ஜே.ஆர் காட்டிய வழியில் பயணித்திருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும் – ஜனாதிபதி

மறைந்த ஜே.ஆர். ஜயவர்தன, 1977 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கி கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும் என்று ஜனாதிபதி ரணி்ல் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர், ஜயவர்தனவின் 117 ஆவது ஜனன தின நிகழ்வையொட்டி விடுத்துள்ள விசேட செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது அமர்வில் பங்கேற்க அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே, ஜே.ஆர் ஜயவர்தனவின் ஜன்ம தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விசேட செய்தியை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஜே.ஆர், ஜயவர்தனவின் ஜனன தின நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட செய்தியை ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பீ. மும்முல்லகே வாசித்தார்.

அதில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாவது:-

“ஜே.ஆர். ஜயவர்தன இந்நாட்டில் சமூக பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்திய புரட்சியாளர். அவர் 1977 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கிக் கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும்.

நாட்டில், ஏற்பட்ட கலவரங்கள், யுத்தம் மற்றும் அவரது கொள்கை பற்றிய புரிதல் இன்மை காரணமாக, அவரது சமூக பொருளாதார கொள்கைகளின் பலன்களை முழுமையாக அடைய முடியாமல் போனது.

எமது வலயத்தின் இந்தியா , சீனா, வியட்நாம், உள்ளிட்ட நாடுகள் ஜே. ஆர். ஜயவர்தனவின் கொள்கைகளையே பின்பற்றின. அந்த நாடுகள் காலத்திற்கு ஏற்றவாறு தமது கொள்கைகளை மாற்றிக்கொண்டு முன்னோக்கிச் சென்றன.

1938 களில் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக அரசியலுக்கு பிரவேசித்த அவர், 1946 களில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆரம்பித்தார். இலங்கையின் முதலாவது கெபினட் அமைச்சராக தெரிவானதோடு, டட்லி சேனநாயக்கவுக்கு பின்னர் 1973 களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1977 தேர்தலில் இலங்கையின் பிரதமரான ஜே. ஆர். ஜயவர்தன அரசமைப்பு மாற்றத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உருவாக்கினார்.

அணிசேரா அமைப்பின் ஆறாவது பொதுச் செயலாளராக அவர் தனது நாட்டுக்காக ஆற்றிய சேவைகள் மகத்தானவை. அதனை நினைவுகூருவது பாராட்டப்பட வேண்டியது.” – என்றார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் செனல் – 4 விசாரணைக்குழுவை நிராகரிக்கின்றோம் – கத்தோலிக்க திருச்சபை

செனல் 4 காணொளி விவகாரம் தொடர்பான விசாரணைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” செனல் 4 வினால் கடந்த நாட்களில் வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான குழு ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிய கிடைத்தது.

அதேபோன்று அதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அறிய கிடைத்தது.

இன்னுமொரு தெரிவுக்குழு அல்லது ஜனாதிபதியால் நியமிக்கப்படும் குழுவால் இந்த விசாரணைகள்பாரபட்சம் இன்றி நேர்மையாக முன்னெடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.இந்த கேலியான முயற்சிகளை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்.

செனல் 4 வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மட்டுமல்ல அதற்மேல் விசாணைகளை மேற்கொண்டு தெளிவாக ஆரோக்கியமாக பாரபட்சம் இன்றி ஒழுங்குமுறையான விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

ஆரோக்கியமான சர்வதேச விசாரணை குழுவின் விரிவான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர ஏனைய அதிகாரங்களை வழங்கவே ஜனாதிபதியும் அரசாங்கமும் விரும்புகின்றனர் – பிரசன்ன ரணதுங்க

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி உட்பட அரசாங்கம் இருக்கிறது என ஆளும் தரப்பு பிரதமகொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் செயற்படுத்தப்படும் ‘உங்களுக்கு வீடொன்று நாட்டுக்கு எதிர்காலம்’ வீடமைப்பு கருத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு காணி உரித்துரிமை பத்திரம் மற்றும் வீட்டுக்கடன் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

அரசிலமைப்பின் 13ஆம் திருத்தம் தற்போதும் அமுலில் இருக்கிறது. அதனால்தான் மாகாண முதலமைச்சராக என்னால் செயற்பட முடியுமாகி இருந்தது.மேல் மாகாணத்தில் எங்களால் முடிந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.

