அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு; கடும் அதிருப்தியில் அமெரிக்கா

பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வர அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான அனுமதியை மறுத்துள்ள அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா, அத்தியாவசிய தேவைகளின் நிமித்தமே கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரியதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி மறுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அமெரிக்க ஆய்வுக்கப்பலில் பல்கலைக்கழக மாணவர்கள் இருப்பதாகவே இராஜாங்க தினைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பதிலளித்துள்ளது.

இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை. மாறாக எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும் குறித்த தேவைகளை சர்வதேச கடல்பரப்பிற்கு சென்று குறித்த கப்பலின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதே வேளை குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரையில் அனுமதி அளிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் இலங்கை தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம் எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இலங்கைக்குள் வர இனி அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு இலங்கை ஆதரவு வழங்கும் – ஜேக் சல்லிவன்

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு முழு ஆதரவு வழங்கும் என தேசிய பாதுகாப்பு தலைவர் ஜேக் சல்லிவன் இதனை தெரிவித்துள்ளார்

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்கவுடன் இன்று (10) தொலைபேசி கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டினார்.

மேலும் அவர் , சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தால் சுட்டிக்காட்டப்பட்ட பொது நிதி, பணம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதுடன் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதன் போது பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மேலும் இது குறித்த எதிர்கால எதிர்பார்ப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர இலக்குகளை அடைவதற்காக இலங்கையுடன் தொடர்ந்த ஈடுபட செய்வதில் உறுதியாக இருப்பதாக சல்லிவன் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் இந்த உரையாடல் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மனித உரிமைகளை சவாலுக்கு உட்படுத்தும் சட்டமூல உருவாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களைத் தாம் தொடர்ந்து கண்காணிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் கடந்த வாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது இலங்கை பற்றிய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கையைத் தொடர்ந்து பிரிட்டன், கனடா, வடமெசிடோனியா, மாலாவி, மொன்டெனேக்ரோ மற்றும் அமெரிக்கா ஆகிய இணையனுசரணை நாடுகளால் இலங்கை நிலைவரம் குறித்த அறிக்கை வாசிக்கப்பட்டது.

அதில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டத்தை உருவாக்க முன்னர் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான செயன்முறையொன்றைப் பின்பற்றவேண்டியது அவசியமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திய இணையனுசரணை நாடுகள், எதிர்வருங்காலங்களில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பொறுப்புக்கூறலுக்கான பாதையை வகுத்தளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தன.

இந்நிலையில் இணையனுசரணை நாடுகளின் அறிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், ‘சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களை நாம் தொடர்ந்து கண்காணிப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணையனுசரணை நாடுகளாலும், ஏனைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் ‘நிகழ்நிலைக்காப்பு சட்டமூலமானது கருத்து வெளிப்படுத்தலைக் குற்றமாக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடும்’ என்ற பொதுவான கரிசனை முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

அதி நவீன கடலோர காவற்படைக் கப்பலை இலங்கைக்கு வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க பிரதிச் செயலாளர் வர்மா உறுதி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பிற்கு உதவி செய்வதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளதென அமெரிக்க இராஜாங்க முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா தெரிவித்தார்.

இரு தினங்கள் (பெப்ரவரி 23 – 24 ) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா அரசாங்க, சிவில் சமூகம் மற்றும் பொருளாதாரத் தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொண்ட நிலையில், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரைச் சந்தித்த செயலாளர் வர்மா இலங்கையினை நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்தும் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உட்பட இலங்கையில் மேற்கொள்ளப்படும் சர்வதேச நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடினார்.

மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதிச் செயலாளர் வர்மா வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும் ஒரு அதிக ஸ்திரத்தன்மையுடைய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை கடற்படையின் திறன்களை பலப்படுத்துவது உட்பட, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலானபாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.

