எதிர்காலத்தில் சஜித் கோட்டாபய போன்று செயற்படக் கூடும் – சரத்பொன்சேகா

முன்னாள் இராணுவதளபதி ஜெனரல் தயாரத்நாயக்காவின் ஆலோசனைகளை பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளதை கடுமையா விமர்சித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா எதிர்காலத்தில் சஜித்பிரேமதாச கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவையும் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் நான் கைதுசெய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாகஇருந்தவர்களில் ஒருவர் தயா ரத்நாயக்க என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தயாரத்நாயக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய விசுவாசி அவரின் நம்பிக்கைக்குரியவர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படலாம் எனவும் விமர்சித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார் ஜெனரல் தயா ரத்நாயக்க

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) இணைந்துள்ளார்.

இன்று எதிர்க்கட்சி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை சந்தித்ததன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்திக்குக்கு தனது ஆதரவை வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது, எதிர்க்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொது கொள்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக தயா ரத்நாயக்கவை நியமித்தார்.

தயா ரத்நாயக்க இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் கைத்தொழில் அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது

பொருளாதார பயங்கரவாதிகளான ராஜபக்சக்களிடமிருந்து நாட்டை விடுவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் – சஜித்

நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள். தேசப்பற்றின் பெயரால் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ் குடும்பம் மக்களை கொள்ளையடித்து தன்னிச்சையாக நடந்து கொண்டதே இதற்கு காரணம். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும்,ராஜபக்ஷ்ர்கள் மற்றுமொரு பொருளாதார பயங்கரவாதத்தை ஆரம்பித்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நட்பு வட்டார செல்வந்தர்களை பாதுகாக்கும், கூட்டாளிகளுக்கு சலுகைகளை வழங்கும் ராஜபக்ஷ் பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை விடுவித்து மக்களை இந்த நெருக்கடியில் இருந்து மீட்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஹேவாஹெட்ட நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஜன பௌர(மக்கள் அரண்) மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாற்றுத் தரப்பினர் எனக் கூறிக்கொள்ளும் குழு திருடர்களைப் பிடிக்க அதிகாரத்தைக் கேட்கின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரம் இல்லாமலயே திருடர்களைப் பிடித்தது.

நாட்டிற்கு மாற்று அணி என்று கூறும் சில குழுக்கள் ஆவணப் கோப்புகளைக் காட்டி திருடர்களைப் பிடிப்பதாகச் சொன்னாலும், நீதித்துறையின் ஊடாக நாட்டை வங்குரோத்தடையச் செய்த திருடர்கள் யார் என்பதை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சக்தி வெளிக்கொணர்ந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ் மொட்டு மாபியாவின் கைப்பாவையாகவே தற்போதைய ஜனாதிபதி செயலாற்றுகிறார்.

இந்நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்களுக்கு எதிராக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து,விசாரணைகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி,குற்றம் சாட்டப்பட்டவர்களது குடியியல் உரிமைகளை இல்லாதொழிக்காதது ஏன் என ஜனாதிபதியிடம் வினவிய போது அவர் அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார்.

ராஜபக்ஷ் மொட்டு மாபியா மூலம் தற்போதைய ஜனாதிபதியை நியமித்தமையே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ் மொட்டு மாபியாவைச் சேர்ந்த 134 பேர் தமது கைகளை உயர்த்தி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்துள்ளமையினாலயே நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களை பாதுகாத்து வருகிறார்.

இது தொடர்பில் வினவிய போது மொட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பல தடைகளை ஏற்படுத்தினார்கள்.இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று ஒரு கைப்பாவை ஜனாதிபதியே ஆட்சியில் இருக்கிறார்.இந்த கைப்பாவையின் அதிகாரங்கள் ராஜபக்ஷ்ர்களின் கைகளிலயே உள்ளன.

இந்த திருடர்களுடன் ஜனாதிபதிக்கு டீல் இருந்த போதிலும்,இவ்வாறான டீல் தன்னிடம் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் திருடர்களுக்கு பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.

