புதுவருடத்தின் முன் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை – புதுவருடத்தின் முன் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி திறைசேரியின் கைகளிலேயே உள்ளது என தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு, ஏப்ரல் நடுப்பகுதியில் வரும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டுக்கு முன்னதாக தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவ இதனை தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் திறைசேரி தேர்தலுக்கான நிதியை உடனடியாக விடுவித்தாலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 5 முதல் 7 வாரங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். எனவே, 2023 ஏப்ரல் இரண்டாம் பாதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, தேர்தல்களை நடத்துவதற்கு போதிய நிதியை வழங்குவதாக உறுதியளித்தால், நாளை காலை தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ள கூட்டத்தில், தேர்தலுக்கான குறுகிய திகதியை அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு தயாராக இருப்பதாக புஞ்சிஹேவ தெரிவித்தார்.

“தேர்தல் ஆணைக்குழுவால் உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியுமா இல்லையா என, என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு போதுமான நிதி கிடைப்பதைப் பொறுத்தது. நாளைய கலந்துரையாடலில் போதிய நிதியை வெளியிடுவதற்கு திறைசேரி பொறுப்பேற்றால், உள்ளூராட்சித் தேர்தலை அருகில் உள்ள நாளில் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். பந்து திறைசேரியின் கைகளில் உள்ளது” என்று புஞ்சிஹேவ வலியுறுத்தினார்.

“இருப்பினும், தேர்தலுக்கு நிதியை விடுவிப்பதில் தாமும் ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் தற்போது அவ்வாறு செய்வதற்கு போதுமான பணம் இல்லையென திறைசேரி கூறலாம். அவர்களால் சில மாதங்களில் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என கூறலாம். ஆனால், விவாதத்தில் நாளை இந்த மாதிரியான சூழல் உருவாகும் என்று நான் நினைக்கவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை உடனடியாக பெறாவிட்டால், தேர்தல் ஆணைக்குழு மற்றொரு சட்ட சிக்கலை எதிர்கொள்ளும்.

தேர்தல்கள் திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தக்கவைக்க வேண்டாம் என்று திறைசேரிச் செயலாளருக்கு நாட்டின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, திறைசேரி அதிகாரப்பூர்வமாகவும் சட்டப்பூர்வமாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நிதியை விடுவிக்கக் கடமைப்பட்டுள்ளது. இல்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும். தேர்தல் ஆணைக்குழு மற்றொரு சட்டப் போராட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை.

திறைசேரி உடனடியாக நிதியை விடுவிப்பதாக உறுதியளித்தால், தேர்தல் நடைபெறும் நாளைக் குறிக்கும் வர்த்தமானி அறிவிப்பை 25 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் புதன்கிழமை (8) மற்றும் வியாழனில் வெளியிட தேர்தல் ஆணைக்குழு முயற்சி செய்யும்.

புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிக்க அமெரிக்கா வழங்கிய புலனாய்வுத் தகவல்களே உதவின – அலி சப்றி

திருகோணாமலையில் இராணுவதளமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளிற்காகவே சமீபத்தில் அமெரிக்காவின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளார்.

இது முழுமையான முட்டாள்தனம் என பேட்டியொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கும் எவரும் இராணுவதளங்களை அமைப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை ஆனால் அதன் அர்த்தம் நாங்கள் தனிமையில் வாழ முடியும் என்பதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது நீண்ட காலமாக தொடரும் ஒன்று இது அமெரிக்காவுடன் மாத்திரமானதல்ல என தெரிவித்துள்ள அலி சப்ரி இந்தியா சீனா ஜப்பானுடனும் நீண்டகால பாதுகாப்பு உறவுகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் போர்க்கலங்கள் வருகின்றன கூட்டு ஒத்திகைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது புதிய ஒழுங்குமுறையின் ஒரு பகுதி அனைவரும் இதனை அறிந்துகொண்டுள்ளனர் உணர்ந்துகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அதற்கு அப்பால் பல விடயங்கள் குறித்த கருத்துபரிமாற்றத்திற்கான வலையமைப்பை கொண்டிருப்பது அவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் புலனாய்வு தகவல்களே உதவின என்பது எங்களிற்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லைகளை கடந்து நாங்கள் எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்பட்டிருக்காவிட்டால் எங்களால் விடுதலைப்புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என தெரிவித்துள்ள அலிசப்ரி இவ்வாறான செயற்பாட்டின் மூலம் எங்களால் விடுதலைப்புலிகளின் ஆயுதவிநியோகத்தை முடக்க முடிந்தது – அவர்களின் நிதி திரட்டும் நடவடிக்கைகளை முடக்கினோம் சர்வதேச அளவில் அவர்களை தடை செய்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் சரியாக நினைவில் வைத்திருப்பீர்கள் என்றால் விடுதலைப்புலிகளின் 9 ஆயுதகப்பல்களை இலங்கை கடற்படை அழித்தது இது எங்களது புலனாய்வு பிரிவினர் அமெரிக்க புலனாய்வு பிரிவினருடன் ஒத்துழைத்ததன் காரணமாகவே சாத்தியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெறும் நிலையில் இலங்கை

