வவுனியாவில் பௌத்த பிக்குவால் குழப்பம்; அளவீட்டுப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்கள்

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமமான கருப்பனிச்சாங்குளம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை அருகில் உள்ள கொக்குவெளி பகுதி சிங்கள மக்களுக்கு மயானம் அமைக்க அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தினர் மக்களது எதிர்ப்பையடுத்து அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கருப்பனிச்சான்குளம் கிராமத்தில் வசித்து வந்த தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக இடப்பெயர்ந்து சென்றதுடன், யுத்தம் முடிவடைந்த பின் மீண்டும் வருகை தந்து தமது காணிகளில் குடியேறி, விவசாய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த கிராமத்தில் தமது மயானம் இருந்ததாக தெரிவித்து அருகில் உள்ள கொக்குவெளி சிங்கள கிராம மக்கள் இரு பிக்குகளின் தலைமையில் குறித்த பகுதியில் அமைந்துள்ள விவசாய காணி ஒன்றினை உரிமை கோரி வந்ததுடன், தற்போது அதனை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்து குழப்பம் விளைவித்து வந்தனர்.

இது தொடர்பில் குறித்த காணியினை விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தி வரும் கருப்பனிச்சாங்குளம் கிராமத்தை சேர்ந்த நபர் கருத்து தெரிவிக்கையில்,

இது எனது பரம்பரை வழியான காணி. இங்கு எனது மூதாதையர்கள் முதல் நாங்கள் வரை நீண்ட காலமாக குடியிருந்து வருகின்றோம். பின்னர் இடம்பெயர்ந்து சென்ற நிலையில் மீண்டும் வருகை தந்து காணியில் விவசாய செய்கையினை முன்னெடுத்து வருகின்றோம். தற்போது எமது காணியில் காய்க்கும் நிலையில் பெரிய தென்னை மரங்களும் நிற்கின்றன.

இந்நிலையில் எனது காணியில் சிங்கள மக்களுக்கான மயானம் இருந்ததாக கூறி, அதனை மீள அமைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, எனது காணிக்கான அனுமதி பத்திரத்தை கூட பிரதேச செயலகத்தால் வழங்காமல் முடக்கி வைத்துள்ளனர்.

எனது காணியில் முன்பு மயானம் இருந்தமைக்கான எந்த சான்றுகளும் இல்லை. அல்லது சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள் கூட இல்லை. குறித்த சிங்கள கிராமத்திற்கு அண்மையில் மூன்று மயானங்கள் உள்ளது. அவர்கள் அங்கு சடலங்களை புதைக்க முடியும். தற்போது எனது காணியை சுற்றி தமிழ் மக்கள் குடியமர்ந்துள்ளனர். எனவே இங்கு மயானம் அமைக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பது நீதியான செயற்ப்பாடாக தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பகுதிக்கு பிக்கு இருவரின் தலைமையில் வருகை தந்த சிங்கள மக்கள் குறித்த காணியில் தங்களது மூதாதையர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காணியில் மயானம் அமைப்பதற்காக அதனை மீட்டுத்தருமாறும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் மற்றும் பொலிசார் இரு தரப்புடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். குறித்த காணி 1967 ஆம் ஆண்டில் மயானமாக இருந்ததாக நில அளவைத்திணைக்களத்தின் கள ஆய்வு குறிப்பில் இருப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

எனினும், நில அளவைத் திணைக்களத்தின் 2019 அறிக்கையின் படி அது வன இலாகாவிற்குரிய காணியாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மயானம் இருந்ததாக எந்த பதிவுகளும் இல்லை என தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாருடன் முரண்பட்ட தமிழ் மக்கள், இப்படி ஒரு மயானம் இருப்பதாக பிரதேச சபையின் அறிக்கையில் கூட இல்லை. நாம் இந்த காணியை அளவீடு செய்வதற்கு இடமளிக்கமாட்டோம். மயானம் அமைப்பதற்கு சிங்கள கிராமத்திலேயே பல அரச காணிகள் இருக்கின்றது. அங்கு அதனை அமைக்க முடியும் என தெரிவித்ததுடன், நீண்டகாலமாக குடியிருக்கும் நிலையில் நீதிமன்றம் ஊடாக இதற்கு தீர்வைக் காணுமாறும் தெரிவித்தனர்.