நாட்டை வங்குரோத்தாக்கிய திருடர்களும், திருடர்களை பாதுகாக்கும் ஜனாதிபதியும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவர். இவர்களுக்கு உரிய பதில் சொல்ல வேண்டியது மக்களின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாகச் செயற்படுகின்றது – சஜித் பிரேமதாச

யுத்த வெற்றியை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டுவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹொரவ்பதானையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” யுத்த வெற்றியை காரணம் காட்டியே சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் அவர்கள் பொருளாதார பயங்கரவாதிகளாக செயற்பட்டு நாட்டை அழித்தனர். ஆனால் இன்று பயங்கரவாதிகளை பாதுகாக்கும் ஜனாதிபதியின் நிழலில் ஒழுந்து கொண்டு ராஜபக்ச குடும்பம் சுகபோகங்களை அனுபவித்து வருருகின்றனர். மல உரங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழித்ததோடு அதிக விலைக்கு நனோ உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தை அழித்தனர்.

எனவே இந்த திருட்டு கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி, திருடப்பட்ட பணத்தை மீண்டும் எமது நாட்டிற்கு நாம் கொண்டு வருவோம். தற்போதைய ரணில் ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்தின் ஊடாக விவசாயிகள், மீனவர்கள், ஏழைகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள் என சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.அவர்களை மீட்டு, அனைவருக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் பொது மக்கள் யுகத்தை உருவாக்கத் தயாராக இருக்கின்றோம்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி 17 மாதங்களில் 18 வெளிநாட்டு பயணங்கள் – சஜித் குற்றச்சாட்டு

நாட்டில் நிலவும் நெருக்கடி இயற்கையாக உருவானதொன்றல்ல. திறமையற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட நெருக்கடி என்றும், இது பொருளாதார பயங்கரவாதம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த பொருளாதார பயங்கரவாதிகள், தங்கள் குண்டர் கும்பல்களுடன் கைகோர்த்து, நாட்டை வங்குரோத்தாக்கி விட்டு உலகம் சுற்றி வருகின்றனர். மக்கள் படும் துன்பங்களை உணர்வாறின்றி செயற்படும் ஆட்சிப் போக்குக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

மக்களை பலிகடாக்கி மக்கள் படும் துன்பங்களையும், வலிகளையும் கருத்தில் கொள்ளாமல், மக்கள் படும் இன்னல்களை எண்ணாமல் மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி செய்து வருகிறார். நாட்டின் ஜனாதிபதியாக 17 மாதங்களில் 18 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை போதாமையினால் மேலும் 200 மில்லியன் ஒதுக்கிக் கொண்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாரம்மல நகரில் நேற்று(21) இடம்பெற்ற ஜன பௌர நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டை சிங்கப்பூர் ஆக மாற்றுவேன் என்றும் தொங்கு பாலத்தால் சென்று நாட்டை கட்டியெழுப்புவேன் என ஜனாதிபதி அவர்கள் கூறினாலும், வரிசையில் நின்று இறந்தவர்கள், தரக்குறைவான மருத்துவத்தால் உயிர் இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு கூட இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும். இதன் மூலம் நாட்டின் வங்குரோத்து நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் நீதி நிலைநாட்டப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் முட்டாள்தனமான கொள்கைகளால் நாட்டை அழித்து வருகிறது. நட்பு வட்டார முதலாளித்துவத்தை பின்பற்றும் இந்த அரசாங்கம் மக்கள் சக்தியினால் விரட்டியடிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலை நடாத்த முதுகெலும்பில்லாத ஜனாதிபதி ரணில் – சஜித் குற்றச்சாட்டு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு முதுகெலும்பில்லாத ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பொதுத் தேர்தலைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலில், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் யார் என தெரியாமல் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவும் குழப்பமடைந்துள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தொழிலாளர்களிடம் பிக்பொக்கட் அடித்து வெளிநாடுகளில் விநோதங்களில் ஈடுபடும் ஜனாதிபதி – சஜித் குற்றச்சாட்டு

