நாட்டின் கையிருப்பை பூச்சியமாக்கி விட்டு கடன் பெற்றதாக தம்பட்டம் அடிப்பதில் அர்த்தமில்லை – கிரியெல்ல

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு இப்போது கடன் வாங்கிவிட்டதாக தற்பெருமை பேசி பயனில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் கையிருப்பை பூஜ்ஜியமாக குறைத்த இந்த அரசாங்கம் அந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே கடனைப் பெற்றதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பணத்தை வழங்குவதற்கான நிபந்தனைகள் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நாட்டின் நீதித்துறை, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஊடகவியலாளர்களை நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி நசுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

21 திருத்தத்தின் மூலம் நீதித்துறை மற்றும் உயர் அதிகாரிகளின் சுதந்திரம் தற்போது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி அழிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கைக்கு கடன் வழங்க IMF நிறைவேற்று சபை அனுமதி

இலங்கைக்கு இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு சர்தேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையானது இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) இலங்கையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது இலங்கைக்கு 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை அணுக உதவுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வொசிங்டனில் இன்று கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இது குறித்து நாளை (21) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதேவேளை இந்த விடயம் சம்பந்தமாக விசேட அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு வர்த்தக கடன்வழங்குநர்களும் பங்கெடுக்கவேண்டும் – சீனா

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இருதரப்பு மற்றும் வர்த்தக கடன்வழங்குநர்களும் பங்கெடுக்கவேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

சுமையை பகிர்ந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ள மாவோநிங் இலங்கை தற்போதைய நிலைமைக்கு தீர்வை காண்பதற்கும் இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்கும் பேண்தகு அபிவிருத்தியை எட்டுவதற்கும் உரிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதியமைப்புகளுடன் சேர்ந்து செயற்படுவதற்கு சீனா தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அதிக கடன்வழங்கிய நாடான சீனா தனது எக்சிம் வங்கி இலங்கையுடன் கடன் விவகாரம் குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதை ஆதரிக்கின்றது எனவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கடன்உதவியை மேலும் நீடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கை

இந்தியாவின் ஒரு பில்லியன்டொலர் கடனை மேலும் சில மாதங்களிற்கு நீடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் கடனுதவி மார்ச் 17 ம் திகதி முடிவடைகின்ற நிலையில் இலங்கை அதில் மூன்றில் இரண்டை மாத்திரம் பயன்படுத்தியுள்ளது. மருந்துகளிற்கும் உணவுகளிற்கும் மாத்திரம் இலங்கை அதனை பயன்படுத்தியுள்ளது.

இலங்கைக்கான நிதி உதவியை வழங்க சர்வதேச நாணயநிதியம் தயாராகிவரும் நிலையில் இலங்கை இந்த வருடத்திற்கான நிதிகளை பெறுவதற்கானமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இவை தொடர்பில் பேச்சுவார்த்தைகள்இடம்பெறுகின்றன என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கடனில் சுமார் 300 மில்லியன் டொலர்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளநிலையில் இலங்கைஇந்த கடனுதவியை ஆறு முதல் 10 மாதங்களிற்கு நீடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு

கடன் மறுசீரமைப்புநடவடிக்கைகளுக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்தோடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம்தெரிவித்துள்ளது.

இதேநேரம் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது

இலங்கைக்கு கடன் வழங்குவதில் அனைத்து தரப்பிடமும் சாதக நிலைப்பாடு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் (02) இரவு, Zoom தொழிநுட்பத்தின் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பில், அனைத்து தரப்பினரினாலும் சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் சீனப் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாதிபதியுடன் இந்தக் கலந்துரையாடலை நடாத்தியுள்ளமை ஒரு மிக விசேடமான நிலைமையாகும்.