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெறும் நிலையில் உள்ளது என சிரேஷ்ட அதிகாரிகள் நேற்று (4) தெரிவித்துள்ளனர்.

இந்த மாதம் முடிவடைவதற்கும் முதற்கட்டமாக 300 மில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் அல்லது சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி தொடர்பான இறுதி இணக்கப்பாடு சாத்தியமாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியோவாவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த நிலை உருவாகியுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மக்கள் அனுபவிக்கின்ற துயரங்களை தான் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள கிறிஸ்டலினா ஜோர்ஜியோவா சர்வதேச நாணய  நிதியத்தின் திட்டத்தை நோக்கி அரசாங்கம் எடுத்துள்ள துணிச்சலான நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார்.

இலங்கையின் நிதியமைச்சு சர்வதேச நாணய நிதியத்தி;ன் பணிப்பாளர்களிடம் கடிதம் மூலம் முறைப்படியான விண்ணப்பமொன்றை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னாபிரிக்காவின் நல்லிணக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை

இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தினை முன்னெடுப்பது குறித்து தென்னாபிரிக்காவின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுடில்லியில் இடம்பெறும் ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் கலந்துகொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் டாக்டர் நலேடி பண்டோவுடன் சந்திப்பொன்றில் பங்கேற்றபோதே மேற்படி விடயம் சம்பந்தமாக பேசப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின் பக்க நிகழ்வாக நடைபெற்ற இச்சந்திப்பு தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கையில்,

தென்னாபிரிக்காவில் கடந்த காலங்களில் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடுகள் களையப்பட்டு அங்கு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறிமுறையை ஒத்தவாறாக இலங்கையிலும் கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் நாம் கரிசனைகளை கொண்டுள்ளோம்.

அந்த வகையில், குறித்த சந்திப்பின்போது உள்நாட்டில் நல்லிணக்கப் பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பது பற்றிய தென்னாபிரிக்காவின் கடந்த கால அனுபவங்கள் தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அவர் வெளியிட்டுள்ள விடயங்களையும் உள்ளடக்கியதாக எமது செயற்பாடுகளை அடுத்துவரும் காலத்தில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அவ்வாறு முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் அர்த்தமுள்ளவையாக அமைவதற்கு தென்னாபிரிக்காவின் அனுபவம் எமக்கு கைகொடுக்கும் என்றார்.

இதேவேளை, மேலும் சில பக்க நிகழ்வுகளின் போது சிலோவேனியன் மற்றும் பிரேசில் வெளிவிவகார அமைச்சர்களையும் அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீர்க்கமான முடிவின் பின்னரே தேர்தல் குறித்த அறிவிப்பு

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு பொறுத்தமான தினம் குறித்து பல தரப்பினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் , எதிர்வரும் இரு தினங்களுக்குள் இடம்பெறவுள்ள பல்தரப்பு தீர்க்கமான கலந்துரையாடலின் பின்னரே உத்தியோகபூர்வமாக தினம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தமிழ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஏற்கனவே திட்டமிட்ட தினத்தில் தேர்தல் நடத்தப்படாமல் , அதற்கான புதிய தினம் அறிவிக்கப்பட வேண்டுமெனில் பழைய தினத்திலிருந்து 21 நாட்களின் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கமைய ஏப்ரல் முதலாம் வாரத்தில் தேர்தல் இடம்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் ஏப்ரல் இரண்டாம் வாரம் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நீண்ட விடுமுறை என்பதால் குறித்த காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியாதெனக் கூறி தேர்தல் ஆணைக்குழு , அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

இவ்வாறு பலராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையிலேயே ஆணைக்குழுவின் தலைவரை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேர்தலை நடத்துவதற்கான புதிய தினம் குறித்து ஆணைக்குழு இன்னும் தீர்மானங்கள் எவற்றையும் எடுக்கவில்லை. இவ்விடயம் கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளது. எனவே தான் அடுத்த வாரம் மீண்டும் கூடி இது தொடர்பில் அறிவிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அடுத்த கூட்டத்தில் எம்மால் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவல்களுடனும் கலந்துரையாடப்பட்ட பின்னரே தினம் உறுதி செய்யப்படும் என்றார்.

