வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விசேட அபிவிருத்தித் திட்டம்

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “காங்கேசந்துறை துறைமுகம் நவீனமயப்படுத்தப்படும். விரிவாக்கப்படும். திருகோணமலையை நவீன சர்வதேச நகரமாக அபிவிருத்தி செய்யப்படும்.

மோதல்களுக்கு அகப்பட்டு பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்னடைந்த கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

நேரடி வரிகளை அதிகரித்து வரிச்சுமையை குறைக்க முடியும்; ஜனாதிபதி ரணில்

நேரடி வரிகளை அதிகரிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வரிச்சுமையை குறைக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது ஆற்றிக்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலை தொடர்ந்தால் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடியும் எனவும், இந்த ஆண்டு இறுதியில் வட்டி விகிதங்களை குறைக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் தான் பிரபலமடைவதற்காக இந்த பதவியை பெறவில்லை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீள கட்டியெழுப்ப செயற்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்காக இந்த வருட இறுதிக்குள் பணவீக்க வீதத்தை ஒற்றை இலக்கமாக குறைக்கும் இலக்குடன் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத தீர்மானம் என்றாலும் நாட்டைக் கட்டியெழுப்ப அத்தகைய தீர்மானங்களை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பலன்களை எதிர்வரும் 2-3 ஆண்டுகளில் மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு – ஜனாதிபதி

ஒற்றையாட்சி முறைக்குள் அதிகப்பட்ச அதிகாரங்களோடு பல காலமாக இருக்கும் இனப் பிரசினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இருப்பினும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் துரிதமாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எந்தவொரு வழக்கு விசாரணையும் இன்றி பல ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்ட விதிகள் மற்றும் சட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை

புதிய சட்ட விதிகள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘புதிய சட்ட விதிகள் மற்றும் சட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

  • பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுச் சட்டம்
  • ஆண் பெண் பாலின சமத்துவ சட்டம்
  • பெண்களை வலுவூட்டும் சட்டம்
  • சிறுவர் பாதுகாப்பு சட்டம்
  • இளைஞர் நாடாளுமன்ற மறுசீரமைப்புச் சட்டம்
  • போதைப்பொருள் தடுப்பு கட்டளையிடும் தலைமையக சட்டம்
  • உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு
  • பயங்கரவாத தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம்
  • தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பிரசித்த நாட்டிய கட்டுப்பாட்டுச் சட்டம் இல்லாதொழிக்கப்படும். அரசியலமைப்பில் உள்ள கருத்து தெரிவிக்கும் உரிமையினை அடிப்படையாகக் கொண்டு கலைப் படைப்புக்களை வகைப்படுத்தும் சட்டம் தயாரிக்கப்படும்.

எமது நாடு காலநிலை மாற்றங்களுக்கு உட்படும் வலயத்தில் அமைந்துள்ளது. ஆகவே தான் நாம் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். அது தொடர்பில் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டால் எமக்கு பசுமை ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகிறது.

அவை அனைத்தையும் கவனத்திற் கொண்டு நாம் இந்த சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

  • காலநிலை மாற்றச் சட்டம்
  • சமூக நீதிக்காக ஆணைக்குழுச் சட்டம்
  • மீள் காடு வளர்ப்பு மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டம்
  • உயிரோட்ட முறைமை சட்டம் – மகாவலி கங்கை, சிங்கராஜ வனம், சிவனொலிபாத பிரதேசம் மற்றும், வனச் சிகரம்
  • ஹோட்டன் சமவெளி, நக்கில்ஸ், ஆதமின் பாலம் ஆகியன இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
  • கடல் வள ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவ சட்டம்.
  • முத்துராஜவெல பாதுகாப்புச் சட்டம்.

பொருளாதாரம் தொடர்பாகவும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அரச செலவு முகாமைத்துவத்துக்காக ஸீரோ பட்ஜட் அல்லது பூச்சியத்தை அடிப்படையாக கொண்ட வரவு செலவுச் செயன்முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.

