பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் மாத்திரமே தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்துவோம் – ஜீவன்

ஹொரண பிளாண்டேஷன் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் போராட்டத்தை நிறுத்தலாம் என யாரும் நினைக்கவேண்டாம்.

அடுத்த வாரம் இடம்பெறும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் மாத்திரமே தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்துவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஹொரண பிளாண்டேஷனில் இடம்பெற்றுவந்த பல்வேறு தவறுகள் இடம்பெற்று வந்தன, அதனை நாங்கள் முன்சென்று பேசியும் நடவடிக்கை எடுக்காததால் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றாேம்.

இதுதொடர்பாக அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றது. பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவோம். இந்த தோட்டத்தில் பிரச்சினைக்கு பிரதான காரணம், அந்த பிரதேசத்தில் 25குடும்பங்கள் இருக்கின்றன.

அந்த குடும்பங்கள் அங்குள்ள தரிசு நிலங்களில் விவசாயம் செய்துவந்தனர். இவர்களில் 5குடும்பம் தோட்டத்தொழிலாளர்கள். ஏனையவர்கள் இவர்களின் பிள்ளைகள். இவ்வாறான நிலையில் அந்த பிரதேசத்தில் வெளியாளர்கள் விவசாயம் செய்வதாக தோட்ட முகாமையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு வெளியாட்கள் யாரும் இல்லை. தோட்டத்தில் பிறந்து, வளர்ந்தவர்களே அங்கு இருக்கின்றனர். பல்வேறு தோட்டங்களில் இவ்வாறு தோட்டங்களில் பிறந்து வளர்ந்தவர்களை வெளியாட்கள் என ஒதுக்கி, அவர்களை மிருகங்களைவிட மோசமான முறையில்  நடத்திவருகின்றன.

இந்த மக்கள் விவசாயம் செய்த இடங்கள் பவவந்தமாக பறிக்கப்பட்டுள்ளன. என்றாலும் தொழில் அமைச்சருடன் கலந்துரையாடி அதனை மீள பெற்றுக்கொடுத்தோம்.

அத்துடன் ஹொரண பிளாண்டேஷன் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக துரைமார்களுடன் கலந்துரையாட முற்பட்டபோதும் அவர்கள் அதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. ஆனால் தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்தாவிட்டால் பொலிஸில் முறைப்பாடு செய்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று, தொழிற்சங்க போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு சிவில் உடையில் வந்த சிலர் அங்கு இருந்துள்ளனர். அவர்கள் யார் என விசாரித்தபோது குற்றப்புலனாய்வு விசேட பிரிவு என தெரிவித்துள்ளனர்.

இன்று பாடசாலைகளில் ஐஸ் பாேதைப்பொருளை தடுப்பதற்கு முடியாத இவர்கள், தொழிற்சங்க போராட்டத்தை தடுப்பதற்கு அங்குவந்து, தொழிலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும்.

அத்துடன் ஹொரண பிளாண்டேஷன் ஹெலீஸ் நிறுவனத்துக்கு கீழ் இருப்பதாகும். இதன் உரிமையாளர் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவாகும். நாட்டை பாதுகாப்பதாக பாராளுமன்றத்துக்கு வந்தவர்.தோட்டத்தொழிலாளர்களை பாதுகாக்க முடியாத இவர் எப்படி நாட்டை பாதுகாப்பார்? அத்துடன் இவர் தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு எதிராக ஹட்டன், நோர்வூட் மற்றும் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்றார். அதேநேரம் ஹொரண பிளாண்டேஷனில் அவர்களின் தொழில் நிறுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம்  தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கி்ன்றனர். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் மாத்திரமே தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்துவோம்.