அத்துடன் நிர்வாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் எப்போதும் இருந்து வருகிறேன். ஏனெனில் கொழும்பில் இருந்து கல்வி அமைச்சு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.

அதனால் நிர்வாக அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு அந்த மாகாணங்களுக்குள்ளே தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.

அத்துடன் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தில் இருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்கு வழங்கவேண்டும் என்ற என்பதே ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ளவதாக இருந்தால் அது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

மன்னாரை வலுச்சக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – ஜனாதிபதி ரணில்

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன்னார் மடு மாதா தேவாலய திருவிழாவில் இன்று செவ்வாய்க்கிழமை (15) கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்த வருடம் மடுமாதா திருவிழா கூட்டுத் திருப்பலிப் பூஜையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும். திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதை அடுத்து மடுமாதாவின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது. வருடாந்த மடுமாத திருவிழாவில் நாட்டின் பலபாகங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மடு மாதாவுக்கு மகுடம் சூட்டப்பட்டு 2024ஆம் ஆண்டுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனை நினைவுகூரும் நிகழ்வுகளை வருடம் முழுவதும் நடத்த ஆலய நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பாராட்டுக்குரியது எனவும் வத்திக்கான் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் ஆசீர்வாதமும் இதற்கு கிடைக்கும் எனவும் மடு திருவிழாவில் கலந்து கொண்ட இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி அதி பிரையன் உடைக்வே ஆண்டகை Rev. Dr.Brian Udaigwe) தெரிவித்தார்.

நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டிய பாரிய பொறுப்பு மதத் தலைவர்களுக்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய பிரையன் அவர்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் மத முகவராக மாறுவதா அல்லது நாட்டை ஒன்றிணைக்கும் மதத் தலைவராக மாறுவாரா என்பது அவரவர் செய்யும் செயற்பாடுகளிலேயே தீர்மானிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

”மடு தேவாலய வருடாந்த திருவிழா என்பது எமது நாட்டு கலாசாரத்தின் ஒரு அங்கம் என்றே கூற வேண்டும். இந்தத் திருவிழாவை தேசிய நிகழ்வாகக் கருதி அதனைப் பாதுகாக்கவும் தொடர்ச்சியாக நடத்தவும் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கி வருகிறது. அத்தோடு வருடாந்த மடு திருவிழாவை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து அருட்தந்தையர்களுக்கும் அரசாங்கம் சார்பில் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

மடுமாதாவிடம் பிரார்த்தனை செய்து ஆசீர்வாதம் பெற ஏராளமான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். கடந்த வருடம் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது, பெருமளவான மக்கள் இங்கு வந்து மடு மாதாவின் ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் நாடினர். அந்த கடினமான நிலைமையில் மடு மாதாவின் ஆசீர்வாதமும் எமக்கு பலமாக அமைந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.

மடு மாதா குடிகொண்டிருக்கும் இந்த மன்னார் பிரதேசம் அதிகளவு புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை மற்றும் பசுமை ஆற்றல் மூலம் மன்னார் மாவட்டத்தை வலுசக்தி மையமாக உருவாக்க முடியும். மேலும், பூநகரியை எரிசக்தி கிராமமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த புனித பூமியும், வனமும் பாதுகாக்கப்படும் வகையிலேயே இந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நான் கூற விரும்புகின்றேன். மேலும், இப்பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளின் போது இங்குள்ள அருட்தந்தைகளின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.

