யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விகாரையை அகற்ற கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உள்ளிட்டவர்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதையும் கண்டித்து, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம்(வியாழக்கிழமை) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கூட்டத்தில் பங்கு பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான த. சித்தார்த்தன், சுமந்திரன், சிறிதரன், மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்டோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் முழுமையாக முடங்கியது

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும் தமிழர்களின் பாரம்பரிய இன, மத அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் வடக்கு, கிழக்கில் இன்றைய தினம் நிர்வாக முடக்கல் போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகள் வெறிச்சோடி போயுள்ளதாக தெரியவருகிறது

யாழ்.பண்ணை பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சித்திரை புத்தாண்டு தினத்தில் அன்று தீவக நுழைவாயிலில் நயினாதீவு அம்மனின் சிலை ஒன்று வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

இதனை அடுத்து யாழ்ப்பாண பொலிஸாசாரினால் குறித்த சிலையினை அகற்ற அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாண நீதிமன்றினால் குறித்த சிலையுடனு தொடர்புடையோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பு கட்டளை விடுதிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சிறிகாந்தா, எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த வழக்கு தொடர்பாக பொலிஸாரின் வழக்கீட்டு தகமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் குறித்து கேள்வி எழுப்பி இருவரும் நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இதனை அடுத்து எழுத்துமூல சமர்ப்பணங்களிற்காக வழக்கு எதிர்வரும் 04 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர், சட்டத்தரணி சிறிகாந்தா இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

யாழில் நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்ற பொலிஸார் கடும் முயற்சி

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசனி அம்மனை குறிக்கும் நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.

நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசனி அம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பில் பால் அபிசேகம் உருத்திர சேனா அமைப்பினால் செய்யப்பட்டது.

இந்த நிலையில் உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரைணக்கு உள்படுத்தப்பட்டனர்.

உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திர சேனா அமைப்பினர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு அனுமதியுமின்றி அமைக்கப்பட்ட நாகபூசனி அம்மனின் சிலையை அகற்ற தீவிர நடவடிக்கையில் யாழ்ப்பாணம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, குறிகாட்டுவான் இறங்குதுறையில் வைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்த அரச மரத்தை கடற்படையினர் திறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெசவுசாலையை ஆக்கிரமித்துள்ள மதப்பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம்

அரசாங்கத்திற்கு சொந்தமான அச்சுவேலி நெசவுசாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரிந்த மதப் பிரிவினரை வெளியேற்றுமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் அச்சுவேலி நெசவுசாலை முன்றலில் இன்று(செவ்வாய்கிழமை) காலை 8 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யுத்தத்தின் பின் இயங்காத குறித்த நெசவுசாலை கட்டடத்தில் ஒரு மதஸ்தலம் அமைக்கப்பட்டு பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

குறித்த மதஸ்தலத்தினால் அதிகளவு சத்தம் போட்டு பிரார்த்தனை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன்படி மல்லாகம் நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை போதகர் உட்பட மூவர் அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அச்செய்தியை வெளியிட்டமைக்காக உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள்ளும் அடாவடியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், போதகர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது குறித்த மதஸ்தலம் அமைந்துள்ள நெசவுசாலையினை மீளவும் கைத்தொழில் அமைச்சு பொறுப்பெடுத்து நடத்தவேண்டும் என கோரி இன்று போராட்டம் இடம்பெற்றது.

Posted in Uncategorized

கொழும்பு – யாழ் ரயில் சேவை 2024 ஜனவரியில் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பு

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சீரமைப்புப் பணிகளால் இச்சேவை இரத்து செய்யப்பட்டது.

