிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அறிக்கையை கையளித்ததன் பின்னர், மக்களுக்கு அறிவிப்பதற்காக விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள 8,000க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதே குழுவின் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நாளை தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடல்

வவுனியாவில் சமகால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முகமாக வவுனியாவில் தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளுக்கான ஒன்றுகூடல் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வவுனியாவில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அகில் இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பதிய மாக்ஸிஸ லெனினிச கட்சி என்பனவும் கலந்துகொள்ளவுள்ளது.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள், காணி ஆக்கிரமிப்புக்கள், தமிழர் பாரம்பரியங்களை அழிக்கும் செயற்பாடுகள் உட்பட அரசியல் தீர்வு விடயங்களில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான கட்டமைப்பாக இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Posted in Uncategorized

கொழும்பு – யாழ் ரயில் சேவை 2024 ஜனவரியில் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சீரமைப்புப் பணிகளால் இச்சேவை இரத்து செய்யப்பட்டது.

இதனால் கடந்த ஜனவரி 5ம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் தொடரூந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை, எதிர்வரும் ஜுன் மாதம் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், மஹவ முதல், அநுராதபுரம் வரையிலான ரயில் மார்க்கம் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் கோட்டை முதல் காங்கேசன்துறை வரையிலான நேரடி ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும்

இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா முயற்சி

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் கடற்படை இருப்பு மற்றும் மூலோபாய மேற்பார்வையை எதிர்கொள்ளும் நோக்கில், இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ரேடார் தளம், இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், பிராந்தியத்தில் புது டெல்லியின் மூலோபாய சொத்துக்களை மதிப்பீடு செய்யும் என எக்கனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து தென்கிழக்கே சுமார் 155 கி.மீ. தொலைவில் உள்ள இலங்கையின் டோண்ட்ரா விரிகுடாவின் காடுகளில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வரை மேற்பார்வையை விஸ்தரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எச்சரிக்கையையும் மீறி கடந்த ஆண்டு, சீனக் கப்பலை எரிபொருள் நிரப்புதல் மற்றும் தளவாடப் பொருட்களுக்காக ஆறு நாட்கள் ஹம்பாந்தோட்டையில் நிறுத்த இலங்கை அனுமதித்தமை குறித்தும் இந்தியா கடும் கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகளை புத்துயிர்பெறச் செய்ய முயற்சித்த ஒருவர் சென்னையில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளை புத்துயிர்பெறச் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சென்னையில் ஒருவரை கைது செய்துள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு மையம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தக மோசடியை ஒடுக்கும் நடவடிக்கையில், சென்னையில் சந்தேக நபர்களுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது.

இந்த சோதனையின் போது ஏராளமான பணம், தங்கக் கட்டிகள், டிஜிட்டல் சாதனங்கள், போதைப்பொருள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் தேசிய புலனாய்வு மையம் கைப்பற்றியுள்ளது.

2022 ஜூலை இல் இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை தொடங்கியது தேசிய புலனாய்வு மையம் இதுவரை 14 நபர்களை கைது செய்துள்ளது.

சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டதில் 6.8 மில்லியன் இந்திய ரூபாய், 1,000 சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் ஒன்பது தங்க கட்டிகளும் அடங்குவதாக தேசிய புலனாய்வு மையம் கூறியுள்ளது.

சோதனைகளை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இலங்கை அகதி ஒருவரின் சார்பாக போதைப் பொருள் வர்த்தகத்தை நிர்வகித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.