அடுத்த மாதம் முதல் மன்னாரிலிருந்து கொழும்புக்கு நகர்சேர் கடுகதி ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சார்ளஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படுகிறது. அவரின் வேண்டுகோளுக்கு அமைய வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

மன்னார் ஆயர் கலாநிதி அதி வண. இமானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி மன்றத் தலைவர் கலாநிதி சந்ரா பெர்ணான்டோ உள்ளிட்ட அருட்தந்தையர்கள், கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்கள் அருந்திக பெர்னாண்டோ, காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டன

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் – அருட்தந்தை மா.சக்திவேல்

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் செவ்வாய்க்கிழமை (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இது சிங்கள பௌத்த நாடு. நான் வடகிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகளை தடுக்க முயன்றால், மகா சங்கத்தினரை எதிர்த்தால் நான் உங்கள் தலைகளை எடுத்துக் கொண்டு களனிக்கு வருவேன்” என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா கூறி இருப்பது பௌத்தத்தின் பெயரால் புத்தனின் போதனைகளை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல நாட்டின் சட்டத்தை மிதித்து, இனவாத மதவாத வன்முறையை தூண்டும் வக்கிர நச்சு வார்த்தை  என்பதால் இதனை வன்மையாக கண்டிப்பதோடு ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் இவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும்.

வடகிழக்கு தமிழர்களின் தாயக பூமி. இப் பூமியை அரச பயங்கரவாதம் மற்றும் இனவாத திணைக்களங்கள் மூலம் மிக வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதோடு சிங்கள பௌத்த இனவாதிகளால் வடகிழக்கின் மரபுரிமை சார் இடங்களும், சைவர்களின் வணக்க ஸ்தலங்களும் சிங்கள பௌத்த மயமாக்கப்படுவதோடு; தமிழர்களின் பூர்வீக இடங்களில் பௌத்த சின்னங்கள், தூபிகள்,விகாரைகள் அமைப்பதும்  தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தினமும் போராடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேவின் சில்வாவின் இப் பகிரங்க பயங்கரவாத வார்த்தை மதவாத வன்முறைக்கு வித்திடுவது மட்டுமல்ல சாதாரண சிங்கள மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்ய நினைப்பது பௌத்தத்திக்கும் நாட்டிற்கும் கேட்டையே விளைவிக்கும்.

அரசியல் கட்சிகளாலும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நாடு விழுந்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடிமட்ட சிங்கள பௌத்த மக்களை தூண்டி அவர்களை வீதிக்கு இறக்கி இழிவான அரசியலை தேர்ந்தெடுக்க முயல்கின்றார். இவரது கடந்த கால வாழ்வில் நாட்டின் சட்டத்தையோ கௌரவத்தையோ மதித்தவர் கிடையாது.

இவரைப் போன்றவர்கள் நாடாளுமன்றத்திற்குள்ளும் உள்ளனர். இவர்களும் இனவாத மதவாதத்தை நம்பியே அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். வடகிழக்கிற்கு எதிராக மக்களை தூண்டி விடுவதிலேயே அரசு அரசியல் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். அரசியலில் வாங்குவது நிலையை இது எடுத்துக்காட்டுகின்றது.

இவர்களை மன நோயாளிகள் என்றும் குறிப்பிட வேண்டும். விசர் நாய்களுக்கு தண்ணீரை காண்பது போல இவர்களுக்கு தமிழர்களின் அரசியல் உரிமைகளும், மரபுரிமைகளும் தெரிகின்றன. இன்றைய பேரினவாத அரசியலை முன்னெடுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இவர்கள் தேவையாக உள்ளனர். இதனாலேயே இவர்கள் சுதந்திரமாக திரிய கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர். இந்நிலை நீங்காத வரை நாட்டுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனலாம்.

தற்போது சூழ் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு எதிரான  தெற்கின் அரசியல் சூழ்நிலைக்கு முகம் கொடுக்க தமிழ் அரசியல் தலைமைகள் தம்மை வலுவாக கட்டமைத்துக் கொள்ளல் வேண்டும். அரசியல் தீர்வு என 13 வைத்துக் கொண்டு பூச்சாண்டி காட்டும் தற்போதைய ஜனாதிபதியின் நரி தந்திரத்திற்குள் தமிழர்களை வீழ்த்தி விடாது சுய உரிமைக் காக்கும் அரசியலுக்காக ஒன்று பாடல் வேண்டும்.