தெற்காசியாவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான நிகழ்நிலை அருங்காட்சியகத்தை உருவாக்கும் முயற்சியில் சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கை உள்ளடங்கலாக தெற்காசியப்பிராந்தியத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களை உள்ளடக்கிய நிகழ்நிலை அருங்காட்சியகமொன்றை உருவாக்குவதை முன்னிறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை செயற்பட்டுவருகின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்கு முன்னரான இனக்கலவரங்களின்போதும் பெருமளவானோர் வலிந்து காணாமலாக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச கட்டமைப்புக்கள் மற்றும் உள்நாட்டில் நிறுவப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், நீதியை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்றுடன் 2204 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே தெற்காசியப்பிராந்திய நாடுகளில் இவ்விவகாரம் தொடர்பில் பணியாற்றிவரும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து, இயலுமானவரையில் தெற்காசியப்பிராந்தியத்தில் இடம்பெற்ற அனைத்து வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களையும் உள்ளடக்கிய நிகழ்நிலை அருங்காட்சியகமொன்றை உருவாக்குவதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை திட்டமிட்டுள்ளது.

இச்செயற்திட்டத்திற்கான ஒத்துழைப்பை வழங்க முன்வருமாறு இலங்கையைத் தளமாகக்கொண்டியங்கும் சில அரச சார்பற்ற அமைப்புக்களிடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நீதிமன்றம், ஏனைய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐ.நாவிடம் கோரிக்கை

மனித உரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் நீதிமன்றம் மற்றும் ஏனைய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தும்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கைவிடுத்துள்ளது.

அதேபோன்று கடந்தகால மீறல்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கு அவசியமான விசாரணை செயன்முறையில் தாமதமேற்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் முடிவிற்குக்கொண்டுவரப்படவேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் உபகட்டமைப்பான சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பில் மீளாய்வு செய்யும் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், இலங்கை தொடர்பான மீளாய்வு எதிர்வரும் 8 – 9 ஆம் திகதியகளில் நடைபெறவுள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மீளாய்வுக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி மனித உரிமைகள் அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை தொடர்பான தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன.

அதன்படி உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கையின் கடந்தகால மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் தமது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பல்வேறு விடயங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நீக்கப்பட்டன. இருப்பினும் கடந்த 2022 ஒக்டோபர் 31 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம், 19 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட சில அம்சங்களை உள்ளடக்கியிருந்தாலும்கூட முன்னர் காணப்பட்டவாறு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் நியமனத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளுமற்ற நிலை இதில் உறுதிப்படுத்தப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகளையும், சட்டத்தின் ஆட்சியையும் பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் நீதிமன்றம் மற்றும் ஏனைய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்தவேண்டும்.

அடுத்ததாக இலங்கை அரசாங்கங்கள் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதாகவும், பிறிதொரு சட்டத்தின்மூலம் அதனைப் பதிலீடு செய்வதாகவும் தொடர்ந்து வாக்குறுதியளித்து வந்திருக்கின்ற போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்கள், அச்சட்டத்தின் ஊடாக நிகழ்த்தப்புடும் தன்னிச்சையான கைதுகள், தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் உள்ளிட்ட மீறல்கள் தொடர்பில் உரியவாறான தீர்வை வழங்கவில்லை. எனவே மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக மிகமோசமான அனைத்துச்சட்டங்களையும் திருத்தியமைக்குமாறு அல்லது முழுமையாக நீக்குமாறும், அதுவரையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை நிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துங்கள்.

மேலும் கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எவையும் எட்டப்படாத நிலையில், இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51ஃ1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறும், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழு மற்றும் நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஆணைக்குழு என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு வழிமுறைகளில் உள்ளடக விசாரணைகளைத் தாமதப்படுத்துவதற்கோ அல்லது அதில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கோ மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நிறுத்துமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்துங்கள்.

அதேபோன்று அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்படுவதுடன் அவ்வுரிமை பாதுகாக்கப்படவேண்டும். அத்தோடு அமைதிப்போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகித்த அனைத்து அதிகாரிகளும் உரியவாறான விசாரணைகள் மூலம் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படத் தயார்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடையின்றி விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு மதிப்பளித்து செயற்பட நிதி அமைச்சு தயாராகவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கித்துல்கல பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார்.

