பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது கவலை அளிக்கிறது – ஜூலி சங்

அமைதியான போராட்டக்காரர்களை கைது செய்தல் மற்றும் சிறைகளில் கைதிகளை நடத்துவது உட்பட பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து கேள்விப்படுவது கவலை அளிக்கிறது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் தடுப்புக் காவலில் இருப்பவர்களிடம் கருத்துச் சுதந்திரம் மற்றும் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்வது இன்றியமையாதது என்றார்.

குறிப்பாக அரசாங்கம் அதன் சர்வதேச கடமைகளுக்கு இணங்க பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றியமைத்து முக்கிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த விரும்புவதால், அது அடிப்படை சுதந்திரங்களை பாதுகாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் 200 Shell எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

அமெரிக்காவின் RM Parks Inc நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் விநியோகஸ்தரான RM Parks Inc., Shell PLC தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை முதலீட்டு சபையுடன் (BOI) 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது

“RM Parks Inc. மற்றும் Shell இணைந்து 200 எரிபொருள் நிரப்பு நிலையங்களை செயல்படுத்தவுள்ள நிலையில் EV சார்ஜிங் வசதிகளுடன் கூடிய மினி-சூப்பர் மார்கெட்டுகளின் சேவைகளை வழங்கவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

இலங்கையுடனான பங்களிப்பை அமெரிக்கா தொடரும்; சமந்தா பவர் ரணிலிடம் உறுதி

இலங்கையுடனான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிப்பதாக சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்சியின் நிர்வாகி சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்தார்.

மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முய்ஸு பதவியேற்பு நிகழ்விற்காக மாலைதீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் அரசியல் சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை இதன்போது வலியறுத்தியதாக சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் இலங்கையின் துறைமுக உள்கட்டமைப்பில் அண்மையில் 550 மில்லியன் முதலீடு செய்தது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய சமந்தா பவர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் நிலைப்பாடு இதில் வெளிக்காட்டப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு சீயோன் ஆலய விஜயத்தின் போது கடும் மன உளைச்சலுக்குள்ளானதாக அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞயிறு தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்றபோது தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

விஜயம் குறித்து அமெரிக்கத் தூதுவர் தனது X தளத்தில் குறிப்பிடுகயைில்,

நான் சீயோன் தேவாலயத்திற்குச் சென்று, 2019 இல் இடம்பெற்ற அந்த பயங்கரமான நாளின் தாக்கம் குறித்து போதகர் ரோஷன் மகேசனுடன் கலந்துரையாடியதில் எனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டது. இங்கு கொல்லப்பட்ட 25 க்கும் மேற்பட்ட குழந்தைகளால் சமூகம் மேம்படுவதற்கான ஒரு குணப்படுத்தும் ஆதரவைப்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு குழு உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் நிலவும் நிலப்பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் சமூக ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த பங்கு குறித்து பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார்.

சமூகங்களுக்கிடையில் இனவாத பதற்றங்களை தணிப்பதில் அவர்கள் பகிர்ந்துகொண்ட விடயங்கள் இலங்கையின் வெற்றி மற்றும் பன்முகத்தன்மைக்கு முக்கிய சான்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நிறுவப்பட்டுள்ள யேசு சபையைச் சேர்ந்தவரும் இலங்கை “கூடைப்பந்தாட்டத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவருமான அமெரிக்காவில் பிறந்த யூஜின் ஜோன் ஹெபர்ட்டின் சிலையை அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் பார்வையிட்டுள்ளார்.

கடந்த 1948 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லூசியானாவிலிருந்து இலங்கை வந்த யேசு பையைச் சேர்ந்த யூஜின் ஜோன் ஹெபர்ட், மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணியை தேசிய சாம்பியன்ஷிப்களுக்கு வழிநடத்தினார். அப்போதும் அருட்தந்தை யூஜின் ஜோன் ஹெபர்ட், கூடைப்பந்து விளையாட்டை சமூகங்களை இணைக்கவும் புரிந்துணர்வை வளர்க்கவும் ஒரு இராஜதந்திர கருவியாகப் பயன்படுத்தினார் என்று அமெரிக்கத் தூதுவர் ஜுலிசங் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் அமெரிக்காவின் 75 வருட கூட்டாண்மை இலங்கையர்களுக்கு எவ்வாறான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பதை ஆராய்வதற்காக அமெரிக்கதூதுவர் ஜுலிசங் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அங்குள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் அதில் இருந்து படிப்பினைகளை கற்றுக்கொள்வதற்கும், முன்னேறுவதற்கும், ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கும் காணப்படும் வாய்ப்புகளை மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் உள்ள இலங்கையர்களிடம் இருந்து இனங்கண்டு பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் ஒன்று சேரந்து ஈடுபட ஆவலுடன் காத்திருப்பதாகவும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தூதுவர்‌ இலங்கையின்‌ உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எதிர்காலத்தில் இலங்கையின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைத்துள்ளது.