அரசியல் தீர்வு என பேச்சுவார்த்தைக்கு அழைப்பதும் எலும்பு துண்டாக 13 காட்டிக் கொண்டிருப்பதும் அரசியல் லாபங்கள் சலுகைகளுக்காக அவற்றின் பின்னால் ஓடுவதும் தமிழர்களுக்கு பாதுகாப்பாக அமையப் போவதில்லை.

தற்போது மேவின் சில்வா அவர்களின் கூற்றினை தனி மனித கூற்றாகவோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் கூற்றாகவோ மற்றும் எடுத்து அசமந்த நிலையில் இருந்து விடாது.

இதுவே நாட்டை எப்போதும் ஆட்சி செய்யும் பேரினவாதிகளின் நிலை என உணர்ந்து அதற்கு நாடாளுமன்றத்திற்குள்ளும்  வெளியிலும் மக்கள் சக்தியை பலப்படுத்தி கூட்டாக எழுந்து நிற்கவும்  தமிழ் அரசியல் தலைமைகள் முன் வரல் வேண்டும். சிவில் சமூக அமைப்புகளும் அதற்கு அழுத்தம் கொடுக்க வலுவான சக்தியாக தம்மை வடிவமைத்துக் கொள்ளலும் வேண்டும் என்றார்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தையை பாராட்டுகிறோம்: பாப்பரசரின் பிரதிநிதி

வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு போன்ற முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம் என பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் இன்று (15) கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில்,

இத்திருப்பலியில் கலந்து கொள்ளும் சகோதர சகோதரிகலே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். திருத்தந்தை உங்கள் நாட்டை அன்பு செய்கிறார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி திருத்தந்தை இந்த நாட்டிற்கும் இத்திருப்பதிக்கும் மேற்கொண்ட திருத்தூது பயணத்தை அவர் மிகவும் பாராட்டுகின்றார்.

அன்றைய நாளில் அவருக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட மடு மாத திருச் சொரூபத்தை அவர் இன்று வரை போற்றுகின்றார். உலகம் போற்றும் இத்திருத்தலத்தில் அன்று அவர் ஆற்றிய உரையை நோக்கி இன்று எனது சிந்தனைகள் செல்கிறது.

அவர் அன்று கூறிய பல விடயங்களில் கீழ் கண்ட அவருடைய வார்த்தைகளை இங்கே தருகின்றேன். மரியன்னை என்றும் உங்களோடு இருக்கிறார். அவர் ஒவ்வொரு வீட்டினுடைய அன்னை. காயப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களினதும் அன்னை.

ஒரு அமைதியான இருப்பை நோக்கி திரும்புவதற்கு நாடுகின்ற அனைவரினதும் அன்னை பிரகாசிக்கின்ற இந்த இலங்கைத்தீவில் உள்ள தன் பிள்ளைகளை அவர் ஒருபோதும் மறக்க வில்லை. எவ்வாறு மரியா சிலுவையில் தொங்கிய தனது பிள்ளையை விட்டு விலகாது நின்றாறோ அவ்வாறே துன்புறும் தனது இலங்கை நாட்டு பிள்ளைகளை அவர் விட்டு விலகுவது இல்லை.

நம்முடைய பரிசுத்த தாயான மரியா தன்னுடைய இத்தீவின் பிள்ளைகளை மறப்பதில்லை. அவரின் பரிந்துரை ஊடாக நீதி, நல்லிணக்கம், அமைதி எங்களுக்கு கிடைப்பதாக.

