தமிழ் கட்சிகளை தடை செய்ய கூறும் சரத் வீரசேகரவின் மூளையை பரிசோதிக்க வேண்டும்

வடக்கு தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை பல்லின சமூகம். தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கம் உறுதி செய்யப்பட்டால் தான் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இனவாத கருத்துக்களின் வெளிப்பாடுகளினால் தான் 30 வருட கால யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.

ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு கட்டவிழ்த்து விட்ட இனவாதங்களினால் தான் இந்த நாடு 30 வருட கால யுத்தத்தை எதிர்கொண்டது.

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இனங்களுக்குகிடையில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை.

வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பின் உறுப்பினரது மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்.

இவர்கள் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இனவாதம் தோற்றம் பெறும் வகையில் தான் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அழித்தவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அழித்திருக்க வேண்டும். அவர்களை அழிக்காமல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச பாரிய தவறிழைத்துள்ளார என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

சீனாவை பாராட்டினார், அமெரிக்காவினால் விசா மறுக்கப்பட்ட சரத் வீரசேகர

அமெரிக்கா விசா மறுத்துள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர ஆசியாவின்  தவிர்க்க முடியாத நம்பகமான நண்பன் சீனா என அந்த நாட்டிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிஓஏஓஉச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆசிய நாடுகளிற்கு இடையிலான பிணைப்பை நெருக்கத்தை மேற்குலகினால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிணைப்பு வர்த்தகம்மூலமும் முக்கியமாக பௌத்தம் மூலமும் வளர்ச்சியடைந்தது வளர்த்தெடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர சீனா ஆசியாவின்  தவிர்க்க முடியாத நம்பகதன்மை மிக்க நண்பன் எனவும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை பேரவையில் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடான சீனா இலங்கைக்கு தொடர்ச்சியாக அளித்துவரும் ஆதரவிற்கு நாங்;கள் நன்றியுடையவர்களாக உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் ஈவிரக்கமற்ற  அமைப்பினை நாங்கள் தோற்கடித்தவேளை மேற்குஉலக நாடுகள் எங்களை குற்றவாளிகளாக்கின ஆனால் சீனா எங்களிற்கு ஆதரவாகயிருந்தது எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான தடைகளால் அவமானமாக உள்ளது – சரத் வீரசேகர

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னாள் ஜனாதிபதிகள் ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக விதித்துள்ள பயண தடைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அவமானகரமான நிலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபாய ராஜபக்ச பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என   சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

இவர்கள் எவருக்கும் எதிராக உள்நாட்டு, வெளிநாட்டு நீதிமன்றங்களில் யுத்த குற்றச்சாட்டுகள் எவையும் சுமத்தப்படவில்லை

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கான அரசியல் இராணுவ தலைமைத்துவத்தை வழங்கியவர்களை அவமானப்படுத்துவதற்காக மேற்குலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரேரணைகைளை பயன்படுத்துகின்றது.

இலங்கையில்  தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஜெனீவா சாசனம் மற்றும் யுத்தம் குறித்து மனித உரிமை பேரவை தெளிவுபடுத்த தவறிவிட்டனர்.

சில அதிகாரிகள் அமைதிப்படை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை, ஆதாரமற்ற யுத்தகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களின் நியமனங்கள் தாமதிக்கப்பட்டன அல்லது நிராகரிக்கப்பட்டன எனவும் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

திம்புலாகல சிங்கள மக்களை வெளியேற்றின் தமிழ் – சிங்கள இனக்கலவரம் உருவாகும் – சரத் வீரசேகர எச்சரிக்கை

மட்டக்களப்பு – திம்புலாகல சிங்களவர்களின் பாரம்பரியமான கிராமமாகும். அப்பகுதியில் உள்ள சிங்களவர்களை வெளியேற்ற முயற்சித்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) இடம் பெற்ற இஸ்ரேல்- பலஸ்தீன மோதல், பூகோள தாக்கம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு திம்புலாகல பகுதியில் வாழும் சிங்களவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை புலிகள்  சிங்களவர்களை அழித்து அப்பகுதியில் சிங்கள இன பரம்பலை இல்லாதொழித்தார்கள்.

