எரிபொருள் வழங்கப்படாவிட்டால் பயணிகள் புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் – புகையிரத சேவை தொழிற்சங்கம்

புகையிரத சேவையாளர்கள் சேவைக்கு சமூகமளிப்பதற்கு தேவையான எரிபொருளை விநியோகிக்க வலுசக்தி அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காவிடின் எதிர்வரும் நாட்களில் பயணிகள் புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும்.

புகையிரதசேவை மாத்திரமே போக்குவரத்து ஊடகத்தில் பொது மக்களுக்கு இறுதி தீர்வாக உள்ளது என புகையிரத சேவை தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டனர்.

எரிபொருள் பற்றாக்குறை பொதுப்போக்குவரத்து சேவைக்கு பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அரச மற்றும் தனியார் பஸ்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுப்படுகின்றன.

பஸ் கட்டணம் சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தினால் பொது பயணிகள் பஸ் சேவையினை பயன்படுத்துவதை புறக்கணித்து புகையிரத சேவையினை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.

இருப்பினும் பஸ்களில் சனநெரிசல் அதிகமாகவே உள்ளது. ஒருசில பகுதிகளில் பொதுபயணிகள் பாதுகாப்பற்ற முறையில் பஸ்ஸின் கூரையில் அமர்ந்தவாறு பயணம் செய்வதை அவதானிக்க முடிந்தது.

புகையிரத சேவைக்கு தேவையான எரிபொருளை விநியோகிப்பதில் எவ்வித சிக்கல் நிலையும் ஏற்படவில்லை என புகையிரத திணைக்களம் கடந்த வாரம் குறிப்பிட்டது.

புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கைக்கும், சேவையில் ஈடுப்படுத்தப்படும் புகையிரதங்களின் எண்ணிக்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

அதிகரித்துள்ள பொது பயணிகளின் பயன்பாட்டிற்கமைய புகையிரத சேவையினை அதிகரிப்பது சாத்தியமற்றதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டது.

எரிபொருள் பற்றாக்குறை புகையிரத சேவையாளர்கள் சேவைக்கு சமூகமளிப்பதில் தாக்கம் செலுத்தியுள்ள காரணத்தினால் நேற்று 28 புகையிரத சேவைகளும், இன்றையதினம் 22 புகையிரத சேவைகளும் இரத்து செய்யப்பட்டன. அத்துடன் புகையிரத சேவைகளும் காலதாமதப்படுத்தப்பட்டன.

புகையிரத சேவையாளர்கள் சேவைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்றைய தினம் 22 புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டதால் கோட்டை புகையிரத நிலையத்தில் அமைதியற்ற தன்மை காணப்பட்டது.

புகையிரத சேவைக்காக அதிக நேரம் காத்திருந்த பொது பயணிகள் புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டதால் கலக்கமடைந்து எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புகையிரத சேவையினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு தேவையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.

எரிபொருள் விநியோகத்தில் புகையிரத சேவைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை பலமுறை வலியுறுத்தியும் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.

எரிபொருள் பற்றாக்குறை, பஸ் கட்டண அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் பொது மக்கள் தற்போது புகையிரத சேவையினை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். பொது போக்குவரத்து சேவையில் புகையிரத சேவை மாத்திரமே தற்போது இறுதி தீர்வாக உள்ளது.

புகையிரத சேவையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு முறையான நடவடிக்கையினை முன்னெடுக்காவிடின் எதிர்வரும் நாட்களில் புகையிரத சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கததினர் தெரிவித்தனர்.

ஜப்பான், ஓமன் தூதுவர்களை ஜனாதிபதி சந்தித்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஜப்பான் மற்றும் ஓமன் தூதுவர்களை இன்று சந்தித்தார்.

கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை வழங்குவதாக ஜப்பான் தூதுவர் Hideaki Mizukoshi தெரிவித்துள்ளார்.

இலங்கையுடனான பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்ல நடவடிக்கை எடுப்பதாக ஜப்பான் தூதுவர் கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 8 வருட சேவையின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்வதற்கு முன்னர் ஓமன் தூதுவர் அஹமட் அலி சயிட் அல் ரஷீட், ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கு தேவையான எரிபொருள், எரிவாயு , முதலீட்டு சந்தர்ப்பங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு கோரியும் அடக்குமுறைகளை நிறுத்துமாறு வலியுறுத்தியும் காலி சட்டத்தரணிகள் சங்கம் காலி நீதிமன்ற வளாகத்திலிருந்து கோட்டை வரை எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்திருந்தது.

காலி கோட்டை வளாகத்தில் சட்டத்தரணிகளை தடுத்து நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

காலி கோட்டை வளாகத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் காரணமாக குறித்த வளாகத்திற்குள் பிரவேசிக்க சந்தர்ப்பமளிக்க முடியாது என பொலிஸார் இதன்போது அறிவித்தனர்.

தமது போராட்டத்தை நிறுத்துவதற்கு பொலிஸாருக்குள்ள சட்ட ரீதியான அதிகாரம் என்னவென இதன்போது சட்டத்தரணிகள் கேள்வியெழுப்பினர்.