உடல் ரீதியான உணர்வு ரீதியான வடுக்களை விட்டுச் சென்ற 26 வருடங்கள் நீடித்துச் சென்ற உள்நாட்டு போரின் தாக்கங்களை நாம் மறந்து விட முடியாது. பல தடவைகளில் இந்த போரைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன். வாசித்தும் இருக்கின்றேன். எனினும் 2 வாரங்களுக்கு முன்னர் யாழ். மறை மாவட்டத்திற்கு நான் மேற்கொண்டிருந்த மீட்புப்பணி விஜயத்தின் போது மக்கள் மீதும், கைவிடப்பட்ட வீடுகள் மீதும் உடமைகள் மீதும் போரின் தாக்கம் எவ்வாறு இருந்தது என்பதை இன்னும் ஆழமாக பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் ஒரு போர் வேண்டாம். இன, மத, மொழி, சாதி கருத்து போன்ற வேற்றுமைகளுக்கு அப்பால் அன்பும், அமைதியும் சகிப்புத்தன்மையும் நிலை பெறுவதாக.

வெறுப்பும், விரோதமும் வேண்டாம். ஏனெனில் சமாதானம் என்பது ஓர் இல்லாத நிலை அன்று. இது நல்லிணக்கத்திற்கான நேரம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பயணங்கள். வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான ஜனாதிபதியுடன் சந்திப்பு போன்ற முயற்சிகள் ஊடாக நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.

அதேவேளை ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தெளிவாக குறிப்பிட்டது போல அனைவரும் நன்கு அறிந்த குழப்பமான விடயங்களை போதுமான அளவில் தீர்த்து வைக்கும் வகையில் இந்த செயன்முறைகள் அமையும் என நாங்கள் நம்புகிறோம்.

மூன்று வருடங்களுக்கு முன் நான் இலங்கைக்கு வந்த போது இந்த நாட்டின் பல பாகங்களுக்கும் நான் விஜயம் செய்தேன். இலங்கை மக்கள் பொதுவாக நல்லவர்கள். சகிப்புத்தன்மை கொண்டவர்கள். குறைவாக உள்ள சிறு குழுவினர் உங்கள் மீது எதிர் மறையாக செல்வாக்கு செலுத்தவோ, உங்களை திசை திருப்பவோ அனுமதிக்க வேண்டாம்.

பல்வேறு சமயங்களை சார்ந்த சமையத்தலைவர்கள் அன்பையும், சகோதரத்துவத்தையும், நோக்கிய சரியான கொள்கையை நோக்கி மக்களை வழி நடத்துவதில் முன்னனி பங்கு வகிக்க வேண்டும். எந்த ஒரு சமையத்தலைவரும் தமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள், மதிப்பு, சலுகைகள் போன்றவற்றை பயண்படுத்தி மற்றைய சமையங்களை இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் முன்னுதாரணமாக திகழ்ந்து வழிநடத்த வேண்டும். நாம் ஒன்றினைப்பின் முகவர்களாக திகழ வேண்டுமே தவிர பிரிவினை வாதத்தின் முகவர்களாக அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சியைக் கைப்பற்ற ஜே.வி.பி சதி – ஜனாதிபதி ரணில்

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான குழு ஈடுப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பிரபல ஊடகம் ஒன்றும் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி கூட்டத்தில் இந்த விடயங்களை தெரிவித்த ஜனாதிபதி, அரச கவிழ்ப்பு சதி தொடர்பான புலனாய்வு அறிக்கை மற்றும் வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டார். மேலும் குறித்த சதி திட்டம் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஸ்தாபிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

ஆளும் கட்சி கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்து ஜனாதிபதி கூறுகையில்,

நாட்டில் காணப்படும் வறட்சியை அடிப்படையாக கொண்டு குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியும் பிரபல ஊடகம் ஒன்றும் வன்முறைகள் ஊடாக ஆட்சி கவிழ்ப்பு சதியை முன்னெடுத்து வருகின்றன. கடந்த ஆண்டை போன்று மக்களை வன்முறையாளர்களாக்கி வீதியில் இறக்கி அரச எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை போராட்டங்களின் இறுதி இலக்கு ஆட்சி கவிழ்ப்பு சதியாகும். இதனை மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான குழுவே முன்னெடுக்கின்றது. சதித்திட்டத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. புலனாய்வு அறிக்கைகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த வீடியோ ஆதாரங்களை அவதானியுங்கள். ஆதாரங்களை உள்ளடக்கிய அறிக்கையையும் பாருங்கள். மீண்டும் நாட்டை வன்முறைக்குள் கொண்டுச் செல்ல இடமளிக்க முடியாது.