திம்புலாகல சிங்கள பாரம்பரிய கிராமம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆகவே திம்புலாகல சிங்கள கிராம விவகாரத்தில் கை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் அதிகாரத்துடன் சிங்களவர்களை வெளியேற்றினால் சிங்கள -தமிழ் இன முரண்பாடு தோற்றம் பெறும்.

இலங்கை ஒற்றையாட்சி நாடு. ஒவ்வொரு மாகாணங்களும் ஒவ்வொரு இனங்களுக்கு என்று எழுதிக் கொடுக்கவில்லை. அனைவருக்கும் உரிமை உண்டு.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆயுதம் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு முன்னுரிமை வழங்கியுள்ளது. இவர்களின் நோக்கங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

புகலிடக் கோரிக்கைக்காகவே முல்லைத்தீவு நீதிபதி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் – சரத் வீரசேகர

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவை நான் அச்சுறுத்தவில்லை. அவர் புகலிடக் கோரிக்கைக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் ‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தல் விவகாரம் போன்றவற்றில் மிகமுக்கிய தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் மிகையான அழுத்தங்கள் காரணமாகத் தனது அனைத்துப் பதவிகளிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், இவரது பதவி விலகல் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு நான் அச்சுறுத்தல் விடுத்ததாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் என்னை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளதை அவதானித்துள்ளேன்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நான் நீதிபதியை அச்சுறுத்தவில்லை. நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடவும் இல்லை.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடுவது பாரதூரமானது.

நாட்டில் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வாறு அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டம் மற்றும் பாதுகாப்பு துறை மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இதனை அலட்சியப்படுத்த முடியாது.

நீதிபதி குறிப்பிடுவதைப் போன்று அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்திருந்தால் அவர் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். அல்லது பொறுப்பான தரப்பினருக்கு அறிவித்திருக்கலாம்.

உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் அவர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தாரா என்பதை அறியவில்லை. கடந்த காலங்களில் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொள்வதற்காக பலர் தமக்கு இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் உள்ளது என்பதையே சர்வதேசத்திடம் முன்வைத்தார்கள்.

இந்தக் குற்றச்சாட்டும் புகலிடக் கோரிக்கையை நோக்கமாகக் கொண்டுள்ளதா என்பதும் பிரச்சினைக்குரியதாக உள்ளது.

எவ்வாறு இருப்பினும் நீதிபதி குறிப்பிட்ட விடயங்கள் பாரதூரமானவை. இவ்விடயம் தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் நீதியமைச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ் டயஸ்போராக்களின் வாக்குகளுக்காக அமெரிக்கா ஓரவஞ்சனை செயற்பாடு – சரத் வீரசேகர

அமெரிக்க தூதரகத்தால் தனக்கு விசா வழங்க மறுக்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழ் டயஸ்போராக்களின் வாக்குகளையே அவர்கள் எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் இது அமெரிக்காவின் ஓரவஞ்சனை செயற்பாடு எனவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர அமெரிக்காவின் வாஷிங்டனில் அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விசாவிற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு விசா வழங்குவதை அமெரிக்கா தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாம் நாட்டைப்பற்றியும், நாட்டின் சுயாதீனத்தன்மை பற்றியும் பேசுகின்றமையால் அமெரிக்கா எமக்கெதிராக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு எமக்கு விசா மறுக்கப்பட்டிருக்கலாம்.

நான் இதற்கு முன்னர் அமெரிக்காவில் பயிற்சிகளைப் பெற்றிருக்கின்றேன். அவ்வாறிருந்தும் தற்போது எனக்கு விசா வழங்க மறுத்துள்ளனர். தமிழ் டயஸ்போராக்களின் வாக்குகளையே இவர்கள் இதன் மூலம் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கியதன் காரணமாகவே அமெரிக்கா இவ்வாறு எமக்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். விசா வழங்குவதென்பது அமெரிக்காவின் உரிமையாகும்.