பெப்ரவரி 23 ஆம் திகதி, அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மூன்று முன்னாள் அமெரிக்க கடலோரக் காவல்படை கப்பல்களில் ஒன்றான SLNS விஜயபாகு கப்பலுக்குச் சென்ற பிரதிச் செயலாளர் வர்மா பின்வருமாறு கூறினார். “நடுத்தர தாங்குதிறன் கொண்ட ஒரு நான்காவது கப்பலையும் இலங்கைக்கு வழங்குவதற்கான தனது நோக்கத்தை இராஜாங்கத் திணைக்களம் காங்கிரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளதென்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த முயற்சிக்கு நிதியளிப்பதற்காக வெளிநாட்டு இராணுவ நிதியளிப்பாக 9 மில்லியன் டொலர்களை திணைக்களம் ஒதுக்கியது. காங்கிரஸின் அறிவிப்புக் காலம் நிறைவடைந்த பின்னர், கப்பலை இலங்கைக்கு வழங்குவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தப் பரிமாற்றம் நிறைவடைந்தால், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அது மேலும் பலப்படுத்தும்.

இலங்கை தனது பிரத்தியேக பொருளாதார வலயத்தில் ரோந்து செல்வதற்கும், அதன் தேடுதல் மற்றும் மீட்புப் பகுதியைக் கண்காணிப்பதற்கும், இந்து சமுத்திரத்தின் பரபரப்பான கடல் வழித்தடங்களைக் கடந்து செல்லும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் மேலதிக பாதுகாப்பை வழங்குவதற்குமான இலங்கையின் திறனை இந்தக் கப்பல் அதிகரிக்கும்.

கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டபோது அங்கு இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித்த பண்டார தென்னகோன், இலங்கை கடற்படையின் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

“அமெரிக்கா முன்னர் இலங்கை கடற்படைக்கு மூன்று கப்பல்பளை வழங்கியுள்ளது. கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் சட்ட அமுலாக்க பணிகள், மனித கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் ஆகிய பணிகளுக்காக இந்த கப்பல்கள் பயன்படுத்தப்படும் அதே நேரத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் கால பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கும் அவை உதவி செய்கின்றன. நான்காவது கப்பலின் இந்தப் பரிமாற்றமானது, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பேணிப்பாதுகாப்பதற்காக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பின் ஒரு நீண்ட வரலாற்றில் மற்றுமொரு முக்கிய புள்ளியாகும்.” என தூதுவர் சங் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்திலுள்ள ஒரு ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையமான மேற்கு கொள்கலன் முனையத்திற்கும் (WCT) பிரதிச் செயலாளர் வர்மா விஜயம் செய்தார். அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனத்தின் 553 மில்லியன் டொலர் நிதியளிப்புடன், கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் (CWIT) பிரைவட் லிமிடட் இனால் தற்போது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மேற்கு கொள்கலன் முனையமானது தெற்காசியப் பிராந்தியத்திற்கு இன்றியமையாத ஒரு உட்கட்டமைப்பை வழங்கும்.

2021 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட தனது முழு கொள்ளளவுடன் இயங்கும், கொழும்பு துறைமுகத்தின் இப்புதிய இணைப்பானது துறைமுகத்தின் மிகவும் ஆழமான முனையமாக அமைவதுடன், இலங்கையின் இறையாண்மைக் கடன்களை அதிகரிக்காமல், கொழும்பு துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்துக் கொள்ளளவை அதிகரிப்பதையும், பிரதானமான கப்பல் வழித்தடங்கள் மற்றும் சந்தைகளை இணைக்கும் முதன்மை ஏற்பாட்டியல் மையமாக அது வகிக்கும் பங்கை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் ஆர். வர்மா முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளராகப் பணியாற்றுகிறார். இந்தப் பதவியில், அவர் திணைக்களத்தின் தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாகச் செயற்பட்டு, நவீனமயமாக்கல், வெளிநாட்டு உதவிகள் மற்றும் பலதரப்பட்ட பணியாளர்கள் தொடர்பான விடயங்களிலும் மூலோபாயம் தொடர்பான விடயங்களிலும் திணைக்களத்தின் முயற்சிகளை வழிநடத்துகிறார். பிரதிச் செயலாளர் வர்மா முன்னர் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றி, மிகப்பெரிய அமெரிக்கத் தூதரகங்களில் ஒன்றான இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை வழிநடத்தியதுடன் இருதரப்பு உறவுகளில் வரலாற்று ரீதியான முன்னேற்றங்களை அடைவதற்கும் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வெளிப்படைத்தன்மையான ஆட்சிக்கு கருத்து சுதந்திரத்தை வலியுறுத்திய அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது பொது இராஜதந்திரத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளரான லிஸ் அலன் கொழும்புக்கான தமது வரலாற்று சிறப்புமிக்க மூன்று நாள் விஜயத்தை (பெப்ரவரி 17 தொடக்கம் 19 வரை) நிறைவுசெய்தார்.