அத்துடன் ஹொரண பிளாண்டேஷனில் தொழில் புரிந்துவரும் சிவகுமார் என்பவர் மின்சாரம் தாக்கி, கண்டி வைத்தியசாலையில்  அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவருக்கு பதிலளிக்க யாரும் இல்லை. துரைமார் அவரது மனைவியை இரகசியமாக அழைத்து, சிறியதொரு தொகையை தெரிவித்து, இந்த விடயத்தை கைவிடுமாறு தெரிவித்திருக்கின்றார்கள். தோட்டத்தொழிலாளி என்றால் அவ்வளவு கேவலமா என நாங்கள் கேட்கின்றோம். இந்த விடயத்தை நாங்கள் விடப்போவதில்லை என்றார்.

மூன்றாம் நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்யத் தயார் – திலகர்

தனது முதலாவது நூற்றாண்டிலே அடிமைகள் போன்று நடாத்தப்பட்ட மலையக சமூகம் இரண்டாவது நூற்றாண்டிலே தன்னை அமைப்பாக்கம் செய்து அரசியல், தொழிற்சங்க, இலக்கிய பண்பாட்டுத் தளத்துக்கு உயர்ந்தது. ஆனாலும் குடியுரிமைப் பறிப்புக் காரணமாக அந்த இரண்டாம் நூற்றாண்டு அரசியல் பிரவாகம் பல ஏற்ற இறக்கங்கங்களைக் கொண்டது.

அத்தகையதொரு அரசியலே இப்போது நடைமுறையிலுமுள்ளது. அதே நேரம் மலையகம் 2023 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது நூற்றாண்டைத் தொடங்குகிறது. அடுத்த நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்யும் அவசியம் உள்ளது. அதனையே இலக்காக்க் கொண்டே மலையக அரசியல் அரங்கம் ஆரம்பிக்கப்பட்டு செயற்பாட்டில் உள்ளது என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார் .

மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவும் வி. கே. வெள்ளையன் நினைவுப் பேருரையும் ஹட்டன் நகர சபை மண்டபத்தில் எந்த ஞாயிறன்று (27/11) நடைபெற்றது. அரங்கத்தின் 13 வது நினைவுப் பேருரையை மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் மெய்நிகர் முறையிலும், இளைஞர்களினதும் பெண்களினதும் அரசியல் பங்கேற்பு எனும் தலைப்பில் சட்டத்தரணி சஞ்சுளா பீட்டர்ஸும், ஓராண்டுச் செயலாற்றுகை எனும் அரங்கச் செயற்பாட்டு அறிக்கையை கிருஷ்ணகுமாரும் ஆற்றியுருந்தனர் . நிகழ்வுக்கு தலைமை வகித்து கொள்கை விளக்க உரையாற்றியபோதே திலகர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மலையக அரசியல் அரங்கம் தனது ஓராண்டு பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. அரசியலில் ஒரு ஆண்டு என்பது ஒரு கிழமை போன்றும் ஓடி மறையலாம் அல்லது ஒரு யுகமாற்றமும் நடந்து முடியலாம். இலங்கையப் பொறுத்த வரையில் கடந்த இரண்டரை ஆண்டுகள் என்பது ஒரு யுகமே. அத்தனை மாற்றங்கள் அரசியல் தளத்திலே இடம்பெற்ற இந்த இரண்டரை ஆண்டு காலகட்டத்தில்தான்

மலையக அரசியல் அரங்கமும் பிறந்தது.

மலையக அரசியல் அரங்கம் என்பது மலையகத்தின் புதிய யுகத்துக்கான அரசியலை முன்வைக்கும் சமூக அரசியல் தளம். இது ஒரு கட்சியல்ல. கூட்டணியும் அல்ல. நான்கு பிரதான இலக்குகளைக் கொண்டு அரங்கம் செயற்படுகின்றது. மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடல் வெளியை ஏற்படுத்துவது, ஆண்களுக்கு சமனாக பெண்களுக்கும் அரசியலில் சமவாய்ப்பை வழங்குவது, மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியலை முன்னெடுப்பது, அடுத்த தலைமுறையினருக்கான அரசியல் பாலமாகச் செயற்படுவது என்பனவே அந்த இலக்குகளாகும்.