எனினும், குறித்த காணியை நில அளவீடுசெய்து சிங்கள மக்களின் மயானத்திற்காக ஒதுக்குமாறு பௌத்த மதகுரு வருகை தந்த அதிகாரிகளிடம் பலமுறை கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றம் சென்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்குமாறு பிரதேச செயலாளர் இருதரப்புக்கும் தெரிவித்ததுடன், அதுவரை தற்காலிகமாக அயலில் உள்ள மயானத்தில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்குமாறும் சிங்கள மக்களுக்கு தெரிவித்திருந்தார். இதனையடுத்து நிலமை சீராகியது.

குழப்ப நிலையால் அளவீட்டுப் பணிகளுக்காக வருகை தந்த நில அளவைத்திணைக்களத்தின் அலுவலர்கள் காணியை அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு-கிழக்கில் விகாரைகளை நிர்மாணிக்கக் கூடாது என எந்தச் சட்டத்தில் உள்ளது? – அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. அவர்கள் அங்கு சென்று சுதந்திரமாக வழிபடுகின்றார்கள். இந்நிலையில், 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப் பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்சினை? வடக்கு – கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது.”

– இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க.

‘திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 238 சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன. 10 சிங்களவர்களின் வழிபாட்டுக்காகத் தலா ஒரு விகாரை வீதம் அமைக்கப்படவுள்ளது. குச்சவெளி பகுதியில் இந்தப் புதிய விகாரைகளை அமைக்கும் திட்டத்துக்கான அனுமதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது’ – என்று கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகள் இருக்கக்கூடாது – புதிதாக நிர்மாணிக்கப்படக் கூடாது என்று யார் சொன்னது? அப்படியாயின் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்களா? வடக்கு – கிழக்கில் மாத்திரம் தமிழர்களுக்கு இந்து ஆலயங்கள் அமைக்கப்படவில்லை. நாட்டின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் இந்து ஆலயங்கள் பெருமளவில் உள்ளன. உதாரணத்துக்குக் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் எத்தனை இந்து ஆலயங்கள் உள்ளன? அங்கு மூலைமுடுக்கெல்லாம் பெரிய, சிறிய இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராகச் சிங்கள பௌத்தர்கள் போர்க்கொடி தூக்கினார்களா? பல இடங்களில் இந்து ஆலயங்களுக்குச் சென்று சிங்கள பௌத்தர்கள் கூட வழிபடுகின்றார்கள்.

எனவே, தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும் இனவாதத்தை – மதவாதத்தைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

இன்று நாட்டு மக்களுக்கிடையில் இனவாத, மதவாதப் பிரச்சினைகள் இல்லை. தமிழ் அரசியல்வாதிகளும், தமிழ் ஊடகங்களும்தான் இப்படியான பிரச்சினைகளைத் தூண்டி விடுகின்றன.” – என்றார்.

விகாரை கட்ட அனுமதி மறுப்பு – திருமலை மாவட்ட செயலகத்தில் பிக்குகள் முற்றுகை போராட்டம்

திருகோணமலை மாவட்ட செயலகத்தை பிக்குகள் நேற்று முற்றுகையிட்டு போராடினர். அத்துடன், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்த மண்டபத்துக்குள்ளும் புகுந்து களேபரத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் நிலாவெளி – பெரியகுளத்தில் இடை நிறுத்தப்பட்ட விகாரையின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விகாரை நிர்மாணத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பிக்குகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விகாரை நிர்மாணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் பிக்குகளை அழைத்து விளக்கம் வழங்கினார். ஆனால், அவர்கள் அதனை ஏற்கவில்லை.

இந்நிலையில், ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்குள் புகுந்த பிக்குகள் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தினர். இவர்கள் ஏற்படுத்திய குழப்பத்தால் கூட்டம் தடைப்பட்டது.