அவர் தமது இந்த விஜயத்தின் போது இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்ட கால அடிப்படையிலான சுபீட்சத்துக்கான அமெரிக்காவின் ஒத்துழைப்பை மீள உறுதிப்படுத்தும் வகையில், இளம் தலைவர்கள், தொழில்முனைவோர், பொருளடக்க படைப்பாளிகள் (content creators), சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களுடன் உரையாடல்களில் ஈடுபட்டார்.

இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுடனான சந்திப்பொன்றின் போது, துணை இராஜாங்க செயலாளர் அலனும் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான பங்காண்மை தொடர்பில் கலந்துரையாடியதுடன், துடிப்பான தகவல் பரப்பொன்றுக்கும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் இடையலான பிணைப்பையும் கோடிட்டுக் காட்டினர்.

அத்துடன், அனைவரையும் உள்வாங்கிய ஆட்சிமுறைமைக்கான பிராந்திய மாதிரியொன்றாக உருவெடுப்பதற்கான பாதையொன்றை வகுப்பதற்கான இலங்கைக்கான சந்தர்ப்பத்தையும் ஏற்றுக்கொண்டனர்.

ஜனநாயக சமூகங்களில் ஊடகங்களின் இன்றியமையாத வகிபாகம் தொடர்பில் அவதானம் செலுத்தி கொழும்பில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் உள்ளிட்டோர் துணை இராஜாங்க செயலாளர் அலனின் உரையை செவிமடுத்தனர்.

பல தலைமுறைகளாக அரசாங்கங்களும் ஊடகங்களும் சிக்கலானதொரு, சில சமயங்களில் எதிர்வாதங்களுடன் கூடிய உறவை ஏற்படுத்தி சென்றிருக்கின்றன. இந்த செயற்பாடு எந்தவொரு நாட்டிற்கும் தனித்துவமானது கிடையாது. உதாரணமாக அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், இரு பிரதான அரசியல் கட்சிகளில் இருந்துமான ஜனாதிபதிகள் ஊடகங்களுடனான முரண்பாட்டின் அவரவரது பங்கை அனுபவித்துள்ளனர். ஜனநாயக சமூகங்களின் அடையாளமொன்றான இந்த பதற்றமானது வெளிப்படைத்தன்மையை வளர்ப்பதிலும் பயனுறுதிமிக்க நிர்வாகத்தை ஊக்குவிப்பதிலும் முக்கியமான வகிபாகமொன்றை வகிக்கின்றது என்று துணை இராஜாங்க செயலாளர் அலன் தமது உரையில் குறிப்பிட்டார்.

ஐடியாஹெல் ஸ்டூடியோவில் (IdeaHell studio) அமெரிக்க தூதரகத்தின் உதவியுடன் நடைபெற்ற கிரியேட்டர் எக்ஸ் (Creator X) செயலமர்வின் போது, துணை இராஜாங்க செயலாளர் டிஜிட்டல் டர்ட்டல்ஸின் (Digital Turtles) படைப்பாளர் வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், கருத்துச் சுதந்திரம் தான் எந்தவொரு ஜனாநாயகத்தினதும் முக்கிய அடிப்படை அம்சமாகும். இன்றைய தினத்தின் ஒன்றுகூடல்கள் போன்றவை அதன் நீடித்த விழுமியத்திற்கான சான்றொன்றாகும்.