2022 மே 9 ம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தூதுவர் கருத்து தெரிவித்திருந்த நிலையிலேயே நாடாளுமன்ற குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.

இரண்டு வாரங்களிற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் கூட்டம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் குழுவின் தலைவர் உறுப்பினர்கள் முப்படை தலைவர்கள் பாதுகாப்பு செயலாளர் உட்பட்டவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இந்த நிலையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்  தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அமெரிக்க தூதுவரின் கருத்துக்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ளார்.

ஆயுதமேந்தாத ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்து வெளிப்படையான விசாரணையை அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார், ஆர்ப்பாட்டங்களிற்கான மக்களின் உரிமையை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் என தனது கடிதத்தில் சரத்வீரசேகர  தெரிவித்துள்ளார்.

டயர்களை எரிப்பது வீதிகளை புகையிரத பாதைகளை மறிப்பது எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அழி;ப்பது பொலிஸார் மீது கற்களை வீசி எறிவது போன்றவற்றை ஆர்ப்பாட்டங்களாக அமைதியான நடவடிக்கைகளாக கருதமுடியுமா என சரத்வீரசேகர தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். தூதுவருக்கு இதனை கிரகிப்பதற்கான ஆற்றல் இருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை குறித்து  அறிக்கை வெளியிடுவதற்கு தனிநபருக்கு உள்ள உரிமை குறித்து அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ள சரத்வீரசேகர பொலிஸார் ஆயுதமேந்தாத  ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டனர் என தெரிவித்ததன் மூலம் தற்போது எங்கள் நாட்டில் வசிக்கும் தூதுவர் இலங்கை குறித்து உலகிற்கு பாதகமான செய்தியை அனுப்புகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற ஆர்ப்பாட்டங்களின் போது அமெரிக்க இராணுவம் எவ்வாறு நடந்துகொண்டது அவர்களை கட்டுப்படுத்தியது என்பதையும் சரத்வீரசேகர தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது அறிக்கைகள் மூலம் ஜூலிசங்  அரசாங்கத்திற்கு எதிரான சதி நடவடிக்கைகளிற்கு ஆதரவளித்தார் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

அமெரிக்க காட்டர் சென்டர்  பிரதிநிதிகளுக்கும் இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (18) கொழும்பிலுள்ள ஹோட்டலில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பின்போது நடைபெறவிருக்கும் தேர்தல்களின் போது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதே போன்று வாக்காளர்களை அறிவூட்டக்கூடிய நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்பில் கபே அமைப்பு சார்பாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் மன்னாஸ் மக்கீன் மற்றும் சட்டத்துறை பணிப்பாளர் ஹரேந்ர பானகல மற்றும் காட்டர் சென்றர் பிரதிநிதிகளான சஹிரா சகீட், தாரா செரீப்,மார்க் ஸ்டீவன்,தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களான சீஎம்இ, பெப்ரல்ட்ரான்ஸ் பேரன்சி இன்டர்நெசனல், ஐரெக்ஸ் ஆகியவற்றை சேர்ந்தோரும் கலந்து கொண்டனர்.

அமெரிக்க குடியுரிமையை கைவிடப் போவதில்லை – பசில் ராஜபக்ச

அமெரிக்க குடியுரிமையை கைவிடப்போவதில்லை என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு, இலங்கையின் அரசியலில் நேரடியாக பங்குப்பற்றுவார் என பொதுஜன பெரமுன கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

குறிப்பாக, இலங்கையின் சட்ட முறைக்கு அமைவாக இரட்டை குடியுரிமையை கொண்டுள்ள பசில் ராஜபக்ச இலங்கையில் அரசியல் ரீதியான அதிகார பதவிகளையோ, அரச உயர் பதவிகளையோ வகிக்க முடியாது.