இதன்போது, “திருகோணமலை அனைத்து இன மக்களும் வாழும் ஒரு பிரதேசம். பிக்குகளின் செயற்பாடுகள் போல் ஏனைய இனத்தவரும் இவ்வாறான செயல்பாடுகளை முன்னெடுப்பார்களானால், அதற்கு நீங்களே முன்னுதாரணமாக இருப்பீர்கள் என்று ஆளுநர் கூறினார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஆளுநர், பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றாலும், பிரதேச சபையின் அனுமதியின்றி எந்த ஒரு கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்க முடியாது – என்றார்

தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களத்தின் முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களை பாதிக்கின்றன – டக்ளஸ்

தற்போதுள்ள அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்ப்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொல்லியல் திணைக்களம், வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களத்தின் சில முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வனவளப் பாதுகாப்பு ,வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாறாகவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் முன்னெடுக்கப்படுக்கின்ற எவ்வகையான முயற்சிகளும் வெற்றியளிக்காது எனவும் தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்த உதவாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருந்தூர் மலையில் பொலிஸ் பாதுகாப்போடு ஆதிசிவன் ஐயனாருக்கு விசேட பொங்கல் வழிபாடுகள்

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் வழிபாடுகள் இன்று (18) நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரையில் பௌத்த மக்களும் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

இந்த வழிபாட்டுக்கு குமுழமுனை, தண்ணிமுறிப்பு வீதியால் சென்ற மக்கள் பொலிஸாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொல்பொருள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் தொல்பொருள் திணைக்களத்தின் விதிகளுக்கமைய, ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் நிலத்தில் கல் வைத்து, அதன் மீது தகரம் வைத்து, அதற்கு மேல் கல் வைத்து பொங்கல் பொங்கினர்.

ஒரு இடத்தில் மட்டுமே நெருப்பு மூட்ட அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை, ஏனைய பக்தர்கள் பொங்கல் பொங்க அனுமதிக்கப்படவில்லை.

அதன்படி, குறித்த ஓர் இடத்தில் நெருப்பு மூட்டி, இரண்டு தடவைகள் பானையில் பொங்கல் பொங்கி, படைத்து வழிபாடுகளை மேற்கொண்டபோது, அவ்விடத்தில் பௌத்த துறவிகளால் குழப்ப நிலை ஒன்றும் ஏற்பட்டது. எனினும், அதனை பொலிஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மறுபக்கம், பௌத்த விகாரையில் பௌத்த மக்களாலும் பௌத்த துறவிகளாலும் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டு பகுதிகளுக்கும் இடையில் பொலிஸாரின் பாதுகாப்பு பலமாக போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் பொங்கல் பொங்கி படைத்து, பூசை வழிபாடுகளை மேற்கொண்டு பிரசாதங்களை பரிமாறினார்கள்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.

 

இதேவேளை, பௌத்த விகாரையில் இடம்பெற்ற வழிபாடுகளில் வவுனியா சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை விகாராதிபதி கல்கமுவ சாந்தபோதி தேரர் தலைமையில் 29 தேரர்கள் மற்றும் சுமார் 300 பேர் வரையிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பெளத்த சாசனத்தைப் பாதுகாக்க பெளத்தர்கள் குருந்தூர்மலையில் ஒன்றிணைய வேண்டும் – உதய கம்மன்பில

குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இந்து மத வழிபாட்டில் ஈடுபட போவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர் மலை பகுதியில் ஒன்றிணைய வேண்டும். இந்து – பௌத்த மோதலை தடுக்கவும், தமிழ் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்.

நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்களுக்கு மாத்திரம் தான் பிரச்சினை உள்ளது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை சமூகமாக வாழும் சிங்களவர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்.பௌத்த மரபுரிமைகள் முழுமையாக தமிழ் பிரிவினைவாதிகளால் அழிக்கப்படும்.

