மகிந்த குடும்பத்தின் ஊழல்களை உடனடியாக விசாரிக்கவேண்டும்! செல்வம் எம்.பி. வலியுறுத்து

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்படவேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நேற்று ரெலோ இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாணய நிதியம் பணம் கொடுப்பது சம்பந்தமாக சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊழல்கள் விசாரிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் காரணமாகத்தான் இந்த நாடு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகவே இந்த ஊழலை விசாரிக்காத பட்சத்தில் நாடு மிகவும் மோசமான சூழலில் அதாவது பின் தங்கிய நிலையில் தொடர்ந்து செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆகவே மகிந்த ராஜபக்ஷ குடும்பம் இந்த ஊழல் செயற்பாடுகள் மூலம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியை கொண்டு வந்து இன்றும் நடமாடிக்கொண்டிருக்கும் அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் கோரிக்கையாக முன் வைக்கிறோம். அப்படி இல்லை என்றால் இங்கு முதலீடு செய்யப்பட்ட வங்கிகளின் பணங்கள் எல்லாம் இந்த கடனுக்காக எடுக்கப்பட்டு மிக மோசமான ஒரு சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே ஊழலை விசாரிப்பதன் ஊடாகத்தான் இந்த நாட்டில் முன்னேற்றகரமான செயற்பாடுகளைச் செய்ய முடியும். ஜனாதிபதி இனப்பிரச்னைக்கு இவ் வருடத்துக்குள் தீர்வு என மீண்டும் அறிவிக்கத் தொடங்கி இருக்கிறார்.

எங்களை பொறுத்தவரை தீர்வு என்பது எப்படி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. அந்தக் கேள்வியை ஜனாதிபதியிடமே நாங்கள் கேட்கின்றோம்.

வடக்கு-கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற வேலை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது. அது புத்தசாசன அமைச்சாக இருக்கலாம், வனவள திணைக்களமாக இருக்கலாம், வன ஜீவராசிகள் திணைக்கள மாக இருக்கலாம். இப்படி திணைக்களங்களிடம் அதிகாரங்களைக் கொடுத்து விட்டு இனப்பிரச்னைக்கு தீர்வு என்பது எப்படி சாத்தியாகும்? – என்றார்.

மஹிந்த- இந்திய தூதுவர் கோபால் பாக்லே இடையே சந்திப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று வியாழக்கிழமை சந்தித்து பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்கு இந்தியாவின் ஆதரவு உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவுக்கு இந்தியா துணைநிற்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார்.

மேலும், இலங்கையில் இந்திய முதலீடுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

நட்பு ரீதியிலும் சுமுகமான சூழ்நிலையிலும் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சதி செய்து தந்திரமாக பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார் மகிந்த – நாமல் ராஜபக்ச

கோட்டாபயவை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்த மகிந்த ராபக்சவை போராட்டக்காரர்கள் ஏன் முதலில் வெளியேற்றினார்கள் என்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச.

முகப்புத்தகத்தில் நடைபெற்ற நேரடிக் கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

“கோ ஹோம் கோட்டா என்று நீங்கள் கூறும்போது பிரதமர், அடுத்ததாக அதிபர் பதவிக்காக வரிசையில் நிற்கிறார். அதனால் தான் கோட்டாபய பதவி விலகும் முன்னர் மஹிந்த பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தோன்றியது.

போராட்டத்தை முன்னின்று நடாத்தியவர்கள் கட்சி சார்பற்றவர்கள் இல்லை. கோட்டாபய பதவி விலகும் போது பிரதமராக இருந்த மஹிந்த அடுத்தபடியாக அதிபராவார் என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர். அதனால் தான் அவர்கள் தந்திரமாக முதலில் மஹிந்த ராஜபக்‌சவை பதவி விலக்கினார்கள்.

ராஜபக்‌சாக்களை அதிகாரத்திலிருந்து நீக்குவது மூன்றாம் தரப்பின் சதிச் செயல். போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு நபரும் மூன்றாம் தரப்பு சதியாளர்களின் கைக்கூலிகள். இதைப் பற்றி மக்கள் பின்னர் விளங்கிக் கொள்வார்கள்.

“இப்போதும் எங்களுக்கு போராட்டத்தைப் பற்றி எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிரச்சினை உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மூன்றாம் தரப்பின் ஆட்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். போராட்ட காலத்தில் நீங்கள் மூன்றாம் தரப்பின் கைக்கூலியாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் பின்பு புரிந்து கொள்வீர்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மஹிந்த, பசிலுக்கு எதிரான பயணத்தடை நீக்கப்பட்டது

மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடை இனிமேல் தொடராது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே காரணம் என தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் உயர் நீதிமன்றம் பயணத்தடை உத்தரவை நீடிக்கவில்லை என சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் இதனை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க கோரினர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இரண்டு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட பயணத்தடை இனிமேல் நடைமுறையில் இருக்காது என அறிவித்தது.

மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தடை 10 நாட்களுக்கு நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தடையை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நீக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று (08) நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தென்கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, 10 நாட்களுக்கு பயணத்தடையை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13ஆவது திருத்த சட்டம் தேவையில்லாத ஒன்று – மகிந்த ராஜபக்ஷ

13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டியில் செய்தியாளர்களை மகிந்த ராஜபக்ஷ சந்தித்தார். இதன்போது, அவரிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மகிந்த, அவ்வாறான (13ஆவது திருத்தம்) ஒரு சட்டம் அவசியம் என்று தற்போதைய அரசாங்கம் நம்பினாலும் சிறீலங்கா பொதுஜன பெரமுன அதே கருத்தை கொண்டி ருக்கவில்லை – இது (13) தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் – என்று கூறினார்.

மக்களின் உரிமைகளை நிலைநாட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். மக்களின் தேவைகளை தீர்மானிக்கும் ஒரேவழி தற்போதைய நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் கடமை. எவ்வாறாயினும் அரசிடம் நிதி இல்லாவிட்டால் தேர்தலையும் நடத்த முடியாது.

எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க எமது கட்சி தயாராக இருக்கிறது. நாம் வெற்றிபெறுவோம் என்பது தெரியும். இதனால்தான் நான் ஜனாதி பதியாக இருந்த காலத்தில் ஒரு தேர்தலையும் தாமதப்படுத்தவில்லை. தற்போதைய அரசாங்கம் வெற்றி பெறுமா இல்லையா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதால் தேர்தலும் நிச்சயமற்று உள்ளது – என்றும் கூறினார்

நாடு வங்குரோத்து நிலையடைந்தமைக்கு ராஜபக்‌ஷ குடும்பமே காரணம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

ராஜபக்ஷ குடும்பம் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்ததால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் இன்று சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள். நாட்டின் இன்றைய அவல நிலையினால் மன வேதனைக்குள்ளாகியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

மதுகம நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நவ லங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டின் இன்றைய அவல நிலையை கண்டு மன வேதனையடைகிறேன். முழு உலகத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த இலங்கை இன்று ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் மோசடியினால் வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் தற்போது சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள்.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளதை பொருளாதார பாதிப்பு என்ற வரையறைக்குள் மாத்திரம் வைத்து மதிப்பிட முடியாது.பொருளாதார பாதிப்பினால் சமூக கலாசாரம்,நல்லிணக்கம்,தேசிய பாதுகாப்பு,கருணை,பிறருக்கு உதவி செய்தல் என அனைத்து நல்ல விடயங்களும் சீரழிந்து விட்டது.பொருளாதார பாதிப்பினால் நாடு சீரழிந்து விட்டது.

எனது 11 வருட ஆட்சிகாலத்தில் யுத்தத்துடன் போராடினேன்.ஒரு யுத்தத்தை புரிந்துகொண்டு மறுபுறம் நாட்டை அபிவிருத்தி செய்தேன்.பதவி காலம் முடிந்த பிறகு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆட்சியை ஒப்படைக்கும் போது நாட்டில் ரூபாவும் இருந்தது,டொலரும் இருந்தது,

ராஜபக்ஷ குடும்பம் மக்களாணை என குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை தவறாக வழிநடத்தி ஆட்சியை கைப்பற்றினார்கள்.ஒரு குடும்பம் முழு நாட்டையும் சூறையாடியது. வரையறையற்ற அரச முறை கடன்களினாலும் ,அனைத்து அபிவிருத்திகளிலும் மேற்கொள்ளப்பட்ட மோசடியாலும் நாடு பாரிய கடன் சுமையை எதிர்கொண்டது.

ராஜபக்ஷ குடும்பமும்,அவர்களை சார்ந்தோரும் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்தார்கள். ஊழல் மோசடி தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அவதானம் செலுத்தவில்லை,அகப்படாத வகையில் ஊழல் மோசடிகளை செய்யுங்கள் என அவர் அவரது சகாக்களுக்கு ஆலோசனை வழங்கினார். இறுதியில் நேர்ந்தது என்ன பொருளாதார பாதிப்பு முழு நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஆட்சியை உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் அரசியல் செய்கிறார்கள்.நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் நலனை  கருத்திற் கொண்டு மிகுதியாக இருக்கும் வளங்களை பாதுகாக்க வேண்டுமாயின் ராஜபக்ஷர்கள் கௌரவமாக அரசியலில் இருந்து விலக வேண்டும். அதுவே நாட்டுக்கு செய்யும் அளப்பரிய சேவையாக காணப்படும் என்றார்.

மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை தவறு – பஷில்

மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை எனவும், அவர்தான் இப்போதும் பிரதமராக இருந்திருக்க வேண்டும் எனவும்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கியது மொட்டுக் கட்சியினர் அல்லர் எனவும், போராட்டக்காரர்களே அவரைப் பிரதமராக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள்தான் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும், எதிர்க்கட்சியில் இருந்து ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் கோரினார்கள் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்தவே பிரதமராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவைத் தவிர வேறு எவரையும் பிரதமராக நியமிப்பதற்கு விருப்பம் இல்லை என உறுதியாகக் கூறியதாகவும், எனினும், கோட்டாபய அவரது விருப்பத்தின்படி ரணிலைப் பிரதமராக நியமித்தார் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு மக்கள் ஆணை இல்லை எனவும், அவரைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்குங்கள் என கோட்டாவுக்குக் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால்தான் அவர் ரணிலைப் பிரதமராக நியமித்தார் எனவும் பஷில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கும் பின்னர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டமைக்கும் தங்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் நாடாளுமன்றின் ஊடாக ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை வந்தபோது அப்போதைய வேட்பாளர்களை ஆராய்ந்து பார்த்து ரணிலை ஜனாதிபதியாக்குவதற்கு தாங்கள் முடிவெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மஹிந்தவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமை பிழை எனவும், அவர்தான் இப்போதும் பிரதமராக இருந்திருக்க வேண்டும் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மகிந்த, கோட்டாபயவுக்கு ஏனைய நாடுகளும் தடை விதிக்க வேண்டும்! – சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் ஒரு முன்னாள் இராணுவ சிப்பாய் மற்றும் கடற்படை அதிகாரி மீது தடை விதித்து கனடா மேற்கொண்டுள்ள நட வடிக்கைகளை ஏனைய அரசாங்கங்களும் பின்பற்ற வேண்டும் என மனித உரிமைகள் கண் காணிப்பு அமைப்பின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார் மனித உரிமைகளைப் பாதுகாக்க ஒரு நாடு எடுத்த சக்தி வாய்ந்த முடிவு இது என்று தெரிவித் துள்ள மீனாட்சி கங்குலி, உலகின் மற்ற பெரிய நாடுகளும் இதே போன்ற நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

1983 முதல் 2009 வரை இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரின் போது செய்யப்பட்ட “மொத்த மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில்” அனைவரும் சம்பந்தப்பட்டவர்கள் – என்று அவர் கூறுகிறார்

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:- கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, கனடா “சர்வதேச சட் டத்தை மீறுபவர்களுக்கு எதிரான சர்வ தேச தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார். இதில் பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கம் ஆகியவை அடங்கும்.

மகிந்த ராஜபக்ஷ 2005-2015 வரை ஜனாதிபதியாக இருந்தார், உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்கள் உட்பட, இலங்கை இராணுவப் படைகள் ஏராள மான போர்க்குற்றங்களை இழைத்துள்ளன. இராணுவம் மருத்துவமனைகள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று காயப்படுத்தியது. பல போராளிகள் மற்றும் பொதுமக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளனர் . ஐக்கிய நாடுகள் சபை, ஊடகங்கள் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பிற குழுக்கள் அரசாங்கப் படைகள் மற்றும் விடுதலைப் புலிகளின் விரிவான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச போரின் இறுதிக் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தார். போர்க்குற்றங்களை தவிர, ஊடகவியலாளர்கள் மற்றும் செயல்பாட் டாளர்களின் கடத்தல் மற்றும் கொலை செய்ததில் தொடர்புடையவராக கருதப் படுகிறார் . அவர் 2019 இல் ஜனாதிபதி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதாரத்தை அவர் தவறாகக் கையாண்டதால் தூண்டப்பட்ட வெகுஜன எதிர்ப்புகள் அவரை ஜூலை 2022 இல் இராஜிநாமா செய்யவைத்தன.

உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட ‘மொத்த மற்றும் முறையான மனித உரிமை மீறல்களில்’ சம்பந் தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு முன்னாள் இராணுவத்தினருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடுத்த கோரிக்கைகள் நீண்டகாலமாக கவனிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன. மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஆணையர் “மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் நம்பகத் தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மேலும் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை ஆராயுமாறு” அரசாங்கங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

கனடாவின் பொருளாதாரத் தடை கள் முக்கியமானவை, ஏனெனில் – முதல் முறையாக – அவை குற்றங்கள் செய்யப் பட்டபோது ஒட்டுமொத்த கட்டளையில் இருந்தவர்களை குறிவைக்கின்றன. இதை மற்ற அரசுகளும் பின்பற்ற வேண்டும். பாரதூரமான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை அவர்களின் தலைமைப் பாத்திரம் எதுவாக இருந்தா லும் அவர்களைக் கணக்குப் போட்டு நீதியை உறுதிப்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது – என்றும் கூறியுள்ளார்

இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு தடை விதிக்க பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு எதிராக கனடா தடைவிதித்துள்ள நிலையில், பிரிட்டனின் பழமைவாதக்கட்சி அமைச்சர்கள் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து மறுத்துவருவது குறித்து அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் கரெத் தோமஸ் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

மிகமோசமான மனித உரிமை மீறல் குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகிய நால்வருக்கு எதிராக விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் தடைவிதிப்பதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டும் என பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்திவரும் பின்னணியில், கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே கரெத் தோமஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் தடைவிதித்திருக்கின்றது.

ஆனால் இங்குள்ள பழமைவாதக்கட்சி அமைச்சர்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு உதவும் வகையில் அத்தகைய நடவடிக்கையை முன்னெடுப்பதற்குத் தொடர்ந்து மறுத்துவருகின்றார்கள்’ என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.