சுகாதார தொழிற்சங்கங்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது அவற்றை நிறைவேற்ற பணம் இல்லை எனக் கூறும் அரசாங்கம், ஜனாதிபதியின் செலவுக்காக வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக 2000 இலட்சம் ரூபாவை ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 67ஆவது கட்டமாக, கலாவெவ சிறிமாபுர மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும்

இன்றைய நிகழ்வில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியதாவது,

”கூலித்தொழிலாளர்களின் அன்றாட வருமானத்தை பிக் பொகட் அடித்துக் கொள்ளும் அரசாங்கமே நாட்டில் உள்ளது. இன்று நாள் முழுவதும் நடைபெற்று வரும் சுகாதாரத்துறை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் நோய்வாய்ப்பட்ட சமூகத்தால் மருந்துகளைப் பெறமுடியவில்லை.

சுகாதார சேவையே இந்நேரத்தில் நாட்டுக்குத் முக்கியமான தேவையாக இருந்தாலும், ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஒதுக்கீடுகளே வழங்க அனுமதியளிக்கப்படுகிறது.

ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வாறு போதாது எனக் கூறும் அரசாங்கத்திடம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளுக்கும் போதாதது எனக் கூறுகிறோம். பலவீனமான தலைமைத்துவத்தினாலயே சுகாதார சேவை முடங்கியுள்ளது.

நாட்டின் சுகாதார சேவை முடங்கிக் கிடக்கும் இந்நேரத்தில் நாட்டின் தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்று விநோதங்களில் ஈடுபடுவது நியாயமில்லை.” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

பொது வேட்பாளராக களமிறங்கும் ரணிலுக்கு சஜித்தும் ஆதரவளிக்கலாம் – ரவி கருணாநாயக்க

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராகவே களமிறங்கவுள்ளார் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க, சஜித் பிரேமதாசவும் அவருக்கு ஆதரவளிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது, அரசியலமைப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது.

அதில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

அதனடிப்படையில் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படலாம்.

அவ்வாறு தேர்தல் நடத்தப்படுகின்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகள் சார்பற்ற பொதுவேட்பாளராகவே களமிறங்கவுள்ளார்.

குறிப்பாக, நாட்டினை பொருளாதார ரீதியாக மீட்டெடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வல்லவரான அவருடைய அர்ப்பணிப்பையும், சேவையையும் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் அவருக்கு பகிரங்கமான ஆதரவை வெளியிட வேண்டும் என்று கோருகின்றோம்.

விசேடமாக சஜித் பிரேமதாச கூட கட்சிசார்பற்ற ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அவரை ஆதரிப்பதற்கு எவ்விதமான தடைகளையும் நாம் ஏற்படுத்தப்போவதில்லை.

தற்போதைய சூழலில் நாட்டின் வரிசையுகத்தினை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டினை விரைந்து பொருளாதார முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும் ஒரே தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.

ஆகவே அவருடைய அர்ப்பணிப்பான அரசியல்சேவை தொடர்வதன் ஊடாகவே நாட்டை மீண்டும் நிலைக்கு கொண்டு வரமுடியும் என்றார்.

புலிகளுக்கு பணம் வழங்கியது யார்? என சஜித், பிரசன்ன சபையில் வாக்குவாதம்

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம், பணம் வழங்கியது யார் என்பதை நாங்கள் தெரிவிக்க தேவையில்லை. அதனை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டு அறிந்துகொள்ளங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) விசேட கூற்றொன்றை முன்வைத்து, நாடு வங்குராேத்து அடைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட அரச தரப்பு உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துக்கு சொந்தமான கப்பல்களை பயன்படுத்திக்கொண்டு நடுக்கடலில் விருந்துபசாரம் மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதன்போது அதற்கு பதிலளித்த ஆளும் கட்சி பிரதமகொறடா தெரிவிக்கையில், புள்ளி போட்டுக்கொள்வதற்காக அவசியமற்ற கேள்விகளை கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். அவ்வாறு கேள்வி கேட்கவேண்டும் என்றால், பிரத்தியேகமாக கேள்வி கேட்டால் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதற்கு பதில் வழங்குவார் என்றார்.