எனவே இவ்விடயத்தில் எம்மால் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. எவ்வாறிருப்பினும் ஒரே நாட்டுக்குள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக பார்க்க முடியாது. ஆனால் இது போன்ற விடயங்களில் அமெரிக்கா ஓரவஞ்சனையாகவே செயற்படுகிறது.

அதே போன்று யாரை அனுப்ப வேண்டும் என்றும் அவர்களால் கூற முடியாது. அது எமது உரிமையாகும். இவர்கள் மறைமுகமாக அரசாங்கத்தின் சுயாதீனத்தன்மையை மீது தாக்குதலை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அரசாங்கம் துணிச்சலுடன் செயற்பட வேண்டும். தனிப்பட்ட விவகாரங்களில் உங்களால் தலையிட முடியாது என்று அரசாங்கம், அமெரிக்காவுக்கு நேரடியாகக் கூற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர்; சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் – சரத் வீரசேகர

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

குருந்தூர் விகாரைக்கு சென்ற விகாராதிபதியை, அரசியல்வாதிகளுடன் வருகைத் தந்திருந்த சில காடையர்கள் தகாத வார்தைகளால் பேசி, அங்கிருந்து வெளியேற்றியமையானது பௌத்தர்களின் மனங்களை புன்படுத்தும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளால் இனங்களுக்கிடையில் மோதல் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது என்றும்
அப்படி நேர்ந்தால், அந்த கும்பலும் அவர்களை அங்கு அழைத்துவந்த அரசியல்வாதிகளும், முல்லைத்தீவு நீதிபதியுமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சும், நீதி சேவைகள் ஆணைக்குழுவும் இதுதொடர்பாக கவனம் செலுத்தி, அவரை அங்கிருந்து இடம்மாற்றி வேறு ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

காணி அதிகாரம் வழங்கப்பட்டால் வடக்கு, கிழக்கில் பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும் – சரத் வீரசேகர

பௌத்த மரபுரிமைகளுக்கு எதிர்மறையாக தமிழ் பிரிவினைவாத அரசியல்வாதிகள் செயற்படும் போது 13 ஆவது திருத்தம் பற்றி பேச நாங்கள் விரும்பவில்லை.

காணி அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும்.

மாகாண சபை முறைமை வெள்ளையானை போன்றது. புதிய அரசியலமைப்புக்கே மக்களாணை உண்டு, ஆகவே மாகாண சபையை நீக்கி புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறேன் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகார பகிர்வு குறித்து ஜனாதிபதி புதன்கிழமை (9) விசேட உரையாற்றினார். நான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை பார்வையிட்டுள்ளேன்.

பௌத்த தொல்பொருள் மரபுரிமை வாய்ந்த வவுனியாவில் வெடுக்குநாறி பகுதியில் உள்ள பௌத்த மரபுரிமை சின்னங்கள் அழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காணி அதிகாரம் வழங்காத போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மரபுரிமைகள் இவ்வாறு அழிக்கப்படும் போது காணி அதிகாரத்தை வழங்கினால் என்ன நேரிடும் என்பது கேள்விக்கிடமாகவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான பௌத்த மரபுரிமை சின்னங்கள் காணப்படுகின்றன. அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதுவே எங்களின் உரிமை இவை சிங்களவர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் சொந்தமானது.

பௌத்த மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு எதிர்மறையாக செயற்படும் அடிப்படைவாத தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பற்றி பேசுவதற்கு நாங்கள் விரும்பவில்லை. நாடு பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள போது தமிழ் தேசிய கூட்டமைப்பினரே அதிகார பகிர்வை கோருகிறார்கள்.