எந்த தரப்பினராக இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயற்படுவது அவசியம் எனவும் நிதியமைச்சு என்ற வகையிலும், அதனை மதித்து செயற்படுவதாகவும் அதில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும் அவர் கூறினார்.

அத்துடன், நீதிமன்ற தீர்ப்பிற்கமைய செலவுகளை முகாமைத்துவம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக  ஒதுக்கப்பட்ட நிதியை முடக்கி வைப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சர் சார்பில்  சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்திருந்தது.

தமிழர்களின் நில அபகரிப்பு பிரச்னைக்கு தீர்வு அவசியம்; மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா வலியுறுத்தல்

இலங்கையின் தமிழர் பகுதியான வடக்கு, கிழக்கில் தொடரும் நில அபகரிப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமைகள் தொடர்பில் 42ஆவது மீளாய்வு நடக்கிறது. இதில் பிரித்தானியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சைமன் மான்லி சி. எம். ஜி. இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

2020 செப்ரெம்பரில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதங்கள் தொடர்பான ஐ. நா. சிறப்பு அறிக்கையாளர் பாப்லோ டி கிறீப், கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வு கள் மீதான ஒடுக்குமுறையானது மீண்டும் மன உளைச்சல் மற்றும் அந்நியப்படுத்தலை – உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உறவுகளை – அனுபவங்களை நினைவுகூரும் வாய்ப்பை இது மறுக்கிறது. படையினரால் துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் துக்கமடைந்த குடும்பங்கள், சீருடையில் இருக்கும் தங்கள் அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை புதைக்க அல்லது அழிக்க வேண்டிய அவசியம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார். உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர, இலங்கை தனது அனைத்து சமூகங்களையும் சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்று மான்லி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியான அடக்குமுறைகள் – கண்காணிப்புகள் இருப்பினும் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூருவதற்காக வடக்கு – கிழக்கு முழுவதும் தமிழர்கள் ஒன்றுகூடி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் வடக்கு மற்றும் கிழக்கில் நில அபகரிப்பு செய்கின்றமை தொடர்பான கவலைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும்.

முல்லைத்தீவில் இராணுவம் 16 ஆயிரத்து 910 ஏக்கருக்கும் அதிகமான பொது மற்றும் தனியார் காணிகளை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. இந்த இடங்களில் குறைந்தபட்சம் 7 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2021 மார்ச்சி ஓக்லாண்ட் இன்ஸ்ரிரியூட் வெளியிட்ட அறிக்கை, முல்லைத்தீவில் அளம்பில் தொடக்கம் கொக்கிளாய் வரையான 15 கி. மீற்றர் தூரத்தில் 5 கடற்படைதளங்கள் அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளது.

வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதாகக் கூறி இராணுவம், தொல்பொருள் திணைக்களம் தமது தாயகத்தை தொடர்ந்து கைப்பற்றுவதற்கு எதிராக தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் மான்லி வெளிப்படுத்தியுள்ளார்

அரசும் தேர்தல் திணைக்களமும் பொதுமக்களை ஏமாற்றக்கூடாது – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை செய்யக்கூடாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ரெலோ கட்சியின் பணிமனையில் அவர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் தேர்தல் தொடர்பான தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறும், தேர்தல் நடத்துவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், ஜனாதிபதி தேர்தல் இல்லை எனத் தெரிவித்துள்ளார். தேர்தல் திணைக்களம் தேர்தலை நடத்துவதாக கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றது. வேட்பாளர்கள் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் தேர்தல் நடக்குமா இல்லையா என்ற சிந்தனையே உள்ளது.

ஆகவே, தேர்தல் திணைக்களம் தேர்தலை வைப்பதாயின் உடனடியாக தனது நிலைப்பாட்டை சொல்ல வேண்டும். தற் போது 9 ஆம் திகதி தனது கருத்தை சொல்வதாக தேர்தல் திணைக்களம் கூறுகிறது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது என்பது தெரியாமல் இருக்கு. தேர்தல் வருமா, வராதா என கட்சிகளும், வேட்பாளர்களும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் வேலையை அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும் செய்யக் கூடாது. ஆகவே, இறுதி முடிவை 9ஆம் திகதியாவது அறிவிக்க வேண்டும் – என்றார்.