அதற்கு சஜித் பிரேமதாச தெரிவிக்கையில், நான் மக்களுக்காகவே இந்த விடயத்தை முன்வைத்தேன். எனது தனிப்பட்ட எந்த விடயத்தையும் முன்வைக்கவில்லை. அதனால் மக்களின் பணத்தில் நடு்க்கடலில் விருந்துபசாரம் நடத்தியமை தொடர்பில் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

அதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளிக்கையில், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் எமக்கும் கருத்து தெரிவிக்க முடியும். உங்கள் சகோதரி திருட்டு பணம் மாற்றியபோது, அந்த சம்பவத்தில் இருந்து அவரை பாதுகாத்தது, மஹிந்த ராஜபக்ஷ் என்பதை மறந்துலிட வேண்டாம்.அது பொருளாதாரத்துக்கு பாதிப்பான விடயம்.

அதேபோன்று உங்கள் தந்தைதான் புலிகளுக்கு ஆயுதம் வழங்கி இருந்தார். இதுபோன்று எங்களுக்கும் தெரிவிக்க முடியும் என்றார்.

அதற்கு சஜித் பிரேமதாச பதிலளிக்கையில், புலிகளுக்கு பணம் வழங்கியது யார் என்பது தொடர்பில் பொது மக்கள பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். யார் பணம் வழங்கியது. யாருடைய பணத்தை வழங்கியது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அத்துடக் நானோ எனது குடும்பத்தில் வேறுயாரும் திருட்டுப்பணம் மாற்றியதில்லை. இவ்வாறு பொய் பிரசாரம் மேற்கொள்ள வேண்டாம். அதனை நான் பொறுப்புடனே தெரிவிக்கிறேன், அதனால் துறைமுகத்துக்கு சொந்தமான கப்பலை பயன்படுத்திக்கொண்டு எவ்வாறு விருந்துபசாரம் நடத்த முடியும் என்பது தொடர்பில் பதிவளிக்க வேண்டும் என்றார். என்றாலும் இதுதொடர்பில் பதிலளிக்கவில்லை.

மதிப்பீடுகளை மேற்கொள்ளாது அரசாங்கம் வற்வரியை அதிகரித்துள்ளது – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

எந்தவித மதிப்பீட்டு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலே அரசாங்கம் வற்வரி அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. இது பாரதூரமான பிரச்சினையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (10) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் வற்வரியை நூற்றுக்கு 18வீதத்தால் அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அரசாங்கத்துக்கு முறையாக பதில் தெரிவிக்காமல் இருக்கிறது.

ஏனெனில் வற்வரி அதிகரிப்பு மேற்கொள்ளும்போது அதுதொடர்பாக எந்த மதிப்பீட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளாமலே இதனை அரசாங்கம் செய்திருக்கிறது.

வற்வரியை அதிகரித்த பிறகு இதுபோன்ற கணக்கெடுப்பை மேற்கொள்வது கடும் பிரச்சினைக்குரிய விடயமாகும். வற்வரி அதிகரிப்பதற்கு முன்னர் இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக மதிப்பிட்டு ஆராய்ந்த பின்னரே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் வற்வரி உயர்வால் கிராமப்புற,நகர்ப்புற மற்றும் தோட்டப்புற சமூகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசாங்கம் தற்போது கணக்கெடுப்பு நடத்துவது ஆச்சரியமாக உள்ளது.

முறையான நிதி நிர்வாகத்தில் வரிகளை விதிக்கும் அல்லது அகற்றும் முன் நிதி தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கம் இவ்வாறானதொன்றை முன்னெடுக்கவில்லை.

அத்துடன் வற்வரி அதிகரிக்கப்பட்டபோது பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் சந்தையில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பது அரசாங்கத்துக்கு தெரியாமல் இருக்கிறது.