நீதிபதி சரவணராஜா விவகாரம் – குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை முற்றிலும் பொய்யானது

குற்ற புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கை முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். அவர்கள் சரியான விசாரணையை செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஹர்த்தால் தொடர்பான முன்னாயர்த்தக் கலந்துரையாடல் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில் இடம் பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நீதிபதி சரவணராஜாவுக்கு இருந்த அச்சுறுத்தல் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை வெறுமனே ஒரு நீதிபதிக்கான அச்சுறுத்தலாக பார்க்க முடியாது.

நீதித்துறை என்பது எவ்வளவு தூரம் இந்த சிங்கள அரசாலும், அரச இயந்திரத்தாலும், அவமதிக்கப்படுகின்றது என்ற விடயத்தையே எடுத்துக் காட்டுகிறது.

தமிழ் மக்களுக்கு எதிராகவே குற்றப்புலனாய்வுப் பிரிவின் அறிக்கைகள் காலாகாலமாக வெளி வந்ததுள்ளது.

அதுபோல் தான் நீதிபதி சரவணராஜா பற்றிய அறிக்கையும் முற்றிலும் பொய்யானதாகவே இருக்கும். சரியான விசாரணையை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த அறிக்கையை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்ப முடிவெடுத்துள்ளோம்.

மேலும், தற்பொழுது கொழும்பில் இருக்கக் கூடிய இராஜதந்திரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்படவுள்ளன.

இது தொடர்பான நடவடிக்கைகளை அடுத்தடுத்த தினங்களில் மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை – சி.ஐ.டி அறிக்கை சமர்ப்பிப்பு

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜாவுக்கு உயிருக்கு எவ்வித அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் திடீரென வெளிநாடு சென்றமை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு அனுமதி வழங்கப்பட்டு செப்டம்பர் 24ஆம் திகதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவணராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்த நிலையில் அவை குறித்து விசாரணை நடத்திய குற்றபுலனிவு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜா 2021 ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நீதவானாக நியமிக்கப்பட்ட அதேநேரம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அவருக்குத் தேவையான சகல பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் முகவர் ஒருவர் ஊடாக விமானப் பயணச்சீட்டுகள் கொள்வனவு செய்யப்பட்டது என்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அமெரிக்காவில் உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட போதும் அந்த தொலைபேசி எண் செயல்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

கல்முனைப் பகுதியில் இருந்து விமானப் பயணச்சீட்டுக்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் ஷார்ஜா, நைரோபி, டெல்லி வழியாக ஒக்டோபர் 12ம் திகதி இலங்கை திரும்புவதற்கு டிக்கெட் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஷார்ஜாவை அடுத்து நைரோபிக்கு செல்ல நீதவான் விமான டிக்கெட்டை பயன்படுத்தவில்லை என்பது விமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதியின் வெளிநாட்டுப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அவரது ஆவணத்தில் நைரோபியே அவரது இலக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் சேவையிலிருந்து ராஜினாமா செய்த பின்னர் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டைப் பயன்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய இரண்டு அதிகாரிகளும், உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புக்காக 12 மணித்தியாலங்கள் உட்பட தினமும் நான்கு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டதாக முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மேலும் நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கான்ஸ்டபிள் பிரேமன், பாதுகாப்பு போதுமானதாக இல்லை என நீதிபதி ஒருபோதும் கூறவில்லை என்றும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி தம்மிடம் கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.

நீதிபதி வெளிநாடு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தனது காரை விற்றுவிட்டு செப்டம்பர் 23ஆம் திகதி வெளிநாடு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றில் கடமையாற்றி வரும், தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி ஒருபோதும் தெரிவிக்கவில்லை என நீதிமன்றப் பதிவாளர் கூறியுள்ளார்.

இதேவேளை தனது கணவர் நீதிபதி என்ற முறையில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு இல்லாதது குறித்து குறிப்பிட்ட அவர் சமீபகாலமாக அவ்வாறான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் தன்னிடம் கூறவில்லை எனவும் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 23 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் தனது கணவர் வெளியேறியதாகவும், அவர் வெளிநாடு செல்வது தனக்குத் தெரியாது என்றும்நீதிபதியின் மனைவி கூறியுள்ளார்.

20ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய கதவடைப்பு – தமிழ்க் கட்சிகள் யாழில் கூடி முடிவு

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன.