மலையகத்தின் முதலாவது நூற்றாண்டு காலம் அடிமைத் தனத்துக்குள் தள்ளப்பட்டிருந்தாலும் இரண்டாவது நூற்றாண்டிலே அரசியல் அமைப்பாக்கம் பெற்ற சமூகமாக மலையகத்தை நிமிர்த்திய பெருமை மலையக தேச பிதா கோ. நடேசய்யருக்குரியது. அவரது துணைவியார் மீனாட்சியம்மை யும் அந்த பயணத்தில் இணைந்து பெண்களும் அரசியலில் ஈடுபடும் முன்மாதிரியைக் காட்டியவர் .எனவேதான் அவர்கள் இருவரையும் மலையக அரசியல் அரங்கம் முன்னோடி அரசியல் செயற்பாட்டாளர்களாக அடையாளப்படுத்துகிறது.

அறிவார்ந்த அரசியல் உரையாடலை ஏற்படுத்தும் நோக்கில் மலையகத்தின் மூன்றாவது நூற்றாண்டிலே முன்வைப்புச் செய்யவேண்டிய இருபத்து நான்கு (24) தலைப்புகளை நாங்கள் அடையாளம் கண்டு அவற்றை மாதாந்த உரையரங்க நிகழ்வாக நடாத்தி வருகிறோம். இந்த உரையரங்கத் தொடரில் இதுவரை 12 உரைகளை சமகால ஆளுமைகளைக் கொண்டு கடந்த கால ஆளுமைகளின் நினைவாக எதிர்காலத் தலைமுறையினருக்காக வழங்கி உள்ளோம். அவற்றை இணையத்தில் கேட்கலாம். ஆளுமைகளை நினைவு கூர்வதில் நாங்கள் கட்சி பேதம் பார்ப்பதில்லை.

அவர்களது செயற்பாடுகள் மீதான விமர்சனத்தை சீர்தூக்கிப் பார்த்து அவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. 200 ஆண்டுகால மலையகத்தின் 100 ஆண்டுகால அரசியலில் 60 ஆண்டுக்காலம் தலைவராகவும் 30 ஆண்டுகாலம் அமைச்சராகவும் இருந்த ஒருவரை இலகுவாக தவிர்த்துச் செல்ல முடியாது. அந்தச் சாதனையை நினைவுபடுத்தும் அதேநேரம் அறுபது ஆண்டு காலம் ஒருவர் தலைவராக,அமைச்சராக இருந்தும் மக்களுக்கு ஆனது என்ன எனும் கேள்வியை நாம் எழுப்ப வேண்டி உள்ளது.

அந்தவகையில், எமது 12 உரைகளும் பல்வேறு அரசியல் முன்வைப்புக்களைச் செய்துள்ளது. அதே நேரம் இருநூறு ஆண்டு காலம் நாட்கூலித் தொழிலாளர்களாக வாழும் எமது உழைப்பாளர் மக்களை சிறு தோட்ட உடைமாயளர்களாக்கி சுயாதீன உழைப்பாளர்களாக்குவதன் மூலமே அடுத்த தலைமுறை மலையகத்தையாவது நாம் அடிமைத்தளைகளில் இருந்து நீக்க முடியும் என்ற வலியுறுத்தலைச் செய்யவே அந்த விடயத்தை தலைப்பாகக் கொண்டு 13 வது நினைவுப்பேருரையை தொழிற்சங்கத் துறவி வீ.கே. வெள்ளையன் நினைவாக ஆற்றுகின்றோம்.

அதனை அர்த்தமுள்ளதான ஓர் உரையாக அரசியல் ஆய்வாளர் விக்டர் ஐவன் அவர்கள் வழங்கி உள்ளார். அடுத்து வரும் 11 மாதமும் நாங்கள் மலையக மாவட்டங்கள் தோறும் மாதாந்த நினைவுப் பேருரைகளை நடாத்தத்திட்டமிட்டுள்ளோம். மலையகத்தின் இரண்டாம் நூற்றாண்டில் அரசியல் அமைப்பாக்கம் செய்த எங்கள் முன்னோடி நடேசய்யர் எதிர்கொண்ட சவால்களை நாம் கற்றறிந்துள்ளோம். அதேபோல மூன்றாவது நூற்றாண்டுக்கான அரசியல் முன்வைப்புக்களைச் செய்யும் மலையக அரசியல் அரங்கத்தின் பணியை இன்றுபோல் எல்லாவிதமான சவால்களையும் எதிர்கொண்டு முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் தமிழர்களை பதிவு செய்வதை உடன் நிறுத்த வேண்டும் – மனோ