2200 ஆண்டுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட குருந்தூர் தூபியை இந்து கோயில் என தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடுகிறார்கள்.

நாளை (வெள்ளிக்கிழமை) குருந்தூர் மலையில் இந்து மத வழிபாட்டில் ஈடுபட போவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளார்கள.ஆகவே புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர் மலை பகுதியில் ஒன்றிணைய வேண்டும்.குருந்தூர் மலையில் பௌத்த- இந்து மோதலை தடுக்கவும்,தமிழ் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இலங்கை சிங்களவர்களின் நாடு; தமிழர்களுக்குச் சொந்தமானதல்ல – மேர்வின் சில்வா

கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்த தமிழர்களுக்காகவும், சோழர்களுடன் வடக்கு மற்றும் கிழக்குக்கு வழந்த தமிழர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது.

இது சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் விரும்பும் இடங்களில் வாழலாம் என குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அப்பகுதியில் வாழ்பவர்களின் தலைகளை கொய்வேன் என்று குறிப்பிட்ட கருத்தை நீக்கிக் கொள்ளமாட்டேன், முடிந்தவர்கள் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யலாம். டயஸ்போராக்களின் நோக்கத்துக்கமைய அரசாங்கம் செயற்பட்டால் என் தலைமையில் மீண்டும் போராட்டத்தை தோற்றுவிப்பேன் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் எங்கும் வாழலாம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சிங்களவர்கள் வாழ்வதற்கும், விகாரைகள் அமைப்பதற்கும் தமிழ் அரசியல்வாதிகளிடமும், தமிழ் அதிகாரிகளிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

தென்னிந்தியாவில் இருந்து கொழுந்து பறிப்பதற்காகவே மலையகத்துக்கு தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள். மறுபுறம் சோழர்களுடன் வந்த தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழந்தார்கள்.

அரச காலத்தில் இலங்கையில் இருந்த பெண்கள் அழகில்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்கள அரசர்கள் தென்னிந்தியாவில் இருந்து தமிழ் இளவரசிகளை திருமணம் முடித்து நாட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

தமிழ் இளவரசிகளுக்காக சிங்கள மன்னர்கள் கோயில்களை கட்டிக் கொடுத்தார்கள்.இவ்வாறான பின்னணியில் தான் தமிழர்கள் இலங்கையில் வாழ ஆரம்பித்தார்கள். பிற்பட்ட காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொன்மையான விகாரைகள் அழிக்கப்பட்டு அதன் மீது கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஆகவே தற்போது கோயில்களை இடிக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை.

தமிழர்கள் சிங்கள பௌத்தர்களுடன் முரண்பாடு இல்லாமல் நல்லிணக்கத்துடன் வாழலாம் அதை எதிர்க்கவில்லை. ஆனால் பௌத்த மரபுரிமைகளை அழித்து இங்கு வாழ முடியாது. ஏனெனில் இது சிங்கள பௌத்த நாடு. கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்தவர்களுக்காகவும், சோழர்களுடன் வந்தவர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த முடியாது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்கள் விகாரைகள், மகாநாயக்கர்கள் மீது கை வைத்தார். அவர்களின் தலைகளுடன் களனிக்கு வருவேன் என்று குறிப்பிட்டதை ஒருபோதும் நீக்கிக் கொள்ளமாட்டேன். எனக்கு எதிராக எவரும் வழக்குத் தாக்கல் செய்யலாம்.

டயஸ்போராக்களின் நோக்கத்துக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக நான் அரகலயவில் (போராட்டம்) ஈடுபடுவேன். பௌத்தத்தின் மீது பற்றுள்ளவர்கள் என்னுடன் இணைந்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுத்தார்.