இந்த நிலையிலேயே அமெரிக்க குடியுரிமையை கைவிடப் போவதில்லை என பசில் ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டங்களை உருவாக்கும் போது சகல தரப்பினருடம் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பது அவசியம் – ஜூலி சங்

வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யக்கூடிய வகையிலும், நாட்டு மக்களின் தேவைகள் மற்றும் கரிசனைகளை பிரதிபலிக்கக்கூடிய வகையிலும் சட்டங்களை வடிவமைப்பதற்கு சகல தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பது அவசியம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (27) நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் உள்ளடங்கலாக புதிய சட்டமூல வரைபுகளின் தயாரிப்பின்போது சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து பொறுப்பான ஆட்சியியலை வலியுறுத்துவதில் சட்டத்தரணிகள் கூட்டிணைவு கொண்டிருக்கும் வகிபாகம் குறித்து விரிவாக ஆராய்ந்ததாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யக்கூடிய வகையிலும், நாட்டு மக்களின் தேவைகள் மற்றும் கரிசனைகளைப் பிரதிபலிக்கத்தக்க வகையிலும் சட்டங்களைத் தயாரிப்பதற்கு சகல தரப்பினரதும் பரந்துபட்ட ஆலோசனைகள் மற்றும் நிலைப்பாடுகளைக் கவனத்திற்கொள்வது இன்றியமையாததாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்களின் ஊடாக மீண்டெழ வேண்டும் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

“இலங்கை அதன் வரலாற்றில் கற்றுக்கொண்ட பாடங்களின் ஊடாக மீண்டெழுவதற்கான சந்தர்ப்பமாக இந்த நெருக்கடியான தருணத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்“

இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – இலங்கை வணிக சபையின் 31ஆவது பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் இங்கு கருத்துரைக்கையில்,

“நிலை பேண்தகு அபிவிருத்தியையும் பொருளாதார வளர்ச்சியையும் அடைந்துக்கொள்ள இலங்கை மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையின் பிரகாரம் பல்வேறு மறுசீரமைப்புகளை இலங்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலும் பல கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கமும் அதன் பிரதிநிதிகளும் இந்த விடயத்தை வெற்றிக்கொள்ள முழுமையாக தம்மை அர்ப்பணித்து பணியாற்றுவதையும் நான் அறிவேன்.

அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் இலக்கானது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதுடன், அதற்கான தடைகளை நீக்குவதாகும் என்பதையும் அறிவேன்.

பழைய கலாசாரங்களின் பிரகாரம் நாம் ஆரம்பித்த அதே இடத்திற்கு மீண்டும் செல்வது அல்ல இலக்காக இருக்க வேண்டியது.

இலங்கை இன்னமும் நெருக்கடியில் இருந்து மீளவில்லை. அதுதான் நாம் வெற்றிக்கொள்ள வேண்டிய இலக்கு.

அமைவிடத்தின் ஊடாக இலங்கை தெற்காசியாவில் வளர்ச்சியடைந்த நாடாக மாற முடியும். வரலாற்றில் எதிர்கொண்ட சவால்களில் பாடங்களின் ஊடாக சகலரதும் பங்குபற்றலில் ஊடாக இந்த நெருக்கடியில் இருந்து மீள இதனை ஒரு சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ள வேண்டும்“ – எனவும் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் துறைமுகங்கள் விமானப் போக்குவரத்து துறையின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா விருப்பம்

இலங்கையின்துறைமுகங்கள் விமானநிலையங்களை பாதுகாப்பதுகுறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

டுவிட்டரில் இலங்கைக்கானஅமெரிக்க தூதுவர் ஜூலி சங் இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வாவை தான் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கையின் துறைமுகங்கள் விமானநிலையங்களின் அபிவிருத்தி குறித்து ஆராய்ந்ததாக தெரிவித்துள்ள அவர் இவை இலங்கையின் வர்த்தக மற்றும் தனியார் துறையினரை முன்னிறுத்திய அபிவிருத்திகளிற்கு அவசியமானவை என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் விமானப்போக்குவரத்து துறை துறைமுகங்கள் போன்றவற்றின் வெளிப்படையான வளர்ச்சியை எளிதாக்குவதற்கும் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குமான அர்ப்பணிப்புடன் அமெரிக்கா உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.