ஹர்த்தால் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இன்று(09) பிற்பகல் 3.15 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போதே எதிர்வரும் 20ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

குறித்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ரெலோ சார்பில் முன்னாள் தவிசாளர் நிரோஷ் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: தமிழ்க் கட்சிகள் மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு அழைப்பு

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இன்று (29) யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் க.வி.விக்னேஸ்வரன், புளொட் சார்பில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், கலையமுதன், ரெலோ சார்பில் தி.நிரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், தமிழ் தேசிய கட்சியின் சார்பில் என்.சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்படி, எதிர்வரும் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மிகப்பெருமெடுப்பில் மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருதனார்மடத்திலிருந்து யாழ் நகர் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

பின்னர் 7ஆம் திகதி முல்லைத்தீவை முடக்கி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அனைத்து தமிழ் கட்சிகளும் கையெழுத்திட்டு தூதராலயங்களுக்கும் கடிதம் அனுப்பப்படவுள்ளது.

உயிரச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறினார்

அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக, ரி.சரவணராஜா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்-

எனது மாவட்ட நீதிபதி பதவி உள்ளிட்ட பதவிகளை என் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக இராஜினாமா செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்கள் தரப்பினருடன் பேசும்போது-

“அண்மையில் எனக்கான பொலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்து வந்தனர்.

சட்டமா அதிபர், என்னை தனது அலுவலகத்தில் 21.09.2023ம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.

குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன். இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23-09-2023 அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன்“ என தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பை மீறி குருந்தூர் சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்ட விவகாரத்தில், முல்லைத்தீவு நீதிபதி மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி ரி.சரவணராஜா தற்போது நாட்டில் இல்லை. முறைப்படி விடுமுறை எடுக்கும் செயன்முறையின்படி, இந்தியா செல்வதற்காக விடுமுறை பெற்றுக்கொண்டு வெளியேறியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா மலையகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குருந்தூர் மலை விவகாரம் : ரெலோ வினோ எம்.பிக்கு அழைப்பாணை

எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு பொலிசாரினால் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் உட்பட பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் குறித்த வழக்கு தொடர்பாக எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முதன் முதலாக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குருந்தூர் விவகாரத்தை கோயில் நிர்வாகமும் முல்லை மக்களும் தான் முடிவெடுக்க வேண்டும் – சபா குகதாஸ்

குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும் மாறாக சட்டவிரோத விகாரைகளை அமைத்த விகாராதிபதிகளும் இந்து அமைப்பு என்ற பெயரில் புலனாய்வு அமைப்புக்களின் பின்னணியில் இயங்கும் போலி நபர்களும் முடிய அறைக்குள் முடிவுகளை எடுக்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணி தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

குருந்தூர் மலை விடையத்தில் நீதிமன்ற கட்டளைகளை திசை திருப்பும் நோக்கில் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் சிவன் ஆலயம் அமைத்தல் என்ற பித்தலாட்ட நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். காரணம் குருந்தூர் மலையில் மிகப் பழைமை வாய்ந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அழிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் சட்டவிரோதமானது எனவும் அதனை நீக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

அவ்வாறான நிலையில் சட்டவிரோத கட்டடங்களை அமைத்த விகாராதிபதிகளுடன் இணைந்து பிறிதொரு இடத்தில் சிவன் ஆலயம் அமைத்தல் என்பது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதாகவும் நீதிமன்ற கட்டளைகளை சிங்கள ஆட்சியாளர்களும் அரச இயந்திரமும் அவமதிப்பதற்கு அப்பால் கோயில் நிர்வாகமும் அவமதிப்பதாக அமையும் அவ்வாறான ஒரு சூழ்ச்சிதான் போலி இந்து அமைப்பின் பினாமிகளால் மேற்கொள்ளப்படுகின்றது.

குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களமும் சிங்கள பௌத்த பிக்குகளும் மேற் கொள்ளும் திட்டமிட்ட அடாவடிகளையும் நீதிமன்ற கட்டளைகளை மீறுகின்ற செயற்பாடுகளையும் நியாயப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் இந்த முன்னகர்வு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

குருந்தூர் மலையில் பொலிஸ் பாதுகாப்போடு ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல் வழிபாடுகள்

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையில் பௌத்த மக்களும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்த வழிபாட்டுக்கு குமுழமுனை, தண்ணிமுறிப்பு வீதியால் சென்ற மக்கள் பொலிஸாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் விதிகளுக்கமைய, ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நிலத்தில் கல் வைத்து, அதன் மீது தகரம் வைத்து, அதற்கு மேல் கல் வைத்து பொங்கல் பொங்கினர்.