இதனால் கடந்த ஜனவரி 5ம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் தொடரூந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை, எதிர்வரும் ஜுன் மாதம் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர், மஹவ முதல், அநுராதபுரம் வரையிலான ரயில் மார்க்கம் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் கோட்டை முதல் காங்கேசன்துறை வரையிலான நேரடி ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும்

தம்பாட்டி இறங்குதுறை காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

ஊர்காவற்துறை தம்பாட்டி பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாரந்தனை வடக்கு தம்பாட்டியில் உள்ள இறங்கு துறையில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஊர்காவற்துறை மீனவர்களுக்கு சொந்தமான தம்பாட்டி இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள பகுதியில் கடற்படையினரால் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், இதனை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் குறித்த அரச காணியிலிருந்து கடற்படையினர் வெளியேறாத நிலையில், நில அளவை திணைக்களத்தினர் அந்த காணியை அளந்து கடற்படையினருக்கு வழங்குவதற்காக அங்கு சென்ற நிலையில் மக்கள் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ் நாவலர் மண்டபத்தை கலாசார திணைக்களத்திடம் ஒப்படைத்தார் ஆளுநர்

யாழ் நல்லூர் நாவலர் மண்டபத்தின் செயற்பாடுகள் எவ்வித இடையூறும் இன்றி புனிதத் தன்மை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்து சமயம் மற்றும் கலாச்சார திணைக்கப் பணிப்பாளர் அனிருதனனுக்கு எழுத்து மூலமான நிபந்தனைகளுடன் பணிப்புரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,

இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சமய மற்றும் ஆன்மீக நடவடிக்கைகள் நாவலர் கலாசாரத்தில் எவ்வித இடையூறும் இன்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் பின்வரும் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாவலர் மண்டபத்தின் சமய மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமே முழுப் பொறுப்பாக இருக்க வேண்டும்.

நாவலர் கலாசார மண்டபம் புனிதமாக பாதுகாக்கப்படுவதோடு நடவடிக்கைகளுக்காக மாகாண கலாச்சார திணைக்களத்துடன் ஒத்துழைத்தல். நாவலர் நினைவுப் பொது நூலகத்தை யாழ்ப்பாண மாநகர சபையால் பராமரிக்க முடிவதோடு அதற்கான நியாயப்படுத்தல்கள் மற்றும் தொடர்வதற்கு ஒப்புதலை பெறுவதோடு பொறுப்பு வாய்ந்த இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து மாநகரசபையை வெளியேற ஆளுநர் உத்தரவு

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் நாவலர் மண்டபம் யாழ் மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் கீளுள்ள இந்து கலாசார அமைச்சு குறித்த மண்டபத்தினை தங்களிடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்த போது அது பல தடவைகள் யாழ்.மாநகர சபை அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது 45 மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் குறித்த விடயம் நிராகரிக்கப்பட்டதுடன் எக்காரணம் கொண்டும் மத்திய அரசாங்கத்திடம் அதனைக் கையளிக்க மாட்டோம் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதன் பிற்பாடு இந்து கலாசார அமைச்சும் யாழ்.மாநகர சபையும் இணைந்து குறித்த மண்டபத்தினை நிர்வகிப்பது தொடாடர்பில் இந்து கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட வரைபு தொடர்பாக சபையில் விவாதிக்கப்பட்டு உறுப்பினார்களினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் இந்து கலாசார அமைச்சுக்கு அறிவித்து அதனை நிர்வகிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

யாழ்.மாநகர சபையின் முதல்வராக வி. மணிவண்ணன்; பணிபுரிந்த காலத்தில் குறித்த மண்டபம் தனியார் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டது அத்துடன் சைவமகா சபையின் அனுசரணையுடன் யாழ்.மாநகர சபை ஆறுமுகநாவலரின் சிலையினையும் நிறுவியிருந்தது.

அத்துடன் குறித்த மண்டபத்தினை புனரமைப்பதற்கு இந்து கலாசார அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி யாழ்.மாநகர சபையின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டு யாழ்.மாநகர சபையினால் கோள்விகோரப்பட்டு குறித்த பணிகள் யாழ்.மாநகர சபையினாலேயே மேற்கொள்ளப்பட்டது.

தற்போது உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதிக்கு முன்னர் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வெளியேறுமாறும் அதன் பிற்பாடு இந்து கலாசார அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வசந்த முதலிகேயின் யாழ் விஜயம் – நிலாந்தன்.

கொழும்பு, புகையிரத நிலைய கழிப்பறையில் விடப்பட்ட குழந்தை, காலிமுகத்திடல் போராட்டத்தின் கூடாரங்களுக்குள் நடந்த ஒன்றின் விளைவு என கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹதகம கூறியுள்ளார்.

