அமைச்சரவையில் பாதியை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்

என்னைச் சந்திப்பதன் மூலம் அமைச்சரவை கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றது என்றால் தற்போதுள்ள அமைச்சரவையில் இருக்கின்ற அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மோசடிகளை வெளிப்படுத்திய நபரை விளக்கிவிட்டு மோசடி குழுவினரை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

எதிர்கட்சி அலுவலகத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் என்னுடன் கலந்துரையாடி கொண்டிருந்தார்.

இதன் போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விளையாட்டுத்துறை அமைச்சரை வரவழைத்து இந்திய உயர்ஸ்தானிகரின் தலையீடுகளுடன் கிரிக்கெட் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கத்துடனேயே நான் அவரை அழைத்தேன்

நான் கிரிக்கெட் நெருக்கடியை தீர்ப்பதற்காகவே செயற்பட்டேன்.

அவ்வாறு இல்லாமல் ரொசான் ரணசிங்கவை இணைத்துக்கொண்டு அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுப்பதற்காக நான் அவரை அழைக்கவில்லை.

இவ்வாறு அவர் என்னை சந்தித்ததன் மூலம் அமைச்சரவை கட்டுப்பாடுகள் மீறப்படுகின்றது என்றால் தற்போதுள்ள அமைச்சரவையில் இருக்கின்ற அரைவாசி அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

அவர்களும் என்னை வந்து சந்திக்கின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாமல் ராஜபக்‌ஷ வலியுறுத்தல்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாராளுமன்ற உரை தொடர்பில் கடும் விமர்சனம் காணப்படுகிறது. வெறுக்கத்தக்க சொற்களை பயன்படுத்தி எதிர்த்தரப்பினரை சாடுகிறார். ஆகவே, இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடமும், சபை முதல்வரிடமும் வலியுறுத்தியுள்ளோம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கட்சி என்ற ரீதியில் பலமாக செயற்படுகிறோம். அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டில் அரசியல் ரீதியில் முக்கிய தீர்மானங்களை அறிவிப்போம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் எமது வேட்பாளரை நாங்கள் அறிவிப்போம். ஜனாதிபதியின் தீர்மானங்கள் நூற்றுக்கு நூறு வீதம் சிறந்தது என்று குறிப்பிட முடியாது. நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தோற்றம் பெறக்கூடாது என்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுகிறோம். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்கலாம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாராளுமன்ற உரை தொடர்பில் கடும் விமர்சனங்கள் காணப்படுகின்றன. சபைக்கு பொருந்தாத, வெறுக்கத்தக்க சொற்களை பயன்படுத்தி ஆளும் தரப்பின் உறுப்பினர்களை சாடுகிறார், ஆத்திரமூட்டும் வகையில் கருத்துக்களை குறிப்பிடுகிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுங்கள் அல்லது எதிர்க்கட்சித் தலைவரின் பாராளுமன்ற உரையை நேரலையாக ஒளிபரப்புவதை தாமதப்படுத்துமாறு சபாநாயகரிடமும், சபை முதல்வரிடமும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

எதிர்க்கட்சியினர் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் – நாமல் ராஜபக்ச

சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்கட்சியினர் வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க தெரிந்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்களால் வரவு செலவு திட்டத்தில் இருக்கும் பிழைகளை மாத்திரமே சுட்டிக்காட்ட முடியும்.

அதனை தோற்கடிப்பதற்கான உரிமை எதிர்கட்சியினருக்கே இருக்கின்றது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் போது உரம் தொடர்பான விடயத்தில் வாயை மூடிக்கொண்டு இருந்ததால் இறுதியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதேவேளை வரவு செலவு திட்டத்தில் இருக்கும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

அதிருப்தியளிக்கும் கோப் தலைவரின் செயற்பாடுகள்; பதில் தலைவரை நியமிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

கோப் குழுவின் தலைவர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை. ஆகவே கிரிக்கெட் தொடர்பான விசாரணைகள் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுக்கப்படுமாயின் கோப் குழுவில் நாங்கள் பங்குப்பற்ற போவதில்லை. ஆகவே உரிய தீர்மானத்தை எடுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

கோப் குழுவின் தலைவரின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. ஆகவே கிரிக்கெட் சபை தொடர்பான விசாரணைகளை அவர் தலைமையில் முன்னெடுப்பது முறையற்றது. பதில் தலைவரை நியமியுங்கள் என எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்கள். முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய தீர்மானம் எடுப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற அமர்வின் போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டி அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உரையாற்றுகையில், பாராளுமன்ற குழுக்களில் கோப் குழு கௌரவமானது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழுவுக்கு ஒருமுறை நான் முன்னறிவிப்பு இல்லாமல் சென்றதால் அவர் என்னை குழுவில் கலந்துக் கொள்ள அனுமதிக்கவில்லை. அனுமதி பெற்றுக்கொண்டதன் பின்னர் குழு நடவடிக்கையில் கலந்துக்கொள்ளுமாறு உறுதியாக அறிவித்தார்.ஆனால் தற்போது பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையிலான கோப் குழுவுக்கு வருபவர்கள் யார் என்று தெரியவில்லை.