  • வருமான அதிகாரச் சட்டம்
  • வெளிநாட்டு கடன் முகாமைத்துவச் சட்டம்
  • உணவுப் பாதுகாப்புச் சட்டம்
  • அரச சொத்து முகாமைத்துவச் சட்டம்
  • பொருளாதார ஸ்திரத்தன்மை சட்டம்
  • தேசிய ஓய்வூதிய பங்களிப்புச் சட்டம்
  • புதிய மதுவரிச் சட்டம்
  • அந்நிய செலாவணிச் சட்ட திருத்தம்
  • புன்வத் சட்டம்
  • வெளிநாட்டு வியாபார மற்றும் முதலீட்டு சட்டம்
  • டிஜிட்டல் தொழில்நுட்ப சட்டம்
  • கறுவா அபிவிருத்தி திணைக்களச் சட்டம்
  • பரஸ்பர இணக்கப்பாட்டின் கீழான விவாகரத்துச் சட்டம்

இவ்வாறான பொருளாதார சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை வெற்றியடையச் செய்ய வேண்டுமாயின் சரியான விடையங்களின் அடிப்படையில் மக்களுக்கு அறிவூட்டுதல் ஓர் அத்தியாவசியமான விடயமாக காணப்படுகிறது. “ எனத் தெரிவித்துள்ளார்

ரணிலின் கொள்கை விளக்க உரையை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வினை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் டளஸ் அழகப்பெரும தலைமையிலான தரப்பினரும் விமல் வீரவன்ச தரப்பினரும் இந்த நிகழ்வை புறக்கணித்திருந்தனர்.

இதேவேளை இன்றைய சம்பிரதாய நிகழ்வில் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் கலந்துகொள்ளவில்லை.

இருப்பினும் சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

13 ஐ அமுல்படுத்த வேண்டாம் – தீவிர தேசியவாத பௌத்த பிக்குகள் போராட்டம்

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் தீர்மானத்திற்கு எதிராக பிக்குகளினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பௌத்த பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தீவிர தேசியவாத பௌத்த மதகுருமார்களின் குழுவினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பெளத்த தேரர்களின் பங்கேற்போடு இடம்பெற்ற இந்த பேரணியானது நாடாளுமன்ற வீதியை செல்லும்போது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதையை பொலிஸார் மறித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த போராட்டத்தின் போது 13வது அரசியலமைப்பு திருத்த பிரதியை பிக்குக்கள் தீ வைத்து எரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைளுக்கு விசனம் – மாற்றுக் கொள்கை நிலையம்

சுதந்திர தினத்தன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் மிகையான அளவிலான பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாடு என்பன தொடர்பில் மிகுந்த விசனமடைவதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் என்பன தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான தன்னிச்சையான நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் மிகையான அளவிலான பாதுகாப்பு தரப்பினரின் பயன்பாடு என்பன தொடர்பில் நாம் மிகுந்த விசனமடைகின்றோம்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் அரச சொத்துக்கள் வீண்விரயம் செய்யப்படுவது குறித்து கரிசனையை வெளிப்படுத்தி அமைதியான முறையில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலுகட்டாயமாக கலைக்கப்பட்டதையும் கைதுசெய்யப்பட்டதையும் ஊடக செய்திகளின் வாயிலாக ஆதாரபூர்வமாக அறியமுடிந்தது.

அமைதிவழிப் போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் மிகையானளவிலான படையினரின் பயன்பாடு என்பன தொடர்பில் நாம் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதுடன் அச்சத்தை தோற்றுவிக்கக்கூடியவாறாக மேற்கொள்ளப்படும் கைதுகள் மற்றும் ஒடுக்குமுறைகள் என்பன குறித்து கரிசனை கொள்கின்றோம்.