கொழும்பில் வாழும் தமிழ் மக்களை இலக்குவைத்து பொலிஸார் மேற்கொள்ளும் பதிவு செய்யும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவேண்டும்.

தனிப்பட்ட ஒருவரின் தகவலை வேறு யாருக்கும் வழங்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16  விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு பிரதேசத்தில் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வீடுவீடாக சென்று பிரசாரம் மேற்கொள்வதுபோல, பொலிஸார் வீடுவீடாக சென்று பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் யுத்தம் இல்லை. பயங்கரவாத நடவடிக்கை இல்லை. சுதந்திரமாக செயற்படும் இப்போது ஏன் அந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.  இதுதொடர்பாக ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு முறைப்பாடு செய்திருக்கின்றேன்.

கொழும்பு நகரில் வாழும் தமிழ் மக்களை இலக்குவைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க முடியாது.

இதுதொடர்பாக பொலிஸ் பொறுப்பதிகாரியை கேட்கும்போது, மேலிடத்து உத்தரவு என தெரிவிக்கிறார். அதனால் தயவு செய்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டாம். இதனை நிறுத்துங்கள். பொலிஸ் சட்டத்தை பயன்படுத்தி வீடுவீடாக செல்லவேண்டாம்.

ஏனெனில் பொலிஸாருக்கு வழங்கப்படும் தகவல்கள் அங்கிருந்து கடத்தல்காரர்கள், திருடர்கள் கொள்ளையர்களுக்கு செல்கின்றன. அது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் எனது பிரதேச மக்களின் தகவல்களை பொலிஸுக்கு வழங்க எனக்கு விருப்பம் இல்லை. தவறு செய்தவர்கள் யாரும் இருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்றார்.

இதன்போது சபையில் இருந்த பொதுமகள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அதற்கு பதிலளிக்கையில், கொழும்பு பிரதேசத்தில் பதிவு செய்வது தொடர்பாக என்னுடன் நீங்கள் கதைத்தீர்கள். அதுதொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதாக நான் தெரிவித்தேன்.

வெளியில் இருந்து வந்திருப்பவர்கள் யாராவது இருந்தால் பதிவு செய்யும் நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது யுத்தத்துக்கு முன்பிருந்து இடம்பெறும் நடவடிக்கையாகும். இதன் மூலம் வெளிப்பிரதேசத்தில் குற்றம் ஒன்றை செய்து, கொழும்பில் தங்கி இருக்கின்றார்களா என கண்டுபிடிக்கவே  மேற்கொள்கின்றோம்.

அத்துடன் பொலிஸ் பதிவு செய்யும் நடவடிக்கை கொழும்பில் மாத்திரம் மேற்கொள்ளப்படுகின்றதொன்று அல்ல. அதேபோன்று தமிழ் மக்களின் வீடுகளை மாத்திரம் தெரிவுசெய்து மேற்கொள்வதல்ல.

அனைத்து மாவட்டங்களிலும் தமிழ், சிங்கள முஸ்லிம் என  அனைத்து வீடுகளில் உள்ளவர்களும் பதிவு செய்யப்படுகின்றார்கள். இது சாதாரண விடயமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இதனை தவறாக திசைதிருப்பவேண்டாம். என்றாலும் இதில் ஏதாவது தவறு இடம்பெறுவதாக நீங்கள் தெரிவிப்பதாக இருந்தால், அதுதொடர்பாகவும் நான் மீண்டும் தேடிப்பார்த்து, உங்களுக்கு அறிவிக்கின்றேன் என்றார்.