ஒரு இடத்தில் மட்டுமே நெருப்பு மூட்ட அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை, ஏனைய பக்தர்கள் பொங்கல் பொங்க அனுமதிக்கப்படவில்லை.

அதன்படி, குறித்த ஓர் இடத்தில் நெருப்பு மூட்டி, இரண்டு தடவைகள் பானையில் பொங்கல் பொங்கி, படைத்து வழிபாடுகளை மேற்கொண்டபோது, அவ்விடத்தில் பௌத்த துறவிகளால் குழப்ப நிலை ஒன்றும் ஏற்பட்டது. எனினும், அதனை பொலிஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மறுபக்கம், பௌத்த விகாரையில் பௌத்த மக்களாலும் பௌத்த துறவிகளாலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு பகுதிகளுக்கும் இடையில் பொலிஸாரின் பாதுகாப்பு பலமாக போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் பொங்கல் பொங்கி படைத்து, பூசை வழிபாடுகளை மேற்கொண்டு பிரசாதங்களை பரிமாறினார்கள்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.

 

இதேவேளை, பௌத்த விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகளில் வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் தலைமையில் 29 தேரர்கள் மற்றும் சுமார் 300 பேர் வரையிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

குருந்தூர் மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானம்

முல்லைத்தீவு- குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன.

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பெளத்த இந்து அமைப்புகள் இதனை அறிவித்தன. நாளைய தினம் (18)குருந்தூர் மலையில் சைவர்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையிலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிகழ்வில் ஆரியகுளம் நாக விகாராதிபதி, குருந்தூர் மலை விகாராதிபதி, தையிட்டி விகாராதிபதி, நாவற்குழி விகாராதிபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயமே – முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன்

சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயம் என்றால் அது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய விவகாரமே என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு பகுதியிலே பேசும் பொருளாக காணப்படுகின்ற குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் விவகாரம் சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்றது. அவ் ஆலயத்தின் வரலாறு அதாவது எம் தமிழ் இந்துக்கள் இவ் ஆலயத்தினை எவ்வாறு வழிபாட்டார்கள் என்ற வரலாறு மிகப்பெரியது பழமையானது.

இருந்தும் அண்மைக்காலமாக சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையிலே அங்கு சென்று பொங்கல் வைத்து வழிபட முடியாத நிலை இந் நாட்டிலே உருவாக்கப்பட்டிருக்கின்றது. இருந்தும் பக்தர்கள் மத வேறுபாடுன்றி அங்கு சென்று பல்வேறுபட்ட வழக்குகளையும் தொடர்ந்திருக்கின்றார்கள் .

அந்தவகையில் அண்மையில் இடம்பெற்ற வழக்கிலே முல்லைத்தீவு நீதிமன்றம் மிகத்தெளிவாக கூறியிருக்கின்றது குருந்தூர் மலை ஐயனை நாம் எந்த தடையுமின்றி வழிபடவும், கலாசாரத்தை பேணவும் சகல உரிமை உண்டு என நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.

எனவே நிர்மூலப்பட்ட எமது பாரம்பரியமான பொங்கல் நிகழ்வை தொடர்ந்து செய்ய எமது ஆலயத்தின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வருகின்ற 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சரியாக 9 மணியளவில் மிக பிரமாண்டமான முறையிலே பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் எனவே இப்பிரதேசத்தில் இருக்கும் மக்கள் அன்றைய நாளை முழுமையாக எங்கள் வரலாற்றை, பண்பாட்டையும், குருந்தூரானுடைய வழிபாட்டு தன்மைகளை பேணுவதற்காக சகலரும் ஒத்துழைப்பு வழங்குவதோடு அதுமட்டுமல்லாது இம் மாவட்டத்திலே இருக்கும் சகோதர மதத்தவர்களும் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி எமது வழிபாட்டை நாம் தொடர்ந்து கொண்டு செல்ல வழிசமைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.