கோப் குழுவின் நடவடிக்கைகளில் கலந்துக் கொள்ள ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கோப் குழுவின் தலைவரின் ஊடக செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.கோப் குழுவின் கௌரவத்தை பாதுகாப்பதை விடுத்து பேராசிரியர் ரஞ்சித் பண்டார கோப் குழுவின் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு நிறுவனங்களுடன் மோசடி செய்கிறார். ஆகவே இவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கோப் குழுவின் தலைவரது செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிடுகிறோம்.கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் கோப் குழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுப்பதை நிறுத்தி மாற்று தீர்மானங்களை முன்னெடுங்கள் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவின் தலைவர் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை.ஆகவே கிரிக்கெட் தொடர்பான விசாரணைகளை கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் முன்னெடுக்கப்படுமாயின் கோப் குழுவில் நாங்கள் பங்குப்பற்ற போவதில்லை.ஆகவே உரிய தீர்மானத்தை எடுங்கள் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷமன் கிரியெல்ல இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெறும் என்பதால் தான் கோப் மற்றும் கோபா உள்ளிட்ட முக்கிய குழுக்களின் தலைமைத்துவ பதிவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்குங்கள் என்று வலியுறுத்தினேன். மக்கள் போராட்டத்துக்கு பயந்து நீங்கள் ( சபாநாயகரை நோக்கி) அப்போது அதற்கு இணக்கம் தெரிவித்தீர்கள். போராட்டம் முடிவடைந்ததன் பின்னர் வழங்கிய வாக்குறுதியை மறந்து விட்டீர்கள். இதுவே உண்மை என்றார்.

கோப் குழு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு உரிய தீர்மானத்தை அறிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் எதிர்கட்சித் தலைவரும் சந்திப்பு

பொருளாதாரத்தை மீட்டமையை போன்று கிரிக்கட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் – ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி ரணில்

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று(14) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

2024 ஆம் ஆண்டுக்கான தற்போதைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.
கடந்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவை உரிய முறையில் பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே இவ்வருட வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் தரப்பில் இருந்து நோக்கும் போது இது பாதகமான வரவு செலவுத் திட்டம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை தொடர்ச்சியாக ஒத்திவைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார்.

ஆட்சியாளர்களுக்கு சொர்க்கத்தையும் மக்களுக்கு நரகத்தையும் காட்டும் வரவு செலவுத் திட்டம் – சஜித்

ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஆட்சியாளர்களுக்கு சொர்க்கமும் மக்களுக்கு நரகமும்  காட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளர்.

வரவு – செலவுத் திட்ட உரையை ஆரம்பித்த ஜனாதிபதி பௌத்தத்தை அவமதித்தார், மேலும் பிரார்த்தனை செய்ய வேண்டியவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று புத்த பகவான் கூட போதித்தார், ஆனால் தற்போதைய ஜனாதிபதி பிரார்த்தனை செய்யவில்லை.

இது நாட்டு மக்களை ஏமாற்றும் முயற்சி என்றும், வரவு செலவுத் திட்டத்தில் நரகம் பற்றி பேசினாலும், ஆட்சியாளர்கள்  சொர்க்க லோகத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.

2022 வரவு  -செலவுத் திட்ட பிரேரணையில் எத்தனை விடயங்களை நிறைவேற்ற முடிந்தது என்பது குறித்தும் தெரிவித்த அவர்,  வரவு – செலவு திட்ட பிரேரணையில் அதிகளவான  விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாகவும் கூறினார்.

இந்திய மக்களவை உறுப்பினர் சசி தரூர் – சஜித் இடையில் சந்திப்பு

இந்தியாவின் புகழ்மிக்க புத்திஜீவியும்,திருவனந்தபுரத்துக்கான மக்களவை உறுப்பினருமான கலாநிதி சசி தரூருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (01) இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த தேசிய அறிஞர்கள் பேரவையின் ஏற்பாட்டில் “அரச ஆளுகையின் தீர்க்கமான அம்சங்கள்”குறித்து கலந்துரையாடும் பயிலரங்குத் தொடரின் மற்றுமொரு கட்டமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றது.