விடுதலை புலிகளின் ஆயுதமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகிறது. 30 வருடகால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாததை தற்போது தட்டில் வைத்து வழங்க முயற்சிப்பது முறையற்றது. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் பேர் உயிர் நீத்தார்கள், 14 ஆயிரத்துக்கும் அதிகமான படை வீரர்கள் தமது உடல் அங்கங்களை அர்ப்பணித்தார்கள்.

மாகாண சபைகள் செயற்பட்ட போது 10 கல்வி அமைச்சர்கள்,10 விவசாய அமைச்சர்கள் என பல அமைச்சர்கள் இருந்தார்கள். நாட்டில் தற்போது கல்வி,சுகாதாரம்,விவசாயம் உள்ளிட்ட சேவைகள் முன்னேற்றமடைந்துள்ளதா இல்லை, மாகாண சபை முறைமை வெள்ளை யானை போலவே உள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கே மக்களாணை உள்ளது. ஆகவே மாகாண சபை முறைமையை நீக்கி புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.

நாட்டில் இல்லாத இனப்பிரச்சினையை தோற்றுவிப்பதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் -சரத் வீரசேகர

அதிகார பகிர்வு என்ற நோக்கத்துடன் ஜனாதிபதியை சந்தித்து இல்லாத பிரச்சினையை தோற்றுவிப்பதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பலர் உயிர் தியாகம் செய்து நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்துள்ளார்கள். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கத்துக்காக நாட்டை பிளவுப்படுத்த நாங்கள் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.

நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று உள்ளதா என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நல்லாட்சி அரசாங்கம் எவ்வித நெருக்கடிகளும் இல்லாத சூழலில் சர்வதேச பிணைமுறிகளிடமிருந்து 12.5 பில்லியன் டொலர் கடன் பெற்றது. பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தும் பல தீர்மானங்களை எடுத்தது.

2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எமது அரசாங்கம் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டது. கொவிட் பெருந்தொற்றுத் தாக்கம்,அந்நிய செலாவணி உள்வருகை வீதம் வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளால் பொருளாதார பாதிப்பு தீவிரடைந்தது.

கையிருப்பில் இருந்த டொலர் கொவிட் தடுப்பூசிக்காக பயன்படுத்தப்பட்டது. இதனால் நாடு பொருளாதார ரீதியில் மேலும் பாதிக்கப்பட்டது. ஆகவே பொருளாதாரப் பாதிப்புக்கு நல்லாட்சி அரசாங்கம் பெருமளவில் பொறுப்புக்கூற வேண்டும்.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை முறையாக செயற்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும், அதிகார பகிர்வு கோரியும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.

வீடு பற்றி எரியும் போது சிகரெட் பற்ற வைப்பதற்கு அந்த வீட்டில் இருந்து தீ எடுப்பதை போல் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயற்படுகிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசியத்தை ஒட்டுமொத்த தமிழர்களின் அவசியம் என்று குறிப்பிட முடியாது.கூட்டமைப்பினர் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றார்களாயின் ஏன் அவர்கள் 5 தேர்தல் நிர்வாக மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிடுகிறார்கள்.ஏனைய மாவட்டங்களில் ஏன் அவர்கள் போட்டியிடுவதில்லை.

காணி விவகாரத்தில் ஒரு மாகாணத்துக்கு மாத்திரம் விசேட சலுகை வழங்க முடியாது. வழங்க வேண்டுமாயின் சகல மாகாணங்களுக்கும் அந்த அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

இலங்கை ஒற்றையாட்சி நாடு.நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க வரலாற்று காலத்தில் இருந்து பலர் உயிர் தியாகம் செய்துள்ளார்கள்.

30 வருட கால யுத்தில் 29 ஆயிரம் படையினர் உயிர் தியாகம் செய்து,14 ஆயிரம் படையினர் தமது உடல் அங்கங்களை நாட்டுக்காக இழந்து நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்தார்கள்.