எனவே ஜே.வி.பியின் ஆட்சி கவிழ்ப்பு சதி குறித்து கவனத்தில் கொள்ள விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவை எதிர்வரும் நாட்களில் நியமிக்க உள்ளேன். பாதுகாப்பு தரப்புகளுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாடு தற்போது ஒரு சுமூகமான நிலைக்கு வந்துள்ளது. பொருளாதார மறுசீரமைப்புகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் முழுமையான ஒத்துழைப்புகள் பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு கிடைத்துள்ளன. பல்வேறு மக்கள் நலசார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு, அனைத்து வழிகளிலும் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல முயற்சிகளை முன்னெடுத்துள்ளேன்.

இவற்றை சீரழித்தும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கவுமே முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வறட்சியை காரணம் காட்டி மக்களை வன்முறைக்குள் தள்ளுவதற்கு இடமளிக்க முடியாது. விவசாயத்திற்கு தேவையான நீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாய நடவடிக்கைகளுக்கு என கூறி சமனல குளத்திலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பதாகவே தண்ணீர் விடுவிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டதொரு செயல்பாடாகும்.

எனவே சமனல குளத்திலிருந்து தண்ணீரை விடுவித்தமை குறித்து முழுமையான அறிக்கையை கோரியுள்ளேன். யார்? எந்த நோக்கத்திற்கு இதனை செய்தார்கள் என்ற முழுமையாக விசாரணைகளை முன்னெடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். அநாவசியமான காலப்பகுதியில் சமனல குளத்தின் நீர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் ஏற்கனவே முறையிட்டுள்ளனர்.

உடவலவ நீர்தேக்கத்தில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாததொரு தருணத்தில் சமனல குளத்திலிருந்து எவ்வாறு நீரை விடுவிக்க முடியும். இது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதே போன்று உடவலவ நீர்தேக்கத்தினால் பயனடைகின்ற 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில், 13 ஆயிரம் ஏக்கர் நெல் செய்கைக்கும் ஏனைய 12 ஆயிரம் ஏக்கர் ஏனைய பயிர் செய்கைக்குமே ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், 25 ஆயிரம் ஏக்கரிலும் நெல் பயிரிட்டமையானது, யாருடைய ஆலோசனைகளின் பேரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற பிரச்சினையும் அங்குள்ளது.

இந்த விடயம் குறித்தும் தனித்து விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றில் உரை

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் புதன்னன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் இந்த விசேட உரையின் போது ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளார்.

இதேவேளை 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்தாலும் எதிர்க்கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும் இவ்விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வராமையானது ஜனாதிபதியின் அந்த முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பிலான பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்து இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தியதுடன் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு சர்வகட்சி மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அரசியலமைப்பில் உள்ளடங்கியுள்ள 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தமக்கு எதிர்ப்பு இல்லையென்றாலும், நாட்டில் பெரும்பான்மையினரால் எழுந்துள்ள கரிசனை காரணமாக ஆரம்பத்தில் பொலிஸ் அதிகாரம் இல்லாமல் 13வது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி முன்வந்துள்ளார்.

இந்தப் பிரச்சினையை அரசியலாக்காமல் விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருப்பதால், இந்தப் பிரேரணைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆராய்ந்து இந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையின் போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான யோசனைகளையும் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவை நியமித்து வர்த்தமானி வெளியீடு

பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்தை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.