Posted in Uncategorized

ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமிழ்த் தரப்புக்கள் சரியான பொறிமுறையை ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டும்

தற்போது எம் தாயகமான வட-கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் மிக வேகமாக தினம் தினம் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருகின்றது. இதனை எதிர்கொள்ள சரியான பொறிமுறை ஒன்று அனைத்து தமிழ் தரப்புக்களும் இணைந்து மேற்கொள்வது அவசியமானது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இதில் பல்கலைக்கழக சமூகத்தினது பங்களிப்பு புலமைசார் தளத்தில் அத்தியாவசியமானது அதே போன்று சட்டரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்ள சட்டவாளர்களின் பங்களிப்பு இப்போது போன்று தொடர்ந்து கிடைப்பதுடன் அது அனைத்து பிராந்திய மட்டத்திலும் ஒருங்கிணைத்த நிபுணத்துவத்துடன் இருப்பது மேலும் பலம் சேர்க்கும்.

அத்துடன் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் பல்கலை உள்ளிட்ட உயர் கல்வி மாணவர்கள் மேலும் வீச்சாக போராட்டங்களை மக்கள் சார்ந்தாக ஒழுங்கமைக்க வேண்டும்.

அரசியலாளர்கள் தொடர் அழுத்தத்தை அரசுக்கு வழங்குவதுடன் பாராளுமன்றை புறக்கணித்தல் உட்பட ஒத்துழையாமை இயக்கத்திற்கு தயாராக வேண்டும்.

மேலும் பன்னாட்டு மற்றும் இந்திய அரசின் கவனத்தை மேலும் ஈர்த்து இந்த பாரிய பௌத்த மேலாண்மையை திணிக்கும் பூர்வீக தமிழர்களின் சிவ வழிபாட்டு இடங்களை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக எம்முள் இருக்கும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து முன்வருவோம்.

அமைப்புசார் நிலையில் இயங்கும் நாம் அனைவரும் எம் அமைப்புக்ளின் தனித்துவங்களை பேணும் அதே நேரம் எம் மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக இருப்பை இத்தீவில் நிலைநிறுத்தவதற்காக ஒருங்கிணைந்த கட்டமைப்பாக செயற்பட இந்த தீர்க்கமான தருணத்தில் அழைப்பு விடுகின்றோம்.

அதே நேரம் இந்த பிரச்சினையை இதயசுத்தியோடு அணுகி அரசு தீர்க்க தவறின் இந்த தீவில் இனங்களிற்கிடையே சமாதான சகவாழ்வு தொடர்ந்து கேள்விகுறியாகி நாட்டின் எதிர்காலம் அதலபாதாளத்திற்கு செல்லும் என்பதை சுட்டிகாட்டுகின்றோம்

தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன் என பகிரங்கமாக கூறும் அளவிற்கு வந்துள்ள அரசியலாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதும் தமிழரின் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பாக மிக மோசமான கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்.

இருப்பினும் இவற்றை செய்ய தவறின் தமிழர் நாம் தொடர் சாத்வீக போராட்டங்களிற்கும் ஒத்துழையாமை இயக்க முன்னெடுப்புகளிற்கும் தள்ளப்படுவோம் என இந்த சந்தரப்பத்தில் அரசிற்கு ஆழமாக வலியுறுத்துகின்றோம்.

Posted in Uncategorized

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும், பறாளாய் வர்த்தமானியை மீளப்பெறவும் கோரி ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்ப முடிவு

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட முழுமையான அதிகாரங்களுடன் 13வது திருத்தத்தை அமுல்ப்படுத்தும் படி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

13வது திருத்தத்தை அமுல்ப்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை வரும் 15ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவித்திருந்தார்.

13வது திருத்தம் தொடர்பில் ரெலோ, புளொட் என்பன தனித்தனியாக யோசனைகளை சமர்ப்பிக்காமல், தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 கட்சிகளுடனும் கலந்துரையாடி, கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை 10 மணியளவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அபிப்பிராயத்தை ஜனாதிபதி கோரியுள்ளதால், அது தொடர்பில் மட்டும் குறிப்பிடுவதென இன்று தீர்மானிக்கப்பட்டது.