தொடர்ந்து மனோகணேசன் எம்.பி உரையாற்றுகையில், தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழு ஒன்று இருக்கும் போது உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பாக ஆராய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது இந்த நடவடிக்கையை தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு வழங்கவேண்டும். அத்துடன் உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பில் கட்சிகளின் கருத்துக்களை 10நாட்களுக்கு வழங்குமாறு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.  இந்த வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்தவேண்டும் என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கின்றேன்.

உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8ஆயிரத்தில் இருந்து 4ஆயிரமாக குறைக்கவேண்டும் என தெரிவிக்கின்றனர். இவ்வாறு செய்யும்போது சிறுபான்மை பிரதிநிதித்துவம் இல்லாமல்போகும் நிலை இருக்கின்றது. அதற்கு அனுமதிக்க முடியாது.

தொகுதி வாரி முறை தேர்தலை நாங்கள் கோரவில்லை. அவ்வாறு உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக இருந்தால் மீண்டும் பழைய முறையிலான விகிதாசார தேர்தல் முறைக்கே செல்வோம். அனைத்து இன மக்கள் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.

ஜனாதிபதி மலையகம் வரும் போது போது பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் -மனோ

இப்போது வடக்கிற்கு போவதை போல், மலையகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளேன். அங்கே வாருங்கள் சந்திப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடம் நேரடியாக கூறினார். வடகிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களது, பிரதான தலைமை கட்சியான எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்பீக்கள் உங்களை கட்டாயம் சந்திப்பார்கள் என்று நான் அவருக்கு பதிலளித்தேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐநா சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகளின் “தள வேறுபாடு” களை இன்று ஐக்கிய நாடுகள் சபையே புரிந்துக்கொண்டு எம்முடன் தனியாக பேசுகிறது. இதை ஜனாதிபதியும் புரிந்துக்கொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி விட்டேன். ஆகவே வடகிழக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மலையக தமிழ் மக்கள் தொடர்பில், பிரதான தலைமை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயமாக சாதகமாக நடந்துக்கொள்ளும்.

வடக்கில் ஜனாதிபதி செயலக உப காரியாலயம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். நல்லது. காணி, வீடமைப்பு, சுகாதாரம் தொடர்புகளில் பல்வேறு குழுக்களை அமைக்க போவதாக அறிவித்துள்ளார். இதுவும் நல்லதே. ஆனால், இவை நடைமுறையாகி நல்லது நடக்குமானால் மாத்திரமே அங்கு வாழும் அப்பாவி தமிழ் உடன்பிறப்புகள் மகிழ்ச்சியடைவார்கள். நானும் மகிழ்ச்சியடைவேன்.

மலையகத்தில் ஜனாதிபதி ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே, ஐநா சபை பெருந்தோட்டபுறங்களில் உணவின்மை 43 விகிதம் எனவும், உலக வங்கி பெருந்தோட்டபுறங்களில் வறுமை 53 விகிதம் எனவும் கூறி உள்ளன. ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபொகடா, பெருந்தோட்டபுறங்களில் நவீன கொத்தடிமை முறைமை இருப்பதாகவும், அதுவும் தொழிலாளர் என்ற காரணத்தை தாண்டி, சிறுபான்மை தமிழர் என்பதால் நிகழ்கிறது எனவும் அறிக்கை சமர்பித்து கூறி விட்டார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதுதான் துன்புறும் பெருந்தோட்ட மக்களை திருப்தியடைய செய்யும். 200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை பற்றி சர்வதேச சமூகம் சொல்லுவதை கேட்டு நம்நாட்டு ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புதான் கேட்க வேண்டும். அதை செய்யாவிட்டாலும், இனி விசேட உணவு வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டு திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும் என கோருகிறேன்.

பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு உதவ தாம் தயார் என ஐநா சபை என்னிடம் கூறியுள்ளது. அவரிடமும் கூறி இருப்பார்கள். ஐநா, மற்றும் இந்திய நாட்டு உதவிகளை கோரி பெற்று பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகளை முதலில் கவனியுங்கள்.

ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரை எமது மக்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விட்டது : மனோ

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு – செலவுத் திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு எம்மை ஏமாற்றமடைய செய்துள்ளது கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்றைய வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

உலக வங்கி, ஐநா நிறுவனமான உலக உணவு திட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றால், உணவின்மை மற்றும் வறுமை ஆகிய விடயங்களில் இலங்கையிலேயே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரிவினராக பெருந்தோட்ட மக்கள் மற்றும் மாநகர பாமர மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த பின்தங்கிய பிரிவினருக்கான விசேட ஒதுக்கீட்டு திட்டங்களை ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அது நடைபெறவில்லை.

  • உடனடியாக நிவாரண திட்டங்கள் இல்லாவிட்டாலும் கூட, இம்மக்களின் இக்குறைபாடுகள் பற்றி தான் அறிந்துள்ளேன் என்பதை ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டு கூறி இருக்க வேண்டும்.

அப்படியாயின், இந்த நலிவடைந்த மக்களை அது ஓரளவு சாந்தப்படுத்தி இருக்கும். தமது பிரச்சினைகள் பற்றி ஆளுகின்ற அரசு அறிந்து வைத்துள்ளது என்பதை அறிந்து மக்கள் சற்று நம்பிக்கை அடைந்து இருப்பார்கள். தீர்வுகள் தாமதமாகி வரும் என ஆறுதல் அடைந்து இருப்பார்கள்.

ஆனால், உயிருள்ள உழைக்கும் மக்களை மறந்து விட்டு, தோட்டங்களில் உள்ள காணிகளை பற்றி பேசி, பயிரிடப்படாத காணிகளை, புதிய முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்க போவதாக நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனதுவரவு – செலவுத் திட்ட உரையில் கூறி உள்ளார்.

நமது மக்களுக்கு பயிரிடப்படாத காணிகள் தருவதாக எனக்கு பாராளுமன்றத்தில் தந்த வாக்குறுதியை அவர் மறந்து விட்டார்.

அப்போது அவர் பிரதமர். இப்போது ஜனாதிபதி. ஆனால், நாம் மறக்கவில்லை. நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை வரை துன்பப்படும் நமது மக்களை, இந்த அலட்சியம் கொல்லாமல் கொல்கிறது.

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இ.தொ.காவிற்கும் இடையில் கலந்துரையாடல்

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து, TANTEA தோட்டங்களில் குடியேறியுள்ள பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினை தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும்  இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்றவர்களின்  வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் கூட்டுப் பொறுப்பு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு அரசாங்கங்களுக்கும் உண்டு.

மேலும் மலையகத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டிய 10,000 வீடுகள் குறித்தும், பெருந்தோட்ட இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில்  இந்திய ஆசிரியர்களை நியமித்து,புதிய பாடநெறிகள் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்ரஸால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இதன் போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் அரசியல் பிரிவுக்கான முதன்மைச் செயலாளர் திருமதி பானு ஆகியோர் தெரிவித்தனர்.

மலையக மக்களை ஒதுக்கப்பட்ட சமூகமாக பேசுவது முட்டாள் தனமானது – ஜீவன்

மலையகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு உயர் தொழில்களில் ஈடுபட்டுவரும் நிலையில் மலையக மக்கள் மாத்திரம் ஒதுக்கப்பட்ட மக்களாகவும் வறுமைக்குட்பட்ட மக்களாகவும் பேசுவது முட்டாள் தனமான விடயமாகும் என ஜீவன் தொண்டமான தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தேசிய ஐக்கிய முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி இணைந்கொண்டுவந்த நாட்டின் தற்போதைய நெருக்கடி தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஒதுக்கப்பட்ட சமூகம் எனும்போது அனைவரும் மலையக மக்களை மாத்திரமே சுட்டிக்காட்டி பேசுகின்றனர்.