இவ்வாறான அர்ப்பணிப்புக்களுடன் பாதுகாத்த ஒற்றையாட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு,தமிழ் அரசியல்வாதிகளின் நோக்கத்துக்காக பிளவுப்படுத்த நாங்கள் இடமளிக்க போவதில்லை.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இந்தியா பலவந்தமான முறையில் அறிமுகப்படுத்தியது.இலங்கை – இந்திய ஒப்பந்தம் தற்போது வலுவற்றுள்ளது.

ஏனெனில் இந்தியா பல நிபந்தனைகளை அமுல்படுத்தவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது விடுதலை புலிகள் அமைப்பின் மறைமுக சக்தி. விடுதலை புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் 30 வருடங்கள் வாழ்ந்தார்கள்.ஆகவே புலிகளின் ஆட்சியில் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்களா ? என்பதை நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கு மாகாணம் முன்னேற்றமடைந்துள்ளது.வடக்கில் கல்வி,தொழில் நிலை உயர்வடைந்துள்ளது. மொத்த சனத்தொகையில் 52 சதவீதமான தமிழர்கள் சிங்களவர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள்.இப்போது நாட்டில் என்ன இனப்பிரச்சினை உள்ளது என்பதை உயரிய சபை ஊடாக கேட்கிறேன்.

அதிகார பகிர்வுக்காக ஜனாதிபதி சந்தித்து இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிப்பதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.தமிழ் அரசியல்வாதிகள் பொய்யுரைப்பதற்கு அச்சமடைந்ததில்லை,சிங்கள அரசியல்வாதிகள் உண்மையை கூறுவதற்கு அச்சமடைந்தார்கள்.இதுவே இன்றை பிரச்சினைக்கு மூல காரணியாக உள்ளது.ஆகவே தமிழ் அரசியல்வாதிகளின் பொய்யை சர்வதேசம் தமது பூகோள அரசியலுக்காக ஏற்றுக்கொண்டது.

இலங்கை ஒற்றையாட்சி நாடு ஆகவே இலங்கையில் சமஷ்டியாட்சி முறைமையிலான கட்டமைப்பை தோற்றுவிக்குமாறு தமிழ் தரப்பினர் குறிப்பிடுவது நகைப்புக்குரியது. எக்காரணிகளுக்காகவும் அதிகாரப் பகிர்வுக்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

Posted in Uncategorized

நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்கு தடையேற்படுத்தாதே ! – சரத்வீரசேகரவின் கருத்துக்கு எதிராக அணிதிரண்ட சட்டத்தரணிகள்

பாராளுமன்றில் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக வடமாகாண சட்டத்தரணிகள் இணைந்து கண்டண போராட்டம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (11) காலை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பிரதேசத்தில் கடந்த 04.07.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா களவிஜயத்தை முன்னெடுத்த போது அங்கு அங்கு வருகை தந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களை அந்த இடத்தில் தெரிவிப்பதற்கு நீதிபதி அனுமதி மறுத்திருந்தார்.

இந்நிலையில் அங்கிருந்து வெளியேறிச் சென்ற சரத் வீரசேகர கடந்த 07.07.2023 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தமிழ் நீதிபதிகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் தமிழ் நீதிபதிகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு வலுவான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (11) முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் பணி பகிஸ்கரிப்பை மேற்கொண்டதோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகளோடு இணைந்து வடக்கினுடைய ஏனைய மாவட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டத்தரணிகள் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் பாராளுமன்ற சிறப்புரிமையை துஸ்பிரயோகம் செய்யாதே!, நீதித்துறை சுதந்திரம் ஓங்குக!, கௌரவ நீதிபதிகளின் கடமைகளில் தலையிடாதே!, நீதித்துறையின் சுயாதீன செயற்பாட்டுக்கு தடையேற்படுத்தாதே !, தலையிடாதே! தலையிடாதே! நீதித்துறையின் சுதந்திரத்தில்!, நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா?, சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நட ! போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு அமைதியான முறையிலே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100 வரையிலான சட்டத்தரணிகள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.