ஒன்றுகூடுதல், கருத்து வெளிப்பாடு ஆகியவற்றின் கூட்டாக இருக்கக்கூடிய போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை என்பது ஆரோக்கியமான இயங்கு நிலையில் உள்ள ஜனநாயகக் கட்டமைப்புக்கு இன்றியமையாததாகும்.

எனவே, இவ்வுரிமையை புறக்கணிப்பதென்பது இலங்கையின் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் பிரச்சினைக்குரியதாகவே உள்ளதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கம் இதற்கு தீர்வை காண்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.

நீதிமறுஆய்வு இல்லாததாலும் அரசியல் நோக்கங்களிற்காக அதனை பயன்படுத்தலாம் என்பதாலும் பயங்கரவாத தடைச்சட்டம் பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தங்களிற்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக பல அரசியல்வாதிகள்தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்பது குறித்து இலங்கையின் பரந்துபட்ட மக்கள் மத்தியில் கருத்துடன்பாடு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2017 இல் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப மாற்றுவதாக உறுதியளித்தது கடந்த வருடம் அரசாங்கம் முன்மொழிந்த மாற்றங்களை நாங்கள் வரவேற்றோம் ஆனால் அது போதுமானதல்ல  என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதில்லை என முன்னைய அரசாங்கம் தீர்மானித்த போதிலும் அது தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான தேசிய பாதுகாப்பு சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப அமைந்திருக்கவேண்டும் எனவும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும் : மட்டக்களப்பு பிரகடனத்தில் வலியுறுத்தல்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியில் இறுதியில் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையானது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

அத்துடன், இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டால், சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு என்பவற்றோடு, தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடு இவ் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த உடன்படிகை மூன்றாம் தரப்பான சர்வதேச தரப்பினரின் முன்னிலையில் எழுதப்பட வேண்டும் எனவும் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று 2023 பெப்ரவரி 7 ம் திகதி தமிழ் மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும், தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஈழத் தமிழராகிய நாம் மரபுவழித் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்குப் பிரகடனப்படுத்துகின்றோம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடு, பொங்குதமிழ் பிரகடனம் எனபவற்றினூடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாகப் பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழரின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்காக, மீண்டும் ஒருதடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக் கூறவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இன்று பேரெழுச்சியாக எமது தென் தாயகத்தின் மையப்பகுதியாகிய மட்டக்களப்பு நகரில் ஒன்று திரண்டுள்ளோம்.

தமிழ் மக்களுக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் எட்டப்பட முன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் கூட்டாகப் பேரெழுச்சி கொண்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள எமது உறவுகளின் ஆதரவுடன் இன்று தாயகத்தில் பெருமெழுச்சியாக திரண்டுள்ள மாணவர்களும், மக்களும், மக்கள் அமைப்புப் பிரதிநிதிகளுமாக முன்னெடுத்துள்ள இன்றைய பாரிய எழுச்சிப் பேரணி தமிழ் மக்களது ஏகோபித்த குரலின் தெளிவான வெளிப்பாடாகும்.

ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான எந்தவொரு அரசியல் நகர்விலும் தமிழர் தேசத்தின் பிரதிநிதிகள், சிங்கள தேசத்தின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் அனைவரும் பின்வரும் ஈழத் தமிழர் வரலாற்று உண்மைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.

பேரெழுச்சிப் பிரகடனம்

யதார்த்த நிலைகளை கருத்தில் கொண்டு, தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த தேசமாக, அவர்களின் பாராதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது மட்டுமே, மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளும் மீள நிகழாது இருப்பதை உறுதிசெய்யும் என்பதை வலியுறுத்தியும், தமிழர் தேசத்தின் வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் தங்களுடைய தனியான இறைமையை யாருக்கும் கையளித்திருக்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டும், வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய இந்தப் பேரெழுச்சியின் பிரகடனமானது, தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வாக, சர்வதேச சட்டத்தின் ஆட்சித் தத்துவங்களுக்கு ஏற்புடையதாகவும், மனித உரிமைகள் எல்லா நபர்களுக்கும் சமத்துவமானது என்ற அடிப்படையிலும், சுயநிர்ணய உரிமையினை மதித்தும், அக்கறையுள்ள அனைத்து தரப்பினர்கள் முன்னிலையிலும் நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்குமாக முன்வைக்கப்படும் தீர்மானங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு இந்தப் பேரணி வலியுறுத்துகிறது.

அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையானது அரசியலமைப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன், பின்வரும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதில் இருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

  1. இந்த உடன்படிக்கையானது, ஏனைய விடயங்களிற்கும் மேலாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.
  2. இந்த உடன்படிக்கையானது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
  3. இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்யப்பட்டால், சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஒழுங்குபடுத்தல், கண்காணிப்பு என்பவற்றோடு, தமிழ் மக்கள் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்ற ஏற்பாடு இவ் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும்.
  4. இந்த உடன்படிகை மூன்றாம் தரப்பான சர்வதேச தரப்பினரின் முன்னிலையில் எழுதப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தையின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:

  1. தொடர்ச்சியாக, திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் தேசம் என்ற வகையில், தமிழ் மக்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.
  2. தமிழ் மக்கள் இனவழிப்பிற்கு முகங்கொடுத்து வரும் நிலையில், தமிழர்களின் தேசிய அடையாளத்தின் பாதுகாப்பு மற்றும் ஒரு தேசமாக இருத்தல் என்பவை சமரசத்திற்கு அப்பாற்பட்டதாகவும், உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
  3. முதலில், இரு தரப்பும் கூட்டாக பேச்சுவார்த்தை செய்வதற்கான தெளிவான வழிவரைபடத்தை சர்வதேச மத்தியஸ்தத்துடன் தயார் செய்ய வேண்டும். இது தெளிவான அடைவுகளையும் அதன் கால அட்டவணைகளையும் கொண்டிருக்க வேண்டும்.
  4. பேச்சுவார்த்தைகள் இரண்டு தளங்களில் சமாந்தரமாக நடாத்தப்பட வேண்டும் ஒன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது மற்றையது இறுதி அரசியல் தீர்வை நோக்கியதாக இருக்கவேண்டும்.
  5. உடனடிப் பிரச்சினைகள் குறித்துப் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

5.1. தொல்பொருள் ஆராய்ச்சி, வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் எனும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் நிறுத்தப்படுவதோடு அபகரிக்கப்பட்ட காணிகளை உடனடியாக உரியவர்களிடம் மீள ஒப்புடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

5.2. தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்து சிங்களக் குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும்.

5.3. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படவேண்டும். 5.4. உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மாற்றங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும்.

5.5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு சர்வதேச நீதி வழங்கப்படுவதோடு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

5.6. பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நீக்கப்படவேண்டும்.

5.7. மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும், திட்டமிட்ட இன அடக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் மற்றும் மக்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுதல் மற்றும் கைதுசெய்யப்படுதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

5.8. தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தும் அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும், தடைகளையும் நிறுத்தவேண்டும்.

5.9. காலகாலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதிப் பொறிமுறை (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் – ICC, சர்வதேச நீதிமன்றம்- ICJ) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப் படவேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையால் விசேடமாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் விசாரணைப் பொறிமுறைகளும் அனுமதிக்கப்படவேண்டும்.

5.9.0. இறுதி அரசியல் தீர்வொன்று எட்டப்படும் வரை தமிழ் மக்கள் தமது தாயகத்தின் அன்றாட விவகாரங்களை நடாத்துவதற்கு இடைக்கால நிர்வாகப் பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.