அதேபோன்று, கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பதற்காக, பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக உள்ளதாக சீனப் பிரதமர் லீ க சியாங் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளதாக அண்மையில், “ப்ளூம்பேர்க்” செய்திச் சேவை, செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கை, பாகிஸ்தான் போன்று, கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்வதாக அதன் போது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான உதவி குறித்து மூத்த இராஜதந்திரி சர்வதேசநாணய நிதியத்துக்கு எச்சரிக்கை

ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைக் குறிப்பிடவேண்டாமெனவும், தேர்தலொன்றின் மூலம் தமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு வழங்கப்படவேண்டும் எனவும் ஓப்பன் சொஸைட்டி பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியின் முன்னாள் இராஜதந்திரியுமான மார்க் மலோச்-பிரவுன் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ‘தேர்தலை நடாத்தவேண்டமென எதிர்க்கட்சியில் பலர் எம்மிடம் கூறியிருக்கின்றார்கள்.

தேர்தலை நடாத்துவதற்கான திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் தீர்மானிக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி எம்மால் பணத்தை அச்சிடமுடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நிஷான் டி மெல், ‘தேர்தல்களை நடாத்துவதற்கான நிதியை அரசாங்கத்தினால் வழங்கமுடியாமல் இருப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளே காரணமென ஜனாதிபதி கூறுகின்றார்.

தேர்தல்களை நடாத்துவதற்கான நிதியை வழங்குவதற்கு அரச திறைசேரி மறுப்பதன் ஊடாக ஜனநாயகம் நசுக்கப்படும் விவகாரத்தில் சர்வதேச நாணய நிதியம் பலிகடாவாக மாற்றப்படும் சம்பவத்தை இப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.

நிஷான் டி மெல்லின் டுவிட்டர் பதிவை மேற்கோள்காட்டி, உலகளாவிய ரிதீயில் தமது மக்களுக்குப் பொறுப்புக்கூறத்தக்க அரசாங்கத்தைக்கொண்ட ஜனநாயக நாடுகளைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு பணியாற்றிவரும் ஓப்பன் சொஸைட்டி பவுண்டேஷனின் தலைவரும் ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம், உலக வங்கி உள்ளிட்ட முக்கிய சர்வதேசக்கட்டமைப்புக்களின் முன்னாள் பிரதிநிதியுமான மார்க் மலோச்-பிரவுன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் ஒருபோதும் அமையாது என்று அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள மார்க் மலோச்-பிரவுன், தற்போது நாடு மிகமுக்கியமான தருணத்திலுள்ள நிலையில், வாக்களிப்பின் மூலம் தமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய உதவியைப்பெற பூரண ஒத்துழைப்பை வழங்க சீனா தயார்

இலங்கை கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் அவசியமான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கத்தயாராக இருப்பதாகவும், அதனை முன்னிறுத்தி சர்வதேச நாடுகள் மற்றும் நிதியியல் கட்டமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை முகங்கொடுத்திருக்கும் குறுங்காலக்கடன் மீள்செலுத்துகை நெருக்கடிக்குத் தீர்வை வழங்கும் நோக்கில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை மீளச்செலுத்தவேண்டியுள்ள கடன்களைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்குவதாகக் குறிப்பிட்டு சீன ஏற்றுமதி – இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) நிதியமைச்சிடம் நிதியியல் ஒத்துழைப்பு ஆவணமொன்றை வழங்கியிருப்பதாக மாவோ நிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவிகோரி விண்ணப்பித்துள்ள நிலையில், அச்செயன்முறைக்கு உதவுவதாக எக்ஸிம் வங்கி நிதியமைச்சிடம் சமர்ப்பித்த ஆவணத்தில் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள மாவோ நிங், அனைத்து வர்த்தகக் கடன்வழங்குனர்களும் ஒத்தவிதத்திலான கடன்சலுகைகளை வழங்கவேண்டும் என்றும் உதவிகளை ஒருங்கிணைப்பதற்குப் பல்தரப்புக்கடன்வழங்குனர்கள் தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

‘சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அதன் தற்போதைய கொள்கையையும் கடன்சார் விவகாரங்களில் அதன் நிலைப்பாட்டையும் அடிப்படையாகக்கொண்டவையாகும். அதேவேளை இந்த நடவடிக்கைகள் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பிரதிபலிக்கின்றது.