பல்வேறு மொழி மற்றும் கலாசார பின்னணியில் இருந்தான படைப்பாளிகளை முதன்முறையாக ஒன்றுசேர்த்திருப்பது இந்த சுதந்திரத்தை பாதுகாப்பதன் முக்கியதுவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. ஜனநாயக விழுமியங்களை ஆதரிக்கும் மற்றும் வலுப்படுத்தும் விவரணங்களை செதுக்குவதில் உங்களது பணி முக்கியமானதாகும். பொருளடக்க படைப்பாளிகள் என்ற வகையில், நீங்கள் ஜனநாயக சமூகங்களை வடிவமைக்கும் உரையாடலை கட்டமைக்கின்றீர்கள் என்று அவர் இதன்போது தெரிவித்தார்.

கங்காராமய விகாரை தொடக்கம் புனித அந்தோனியார் தேவாலயம், ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம் மற்றும் சம்மாங்கோடு பள்ளிவாசல் வரை என கொழும்பிலுள்ள பல்வேறு மத சமூங்கள் தொடர்பான கற்றல் பயணமொன்றை மேற்கொண்டு துணை இராஜாங்க செயலாளர் இலங்கையின் வரலாறு மற்றும் பன்முகத்தன்மை பற்றி அறிந்துக் கொள்வதில் தம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

வேகா இன்னோவேஷன்ஸ் (VEGA Innovations) மின்சார முச்சக்கரவண்டியில் கொழும்பின் வீதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர் நிலையான போக்குவரத்தில் புதுமையான முன்னேற்றங்களை அவர் கண்டார். அமெரிக்கா வேகா மற்றும் முக்கியமான தனியார்துறை நிறுவனங்களுடன் பங்காண்மையில் ஈடுபட்டு இலங்கையின் புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையில் புத்தாக்கத்தையும் வளர்ச்சி தூண்டலையும் அதிகரிப்பதற்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (யுஎஸ்எயிட்) ஊடாக தொடர்ந்தும் உறுதிபூண்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் இளைஞர் மன்றத்தினருடனும் துணை இராஜாங்க செயலாளர் கலந்துரையாடினார். எதிர்கால சந்ததியினரில் முதலீடு செய்வதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடானது செழிப்பான, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இலங்கையை வடிவமைப்பதில் இளையோரின் முக்கியமான வகிபாகத்தை அங்கீகரிப்பதில் இருந்து உருவாகிறது என்று அவர் இதன்போது வலியுறுத்தினார்.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள அமெரிக்க தூதரகத்தின் வருடாந்த இளைஞர் தலைமைத்துவ மாநாடானது, புத்தாக்கத்தை தூண்டும் மற்றும் நேர்மறை மாற்றத்தை உண்டாக்கும் உரையாடல்களை போசிக்கும் மற்றும் திறன்களை வளர்க்கும் நிமித்தம் இந்தோ-பசுபிக் பிராந்தியம் முழுவதும் நிலவும் காலநிலை மாற்றம் பேன்ற அழுத்தமான விவகாரங்களின் பின்னணியில் உறவுகளை வலுப்படுத்துவதற்காக இலங்கை மற்றும் அயல் நாடுகளில் இருந்தான இளம் தலைவர்களை ஒன்றிணைத்து ஒரு பிராந்திய முன்மாதிரியாக செயல்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பொது இராஜதந்திரத்திற்கான துணை இராஜாங்க செயலாளர் லிஸ் அலன், அமெரிக்க மக்களுக்கும் மற்றும் ஏனைய நாடுகளின் குடிமக்களுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்தவும் மற்றும் வலுப்படுத்தவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு தலைமை தாங்குகிறார். ஊடகங்கள், கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் வெளிநாட்டு அவையோர் / பார்வையாளர்களுடனான இராஜாங்க திணைக்களத்தின் ஈடுபாடுகளை மேற்பார்வை செய்வதற்கு அவர் பொறுப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான கடல்சார் பொருளாதார உறவுகளை அமெரிக்கா மேலும் ஆழமாக்கவுள்ளது – சுதந்திர தின செய்தியில் அன்டனி பிளிங்கென்