நாட்டில் வேறுயாரும் ஒதுக்கப்பட்டவர்கள் இல்லையா என கேட்கின்றேன். மலையக மக்கள் மாத்திரம் ஒதுக்கப்பட்ட மக்களாகவும் வறுமைக்குட்பட்ட மக்களாகவும் பேசுவது முட்டாள் தனமான விடயமாகும்.

மலையத்தில் ஒரு இலட்சத்து 30ஆயிரம் பேர் தொட்டத்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனையவர்கள் வெளிப்பிரதேசங்களில் பல்வேறு உயர் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தொடர்ந்தும் மலையக மக்கள் ஒதுக்கப்பட்ட சமூகமாக தெரிவிக்கப்படுவதுதான் மிகப்பெரிய கொடூரம்.

அத்துடன் இன்று எமது நாட்டில் இலவச கல்விக்கு காரணம் மலைய மக்களின் வியர்வை, இரத்தத்தை தவிர வேறு எதுவும் இல்லை. முடியுமானால் அதனை யாரேனும் இல்லை என தெரிவிக்கட்டும். இதனை புரிந்துகொள்ளாமல் தொடர்ந்தும் ஒதுக்கப்பட்ட சமூகம் என வெட்கம் இல்லாமல் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் மலையகத்தில் அண்மையில் இரண்டு உயிர்கள் அநியாயமாக பலியாக்கப்பட்டன. தோட்ட நிர்வாகத்தில் கவனயீனத்தினாலேயே இந்த விபத்துக்கள் இடம்பெற்றன. அந்த மரணித்தவர்கள் தொடர்பில் கதைப்பதற்கு இன்று யாரும் இல்லை. இதனை விபத்து என தெரிவிக்க முடியாது. தோட்ட நிர்வாகம் இந்த இரண்டு பேரையும் கொலை செய்திருக்கின்றது. அப்படியான கொடூரமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றாேம்.

மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக மலையக மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் வீதம் குறைவடைந்துள்ளது என கல்வி அமைச்சர் தெரிவிக்கின்றார். பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் மலையக மாணவர்கள் முறையாக பாடசாலைக்கு சென்று படித்தார்களா என கேட்கின்றோம். மத்திய மாகாணத்தில் மாத்திரம் 728 பாடசாலைகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன.

இவ்வாறான நிலையில் மாணவர்கள் எப்படி பாடசாலைக்கு சென்று படிக்க முடியும். அதேபோன்று ஏனைய மாவட்ட பாடசாலைகளில் இருக்கும் ஆங்கிலம், விஞ்ஞானம், தொழிநுட்ப கல்வி ஏனைய மலையகம் சார்ந்த மாவட்டங்களில் மாத்திரம் ஏன் இல்லை என கேட்கின்றோம். அதனால் மலைய மக்கள் ஒதுக்கப்பட்ட சமூகம் என தெரிவிக்க முடியாது. மாறாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள சமூகம் என்றே தெரிவிக்க வேண்டும். ஏனெனில் மலைய பாடசாலைகளில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தினால் அந்த மாணவர்கள் நல்ல முறையில் படித்தால் வேறு தொழில்களுக்கு சென்று விடுவார்கள். அதனால் தொட்டங்களில் வேலைசெய்ய யாரும் இருக்கமாட்டார்கள். அதனால்தான் மலையக பாடசாலைகளில் முறையான பாடங்கள் இடம்பெறுவதி்லலை.

அத்துடன் இரம்பொடை புளூம்பீல் தோட்டத்தில் நாங்கள் மேற்காெண்ட வேலை நிறுத்தப்போராட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்கின்றோம். அந்த தோட்ட தொழிலாளர்களுக்குரிய ஈ.பி.எப். ஈ.ரி.எப் அனைத்தும் முழுமையாக செலுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 80ஆயிரம் முதல் ஒருஇலட்சம் ரூபாவரை நிவாரண பணம் வழங்கப்படுகின்றது. காணியும் வழங்குகின்றனர். எனவே இந்த வெற்றியை மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு சமர்ப்பணமாக வழங்குகின்றேன் என்றார்.