இலங்கை கடன் ஸ்திரத்தன்மையை அடைந்துகொள்வதற்கு உதவுவதில் சீனா கொண்டிருக்கும் அக்கறை மற்றும் கடப்பாடு ஆகியவற்றையே அதன் நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன’ என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடியை உரியவாறு கையாள்வதை முன்னிறுத்தி, சம்பந்தப்பட்ட அனைத்து நிதியியல் கட்டமைப்புக்களுடனும் ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் மாவோ நிங் உறுதியளித்துள்ளார்.

அத்தோடு தற்போதைய நெருக்கடிநிலையிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கும், அதன் கடன்நெருக்கடியைக் குறைப்பதற்கும், இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதை உறுதிசெய்வதற்கும் உதவுவதில் ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதியியல் கட்டமைப்புக்களுடன் கூட்டாக இணைந்து செயற்படத்தயாராக இருப்பதாகவும் சீன வெளிவிவகாரப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாணய நிதியத்தின் கடனுதவி குறித்து உன்னிப்பாக அவதானம் – ஐரோப்பிய முதலீட்டு வங்கி

இலங்கைக்கு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் உதவி தொடர்பில் கண்காணித்துவருவதாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் கிறிஸ் பீற்றர்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டுக்கான இலங்கைத்தூதுவர், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுக்குழுவின் தலைவர் கிரேஸ் ஆசீர்வாதம் ஆகியோருக்கு இடையில் லக்ஸம்பேர்க்கில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் உள்ளடங்கலாக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கிரேஸ் ஆசீர்வாதம் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதித்தலைவர் கிறிஸ் பீற்றர்ஸுக்கு விளக்கமளித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி ஏற்றுமதியை மையப்படுத்திய போட்டித்தன்மைவாய்ந்தும், சூழலுக்கு நேயமானதும், தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்டதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்கு கொள்கை தொடர்பிலும் அவர் கிறிஸ் பீற்றர்ஸுக்கு எடுத்துரைத்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த கிறிஸ் பீற்றர்ஸ், இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பிலும், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி குறித்தும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி உன்னிப்பாக அவதானித்துவருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் 50 மில்லியன் யூரோ நிதியுதவியில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் கழிவுநீர் முகாமைத்துவ செயற்திட்டம் குறித்து பிரஸ்தாபித்துள்ள கிறிஸ் பீற்றர்ஸ், இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கப்பெற்றவுடன் இலங்கையில் பசுமை செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியுதவிகளை வழங்குவது குறித்துத் தம்மால் பரிசீலனை செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடன்நெருக்கடிக்கு உடனடி தீர்வினை காண நடவடிக்கை; ஜி-20 நாடுகளின் நிதிசார் மாநாட்டில் இணக்கம் !

இலங்கையின் கடன் நெருக்கடிநிலைக்கு உடனடியாகத் தீர்வுகாண்பதை முன்னிறுத்தி செயற்படத்தயாராக இருப்பதாக ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பெங்களூர் நகரில் கடந்த 24 – 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு உதவுதல், அதனை முன்னிறுத்தி கடன்வழங்குனர்கள் ஒன்றிணைந்து செயலாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டின் பெறுபேறு குறித்த ஆவணம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் வாசிக்கப்பட்டது. அதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் முகங்கொடுத்திருக்கும் கடன்நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாணவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கடன்நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குரிய தீர்வை அனைவரும் ஒருங்கிணைந்து பெற்றுக்கொடுப்பதற்கு உத்தியோகபூர்வ இருதரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குனர்கள் கூட்டாக இணைந்து பல்தரப்பு ஒருங்கிணைவை வலுப்படுத்துவது அவசியமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் ‘கடன் இரத்திற்கு அப்பால் கடன்நெருக்கடியைக் கையாள்வதற்கான பொதுச்செயற்திட்டத்தை உருவாக்கல்’ என்ற அடிப்படையின்கீழ் உருவாக்கப்பட்ட அனைத்துக் கடப்பாடுகளையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதேபோன்று அந்தப் பொதுச்செயற்திட்டத்தை உரியவாறான காலப்பகுதியில், முன்னெதிர்வுகூறக்கூடிய அடிப்படையில், ஒருங்கிணைந்த முறையில் அமுல்படுத்தவேண்டும்’ என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.