இலங்கையுடன் கடல்சார் பொருளாதார உறவுகளை அமெரிக்கா மேலும் ஆழமாக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 76வது சுதந்திரதினத்தையோட்டி இலங்கை மக்களிற்கான வாழ்த்துச்செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான கூட்டு என்பது பகிரப்பட்ட விழுமியங்கள் ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்பு சுதந்திரமான வெளிப்படையான பாதுகாப்பான இந்தோ பசுபிக் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள அன்டனி பிளிங்கென் எங்கள் உறவு பாதுகாப்பு ஒத்துழைப்பு பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தகம் மற்றும் முதலீடு அத்துடன் கல்விபரிமாற்றங்கள் அறிவியல் கூட்டாண்மைகளால் வளர்க்கப்படும் மக்களிடையேயான உறவுகளை அடிப்படையாக கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வருடங்களில் இந்தோபசுபிக்கின் சகாக்கள் என்ற அடிப்படையில் நாங்கள் இலங்கையுடனான பொருளாதார கடல்சார் உறவுகளை மேலும்வலுப்படுத்துவோம் காலநிலை நெருக்கடி மற்றும் எங்களின் கரிசனைக்குரிய ஏனைய விடயங்களிற்கு தீர்வை காணமுயல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைப் போன்ற சட்ட மூலத்தை அமெரிக்காவும் அமுல்படுத்த உள்ளது – பாலித ரங்கே பண்டார

தற்கொலைக்களுக்கு காரணம் சமூகவலைத்தள செய்திகளாகும். அதனால் அமெரிக்காவும் நாங்கள் கொண்டுவந்திருக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டுவர தீர்மானித்திருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்தார்.

சமூகவலைத்தளத்தில் இடம்பெற்றும் செய்திகளால் பெண்கள், சிறுவர்கள் என பலர் தற்கொலை செய்துவருகின்றனர். இதனை தடுப்பதற்கே நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அநுராதபும் மாவட்ட சம்மேளனம் வியாழக்கிழமை (01) அனுராதபுரம் இளைஞர் சேவை மன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் தலை தூக்கும் என யாரும் நினைக்கவில்லை.

என்றாலும் 2001இல் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு சென்ற ரணில் விக்ரமசிங்க ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு நாட்டின் பிரதமரானார்.

அதன் பின்னர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இன்று நாட்டின் பிரதான பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு முழு உலகுக்கும் தெரியும் வகையில் நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துவருகிறார். ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயற்பட்டு வருகிறார்.

அதனால் ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு அனுப்பி, அவரை பிரதமராக்கி, ஜனாதிபதியாக்கியது போன்று அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை நூறு இலட்சம் வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக நியமித்தே தீருவோம். அதுதொடர்பில் சந்தேகம் கொள்ளவேண்டாம்.

ஏனெனில் விழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில் ரணில் விக்ரமசிங் மாத்திரமே முன்வந்து, நாட்டை ஓரளவு ஸ்திர நிலைக்கு கொண்டுவந்தார். அதனால் எங்களையும் நாட்டையும் மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரும் இல்லை.

அத்துடன் நாட்டை மீட்கும் இந்த பயணத்தை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும்போது ராஜபக்ஷ்வினரை பாதுகாக்க செயற்படுவதாக எங்களை விமர்சிக்கின்றனர். ராஜபக்ஷ்வினரை மாத்திரமல்ல, அனைவரையும் இணைத்துக்கொண்டு முழு நாட்டு மக்களையும் பாதுகாக்கவே ரணில் விக்ரமசிங்க செயற்பட்டு வருகிறார்.

என்றாலும் திருடர்களை பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கவோ ஐக்கிய தேசிய கட்சியோ தயாரில்லை. திருடர்களுடன் பாராளுமன்றத்தில் இருப்பதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம் செய்துவருகிறார். ஆனால் ரணில் விக்ரமசிங்க திருட்டை ஒழிக்க தேவையான சக்திவாய்ந்த சட்ட திடடங்களை கொண்டுவந்திருக்கிறார்.

அதேபோன்று நிகழ்நிலை காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் தெரிவித்து வருகின்றன.

ஆனால் சமூகவலைத்தளத்தில் இடம்பெற்றும் செய்திகளால் பெண்கள், சிறுவர்கள் என பலர் தற்கொலை செய்துவருகின்றனர். இதனை தடுப்பதற்கே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

மாறாக யாருடைய உரிமையையும் மீறவில்லை. அமெரிக்காவில் இன்று அதிகரித்துவரும் கொலை, தற்கொலைக்களுக்கு காரணம் சமூகவலைத்தள செய்திகளாகும். அதனால் அமெரிக்காவும் நாங்கள் கொண்டுவந்திருக்கும் சட்டத்தை கொண்டுவர தீர்மானித்திருக்கிறது.