காணி, பொலிஸ், நிதி, நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களுடனும் 13வது திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஜனாதிபதி ரணில் பதவியேற்ற பின்னர் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்பு, மத ஆக்கிரமிப்பு சம்பவங்களை பட்டியலிட்டும், பறாளாய் முருகன் கோயில் அரச மரத்தை உரிமை கோரும் முறையற்ற வர்த்தமானி உள்ளிட்ட- தமிழர்களின் தொல்லியல் சின்னங்களை அபகரிக்கும் வர்த்தமானிகளை மீளப்பெற வலியுறுத்தியும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை பொறுத்துக் கொள்ள முடியாது – வேலன் சுவாமிகள்

தமிழர்களின் நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழர்களின் பாரம்பரியத் தொன்மையை எடுத்துச் சொல்லும் பறாளாய் முருகன் ஆலயத்திலே இன்று வர்த்தகமானி என்ற அதிகாரத்தை சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசு கைகளிலே அதிகாரத்தை வைத்துக்கொண்டு மேற்கொள்ளும் செயற்பாடுகள் மூலம் எமது இனத்தின் தொன்மையை அழித்து விட முடியாது என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சுழிபுரத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வர்த்தகமானியிலே சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்பொருட் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர்கள் காலங் காலமாக வழிபட்டு வந்த ஆதி வழிபாட்டுமுறைப் பாரம்பரியங்களைக் கொண்டுள்ள தமிழர்களின் வடக்குக் கிழக்குத் தாயகத்திற்கு பௌத்தம் கெண்டுவரப்பட்ட சங்கமித்தை வந்த காலத்தில் சிங்களம் என்ற மொழி, இனம் கிடையாது.

ஆனால் அந்தக் காலத்தில் தமிழர்கள் ஆட்சி புரிந்தும் பாரம்பரியமாக வழிபாடுகளை நடாத்தியும் வந்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரியத் தொன்மையை எடுத்துச் சொல்லும் பறாளாய் முருகன் ஆலயத்திலே இன்று வர்த்தகமானி என்ற அதிகாரத்தை சிறிலங்கா பௌத்த பேரினவாத அரசு கைகளிலே அதிகாரத்தை வைத்துக்கொண்டு மேற்கொள்ளும் செயற்பாடுகள் மூலம் எமது இனத்தின் தொன்மையை அழித்து விட முடியாது.

தொல்பொருள் என்பது மிகவும் தொன்மையை எடுத்துக் கூறுவது. அந்த வகையில் இங்கு அனைத்து இடங்களிலும் தமிழர்களின் வழிபாட்டிடங்களே காணப்பட்டிருக்கின்றன. மாறாக சி்ங்கள பௌத்தத்திற்கும் தேரவாத பௌத்தத்திற்கும் எள்ளளவும் இடங்கிடையாது.

தமிழர் தாயகத்தில் பறாளாய் முருகன் ஆலயம், கீரிமலை, குருந்தூர் மலை, தையிட்டி, வெடுக்குநாறி மற்றும் மயிலத்தனைமடு போன்ற இடங்களைத் தொல்லியற் திணைக்களம் அடாவடியாக வர்த்தகமானி மூலமாகவும் ஏனைய விதங்களூடாகவும் கையகப்படுத்தி எமது நிலங்களை அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது.

இவ் வர்த்தகமானியை உடனடியாக மீளப்பெற வேண்டும். தமிழர் தரப்பிலுள்ள அனைவரும் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும்.

சர்வதேசம் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பதால் நிச்சயம் நீதி கிடைக்கும். எமக்கென்று ஒரு காலம் வந்து சுயநிர்ணய உரிமை அடிப்படையில் எமக்குரிய தீர்வை நாமே தீர்மானிக்கின்ற பொழுது பார்த்துக்கொள்ளலாம்.

அறம், நீதி என்றோ ஓர் நாள் வெல்லும் என்ற நம்பிக்கையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். ஈழத்தமிழர்களின் நிரந்தரதீர்வு சர்வதேச கண்காணிப்புடன் பொதுசன வா்கெடுப்பாக நடாத்தப்பட்டு எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க வேண்டும் என்றார்

Posted in Uncategorized