காலி மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகரும் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்ததுடன், கலகத்தடுப்பு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலிருந்து காலி கோட்டையை பார்வையிடுவதற்கு இன்று எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

சட்டத்தரணிகள் காலி நகரில் கோஷங்களை எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், இளைஞர்கள் சிலரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து, சட்டத்தரணிகள் தொடர்ந்தும் காலி நகரில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

அடக்குமுறை அரசாங்கத்தை விரட்டியடிப்போம் எனும் தொனிப்பொருளில் சட்டத்தரணிகள் கொழும்பிலும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டத்தரணிகள் புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதி வளாகத்தில் இன்று காலை சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் பேரணியொன்றை முன்னெடுத்து உலக வர்த்தக மைய வீதி ஊடாக இலங்கை வங்கி வீதியை அடைந்தனர்.

இதன்போது, நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொள்வதற்காக பொலிஸாரின் வாகனங்கள் தயார் நிலையில் இருந்ததை அவதானிக்க முடிந்தது.

Posted in Uncategorized

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பரிந்துரைகள் முஸ்லீம்களின் உரிமைகளைப் பறித்துள்ளதாக குற்றச்சாட்டு

இலங்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் இறுதி அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், நேற்று முன்தினம் (29) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், தமது செயலணியின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையினை கையளித்திருந்தார்.

எட்டு அத்தியாயங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் 43 பரிந்துரைகள் அடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்தே ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி உருவாக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, ‘அரசப் பணியில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களுக்கு, அவர்களின் கணவரை இழந்தால் வழங்கப்படும் ‘இத்தா’ காலத்துக்குரிய 4 மாதங்கள் 10 நாட்களைக் கொண்ட விடுமுறை இல்லாமலாக்கப்பட வேண்டும்’ எனவும் – ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணைந்தார் மேர்வின் சில்வா!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

இன்று காலை அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனது கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே சுதந்திரக் கட்சியில் உறுப்பினராக இருந்த மேர்வின் சில்வா 2015 காலப்பகுதியில் அதில் இருந்து விலகியிருந்தார்.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டதுடன், தனிக் கட்சியொன்றையும் ஆரம்பித்தார்.

இவ்வாறான நிலைமையில் அவர் மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் யாழ்ப்பாணம் கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் காத்திருந்த போது பின்னால் வந்திருந்த இரு நபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காயங்களுக்குள்ளாகியுள்ள அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்ட வேண்டும் என்பது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செயற்படாமை தொடர்பிலும் அண்மையில் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இது திட்டமிட்டு இடம்பெற்ற தாக்குதலாக இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் தெரிவித்தார்.(

Posted in Uncategorized

ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய மகாநாயக்க தேரர்கள்!

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மீண்டும் அழைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது ஜனாதிபதி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் காண வேண்டிய பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமஞ்ஞ மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மூலம் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் – ஜப்பான்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை ஜப்பானிடமும் உதவியை கோரியுள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று சந்தித்தபோது இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே, ஜப்பான் இந்த நேரத்தில் நாட்டுக்கு உதவாது என்றும் அவர் இதன்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஜப்பான் அதை பின்னர் பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Posted in Uncategorized

அமைதியான போராட்டங்களை அடக்குவதற்கு காவல்துறை, ஆயுதபடையினரை பயன்படுத்த கூடாது-BASL வலியுறுத்தல்

அமைதியான போராட்டங்கள் மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளை பயன்படுத்தக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை   ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினரை நேற்று (ஜூன் 29) காலி முகத்திடல் பகுதியில் இருந்து காவற்துறை மற்றும் இராணுவத்தினரால் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை BASL வெளியிடப்பட்டுள்ளது.

அதில் “காலி  முகத்திடல் பொது பகுதி என்பதனால்  அங்கு கூடும்  போராட்டக்காரர்களை கலைக்க எந்த சட்டபூர்வமான காரணமும் இல்லை. மக்கள் தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்த அனுமதிப்பதன் முக்கியத்துவத்தை   தொடர்ந்து நினைவூட்டுகிறோம். கருத்து மற்றும் கருத்து வெளிப்பாட்டின் உரிமை உட்பட எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை நசுக்குவது நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு தீர்வாகாது, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் சொல்லொணா இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை-மாணவர்களுக்காக 1000 மெட்ரிக் தொன் அரிசியை கல்வி அமைச்சுக்கு வழங்கியது சீனா

இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்காக 1000 மெட்ரிக் தொன் அரிசியை கல்வி அமைச்சுக்கு சீனா வழங்கியுள்ளது.

7900 பாடசாலைகளின் 11 இலட்சம் மாணவர்களுக்கு 6 மாத காலத்திற்கு உணவு வழங்குவதற்கு சீன அரசு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கான மேலும் இரண்டு தொகுதி அரிசி எதிர்வரும் இரண்டு வாரங்களில் கிடைக்கவுள்ளது.