போராட்டத்தின்போது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன என்றும்,போராட்டம் நடந்த பகுதியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

அவர் அவ்வாறு கூறுவது தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை பரிகசிப்பதற்காகத்தான். ஆனால் அவர் ஒரு பெரிய உண்மையை விழுங்கிவிட்டு கீழ்த்தரமான இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார்.

அப்பெரிய உண்மை என்னவென்றால், இலங்கைத்தீவின் இப்போதிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னெழுச்சிப் போராட்டங்களின் குழந்தைதான் என்பது. போராட்டங்கள் இல்லையென்றால் ரணிலுக்கு இந்தப் பதவி கிடைத்திருக்காது.

தன்னெழுச்சிப் போராட்டங்களின் விளைவாக ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் ரணில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.ஆனால் அவர்தான் தன்னெழுச்சி போராட்டங்களை நசுக்கினார். அதாவது அரசியல் அர்த்தத்தில் அவர் ஒரு தாயைத் தின்னி.

அவர் அவ்வாறு தன்னெழுச்சிப் போராட்டங்கள் நசுக்கப்பட்டபோது வசந்த முதலிகே-அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதானி- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பல மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.தன்னெழுச்சிப் போராட்டங்களின் பிரதானிகளில் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார். தன்னெழுச்சிப் போராட்டங்களுக்காக ஒப்பீட்ளவில் அதிகம் தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவராகவும் அவர் காணப்படுகிறார்.

அண்மையில் அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார்.பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து தமது போராட்டத்திற்கு ஆதரவைக் கேட்பதே அவருடைய வருகையின் நோக்கம்.

சந்திப்பின்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உரையாடியிருக்கிறார்கள். ஆனால் வசந்த முதலிகே குழுவினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்தை எப்படி தங்களோடு இணைத்துக் கொள்ளலாம் என்பதில்தான் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

இலங்கை முழுவதிலும் உள்ள 100 நகரங்களில் தாங்கள் போராட இருப்பதாகவும், அப் போராட்டங்களில் தமிழ் மாணவர்களும் இணைய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

தமிழ் மாணவர்கள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை அவர்களே தென்னிலங்கைக்கு வந்து மக்களுக்கு கூற வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை தாங்கள் செய்து தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் சில நாட்களுக்கு முன் வசந்த முதலிகே பிபிசிக்கு வழங்கிய போட்டியில் யாழ்.பல்கலைக்கழகம் அவ்வாறு பத்து அம்சக் கோரிக்கையைக் கையளிக்கவில்லை என்று கூறயிருக்கிறார்.

பிபிசி இதுதொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் கேட்டிருக்கின்றது. வசந்த முதலிகே அணியிடம் தாங்கள் முன்வைத்த 10அம்ச கோரிக்கைகளை மாணவ அமைப்பின் கடிதத் தலைப்பில் எழுதிக் கொடுக்கவில்லை என்ற போதிலும் அவற்றை முன்வைத்தே தாங்கள் உரையாடியதாக யாழ். பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் கூறுகிறார்கள்.

சந்திப்பின்போது தாங்கள் எதைக் கதைத்தார்களோ அதையே கதைக்கவில்லை என்று கூறுபவர்களோடு எப்படிச் சேர்ந்து போராடுவது ? என்ற சந்தேகம் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உண்டு.

தென்னிலங்கையில் நடந்த தென்னெழுச்சி போராட்டங்கள் அதாவது இலங்கைத்தீவில் நடந்த நான்காவது பெரிய போராட்டம் ஒன்று நசுக்கப்பட்ட பின் தென்னிலங்கையில் இருந்து வடக்கை நோக்கி வந்த ஆகப் பிந்திய அழைப்பு அது.

அரசாங்கத்துக்கு எதிராகப் போராட வருமாறு தெற்கு வடக்கை அழைக்கின்றது. அந்த அழைப்புக்கு தமிழ் மாணவர்கள் கொடுத்த பதிலை மேலே கண்டோம்.