திம்பு கோட்பாடுகள்

  1. இறுதி அரசியல் தீர்வைக் காண்பதற்கு பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

6.1. இலங்கை அரசின் அரசியலமைப்பின் அடிப்படையாகிய ஒற்றையாட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும்

6.2. இறுதித் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் முதலே ஆக்கப்பூர்வமாக நடாத்தப்பட வேண்டுமாயின் வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்புக் கோட்பாடுகள், பொங்கு தமிழ் பிரகடனம் ஆகிய வரலாற்றுப் பதிவுகள் ஊடாக தமிழ் மக்களால் முன் வைக்கப்பட்ட, அதி முக்கிய அடிப்படைக் கோட்பாடுகளை மையப்படுத்தி, தமிழ் மக்களின் வேணவாவைப் பூர்த்தி செய்யும் தீர்வை இலக்காகக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆவன: 1) தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை அங்கீகரித்தல். 2) தமிழ் மக்களினுடையதாக அடையாளம் காணப்பட்ட, வரலாற்று ரீதியான மற்றும் பாரம்பரியமான தாயகப் பிரதேசத்தை அங்கீகரித்தல். 3) மேற்குறிப்பிட்ட உரித்துடைமையின் அடிப்படையில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும்.

6.3. பேச்சுவார்த்தைகளின் போது சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் (பலதுறை நிபுணர்கள் குழு) சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டும்.

6.4. தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைச் சூழல் ஏற்படும்பட்சத்தில், அது சர்வதேச மத்தியஸ்தத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும்.

6.5. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இஸ்லாமியத் தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும்.

6.6. முன்னைய பேச்சுவார்த்தைகளைப் போல் அல்லாமல் நடுநிலையுடனும், நேர்மையுடனும் நடுவராகச் செயற்படுமாறு சர்வதேச சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம். மேலே கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறையில் திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை ஆராய்ந்து உறுதிப்படுத்திய பின்னரே, எந்தவொரு நிதி வழங்கும் நாடுகளும் மற்றும் நிறுவனங்களும் சிறிலங்காவிற்கு பொருளாதார உதவி வழங்கத் தொடங்கவேண்டும் என நாம் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்.

மரபுவழித் தாயகம்l

இறுதித் தீர்வை எட்டுவது என்பது, வன்முறைச் சுழற்சிகள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும், இலங்கையில் நிலையான அமைதியை அடைவதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்கும் முக்கியமாக உள்ளதென்பதை இப்பிராந்தியத்தை அக்கறையோடு கையாளும் நாடுகள் உணர்ந்து செயற்படவேண்டும்.

ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சனையில் மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வும், சர்வதேசத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும் என்பதே எமது உறுதியானதும் அறுதியானதுமான நிலைப்பாடாகும்.

அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து, எம்மை நாமே ஆளக் கூடிய நிரந்தரத் தீர்வும் பொதுவாக்கெடுப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை, தமிழ் மக்கள் சார்பாக இந்தப் பிரகடனம் உலகுக்கு அறிவிக்கின்றது.

பேரெழுச்சியுடன் நிறைவடைந்தது பேரணி; உரிமைகளுக்காக மட்டக்களப்பில் அலையெனத் திரண்ட வட, கிழக்கு தமிழ் மக்கள்

கடந்த 04.02.2023 அன்று இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற கருப்பொருளின்கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியொன்று ஆரம்பித்திருந்தனர். அவ்வாறு ஆரம்பித்தவர்கள் திங்கட்கிழமை(06) திருகோணமலைக்கு வந்து செவ்வாய்கிழமை வெருகல் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி ஆரம்பமானது.

இப்பேரணியை தொடர்ந்து அரச புலனாய்வாளர்கள் நோட்டமிட்டுக் கொண்ட இந்நிலையில் இப்பேரணி வாழைச்சேனை, கல்குடா, சந்திவெளி, சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடி, ஊடாக மட்டக்களப்பு நகரை வந்தடைந்தது, அதுபோல் அம்பாறை மாவட்டத்திலிருந்து வந்த இரு தொகுதியினரும், அவர்களுடன் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரும் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சங்கமித்தனர்; இறுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் கொள்கைப் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்து.

பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ, பல்கலைக் கழகங்களின் மாணவர்கள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், என பல்லாயிரக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.