எனவே ஆளுமையும் அனுபவமும் உள்ள ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே இந்த நாட்டையும் மக்களையும் மீள கட்டியெழுப்ப முடியும்.

அதனை கடந்த ஒன்றரை வருட காலத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதனால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை நூறு இலட்சம் வாக்குகளினால் வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி – ரணில் இடையே சந்திப்பு

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டுடன் இணைந்த வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி, The Climate Reality Project இன் நிறுவனரும் தலைவருமான அல் கோர் (Al Gore) ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன மற்றும் ஜெனீவாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியும் தூதுவருமான ஹிமாலி அருணதிலக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா கரிசனை

யுக்திய நடவடிக்கை குறித்து இலங்கைசட்டத்தரணிகள் சங்கமும் மனித உரிமை ஆணைக்குழுவும் வெளியிட்டுள்ள கரிசனைகளை அமெரிக்காவும் பகிர்ந்துகொள்வதாக இலங்கைகக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

சட்டஅமுலாக்கல் நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியின் கொள்கைகளைஉரியநடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சமநிலையை பேணுவது நீதிக்கும் மக்களின் நம்பிக்கையை தக்கவைப்பதற்கும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையில் நீதியான தேர்தலை நடாத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு

இலங்கையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கும் தாம் எப்போதும் ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மத்தியூ மில்லர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனெட் சபையின் உறுப்பினர்களான பென் கார்டின், ஜிம் ரிச், ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பில் ஜோன்ஸன் ஆகியோர் இணைந்து இலங்கையில் ஊழலை இல்லாதொழித்தல் மற்றும் நீதியை அடைதல் ஆகியவற்றை முன்னிறுத்திய பொதுமக்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதையும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதையும் இலக்காகக்கொண்ட இருகட்சித் தீர்மானமொன்றை செனெட் சபையில் முன்மொழிந்துள்ளனர். இத்தீர்மானத்தில் இலங்கை மக்களின் ஜனநாயக ரீதியான மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்திய அபிலாஷைகளை ஈடேற்றுவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்குமென உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஊழலை இல்லாதொழித்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தல், உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் நடாத்துதல் ஆகியவற்றை நிறைவேற்றுவதன் ஊடாக இலங்கை அரசாங்கம் நாட்டுமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘இலங்கை மக்கள் அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதுடன், அவை மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அத்தோடு அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள், முறையற்ற நிதி நிர்வாகம், சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவதில் தோல்வி, சீனாவிடமிருந்து பெற்ற மிகையான கடன்கள் போன்றவை இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இருப்பினும் ஊழலையும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கையும் முடிவுக்குக்கொண்டுவருவதற்குரிய போதிய நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னமும் முன்னெடுக்கவில்லை. அதேபோன்று தேர்தல்களை நடாத்துவதில் நிலவும் தொடர் தாமதம் நாட்டின் ஜனநாயகத்தை வலுவிழக்கச்செய்துள்ளது. இந்த நெருக்கடிக்குக் காரணமானவர்களில் பலர் உள்நாட்டுப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்’ எனவும் அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் முன்மொழிந்திருக்கும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று முன்தினம் வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இத்தீர்மானத்தை மேற்கோள்காட்டி ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பேச்சாளர் மத்தியூ மில்லர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி – அமெரிக்க செனெட் வெளியுறவு குழுவினால் முன்மொழியப்பட்டிருக்கும் இருகட்சித் தீர்மானத்தில் ‘ஊழலை இல்லாதொழித்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தல், உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் நடாத்துதல் ஆகியவற்றை நிறைவேற்றுவதன் ஊடாக இலங்கை அரசாங்கம் நாட்டுமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் – ஊழல் மோசடிகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல் மற்றும் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடாத்துதல் என்பவற்றுக்கு நாம் எப்போதும் ஆதரவளிப்போம்.