2015 ஆம் ஆண்டு ஒக்ஸ்பேர்ட் (oxford ) பல்கலைக்கழகத்தில் கலாநிதி சசி தரூர் ஆற்றிய உரை இந்திய அரசியலிலும் இந்திய சமூகத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு, இன்றும் பல இந்தியர்கள் குறித்த பேச்சை நூற்றாண்டின் பேச்சாகவும்  கருதுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் உயர் பதவிகளை வகித்த அவர், சிறந்த இராஜதந்திரியாகவும் மதிக்கப்படுகிறார். இச்சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சூழலியல் சுற்றுலா முறைமை தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் யோசனைகள் பரிமாறப்பட்டன.

இந்திரா காந்தி ஆரம்பித்த இந்தியாவில் புலிகளைப் பாதுகாக்கும் திட்டம் (Project Tiger) மற்றும் இதன் மூலம் ஏற்பட்ட “சுற்றுச்சூழல் சுற்றுலாத் துறையின்” வளர்ச்சி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதேபோன்றதொரு திட்டமாக சஜித் பிரேமதாச அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட Project Leopard  எனும் இலங்கை சிறுத்தையை பாதுகாக்கும் திட்டம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இது மட்டுமல்லாது,நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் இதற்கு பிராந்திய ரீதியாக எடுக்கக்கூடிய முனைப்பு குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதோடு,

ஒவ்வோர் துறைகளையும் ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்ப தாம் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வை குறித்தும் சஜித் பிரேமதாச அவர்கள் இந்தியப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.

சஜித்தால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது – ஹரின்

“சஜித் பிரேமதாஸவால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது. இதை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நன்றாக உணர்ந்துவிட்டார்கள். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.”

– இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர் அமோக வாக்குகளால் வெற்றியடைவார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல எதிரணியில் உள்ள ஏனைய கட்சிகளின்  உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பார்கள்.” – என்றார்.

முடிந்தால் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களியுங்கள் நாமலுக்கு சஜித் சவால்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிக்கும் நாமல் ராஜபக்ஷ முடிந்தால் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்து காட்டட்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டை அழித்து வங்குரோத்து நிலைக்கு அழைத்துசென்ற ராஜபக்ச குடும்பத்தினர், தமது பாதுகாப்புக்காக ஜனாதிபதி ஒருவரை நியமித்துக் கொண்டனர். அந்த ஜனாதிபதி மீது அந்த குடும்பத்தின் அரச குமாரர் (நாமல் ராஜபக்ச) கோபத்தில் உள்ளாராம். அமைச்சரவை மறுசீரமைப்பால்தான் அவர் கடுப்பில் உள்ளாராம். இவ்வாறு கோபப்படும் அரச குடும்பம், சுகாதார அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது கூட, நாடு குறித்து சிந்திக்காமல் தம்மைப் பற்றி சிந்தித்தே செயற்பட்டது.

எனவே, இவர்களின் நாடகத்தை இனியும் நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாரில்லை. இவர்கள் எவ்வாறு நாட்டை அதலபாதாளத்திற்கு இட்டுச் சென்றார்கள் என்பது முழு நாட்டிற்கும் தெரியும் , ஜனாதிபதியை விமர்சிப்பது போல் நடித்தாலும் பாதீட்டை ஆதரித்தே வாக்களிப்பார்கள். முடியுமானால் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றேன். ” – என்றார் சஜித்.

கொழும்பில் தாக்குதல்களை மேற்கொள்ளும் ஐ. எஸ்.ஐ.எஸ் திட்டம் குறித்து உடன் வெளிப்படுத்த வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

கொழும்பில் உள்ள ஏழு முக்கிய மையங்களில் குண்டுகளை வீசும் ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நாட்டுக்கு அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (6) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்துக்கும் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை தீவிரவாத செயல்களுக்காக தற்போது சிறையில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளால் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

சிறையிலுள்ள இந்த பயங்கரவாதிகள் கொழும்பில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிடும் உரையாடலைக் கேட்ட இந்தக் கைதி, பின்னர் இந்தக் கைதியையும் தாக்கியுள்ளனர்.

பல்லேகலையில் இருந்து மஹரவிற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட போது தான் அறிந்த அனைத்து தகவல்களையும் கொண்ட கடிதத்தை அவர் தன்னேகும்புர பொலிஸ் நிலையத்திற்கு எழுதி எறிந்துள்ளார்.

இந்தக் கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், குறித்த கைதியிடம் வாக்குமூலம் பெறுவதற்கு நீதிமன்றில் அனுமதி கோரினர்.

குறித்த விடயத்தை பரிசீலித்த நீதவான், குறித்த அதிகார எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தினால் கோரிக்கை விடுக்குமாறு உத்தரவிட்டார்.