தமிழ் மக்கள் அப்படித்தான் பதில் கூற முடியும் என்பதைத்தான் வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்து போன சில நாட்களின் பின் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார தெரிவித்த கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்க முடியாது என்று அநுரகுமார கூறியிருக்கிறார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு 13ஆவது திருத்தத்தின் ஊடாக – மாகாண சபைகளின் ஊடாக தீர்வைப் பெற முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு பதலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசமைப்பின் ஊடாகவே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனுரகுமார கூறுவதின்படி 13ஆவது திருத்தம் ஒரு தீர்வு இல்லை என்றால் அதைவிடப் பெரிய தீர்வை அவர் மனதில் வைத்திருக்கிறாரா? என்று கேள்வி எழும்.

நிச்சயமாக இல்லை.அவர்கள் 13ஐ எதிர்ப்பது ஏனென்றால் மாகாண சபைகளை தமிழ் மக்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

ஏற்கனவே வடக்கு-கிழக்கு இணைப்பை ஒரு நீதிமன்றத் தீர்ப்பின்மூலம் இல்லாமல் செய்த கட்சி ஜேவிபி என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

ஜேவிபி 13 எதிர்ப்பதற்கு மேற்கண்ட காரணத்தை விட மற்றொரு காரணமும் உண்டு அது என்னவெனில், 13ஆவது திருத்தம் இந்தியா பெற்றெடுத்த குழந்தை என்பதால்தான். அதாவது இந்திய எதிர்ப்பு.

ஜேவிபி தமிழ் மக்களின் சுயநிர்ணைய உரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை. சமஸ்ரியை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்ளவும் தயாரில்லை.ஜேவிபி மட்டுமல்ல தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததாக நம்பப்படும் முன்னிலை சோசியலிசக் கட்சியின் பிரதானியான குமார் குணரட்னமும் அப்படித்தான் கூறுகிறார்.

தமிழ் மக்களுக்கு சமஸ்டியை ஒரு தீர்வாக முன்வைக்க அவர்கள் தயாரில்லை. அவ்வாறு சமஸ்டியை ஒரு தீர்வாக முன் வைப்பதன் மூலம் சிங்கள பௌத்த வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை. இதுதான் பிரச்சினை.

இலங்கைத் தீவில் நிகழ்ந்த, உலகின் கவனத்தை மிகக் குறுகிய காலத்துக்குள் ஈர்த்த, படைப்புத்திறன் பொருந்திய ஓர் அறவழிப் போராட்டம் நசுக்கப்பட்ட பின்னரும், தென்னிலங்கையின் நிலைப்பாடு அப்படித்தான் காணப்படுகிறது.

தமிழ்ப் பகுதிகளில் ஒருபுறம் நிலப்பறிப்பு தொடர்கிறது.இன்னொரு புறம் பௌத்தமயமாக்கல் தொடர்கிறது.மட்டக்களப்பில் மைலத்தனை மேய்ச்சல் தரைகள் தொடர்ந்தும் அபகரிக்கப்படுகின்றன.

நீதிமன்றத்தின் உத்தரவை மீறி அங்கே ஆக்கிரமிப்பு நடக்கின்றது.தமிழ்மக்களின் கால்நடைகள் இரவில் இனம் தெரியாத நபர்களால் கொல்லப்படுகின்றன.இன்னொருபுறம் திருகோணமலையில் கன்னியா வெந்நீர் ஊற்று, குருந்தூர் மலை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை போன்றவற்றில் பௌத்தமயமாக்கல் தொடர்கிறது. குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதே நாட்டின் தளபதி சவீந்திர டி சில்வா 100பிக்குகளோடு நாவற்குளிக்கு வந்திருக்கிறார். அங்கே கட்டப்பட்டிருக்கும் விகாரைக்கு கலசத்தை வைப்பது அவர்களுடைய நோக்கம் என்று கூறப்படுகிறது.

ஆனையிறவில், கண்டி வீதியில், தட்டுவன் கொட்டிச் சந்தியில், கரைச்சி பிரதேச சபை இலங்கைத்தீவின் மிக உயரமான நடராஜர் சிலையை கட்டியெழுப்பிய பின் தளபதி சவேந்திர டி சில்வா நாவற்குழிக்கு வருகை தந்திருக்கிறார்.

அதாவது அரசின் அனுசரணையோடு ராணுவ மயப்பட்ட ஒரு மரபுரிமை ஆக்கிரமிப்பு தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் தமிழ்மக்கள் அதற்கு எதிராகப் போராடும்போது அவர்களோடு வசந்த முதலிகே வந்து நிற்பாரா? ஜேவிபி வந்து நிக்குமா? சஜித் வந்து நிற்பாரா? அல்லது குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்தில் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவாக சுலோக அட்டைகளைத் தாங்கியபடி சந்திகளில் நிற்கின்ற இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த மிகச் சிறிய கட்சிகள் வந்து நிற்குமா?

இல்லை. அவர்கள் வர மாட்டார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டம் அவர்களைத் தீண்டியதால் அவர்கள் தமிழ் மக்களை நோக்கி வருகிறார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணம் இனப்பிரச்சினைதான் என்பதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இனப் பிரச்சினையை தீர்க்காமல் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே தமிழ்மக்கள் அவர்களோடு எந்த அடிப்படையில் இணைந்து போராடுவது?

அதே சமயம் வசந்த முதலிகேயின் யாழ் விஜயம் வெற்றி பெறவில்லை என்பது ரணிலுக்கு ஆறுதலானது. தனக்கு எதிராகத் தமிழ் மக்களை எதிர்க்கட்சிகளால் அணி திரட்ட முடியாது என்பது அவருக்கு ஒரு விதத்தில் ஆறுதலான விடயம். தங்களுக்கிடையே ஒற்றுமைப்பட முடியாதிருக்கும் எதிர்க்கட்சிகள் தமிழ் மக்களையும் இணைக்கமுடியாமல் இருப்பது என்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஆறுதலான ஒரு விடயம்தான்.

மேலும் வசந்த முதலிகே யாழ்ப்பாணம் வந்து போன காலத்தையொட்டி கிண்ணியா வெந்நீரூற்று விவகாரம் மீண்டும் சூடாகி இருக்கிறது. நெடுந்தீவு வெடியரசன் கோட்டை விவகாரமும் ஊடகங்களில் சூடான செய்தியாக இருக்கிறது.

இவை தற்செயலானவைகளா? அல்லது வேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்படுகின்றவையா?என்று ஒரு நண்பர் கேட்டார். ஏனெனில் இது போன்ற தொல்லியல் ஆக்கிரமிப்புக்களை இப்பொழுது ஏன் தீவிரப் படுத்தவேண்டும்? அதுவும் ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில், அதைவிடக் குறிப்பாக வசந்த முதலிகே யாழ்ப்பாணத்துக்கு வந்துபோன ஒரு பின்னணியில், அரசாங்கம் அவ்வாறு நடந்து கொள்வதன் பின்னணி என்னவாக இருக்கும்? என்று மேற்சொன்ன நண்பர் கேட்டார்.அவருடைய கேள்வி நியாயமானது.

தமிழ் மக்களை எதிர்நிலைக்கு தள்ளிவிட்டால்,அவர்கள் வசந்த முதலிகேயோடு இணைய மாட்டார்கள். தங்களோடு சேர்ந்து போராட வா என்று கேட்பார்கள். அதை வசந்த முதலிகே செய்ய மாட்டர். ஜேவிபி செய்யாது.

எனவே ஒருபுறம் தமிழ் மக்களின் கவனத்தைப் புதிய பிரச்சினைகளின் மீது திசை திருப்பி விடலாம். இன்னொருபுறம் தென்னிலங்கையின் தன்னெழுச்சிப் போராட்டங்கள் வடக்குடன் இணைவதைத் தடுக்கலாம்.

அதாவது தொகுத்துக்கூறின் தனக்கு எதிரான சக்திகள் ஒன்று திரள்வதை ரணில் கெட்டித்தனமாகத் தடுத்துவருகிறார்.

அவ்வாறு அரசாங்கத்துக்கு எதிரான ஒரு பலமான கூட்டு ஜனவசியம் மிக்க தலைமையின் கீழ் உருவாகவில்லையென்றால் அரசாங்கம் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாது.

பொருளாதாரத்தை ஒப்பீட்டளவில் சரி செய்யும்வரை அரசாங்கம் உள்ளூராட்சிசபைத் தேர்தலை ஒத்திவைத்துக் கொண்டேயிருக்கும்.